HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



நாள்தோறும் நாயன்மார்கள்

Page 1 of 2 1, 2  Next

Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:13

நாள்தோறும் நாயன்மார்கள்

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்


பிறையணிந்த
பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம்
கொழிக்கும் திருநகரங்கள் பலவற்றுள் சீர்காழியும் ஒன்றாகும்.இத்தலத்திற்கு
பிரமபுரம், வேணுபுரம், சீர்காழி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராம்,
சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரெண்டு
பெயர்கள் உண்டு. நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற
இப்பழம்பெரும் பதியிலே சிவனின் சிந்தை மறவாது செந்தண்மை பூண்டொழுகும்
அந்தணர் மரபிலே - கவுணியர் கோத்திரத்திலே - சிவபாதவிருதயர் என்னும்
பெயருடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருடைய வாழ்க்கைத் துணைவியார்
பெயர் பகவதியார். இவ்விரு சிவனருள் தம்பதியரும் இல்லற இலக்கணமறிந்து
திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் இறைவனிடத்தும் எல்லையில்லாப் பக்தி பூண்டு
யாவரும் வியக்கும் வண்ணம் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். இவ்வாறு,
இவர்கள் வாழ்ந்து வரும் நாளில் சைவ சமயமும் சற்று வலிமை குறைந்து இருக்க,
பவுத்தமும், சமணமும் வன்மை பெற்று விளங்கிற்று. வேறு சில சமயங்களால்
வேதநெறி குன்றியது. இரவையே பகல் போல் பிரகாசமாகத் தோன்றச் செய்யும்
திருவெண்ணீற்றின் மகிமையும் பெருமையும் போற்றுதலின்றி நலிந்து காணப்பட்டன.
சிவசமயத்திற்கு ஏற்பட்ட இத்தகைய தாங்கொணாத் துயர்கண்டு சிவபாதவிருதயரும்
அவரது மனைவியாரும் மிகவும் மனம் வாடினர். அவர்கள் இருவரும் புறச்
சமயங்களால் வரும் தீமைகளைப் போக்கித் திருவெண்ணீற்றின் ஆக்கத்தை
அகிலமெல்லாம் ஓங்கச் செய்யத்தக்க சிவப்பற்றும் தெய்வ அருளும் மிக்க மகனைப்
பெற்றுப் பெருமிதமடைய எண்ணினர். இச்சிவ அன்பர்கள் எப்போதும் முழுமுதற் பரம்
பொருளின் நினைவாகவே இருந்தனர். அதற்கென அருந்தவம் செய்தனர்.
திருத்தோணியப்பருக்குத் தொண்டுகள் பல புரிந்தனர். அதன் பயனாக தோணியப்பர்
இச்சிவத் தொண்டர்களின் மனக்குறையைப் போக்க மக்கட்பேற்றை அளித்து அருளத்
திருவுள்ளம் கொண்டார். பிறைமுடிப் பெருமானின் திருவருளால் பகவதியார்
கருவுற்றாள். வைகாசிமுதல் நாளன்று - சைவம் தழைக்க திருஞான
சம்பந்தப்பெருமான் பகவதியாருக்கும் சிவபாத விருதயருக்கும் திருமகனாய்
அவதாரம் செய்தார். செல்வன் பிறந்த பேருவகையில் பெற்றோர்கள் பொன்னும்
பொருளும் வந்தோர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கினர். அன்பர்களுக்கு அமுது
அளித்தனர். ஆலயத்திற்கு முக்காலமும் கோலாகலமாகப் பெருவிழா போல் சிவ
வழிபாடுகள் பல செய்தனர்.மண்மாதாவின் மடியில் பிறந்த அருந்தவப் புதல்வன்
பெற்றோர்களின் மடியிலும் துங்கமணி மாடத்திலும் தூயமணி பீடத்திலும்,
அணிமிகும் தொட்டிலி<லும் விளையாடினான்.செங்கீரை, சப்பாணி, அம்மானை
முதலிய பருவங்களைக் களிப்போடு கடந்து, சின்னஞ்சிறு தேர் உருட்டி வீதியிலே
தளர் நடை பயிலும் பருவத்தை அடைந்தான். இப்படியாகப் பிரபஞ்சத்தில் கமலமலர்ப்
பாதங்களைப் பதிய வைத்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்பிறைபோல்
வளர்ந்து வந்த தவப்புதல்வருக்கு மூன்றாவது ஆண்டு தொடங்கிற்று. வழக்கம்போல்
சிவபாதவிருதயர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடப்
புறப்பட்டார். அப்போது தவப்புதல்வன் அழுது கொண்டே தந்தையைப் பின்னே
தொடர்ந்து வாயில் வரை வந்தான். பிஞ்சுக் கால்களிலே இனியதான கிண்கிணி ஓசை
ஒலிக்க, மெல்ல அடி இட்டு வந்த செல்வன் தாமும் உடன் வருவதாகக் குழலைப்
பழிக்கக் கூறி நின்றான். மழலை மொழிதனில் உலகை மறந்த சிவபாத விருதயர்
தம்மோடு நீராடி மகிழ குழந்தையையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். குளத்தை
வந்தடைந்த சிவபாதவிருதயர் குழந்தையைக் கரையிலே உட்கார வைத்துவிட்டு நீராடக்
குளத்தில் இறங்கினார்; ஜபதபங்கள் புரிந்து தண்ணீரில் மூழ்கினார். குழந்தை
தந்தையாரைக் காணாது மனம் கலங்கியது; கண்களிலே கண்ணீர் கசிய சுற்றும்
முற்றும் பார்த்தது! குழந்தை கோபுரத்தை நோக்கி, அம்மே! அப்பா எனத் தன் பவழ
வாயால் அழைத்தது. பொருமிப் பொருமி அழுதது. தோணியப்பர், உமாதேவியாரோடு
வானவீதியில் பேரொளி பரவ எழுந்தருளினார்.

எம்பெருமான்
உமாதேவியாரிடம், தேவி ! நமது தொண்டனுக்குச் சிவஞானத்தை குழைத்த பாலைப்
பொற்கிண்ணத்தில் ஏந்தி ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி
குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி
மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில்
ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக்
கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என
மொழிந்தாள்.குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச்
செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது.
திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப்
பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.அமரர்க்கும் அருந்தவசியர்க்கும்
அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம்
செய்ததனாலே சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார். அப்பொழுதே
சம்பந்தர் உவமையில்லாத கலைஞானத்தைப் பெற்று விளங்கும் பெருமகனானார்.
குளத்தில் மூழ்கி நியமங்களை முடித்துக் கரையேறினார் சிவபாதவிருதயர்.
ஒப்பற்ற ஞானத்தோடு பேருணர்வு பெற்று விளங்குகின்றார் பிள்ளை என்ற உண்மையை
அவர் அறிந்திலார். குழந்தையருகில் வந்தார்.பிஞ்சுக் கரங்களிலே
பொற்கிண்ணமிருப்பதைக் கண்டார். செக்கச் சிவந்த செங்கனி இதழ்களிலே பால்
வழிவதனையும் கண்டார். அந்தணர் ஐயமுற்றார்.பால் மணம் மாறாப் பாலகனுக்கு எவரோ
எச்சிற் பால் ஊட்டிச் சென்றனரே என ஐயமுற்றார். கள்ளமில்லாப் பாலகனை
கடுங்கோபத்தோடு பார்த்தார். கீழே கிடந்த குச்சியை எடுத்தார் பாலகன் அருகே
சென்று, உனக்கு எச்சிற் பாலைக் கொடுத்தது யாரென்று எனக்கு காட்டு என்று
மிக்கச் சினத்துடன் கேட்டார். தந்தையின் சுடுமொழியினால் மெய்ஞான சம்பந்தர்
விழிகளிலே ஆனந்தக் கண்ணீர் தான் ததும்பியது. சம்பந்தர் ஒரு காலைத் தூக்கி
ஒரு திருக்கை விரலை உச்சி மேல் உயர்த்தி விண்ணிலே விடையின் மேல் பேரொளியோடு
எழுந்தருளிய பெருமானைச் சுட்டிக்காட்டினார். ஞானசம்பந்தர் தமது ஒப்பற்ற
ஞானத் திருமொழியினால் எல்லையில்லா வேதங்கட்கு மூலமாகிய ஓங்காரத்தோடு
சேர்ந்த எழுத்தால் இன்பம் பெருகப் பாடத் தொடங்கினார். தாம் பாடும் தமிழ்மறை
பரமசிவத்தின்பாற் சென்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்ப சிவபிரானது
திருச்செவிறைச் சிறப்பித்துச் செவ்விசையோடு, தோடுடைய செவியன் எனத்
தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடலானார். தெய்வத்திருவருள் பெற்ற
திருஞானசம்பந்தரை மிரட்டுவதற்காகக் கோலெடுத்து வந்த அந்தணர் திகைத்தார்.
செயலற்று நின்றார். அவர் கையிலே இருந்த கோல் அவரையறியாமலேயே கை நழுவிக்
கீழே விழுந்தது. அந்தணர் ஆனந்தக் கூத்தாடினார். அருந்தமிழ்ப் பதிகத்தால்
உண்மையை உணர்த்திய புதல்வரின் முகத்தில் இறைவனின் தோற்றப் பொலிவுதனைக்
கண்டு மெய்யுருகினார். சம்பந்தப் பெருமான் தோணியப்பர் எழுந்தருளியிருக்கும்
கோவி<<<லுக்குச் செல்ல மெல்ல தம் சீரடி எடுத்து வைத்தார்.
தந்தையாரும் பிள்ளையாரைப் பின் தொடர்ந்தார். தோணியப்பர் கோவிலையடைந்த
ஞானசம்பந்தர் இறைவனை வணங்கி வழிபட்டார். பதிகம் ஒன்றைப் பாடினார். இந்த
அற்புத நிகழ்ச்சி பகலவனின் காலை இளங்கீற்றுப்போல் ஊரெங்கும் பரவியது.
ஞானசம் பந்தரின் அருஞ்செயலை நேரில் கண்டு களிப்புற அனைவரும் கோவிலின்
வாயிலில் ஒருங்கே கூடினர். ஞானசம்பந்தர் அங்கிருந்த அனைவருக்கும்
எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மேல் வந்து தம்மை ஆட்கொண்டு அருளிய
திறத்தினை மொழிந்தார். அனைவரும் ஞானசம்பந்தரை, காழியர் செய்த தவமே!
கவுணியர்தனமே ! கலைஞானக் கடலே, அக்கடலிடை தோன்றிய அமுதே! மறைவளர் திருவே!
வைதிக நிலையே! வளர்ஞானப் பொறையணி முகிலே! புகலியர் புகலே! காவிரி பெற்ற
மணியே ! மறையின் ஒளியே! புண்ணிய முதலே! கலை வளரும் திங்களே! கண் கவரும்
கதிரொளியே! இசையின் முதலே! மூன்றாண்டிலே சைவந் தழைக்க எம்பெருமான் அருள்
பெற்ற செல்வனே ! நீ வாழ்க! என வாழ்த்தி மகிழ்ந்தனர். சம்பந்தர் கோவிலை
விட்டுத் வீட்டிற்குப் புறப்பட்டார். அன்பர்களும் அடியார்களும் தொடர்ந்து
புறப்பட்டனர். சிவபாதவிருதயர் தம் தெய்வத் திருமகனைத் தோளிற் சுமந்துகொண்டு
மகிழ்ச்சியுடன் வீதி வழியே பவனி புறப்பட்டார். கோவிலை மும்முறை வலம்
வந்தார். தோணிபுரத்துப் பெருமக்கள் புடை சூழ்ந்து கொண்டு ஞானசம்பந்தரை
வாழ்த்தி வணங்கியதோடு தங்களுடைய மேலாடைகளை வானில் எறிந்து அளவு கடந்த
ஆரவாரம் செய்தனர். மங்கல மங்கையர்கள் மேல் மாடங்களிலே வந்து நின்று மங்கள
மொழிகள் கூறினர். தேன் சிந்தும் நறுமலர்களையும், நறுமணப் பொடியையும்
நெற்பொரியோடு கலந்து தூவி வாழ்த்தினர். வீதிதோறும் மணிவிளக்குகள்
ஒளியூட்டின. எங்கும் மாவிலைத் தோரணங்கள் அழகு செய்தன. வீடெல்லாம் அழகாக
அலங்கரித்தனர். வெண் சிறு கடுகு, முகில் முதலியவற்றால் தூபமெடுத்தார்கள்.
இப்படியாகத் திருவீதியெங்கும் மறை ஒலியும், மங்கல வாத்தியமும் ஒலிக்க
ஆளுடைப்பிள்ளையார் இல்லத்தை அடைந்தார்.

பகவதியார் தமது தவச் செல்வனை
ஆரத்தி எடுத்து வாரி அணைத்து எடுத்துக் கொண்டார். முத்தமாரி பொழிந்தார்.
உலகையே மறந்து உவகை பூண்டார். வியக்கத்தக்கத் திருவருளைப் பரமனருளால் பெற்ற
ஞானசம்பந்தர் தந்தையாருடன் சிவத்தலங்கள் தோறும் சென்று ஆலய தரிசனம் செய்ய
எண்ணினார். ஒரு நாள் தந்தையாருடன் ஆலய தரிசனம் காணப் புறப்பட்டார்.
அடுத்துள்ள திருக்கோலக்காவை அடைந்தார். அங்கு எழுந்தருளி இருக்கும்
எம்பெருமானை வழிபட்டார். கையினால் தாளம் போட்டுக் கொண்டே, மடையில் வாளையாய
எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தார். பிஞ்சுக்கரம்
சிவக்கத் தாளம் போடுவதைப் பார்த்த செஞ்சடைவண்ணர் ஐந்தெழுத்து மந்திரம்
எழுதிய பொன்னாலான இரண்டு தாளங்களை ஞானசம்பந்தரின் திருக்கை மலரிலே வந்து
தங்குமாறு திருவருள் பாலித்தார். ஞானசம்பந்தர் இறைவனின் கருணையை எண்ணி
உள்ளமும் உடலும் பூரித்தார். இறைவன் அருளால் தம் அங்கை மலரிலே வந்து தங்கிய
பொற்தாளங்களைச் சிரம் மீது எடுத்து வணங்கினார்.அவற்றாலே தாளம் போட்ட
வண்ணம் ஏழிசைகளும் தழைத்தோங்குமாறு பக்திப் பெருக்கோடு தமிழிசை பொழிந்து
திருக்கடைக் காப்பு சாத்தி நின்றார்.தேவத் துந்துபிகள் முழங்க விண்ணவர் பூ
மழையைப் பொழிந்தனர். தந்தையார் ஞானசம்பந்தரைத் தம் தோள் மீது சுமந்து
கொண்டு சீர்காழிக்கு வந்து நின்றார்.ஞானசம்பந்தருக்குப் பொன்னாலான தாளம்
அளித்தமையால் திருத்தாளமுடையார் கோவில் என்று அத்தலத்திற்குச் சிறப்புப்
பெயர் ஏற்பட்டது. சீர்காழியில் உள்ள தொண்டர்களும் சுற்றுப்புற ஊர்களிலுள்ள
சிவத் தொண்டர்களும் அந்தண சிரேஷ்டர்களும் கூட்டங் கூட்டமாக வந்து ஞான
சம்பந்தரை வழிபட்டனர். சம்பந்தர் அனைவரோடும் கோயிலுக்குச் சென்றார்.
தோணியப்பரை எட்டுப் பதிகங்கள் அடங்கிய கட்டளை ஒன்றில் அமைந்த பூவார் கொன்றை
என்ற தேவாரப் பதிகம் பாடி வணங்கினார். சிவனருட் செல்வரின் சுந்தர
தரிசனத்தால் சீர்காழி அன்பர்கள் பாலாழியில் மூழ்கிய பேரின்பத்தைப்
பெற்றார்கள். இவ்வாறு, எம்பெருமானுக்கு சம்பந்தனார் திருத்தொண்டு புரிந்து
வரும் நாளில் திருநனிப்பள்ளி அன்பர்கள் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும்
என்று சம்பந்தரைக் கேட்டுக் கொண்டார். ஒருநாள் சம்பந்தர், தாயின் ஊராகிய
திருநனிப் பள்ளிக்குப் புறப்பட்டார். தந்தையார் தனயனைத் தோளிலே சுமந்து
நடந்தார். திருநனிப்பள்ளிப் பெருமானைத் தமிழ்மறை பல பாடி வணங்கியவாறு
புறப்பட்டார். திருவலம்புரம், பல்லனீச்சரம், திருச்சாயக்காடு,
திருவெண்காடு, திருமுல்லைவாயில் முதலிய சிவத்தலங்களை தரிசித்த வண்ணம்
மீண்டும் சீர்காழியை வந்தடைந்தார் திருஞானசம்பந்தர்! ஞானசம்பந்தர்
சீர்காழியில் இருந்தவாறே சுற்றுப்புறத்துள்ள பல சிவத் தலங்களைத்
தரிசித்துப் பதிகங்கள் பாடி வந்தார். சம்பந்தருடைய தெய்வத் திருப்பணியைப்
பற்றிக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியாராகிய
மதங்கசூளாமணியாரும் ஞான சம்பந்தரை தரிசிக்கச் சீர்காழிக்கு வந்தனர்.
ஞானசம்பந்தர் அவர்கள் தம்மை வீழ்ந்து வணங்கும் முன்பே அன்போடு வீழ்ந்து
வணங்கி எழுந்தார். ஞான சம்பந்தர் தேவார அமுதும் பொழிந்தார். அத்தேவார
அமுதத்தைப் பாணர் தம்பதியர் யாழிசைத்து மகிழ்ந்தனர். ஞானசம்பந்தர் பாட,
பாணர் யாழிசைக்க, பாலும் தேனும் கலந்தாற்போல் எங்கும் தமிழ் மழை பொழிந்தது.
திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்கசூளாமணியாரும் ஞானசம்பந்தருடனேயே இருந்து
அவருடைய பாசுரங்களை யாழிலே இசைக்கும் அரும் பெரும் தொண்டை மனங்குளிர -
பரமன் செவி குளிர - கேட்போர் உள்ளம் உருகத் தொடர்ந்து நடத்தி வரலாயினர்.
இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் ஞானசம்பந்தருக்குத் தில்லையில்
எழுந்தருளியிருக்கும் நடராசப் பெருமானை வழிபட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது.

யாழ்ப்பாணரோடு
தந்தையாரையும் அழைத்துக் கொண்டு தில்லைக்குப் புறப்பட்டார் சம்பந்தர்.
தந்தையார், சம்பந்தரைத் தோளில் சுமந்து கொண்டு மகிழ்வோடு புறப்பட்டார்.
சீர்காழி மெய்யன்பர்கள் சம்பந்தரை வழிஅனுப்பி வைத்தனர். தில்லைவாழ்
அந்தணர்கள் ஞானசம்பந்தர் பெருமானைப் பூரண பொற்கும்ப கலசங்கள் வைத்து
வரவேற்று வீதி வழியே அழைத்துச் சென்றனர். தில்லைத் திருவீதியையும்,
எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கியவாறே ஆலயத்தை வலம் வந்த ஞானசம்பந்தர்
கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. பதிகம் பாடிக்கொண்டே தெற்கு
ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜப் பெருமானை வணங்கினார். அவரது
பாடல்களை பாணரும் அவரது மனைவியாரும் யாழில் இசைத்தனர். பல நாட்கள்
தில்லையில் தங்கி திருப்பணிகளைச் செய்தார் சம்பந்தப் பெருமான்! தில்லையில்
தங்கி இருந்த ஞான சம்பந்தர் அருகிலுள்ள திருவேட்களம் சென்றார். அங்கு
திருக்கோவிலிலே தங்கி இருக்கும் அரனாரைப் பாடிப் பாடி, உள்ளம் உருகினார்.
அங்கிருந்தபடியே அடிக்கடி தில்லைக்கு வந்து சிற்றம்பலத்தையும் தரிசனம்
செய்து வரலானார். பாணர் வேண்டுகோளுக்கிணங்க அவரது சொந்த ஊராகிய
திருஎருக்கத்தம்புலியூருக்கு சம்பந்தர் புறப்பட்டார். ஆங்காங்கே கோவில்
கொண்டுள்ள இறைவனை வழிபட்டு திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டே சென்றார்.
ஞானசம்பந்தருக்கு திருநெல்வாயில் அரந்துறையைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை
எழுந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு உச்சிநாதர்
என்று பெயர். அது காரணம் பற்றியே அத்தலத்திற்கு திருவுச்சி என்றும் ஒரு
பெயர் உண்டு. திருமகனின் ஆசையை நிறைவேற்ற தந்தையார் அவரைத் தமது தோளில்
சுமந்துகொண்டு புறப்பட்டார். தந்தையார் தம்மைத் தூக்கிக்கொண்டு நடப்பது
கண்டு சம்பந்தர் மனம் கலங்கினார். தந்தையாரைத் தோளிலே தூக்கிச் செல்ல
வேண்டாம் என்று கூறிய ஞானசம்பந்தர், தமது பட்டுப்பாதம் நோவதையும் அறியாது
நடக்கலானார். இவர்கள் போகும் வழியே மாறன்பாடி என்னும் தலம் ஒன்று
எதிர்ப்பட்டது. இரவு நெருங்கவே அனைவரும் அங்கே தங்கினர். திருநெல்வாயில்
அரத்துறை அமைந்த இறைவன், ஞான சம்பந்தர் சேவடி நோக நடந்துவருவதை எண்ணி,
அவ்வூர் அடியார்களின் கனவில் தோன்றினார். ஞானசம்பந்தன் தளிர் அடிகள் நோக
நம்மைத் தரிசிக்க வருகின்றான். அவனை ஏற்றி வருவதற்காக முத்துச்
சிவிகையையும், முத்துக் குடையையும், முத்துச் சின்னங்களையும்
வைத்திருக்கின்றோம். அவற்றை எடுத்துச் சென்று, இது எமது கட்டளை என்று கூறி
அழைத்து வருவீர்களாக ! என சிவ பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.
எம்பெருமான், ஞானசம்பந்தர் கனவிலும் தோன்றி, நாம் உனக்கு மகிழ்ந்து அருளும்
முத்துச்சிவிகை, முத்துக்குடை முதலியவற்றைப் பெற்றுக் கொள்வாயாக எனத்
திருவாய் மலர்ந்தருளினார். பொழுது புலர்ந்தது! ஞானசம்பந்தர் இறைவனின்
திருவருட் கருணையை எண்ணிப் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமன் அருளைப்
போற்றினார். அதற்குள் மறையோர்கள் முத்துச்சிவிகையோடு வந்தனர். ஞானசம்பந்தப்
பெருமானைக் கண்டு இறைவன் திருவாய் மலர்ந்து அருளிய திருவாசகத்தைச்
சொல்லினர். முத்துச் சிவிகையில் எழுந்தருளப் பிரார்த்தித்தனர். நெல்வாயில்
மெய்யன்பர்கள் சம்பந்த பெருமானையும் அவரது தந்தையாரையும் உடன் வந்த
அடியார்களையும் நெல்வாயில் அரத்துறைத் திருக்கோவிலுக்கு மேளதாள இன்னிசை
முழக்கத்துடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர். ஞானசம்பந்தர் அரத்துறை
அரனாரை வழிபட்டுப் பதிகம் பலவற்றைப் பாடினார். அவ்வூர் அடியார்கள்
விருப்பத்திற்கு இணங்க சில காலம் நெல்வாயிலில் தங்கினார் சம்பந்தர்.
அங்கிருந்தவாறே அருகிலுள்ள பல சிவன் கோவில்களையும் வழிபட்டு வரலானார்.
பிறகு சீர்காழியை வந்தடைந்தார்.

சீர்காழிப் பகுதியில்
எழுந்தருளியிருந்த சம்பந்தர் அனுதினமும் தோணியப்பரைப் பாடிப் பரவசமுற்றார்.
ஞானசம்பந்தருக்கு உரிய பருவத்தில் அவரது பெற்றோர்கள், முப்புரி நூலணியும்
சடங்கினைச் சீரோடும் சிறப்போடும் நடத்தினர். ஞானசம்பந்தர் சீர்காழியில்
தங்கி இருக்கும் நாளில் ஞானசம்பந்தருடைய அன்பையும், அருளையும்,
ஞானத்தையும், மேன்மையையும் கேள்வியுற்ற திருநாவுக்கரசர் சீர்காழிக்கு
வந்தார். அவரது வருகையை முன்னதாகவே தெரிந்துகொண்ட சம்பந்தர் அன்பர் புடைசூழ
அப்பரடிகளை எல்லையிலேயே எதிர்கொண்டழைத்தார். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
அகமகிழ்ந்து களித்தனர். ஞானசம்பந்தர் கரங்குவித்து இன்பம் பெருக
இன்மொழியால் அப்பரே என்றழைக்க நாவுக்கரசர் அவரை நோக்கி அடியேன் என்று
<உள்ளம் உருக வணங்கினார். இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை
வழிபட்டனர். ஞானசம்பந்தருடன் தங்கி இருந்து திருத்தலங்கள் பவலவற்றைத்
தரிசித்து வந்த அப்பரடிகள் ஒருநாள் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு
புறப்பட்டார். ஞானசம்பந்தர் திருத்தோணியப்பரைச் செந்தமிழ் மாலை
விகற்பங்களான திருமொழிமாற்று, திருமாலை மாற்று, வழிமொழித் திருவிராகம்,
திருஏகபாதம், திருவிருக்குறள், திருவெழுக கூற்றிருக்கை, திருவிராகம் போன்ற
பற்பல திருப்பதிகங்களை உள்ளம் உருக பாடிப் பரவசம் பூண்டார்.
இத்திருப்பதிகங்கள், மூல இலக்கியமாக வீடுபேற்றிற்கான உண்மை இயல்பினை
உணர்த்தும் சன்மார்க்க பதிகங்களாக அமைந்துள்ளன. ஒருநாள் தந்தையாருடன்,
பிள்ளையார் சிவயாத்திரையைத் தொடர்ந்தார். அதுசமயம் பாணரும் அவரது
மனைவியாரும் உடன் சென்றார்கள். சோழ நாட்டிலுள்ள பல சிவத் தலங்களை
தரிசித்தவாறு திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந்தனர். திருக்கோவிலை வலம் வந்து
இறைவனைத் தொழுது நின்ற சம்பந்தர் இறைவன் திருமுன் கிடந்த கொல்லி மழவன்
மகளைக் கண்டார். மழநாட்டுத் தலைவன் கொல்லி மழவன் வலிப்பு நோயால் துன்புறும்
தன் மகளை இவ்வாலயத்தில் விட்டுச் சென்றுவிட்டான். இறைவன் அருளால் தன்
மகளுக்கு நோய் நீங்கும் என்றெண்ணித்தான் மழவன் இவ்வாறு செய்தான். இந்த
சமயத்தில், ஞானசம்பந்தர் ஆலயத்திற்கு வந்துள்ளார் என்பதைக் கேள்விப்பட்டான்
மன்னன். ஆளுடைப் பிள்ளையாரால் எப்படியும் தன் மகளுக்கு உடல் பூரண
குணமடையும் என்று மனம் குளிர்ந்த மழநாட்டுத் தலைவன் ஞானசம்பந்தரைக் காண
ஓடோடி வந்தான். தலைவன் ஞானசம்பந்தரிடம் மகளின் உடல்நிலையைக் கூறி வருந்தி
உள்ளம் உருகி நின்றான். ஞானசம்பந்தர் துணிவளர் திங்கள் எனத் தொடங்கும்
பதிகத்தை, மழவன் மகளின் வலிப்பு நோய் நீங்குமாறு உள்ளம் இரங்கிப் பாடினார்.
இறைவன் திருவருளால் ஞானசம்பந்தர் பதிகம் பாடி முடிந்ததும் தலைவன் மகள்
நோய் நீங்கி, சுய உணர்வு பெற்று எழுந்தாள். ஞானசம்பந்தரின் வியக்கத்தக்க
இவ்வருட் செயலை எண்ணி உள்ளமும் உடலும் பொங்கிப் பூரித்துப்போன தலைவனும்,
தலைவன் மகளும் தெய்வத் திருமகனின் தாள்தனில் வீழ்ந்து வணங்கி கண்களில்
ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். ஞானசம்பந்தர் அவர்களை வாழ்த்தினார்.
அங்கியிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர் மேலும் பல கோயில்களை வழிபட்ட வண்ணம்
கொங்கு நாட்டை வந்தடைந்தார். கொங்குநாட்டில் மக்களைக் கொல்லும் கொடும்
பனியைக் கண்டார். அவ்வினைக்கு இவ்வினை எனத் தொடங்கும் பதிகமொன்றைப் பாடிக்
கொடும் பனி அந்த நாட்டினைச் சேரா வண்ணம் பேரருள் புரிந்து மக்களைக்
காத்தார்.கொங்கு நாட்டு மக்கள் ஞானசம்பந்தரைப் போற்றி புகழ்ந்து வாழ்த்தி
வணங்கினர். இவ்வாறு இறைவனைத் தரிசித்துப் பதிகங்கள் பல பாடி, பாரோர்
புகழ்ப் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி, ஊர் ஊராகச் சுற்றி வந்த
ஞானசம்பந்தர், திருப்பட்டீ சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத்
தரிசிக்கத் திருவுள்ளம் கொண்டு அத்திருத்தலம் நோக்கிப் புறப்பட்டார்.
ஞானசம்பந்தர் வெய்யிலில் நடந்து வரும்பொழுது திருவுளங் கனிந்த இறைவன்
அவருக்குப் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அமைத்து நிழல் கொடுக்கச்
செய்தார். முத்துப் பந்தலின் நிழலிலே திருப்பட்டீசுரத்தை அடைந்த
ஞானசம்பந்தர் எம்பெருமானை வழிபட்டுப் பதிகம் ஒன்றைப் பாடினார்.
அங்கியிருந்து புறப்பட்டுத் திருவாடுதுறையை வந்தடைந்தார் திருஞான
சம்பந்தர். அங்கு தொண்டர்களும், அடியார்களும், அந்தணர்களும், ஞானசம்பந்தரை
எதிர்கொண்டு அழைத்து வரவேற்று வணங்கினர். ஞானசம்பந்தர் அத்தலத்தில் சில
காலம் தங்கியிருந்தார். அப்பொழுது, அவருடைய தந்தையார் அவரிடம்,
சீர்காழியில் வேள்வி நடத்துவதற்குப் பொன்னும் பொருளும் வேண்டும் என்று
கேட்டார். ஞானசம்பந்தர் இறைவன் திருவடியை எண்ணித் திருப்பதிகம் ஒன்றைப்
பாடினார். இறைவன் ஒரு பீடத்தில் எடுக்க எடுக்க என்றும் குறையாத ஆயிரம் பொன்
நிறைந்த கிழி ஒன்றைக் கொடுத்து அருளினார். தந்தை சிவபாதவிருதயர் மனம் மகிழ
அதைக் கொண்டு வேள்வி நடத்துவதற்காகச் சீர்காழியை நோக்கிப் புறப்பட்டார்.
ஞானசம்பந்தரும் விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.

திருவாடுதுறையில்
தங்கியிருந்த சம்பந்தர் பாடினார். பாணர் யாழ் மீட்டி மகிழ்ந்தார்.
மெய்யன்பர்கள் இசை வெள்ளத்தில் மூழ்கினர்.அவ்வூரிலுள்ள பாணருடைய
உறவினர்களும், சுற்றத்தார்களும் தங்கள் அறியாமையால் ஞானசம்பந்தர் பாடும்
பதிகங்கள் பாணர் யாழ் மீட்டி வாசிப்பதால்தான் புகழ் பெறுகின்றன என்ற தவறான
எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அவ்வெண்ணத்தை அவர்கள் பாணரிடமே பெருமையுடன்
வெளியிடவும் செய்தனர். அதுகேட்ட பாணர், உளம் துடித்துப் போனார். ஞானப்
பாலுண்ட சம்பந்தரிடம், தன் சுற்றத்தாரின் அறியாமையையும் செருக்கையும்
அடக்கவேண்டும் என்று உள்ளமுருக வேண்டினார். அதைக் கேட்ட ஞானசம்பந்தர் மாதர்
மடப்பிடி எனத் தொடங்கிடும் திருப்பதிகமொன்றைப் பாடினார். பாணர்
அப்பதிகத்தை யாழில் மீட்டிப் பாட இயலாது செயலற்றுப் போனார். பாணர் கண்
கலங்கினார். வேதனை கருணையை உணராது யாழை உடைக்க முற்பட்டது தவறு. இந்தக்
கருவியில் முடிந்த அளவுக்கு எவை கிட்டுமோ அவற்றை முன்போல் இதனிலிட்டு
வாசிப்பீராக என்று ஞானசம்பந்தர் பாணருக்கு அன்பு கூர்ந்து அருளி
வாழ்த்தினார். பாணர் முன்போல் யாழில் பண் அமைத்துப் பதிகம் பாடினார்.
அதுகண்ட பாணருடைய உறவினர்களும், சுற்றத்தார்களும் தங்கள் தவற்றை
உணர்ந்தனர். ஞானசம்பந்தருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி, தங்கள்
தவற்றுக்கு மன்னிப்புக் கோரினர். அங்கியிருந்து சிவயாத்திரை புறப்பட்ட
ஞானசம்பந்தர் திருச்சாத்த மங்கையை அடைந்து, திருநீலநக்க நாயனாரைக் கண்டு
மகிழ்ந்து வேறு பல தலங்களைத் தரிசித்த வண்ணம் செங்காட்டங்குடி வழியாக
திருமருகல் என்னும் தலத்தை வந்தடைந்தார். திருமருகல் கோயில் மடத்தில்
தங்கியிருந்து எப்போதும் இறைவனை வழிபட்டு வந்தார் சம்பந்தர். ஒருநாள் அங்கு
வியக்கத்தக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. திருமருகல் கோயில் மடத்தில் ஒரு
கன்னிப் பெண்ணும் ஒரு வணிக மகனும் தங்கி இருந்தனர். அக்கன்னிப் பெண்ணின்
காதலனான வணிக மகன் ஓர்நாள் அவ்விடத்தில் பாம்பு தீண்டி உயிர் நீத்தான்.
காதலனுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிக் கன்னி மகள் துடித்தாள். பெற்றோருக்குத்
தெரியாமல் அத்தை மகனை மணக்க வேண்டும் என்று ஓடிவந்த தனது ஆசையில்
இப்படியொரு பேரிடி வீழ்ந்ததே என்றெண்ணி தத்தளித்தாள். அப்பெண்மணி வணிக
மகனைத் தீண்ட முடியாத நிலையில் தாங்கொணாத் துயரால் பலவாறு சொல்லி புலம்பிக்
கொண்டே இருந்தாள். அவளது புலம்பல் கோயிலை நோக்கி வரும் ஞானசம்பந்தர்
செவிகளில் விழுந்தது. வாடிய முகத்துடனும், வடிக்கும் கண்ணீருடனும் ஒடிந்து
விழுந்த பூங்கொடி போல் தன் நிலை மறந்து நின்ற வணிக மகள், ஞானசம்பந்தரைக்
கண்டாள். திருமருகல் தெய்வமே எழுந்தருளினாற்போல் சித்தத்தில் கொண்டாள்.
ஓடிச்சென்று அவரது பாதங்களில் வீழ்ந்தாள். ஞானசம்பந்தர் அப்பெண்மணிக்கு
ஆறுதல் மொழி கூறினார். அப்பெண்மணி தனது சோகக் கதையைச் சொல்லத் துவங்கினாள்.
நான் பிறந்த ஊர் வைப்பூர். தாமன் என்பவர் என் தந்தை. என் தந்தைக்கு
என்னுடன் ஏழு பெண்கள் உண்டு. இங்கு இறந்து கிடக்கும் என் அத்தை மகனுக்குத்
தன் பெண்களில் ஒருவரைக் கொடுப்பதாகச் சொல்லிய அவர், மற்ற ஆறு பெண்களில்
ஒருத்தியைக் கூட இவருக்குக் கொடுக்காமல் ஏமாற்றியதை எண்ணி மனம் பொறாத நான்,
இவரை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக இங்கு ஓடிவந்தேன்.வந்த இடத்தில் விதி
எனக்குச் சதி செய்துவிட்டது. என் வாழ்க்கைத் துணைவராக இல்லறத்தில் இருக்க
வேண்டிய என் அத்தை மகன் அரவத்தால் தீண்டப்பட்டு எனக்குமில்லாமல் இந்த
உலகத்திலும் நில்லாமல் போய்விட்டார் எனச் சொல்லி மேலும் புலம்பிக் கண்ணீர்
வடித்தாள். ஞானசம்பந்தர் கால்களில் விழுந்து அழுதாள் அந்த வணிகக் குலப்
பெண்மணி!

ஞானசம்பந்தர் திருமருகல் தெய்வத்தைப் பணிந்து எழுந்து,
சடையாய் எனுமால் எனத் தொடங்கி பதிகம் ஒன்றைப் பாடியருளினார். நீலகண்டப்
பெருமான் சம்பந்தரின் செந்தமிழ்ப் பண் கேட்டுச் சிந்தை மகிழ்ந்தார்.
திருமருகல் உறையும் உமையொருபாகன் வணிக மகனைக் காத்தார். இறைவனின் கருணையால்
வணிக மகன் உயிர் பெற்று எழுந்தான். அனைவரும் அதிசயித்து சம்பந்த பெருமானை
வணங்கி துதித்தனர்.வணிக மகனும், வணிக மகளும் ஞானசம்பந்தரின் பாத கமலங்களில்
வீழ்ந்து வணங்கினர். சம்பந்தர் இருவரையும், திருமணம் செய்து கொண்டு
என்றென்னும் நீடு புகழ் வாழ்வீராக என்று ஆசி கூறி வழி
அனுப்பினர்.ஞானசம்பந்தர் அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து, சிவ
வழிபாட்டை இடையறாது நடத்தி வந்தார். அந்நாளில், அவரைக் காண சிறுத்தொண்ட
நாயனார் வந்தார். இருவரும், ஒருவரை ஒருவர் வணங்கி மகிழ்ந்தனர். இருவரும்
திருமருகல் நீலகண்டப் பெருமானை வழிபட்டவாறு, அங்கியிருந்து புறப்பட்டு,
திருச்செங்காட்டாங்குடிக்கு வந்தனர். அங்கு கோவில் கொண்டுள்ள கணபதீச்சுரரை
வணங்கி வழிபட்டு வாழ்ந்து வரலாயினர். சில நாட்களில், அங்கியிருந்து
புறப்பட்டுத் திருப்புகலூரை அடைந்தார். அங்கு முருகநாயனார் தங்கியிருந்த
திருமடத்தில் தங்கினார். அச்சமயத்தில் அப்பரடிகள் தொண்டர் பலருடன்
திருப்புகலூரை வந்தடைந்தார். அப்பரடிகள் திருவாரூர் தரிசனத்தைப் பற்றிச்
சிந்தை குளிரும் பதிகத்தால் சிறப்புற எடுத்து இயம்பியதைக் கேட்ட
ஞானசம்பந்தருக்குத் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்ட பெருமானைப் போற்றிப்
பணிந்து வரவேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. ஞானசம்பந்தர்
அப்பரடிகளைத் திருப்புகலூரிலேயே சில காலம் தங்கி இருக்கும்படி கூறி விட்டு
திருவாரூருக்குப் புறப்பட்டார். ஞானசம்பந்தர் திருவாரூர் செல்லும் வழியே
உள்ள சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்து மகிழ்ந்தவாறே திருவாரூரை வந்து
அடைந்தார். திருவாரூரில் தியாகேசப் பெருமானைக் கண்குளிரக் கண்டு களித்தார்.
தமிழ்ப் பாமாலை தொடுத்து இன்புற்றார். சில காலம் தங்கியிருந்து பேரின்பம்
கொண்டார். பின்பு திருவாரூரை நீத்துத் திருப்புகலூர் வந்தார். அங்கு
அப்பரடிகளோடு தங்கியிருந்து எம்பெருமானை வழிபட்டு வரலானார்.
திருப்புகலூர்ச் செஞ்சடை வண்ணர் அருள்பெற்று, இன்புற்று ஆளுடைப்
பிள்ளையாரும், அப்பரடிகளும் அங்கியிருந்து புறப்பட்டு மற்றும் பல
சிவத்தலங்களைத் தரிசித்து வரலாயினர். இரு ஞானமூர்த்திகளும் கால்நடையாகவே
சென்று கொண்டிருந்தனர். ஞானசம்பந்தர் இறைவன் தமக்களித்த முத்துப்பல்லக்கில்
அமர்ந்து வராமல் தம்முடன் நடந்து வருவது, அப்பருக்கு மன வேதனையைக்
கொடுத்தது.அப்பரடிகள் ஞானசம்பந்தரை நோக்கி, முத்துச் சிவிகைத்தனித்து வரத்
தாங்கள் கால் கடுக்க நடந்து வருதல் ஆகாது. தாங்கள் எம்பெருமான் அருளிச்
செய்த முத்துச் சிவிகையில் எழுந்தருள்க என்று அன்போடு வேண்டினார். அது
கேட்டு ஞானசம்பந்தர் சிறிதும் மனம் ஒவ்வாத நிலையில் அப்பரிடம், தாங்கள்
நடந்துவர நான் மட்டும் முத்துச் சிவிகையில் ஏறி வருவது முறையல்ல என்று
கூறினார். எனினும் எம்பெருமானின் திருவருட் கருணையை எண்ணிப் பார்த்த
ஆளுடைப் பிள்ளையார், தாங்கள் முன்னர் எழுந்தருளுங்கள், தங்கள் பின்னால்
நான் மெதுவாக வந்து சேருகிறேன் என்றார். அப்பரடிகளும் அதற்கு இசைந்தார்.
இவ்வாறாக அப்பரடிகள் முதலில் ஒரு திருத்தலத்தை சேர்வதும், பின்னார்
ஆளுடைப்பிள்ளையார் முத்துச்சிவிகையில் அத்தலத்தை அடைவதுமாக, இரு சிவநேசச்
செல்வர்களும் தங்கள் சிவ யாத்திரையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே
இருந்தனர். இப்படியாக இரு திருத்தொண்டர்களும் திருக்கடவூர், திருவம்பர்
முதலிய தலங்களைத் தரிசித்தவாறு, திருவீழிமிழலையை வந்தடைந்தனர்.

அந்நகரத்துத்
தொண்டர்களும், அடியார்களும் இவர்களைப் போற்றி வணங்கினர். ஞானசம்பந்தர்
வீழிமிழலை எம்பெருமானைப் போற்றி சடையார் புனலுடையார் எனத் தொடங்கும் பதிகம்
ஒன்றை உள்ளமுருகப் பாடி எம்பெருமானின் சேவடியை வழிபட்டார்.ஆளுடை அரசரும்
ஆளுடைப் பிள்ளையாரும் தினந் தவறாது அரனாரை, அழகு தமிழ்ப் பா
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:15

அழகு தமிழ்ப் பாமாலைகள் புனைந்து வழிபட்டு வந்தார்கள். ஊர் மக்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை.தொண்டர்கள் மொழிந்ததைக் கேட்ட ஞானசம்பந்தர் மனம் பதைபதைத்துப் போனார். என்
பொருட்டுத்தான் அவர்கள் இத்தகையத் தீமையைச் செய்தனர். என்றாலும் அஃது
தொண்டர்களுக்கும் அல்லவா தீமையை விளைவித்திருக்கிறது. இது சமணர்களின்
குற்றமாக இருந்தாலும் இத்தகைய கொடியவர்கள் வாழும் நாட்டை ஆளும் வேந்தனின்
குற்றம்தான் அதனைவிடக் கொடியது எனத் தனக்குள் எண்ணிப் பார்த்தார்.
மனவேதனைப்பட்டார்.செய்யனே திரு ஆலவாய் மேவிய, எனத் தொடங்கும் பாடலைத்
திருப்பதிகத்தின் முதலாகக் கொண்டு பல பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு பாடலின்
ஈற்றடியிலும் சமணர் இட்ட தீயானது பாண்டியனைச் சாரட்டும் என்ற கருத்தை
வைத்தார். ஞானசம்பந்தர் பதிகத்துள் கூறியதுபோல் தீப்பிணி என்னும்
வெப்புநோய் மன்னனைப் பற்றிக்கொண்டது. வேந்தர் உடல் நெருப்பிடைப் புழுப்போல்
துடிதுடித்தது. தீயின் வெம்மை மேலும் மேலும் ஓங்க கொற்றவனின் உயிர்
ஊசலாடியது. மன்னர்க்கு நேர்ந்த விபத்தைக் கண்டு மங்கையர்க்கரசியாரும்,
குலச்சிறையாரும் மிகவும் வருந்தினர். அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
மன்னனுக்கு ஏற்பட்ட நிலை கேட்ட சமணர்கள் விரைந்தோடி வந்தனர். சமணர்கள்
மந்திரம் கூறி பீலி கொண்டு மன்னன் உடலைத் தடவினர். பீலிகள் எரிந்து
சாம்பலாயின. சமணர்கள் திகைத்தனர். பிரம்புகளால் மன்னன் உடல் வேதனையைப்
போக்க முயன்றனர். பிரம்புகளால் மன்னன் உடலைத் தீண்டும் மன்னரே அவைகளும்
தீய்ந்தன. அரசன் உயிரை வருத்தும் வெப்பு நோய் யாரையும் கிட்டவிடாமல்
தடுத்தது. மருத்துவ வல்லவர்களாலும் மந்திர மகா மேதைகளாலும், சமண
முனிவர்களாலும் மன்னனின் வெப்பு நோயைச் சிறிதளவுகூடத் தணிக்க முடியாமல்
போயிற்று. மன்னனுக்குச் சமணர்கள் மீது ஆத்திரம் மேலிட்டது. அவர்களை
அவ்விடத்தை விட்டு அகலும்படி கட்டளையிட்டான். ஞானசம்பந்தருக்குச் சமணர்கள்
செய்த தீமையின் விளைவுதான் மன்னனை இப்படி வருத்துகிறது என்ற உண்மையை நன்கு
உணர்ந்த அரசியாரும், அமைச்சரும் மன்னரிடம், இவ்வேதனை தீர புகலி மன்னர்
எழுந்தருள வேண்டும் என்று எடுத்துரைத்தனர்.மன்னன் மனம் தெளிந்த நிலையில்
கண்களிலே நீர் மல்க அரசியாரையும், அமைச்சரையும் நோக்கி, சைவத் தலைவர் வந்து
அவருடைய திருவருளால் எனக்கு ஏற்பட்டுள்ள வெப்பு நோய் அகலுமாயின் உங்கள்
கருத்தினை நான் ஏற்பேன். அது மட்டுமல்ல; எனக்கு நேர்ந்த இந்நோயைத் தீர்த்து
வென்றவர் எவரோ? அவர் பக்கம் யான் சேர்வேன். ஆதலால் உடனே புகலி மன்னரை
அரண்மனைக்கு அழைத்து வருவதற்கு ஆவன செய்யுங்கள் என்று கூறினான். மன்னன்
மொழிந்ததைக் கேட்டு அமைச்சரும் அரசியாரும் அமிழ்தத்தைப் பருகியதுபோல்
ஆனந்தக் களிப்பெய்தினர். அமைச்சர் குதிரை மீதேறி மடத்தை நோக்கி முன்னால்
விரைந்து புறப்பட, பின்னால் அரசியாரும் சிவிகையில் புறப்பட்டார். அமைச்சர்
திருமடத்திலுள்ள அன்பு அடியார்களை வணங்கி, சம்பந்தப் பெருமானைத் தரிசிக்க
அரசியார் வருகிறார்கள் என்றார். அமைச்சர் வெளியே காத்திருந்தார். அதற்குள்
அரசியாரும் வந்து சேர்ந்தார். அடியார்கள் ஆளுடைப் பிள்ளையாரிடம் சென்று
அமைச்சரும், அரசியாரும் வந்துள்ளனர் என்ற செய்தியைக் கூறினர். அடியார்கள்
கூறியதைக் கேட்டுப் பிள்ளையார், அவர்களை உள்ளே அழையுங்கள் என்று அன்புக்
கட்டளை இட்டதும் அடியார்கள் விரைந்தனர். மடத்தின் வெளியே நின்று
கொண்டிருந்த அமைச்சரும், அரசியாரும் மகிழ்ச்சி பொங்க மடத்திற்குள்
சென்றனர். அங்கே ஞான சம்பந்தர் சிவஞானமே வடிவமாக அமர்ந்திருக்கும் எழில்
மிகும் காட்சியைக் கண்டனர். அமைச்சரும், அரசியாரும் அவரது தூய பொற்பாதங்களை
சரணம் என்று பற்றிக் கொண்டனர். பிள்ளையார் இருவரையும் எழுந்திருக்கப்
பணித்தார். ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, உங்களுக்கு ஏதாவது தீங்கு
நேர்ந்ததோ! என்று கேட்டார். அமைச்சரும், அரசியாரும் சமணர்கள் செய்த
கொடுமையால் மன்னர் படுகின்ற கடும் வேதனையை விளக்கி, வேந்தர் உயிர் வாழ
தேவரீர் அரண்மனைக்கு எழுந்தருளி அரசனையும், எங்களையும் காக்க வேண்டும்
என்று வேண்டிக் கொண்டனர். ஞானசம்பந்தர் சற்றும் அஞ்சற்க ! யாம் இன்றே
வருவோம். நன்றே செய்வோம் என்று கூறி அவர்களைத் தேற்றினார். சற்று நேரத்தில்
திருஞான சம்பந்தர் மடத்திலிருந்து புறப்பட்டார். ஆலவாய் அழகனைத் தரிசித்து
மகிழ முத்து சிவிகையில் ஏறித் தொண்டர்களுடன் புறப்பட்டார். அவரைத்
தொடர்ந்து அரசியாரும், அமைச்சரும் புறப்பட்டார்கள்.

கோயிலை அடைந்த
ஞானசம்பந்தர், வாது செய்வது உமது திருவுள்ளமே என்னும் கருத்து அமைந்த
செந்தமிழ் மாலையைச் செஞ்சடையானுக்குச் சாற்றினார். சம்பந்தரின் பாமாலையைக்
கேட்டு அரசியார் மெய்யுருகினார். ஆலகாலத்தை அமுதாக உண்ட அண்ணலின் திருவருள்
பெற்ற ஞானசம்பந்தர் திருவாயில் புறத்தே இருந்த முத்துச் சிவிகையில்
அமர்ந்து அரண்மனையை நோக்கிப் புறப்பட்டார். இவர் அரண்மனையை அணுகிக்
கொண்டிருக்கும் போதே, அமைச்சர் குதிரையில் விரைந்து சென்று மன்னனிடம்
ஞானசம்பந்தர் எழுந்தருளுகின்றார் என்பதை முன்னதாகவே அறிவித்தார். மகா
மந்திரியார் மொழிந்ததைக் கேட்டு மனம் குளிர்ந்த மன்னவன் தனது
தலைப்பக்கத்தில் ஞானப்பால் உண்ட தவப் புதல்வருக்கு முழுமணி பொற்பீடம் ஒன்று
இடும்படிச் செய்தான். மந்திரியாரிடம் சிவனேசரை எதிர்கொண்டு அழைத்துவரக்
கட்டளையிட்டான். மந்திரியார் பேருவகையுடன் மன்னனின் ஆணையை நிறைவேற்றப்
புறப்பட்டார். இச் செய்தியைக் கேள்வியுற்ற சமணர்கள் மன்னனைக் காண வந்தனர்.
ஞானசம்பந்தர் வரவை எதிர்பார்த்த வண்ணமாகவே இருந்த மன்னன் சமணர்களைக் கண்டு
கடுமையான வெறுப்பு கொண்டான். மன்னனின் மனோநிலையைப் புரிந்துகொண்ட சமணர்கள்
அஞ்சி நடுங்கியவர்களாய் மன்னனிடம், மன்னா! நமது சமண மதத்தின் நெறியை நீர்
காக்கும் முறை இதுதானோ? அரசே! உங்களுக்கு ஏற்பட்டுள்ள வெப்பு நோயைக்
குணமாக்குமாறு, எங்களுக்கும் சைவ சமயத்தார்க்கும் ஆணையிடுங்கள். நாங்கள்
உங்கள் வெப்பு நோயைத் தீர்க்க முற்படுகின்றோம். ஆனால் ஒன்று சொல்கிறோம்.
நாளை உங்கள் நோயை ஒருவேளை அவர்களே போக்கினாலும்கூட எங்களால்தான் அந்நோய்
தீர்ந்தது என்று நீங்கள் உறுதியாகச் சொல்ல வேண்டும். அதுவே அவர்களை
வெல்லும் வழி என்று வஞ்சக மொழி கூறி அரசனைத் தங்கள் வழிக்குத் திருப்ப
முயன்றனர். பாண்டியன் நெடுமாறன் சமணர்களின் சூழ்ச்சிக்குச் சற்றும்
செவிசாய்க்கவில்லை. அரசன் அவர்களிடம், இரு தரப்பினரும் அவரவர்கள் தெய்வ
சார்பினால் நோயைத் தீர்க்க முயலுங்கள். அதற்காக நான் மட்டும் பொய்
சொல்லமாட்டேன் என்று தனது கருத்தை அறுதியிட்டுக் கூறினான். சமணர்கள்
செய்வதறியாது சித்தம் கலங்கினர். இச்சமயத்தில், தொண்டர் குழாத்துடன் ஞான
சம்பந்தர், அரசியாரும், அமைச்சரும் புடைசூழ மன்னர் இருக்கும் தனி அறைக்குள்
வந்தார்.ஞானசம்பந்தரின் அருட் கண்கள் மன்னனைப் பார்த்தன. அந்தப்
பார்வையின் ஒளியிலேயே மன்னன் மதிமயங்கினான். உண்மையை உணரும் ஆற்றல்
பெற்றான்.உடலிலே நோய் வருந்துவதையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் ஞானசம்பந்தரை
இருகை கூப்பி வணங்கியபடியே தன் தலைப் பக்கத்திலிருக்கும் பொன் ஆசனத்தில்
அமரும்படி வேண்டினான். ஞானசம்பந்தர் முகம் மலர ஆசனத்தில்
அமர்ந்தார்.மயக்கமும், தயக்கமும் கொண்ட சமணர்கள் சிந்தை நொந்து செயலற்றுச்
சிலையாயினர். சமணரைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மன்னன் ஞானசம்பந்தரிடம்
குசலப்பிரசினம் விசாரித்தான்.ஆளுடைப்பிள்ளையார் தான் பிறந்த திருத்தலம்
சீர்காழி என்பதனையும் பிரமபுரம் எனத் தொடங்கி சீர்காழித் திருநகரின்
பன்னிரண்டு திருநாமங்களையும் அமைத்து செந்தமிழ்ப் பாட்டொன்றால் பதிலுரைத்து
அருளினார்.அப்பெருமானுடைய பொன்மேனிதனைப் பயபக்தியோடு அன்பு மேலிட
பார்த்தபொழுது தனது வெப்பு நோய் சற்றுத் தணிந்தது போல் மன்னனுக்குத்
தோன்றியது.பொங்கி வரும் பெருநிலவைக் கிரகணம் விழுங்க வந்தாற் போல
ஞானசம்பந்தப் பெருமானைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்த சமணர்கள் அவர்
மீது அகந்தையால் ஆத்திரம் கொண்டனர். அவரை வாதினால் வெல்லக் கருதினர்.
தங்களுடைய வேத நூலிகளிலிருந்து சிலவற்றை எடுத்துக் கூறி சிறு நரி போல்
ஊளையிட்டனர். இச்சூழ்ச்சிக்காரர்களின் கூச்சலைக் கேட்டு ஞான சம்பந்தர்,
உங்கள் சமய நூற் கொள்கையின் உண்மைக் கருத்துக்களை உள்ளபடிப் பேசுங்கள்
என்றார். அவர்கள் துள்ளி எழுந்து ஆளுக்கொரு பக்கமாக ஆர்ப்பரிக்கத் தொடங்கி
விட்டனர். சமணர்களின் முறை தவறிய செயலைக் கண்ட அரசியார், மன்னன் முகம்
நோக்கி, சுவாமி! சமணர்களை வெற்றிகாண வந்திருக்கும் இப்பெருமான் பால்மணம்
மாறாப்பாலகர். ஆளுடைப் பிள்ளையார் என்று போற்றப்படும் சிவநேச செல்வர். இவர்
ஒருவராக தனித்து வந்துள்ளார். ஆனால் சமணர்களோ வயது முதிர்ந்தவர்கள்.
கணக்கற்றவர்கள். முதலில் ஆளுடைப் பிள்ளையாரின் அருளினால் தங்கள் உடலில்
ஏற்பட்டுள்ள வெப்ப நோய் விலகட்டும். அதன் பிறகு வேண்டுமென்றால் இவர்கள்
வாதாடட்டும் என்றார்.

மன்னன் அரசியாரைப் பார்த்து, மங்கையர்க்கரசி!
வருந்தற்க ! நான் சொல்லப் போவதுதான் இதற்கொரு நல்ல தீர்ப்பாகும் என்று
ஆறுதல் மொழிந்தான். அரசியார் தன் மீது கொண்டுள்ள அன்பையும், பக்தியையும்
எண்ணிப் பார்த்த ஞானசம்பந்தர், மானிநேர் விழி மாதராய் எனத் தொடங்கும்
பதிகம் ஒன்றைப் பாடினார்.அப்பாடலைக் கேட்டு மன்னன் உள்ளம் <உருகினான்.
மன்னனைப் பார்த்து சமணர்கள் பொருமினார்கள்.பாண்டியன் நெடுமாறன் சமணர் மீது
ஆத்திரம் கொண்டு கோபத்தோடு அவர்களைப் பார்த்து, உங்களின் ஆற்றலை என் உடலில்
ஏற்பட்டுள்ள வெப்பு நோயைக் குணப்படுத்துவதின் மூலம் உணர்த்தலாமே
என்றான்.மன்னன் பணித்ததைக் கேட்டுச் சமணர்கள் மன்னா! எங்கள் முயற்சியின்
சக்தியினால் உம்முடைய இடப்பாகத்திலுள்ள வெப்பு நோயைத் தீர்த்து வைப்போம்
இங்கு புதிதாக வந்துள்ள இவர், வலப்பாகத்திலுள்ள நோயைத் தீர்க்கட்டுமே
பார்க்கலாம்! என்று இறுமாப்புடன் கூறினர். தங்களது மந்திரத்தை மொழியத்
தொடங்கினர். அவர்கள் பீலியை எடுத்து மன்னன் உடம்பின் இடப்பக்கம்
தடவினார்கள். வெப்பு நோயின் அனலின் தன்மையால் பீலி தீய்ந்து
வீழ்ந்ததோடல்லாமல் அப்பாகத்தில் வெப்பு நோயின் வெம்மையும் பன்மடங்கு
அதிகரித்தது.மன்னன் வேதனை தாங்காமல் துடிதுடித்தான். நெடுமாறன் நெஞ்சத்திலே
வேதனையை அடக்கிக் கொண்டு ஞானப்பாலுண்ட அருட்புனலை நோக்கினான்.ஞானசம்பந்தர்
மன்னனின் குறிப்பறிந்து நோயைத் தணிப்பதற்காக, மந்திரமாவது நீறு என்னும்
பதிகம் ஒன்றைப் பாடினார். ஆலவாய் அண்ணலின் அருட் பக்தியிலே திருநீற்றை
எடுத்துத் தம் மென் மலர்க்கரங்களால் மன்னனின் வலப்புறமாகத் தடவினார்
சம்பந்தர்.வேந்தனின் வலப்பக்கம் குளிர்ந்தது. அதே சமயத்தில் இடப்பக்கத்தில்
வீசும் அனல் மேலும் அதிகரித்தது. அனலின் வெம்மையைத் தாங்கச் சக்தியற்றச்
சமணர்கள் சற்று விலகிச் சென்று ஒதுங்கி நின்றனர்.மன்னனுக்கு ஞானசம்பந்தர்
மீது அன்பும், பக்தியும் மேலிட்டது. சமணர்கள் மீது அளவிட முடியாத
வெறுப்பும், கோபமும் ஏற்பட்டது. சமணர்களைப் பார்த்து, நீங்கள் இவ்விடத்தை
விட்டுப் போய்விடுங்கள். நீங்கள்தான் தோற்றுப் போனீர்கள் என்று சீறி
விழுந்தான் மன்னன். உடலில் நஞ்சும் அமுதமும் கலந்தாற்போல் வெம்மையும்
குளிர்ச்சியும் கலந்திருப்பதை உணர்ந்த மன்னன் ஞானசம்பந்தப் பெருமானை
நோக்கி, யான் உய்யும் படி வந்த ஞான வள்ளலே! தங்க திருவருட் கருணையாலே என்
உடலில் உள்ள வெப்பம் முழுவதும் தீருமாறு எனக்கு அருள்புரிவீராகுக! என்று
வேண்டினான். சம்பந்தர் புன்முறுவல் பூத்தார். அருள்வடியும் அந்தனப்
பெருமானின் திருமுகத்தில் கருணை மலர்ந்தது. ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சத்திலே தியானித்த வண்ணம் திருநீற்றினை எடுத்து ஒரே ஒருமுறை மன்னனின்
இடப்பக்கத்திலே தடவினார். அப்பக்கத்திலிருந்த வெப்பு நோயும் அக்கணமே மன்னன்
உடலை விட்டு முற்றிலும் நீங்கியது.அரசியாரும், அமைச்சரும் எல்லையில்லா
இன்பப் பெருக்கில் ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கி
எழுந்தனர். மன்னனும் தன் உடம்பிலுள்ள வெப்பமெல்லாம் அப்படியே மாறியதும்
எல்லையில்லா அன்புப் பெருக்கில் உய்ந்தேன் என்றவாறே அவரது திருவடிகளை
வணங்கிப் பெருமகிழ்ச்சி கொண்டான். சமணர்கள் வெட்கித் தலைகுனிந்து
செய்வதறியாது திகைத்து நின்றனர். அதோடு வெறிபிடித்த சமணர்களின் அகந்தை
அடங்கவில்லை. ஞானசம்பந்தரிடம் மந்திரத்தாலும், தந்திரத்தாலும் தோற்ற
சமணர்கள் நெருப்பிலும், நீரிலும் தங்களுக்குள்ள ஆற்றலால் வாதமிட்டு அவரை
வெல்லலாம் என்று கருதினர். அந்த வீணான எண்ணத்தில் பாண்டிய மன்னனிடம்,
மன்னா! அவரவர்கள் சமயக் கொள்கைகளை ஏட்டில் எழுதித் தீயிலிட்டு விட
வேண்டும். எவ்வேடு எரியாமல் இருக்கிறதோ அந்த ஏட்டினுக்குரியவர் வெற்றி
பெற்றவராவார்! என்றனர். சமணர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஞானசம்பந்தர்,
நன்று! நீவிர் சொன்னது நன்று! நெருப்பிலே ஏட்டினை இடுவதுதான் உங்கள்
கருத்தென்றால் அங்ஙனமே மன்னர் முன்னிலையில் செய்யலாம் என்று தமது சம்மதத்தை
வெளிப்படுத்தினார். இரு சமயத்தினரும் மன்னன் முன்னிலையில் கனல்
வாதத்திற்குச் சித்தமாயினர். அதற்கென அரங்கம் அமைக்கப்பட்டது. அனைவரும்
கூடினர். தீ மூட்டப்பட்டது. நெருப்பும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

ஞானசம்பந்தர்
தாம் பாடிய பதிகங்கள் எழுதிய ஏட்டிலிருந்து, போகம் ஆர்த்த பூண் முலையாள்
என்ற திருநள்ளாற்றுப் பதிகத்தை எடுத்தார். சிவத்தை மனதிலே தியானித்தவாறே,
தளிர் இள வளர் ஒளி எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அதனை
அனலிலிட்டார். நெருப்பிடை வீழ்ந்த திருப்பதிக ஏடு எரியாது பனிபோல்
பசுமையாய் முன்னிலும் பளபளப்போடு பார்ப்போர் வியக்கும் வண்ணம் விளங்கியது.
இதுகண்டு சமணர் அச்சங்கொண்டனர். அகந்தையோடு தாங்கள் எழுதிய சமயக் கொள்கைகள்
அடங்கிய ஏட்டைத் தீயிலிட்டனர்.அவ்வேடுகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
சமணர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். செய்வதறியாது திகைத்தனர். ஞானசம்பந்தர்
அனலிடையிட்ட ஏடுகளோ வரையறுத்த காலம்வரை அனலிலே இருந்ததோடல்லாமல் எடுத்த
பின்னரும் தொடுத்து முடித்த பூமாலைபோல் அழகுறக் காட்சியளித்தது.அனைவரும்
வியந்தனர். ஆலவாய் அண்ணலின் அருள் ஒளியிலே மதுரை மாநகரிலே சைவ சமயம்
புத்துயிர் பெறத் தொடங்கியது.சதிமிக்கச் சமணர்களின் தோல்வியைக் கண்டு
நெடுமாறன் நகைத்தான். அப்பொழுது சமணர்கள் நெருப்பைத் தண்ணீரால் அணைத்து,
அதனின்று நனைந்த தங்களது ஏட்டுச் சாம்பலை எடுத்து கைகளால்
பிசைந்தனர்.இவ்வாறு செய்த சமணர்களைப் பார்த்து, மன்னன் நகைத்துக்கொண்டே,
ஏட்டினை இன்னும் அரித்துப் பார்க்கிறீர்களா? நன்று! பொய்யை மெய்யாக்க
முய<லுகின்ற நீங்கள் இந்த இடத்தைவிட்டு உடனே போய்விடுங்கள். வெப்பு
நோயினின்றும் நான் நீங்கி பிழைத்தபோதே, நீங்கள் தோற்றுத் தலை
தாழ்ந்தீர்கள். அத்தோடு இப்போது தீயிடை வீசிய உங்கள் சமயக் கொள்கையும்
எரிந்தது. இதற்கு மேலும் நீங்கள் இங்கிருப்பது முறையல்ல; இன்னும் தோற்றுப்
போகவில்லை என்ற எண்ணமோ உங்களுக்கு? என்று அவர்களை இழித்தும் பழித்தும்
கூறினான். ஞானசம்பந்தரிடம் தோற்றுப்போன சமணர்கள் அத்துடன் நில்லாமல்
ஞானசம்பந்தரைப் புனல் வாதத்திற்கு அழைக்க எண்ணினர். சமணர்களின் அகந்தையைக்
கண்டு சினம் கொண்டான் மன்னன். ஞானசம்பந்தரோ அவர்களை நோக்கி, இன்னும் என்ன
வாதம் செய்ய வேண்டும் என் வினவினார். சமணர்கள் அவரவர் கொள்கைகளை ஏட்டில்
எழுதி, நீரில் விட வேண்டும். எவரது ஏடு நீரோடு ஓடாமல் எதிர்த்துச்
செல்கிறதோ, அவ்வேடே உண்மைப் பொருளுடைய சமயத்தை உடையதாகும் என்று
எடுத்துரைத்தனர். அமைச்சர் இடைமறித்து, இந்த வாதத்திலும் சமணர்கள் தோற்றால்
அவர்களை என்ன செய்யலாம்? என்று மன்னனைப் பார்த்துக் கேட்டார். மன்னன்
பதிலுரைப்பதற்குள், பொறுத்திருக்க மாட்டாத சமணர்கள், இம்முறை நாங்கள்
தோற்றால் எங்களைக் கொற்றவன் கழுவில் ஏற்றட்டும். இது எங்கள் உறுதிமொழி
என்று ஆத்திரத்தோடு பதிலுரைத்தார்கள். பகைமையினாலும், பொறாமையினாலும்
சமணர்கள் கூறியது கேட்டு நெடுமாறன் அனைவரையும் வைகையாற்றிற்குப்
புறப்படுமாறுபணித்தான். ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் ஏறி வைகை
ஆற்றிற்குப் புறப்பட்டார். மன்னன் வெண் புரவி மீது ஏறி முன் செல்லப்
பின்னால் அமைச்சரும், அரசியாரும் புலவர்களோடும், சேனைகளோடும் புறப்பட்டனர்.
கார்கால மாதலால் வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
எல்லோரும் வைகை ஆற்றின் கரையில் பொங்கி வரும் வெள்ளமெனத் திரண்டு
வந்திருந்தனர். திருவெண்ணீற்று அடியார்களும் அன்பர்களும் திரள் திரளாகக்
கூடி இருந்தனர். பாண்டியன் நெடுமாறன், மங்கையர்ச்சரகியார் குலச்சிறையார்
ஒருபுறமிருந்தனர். அவர்களுடன் அமைதியே <உருவாகி, அருள்வடிவமாய்
ஞானசம்பந்தர் பொற்பீடத்தில் அமர்ந்திருந்தார். மறுபுறத்தில் சமணர்கள்
சூழ்ச்சியே உருவெடுத்து நின்று கொண்டிருந்தனர். மன்னன் ஏடுகளை வைகையாற்றில்
இடுங்கள் என்று சமணர்களைப் பார்த்துச் சினத்துடன் கூறினான். சமணர்கள் தமது
கொள்கைகள் தீட்டப்பட்ட அத்திநாத்தி என்னும் ஏட்டை வைகை ஆற்றில் வீசி
எறிந்தனர். அத்திநாத்தி சமணர்களின் மூலமந்திரம். அத்தி என்றால் உள்ளது
உண்டு என்றும், நாத்தி என்றால் இல்லாதது இல்லை என்றும் பொருள்படும்.
<உள்ளதை உடன் மறுத்து இல்லதென்று கூறுவதாகும். ஏடு, நீரில் சுற்றிச்
சுழன்று ஓடும் நீரோடு ஓடிற்று. நிலை தளர்ந்த சமணர்கள் சிந்தையற்றுச்
செயலற்றுச் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஏடு சமணர்களையே நட்டாற்றில்
விட்டுச் சென்றது.பாண்டியன் நெடுமாறன் ஞானசம்பந்தரின் உள்ள குறிப்பினை
அறியும் பொருட்டு அவரை நோக்கினான். அருள் வடிவாய் எழுந்தருளியிருந்த
திருஞான சம்பந்தப் பெருமான், அந்தணர் வானவர் ஆனினம் எனும் கௌசிகப் பண்ணில்
அமைந்த பன்னிரண்டு திருப்பாடல்களைக் கொண்ட திருப்பாசுரத்தை திரு ஏட்டில்
எழுதி வைகையாற்றில் மிதக்க விட்டார். வைகையாற்றில் வீழ்ந்த ஏடு வெள்ளப்
பெருக்கை கிழித்துக் கொண்டு எதிர்நோக்கிச் சென்றது.பிறவிப் பெருங்கடலில்
பெருந்தவத்தினையுடைய மெய்ஞ்ஞானியரின் மனமானது, எதிர்த்துச் சென்று வெற்றி
காண்பது போல், நீரை எதிர்த்துச் சென்றது ஏடு.

சைவ சமயமே மெய் சமயம்
என்பதை உலகோர்க்கும், சமணர்களின் மங்கிய மூளைக்கும் உணர்த்தியது.
கரைபுரளும் வைகையில் ஏடு எதிர்த்துச் செல்லும் அதிசயத்தை அனைவரும்
வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.பாண்டியன் நெடுமாறனும் ஆனந்தம் மேலிட
பக்தியால் உள்ளத்தில் புத்துணர்ச்சி பொங்கி எழ, தன்னையறியாமலேயே
உந்தப்பட்டு, சொல்ல முடியாத பெரும் சக்தியால், தலைநிமிர்ந்து, வைகையை
எட்டிப் பார்த்தான். அப்பொழுது அவனையறியாமலேரயே கூன் நிமிர்ந்து
கூத்தாடினான்.வைகையிலிட்ட பாசுரத்தின் முதற் பாட்டில் இறைவன் அருளாலே
வேந்தனும் ஓங்குக என்று ஞானசம்பந்தர் பாடியருளியதால் தென்னவனின் கூன்
நிமிர்ந்தது.பாண்டிய மன்னனின் கூன் நிமிர்ந்தாற் போன்று குன்றியிருந்த
சைவம் மீண்டும் நிமிர்ந்தது. சமணத்திற்குக் கூன் விழுந்தது. மேலும் கூனிக்
குறுகி, தலை சாய்ந்து இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தே போனது.அமைச்சர்
குலச்சிறையார் ஆற்றிலே எதிர்த்துச் செல்லும் ஏட்டினை எடுப்பதற்காகக் குதிரை
மீது வேகமாக புறப்பட்டார். வெள்ளத்திலே ஓடம் போல் செல்லும் தெய்வ ஏடு
கரையிலே தங்கும் வண்ணம், வன்னியும், மந்தமும் எனத் தொடங்கும் பதிகத்தை
ஞானசம்பந்தர் பாடத் தொடங்கியதும் திரு ஏடு திருவேடகம் என்னும் தலத்தில்,
எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடத்தில் போய்த் தங்கியது.அவ்விடத்தை
அடைந்த அமைச்சர் பரிதியினின்றும் இறங்கி ஏட்டுச் சுவடிகளை எடுத்தார்.
திருவேடக இறைவனை வணங்கி குதிரை மீது அமர்ந்து சம்பந்தர் இருக்குமிடத்திற்கு
வந்தார். குதிரையினின்றும் இறங்கி ஏட்டுச்சுவடியை சுமந்து வந்து
சம்பந்தர் திருமுன் வைத்தார் அமைச்சர். விண்ணவர் தண்மலர் பொழிந்தனர்.
பல்வகை இன்னிசைக் கருவிகள் ஒருங்கே ஒலித்தன. அன்பர்களும், அடியார்களும்
சிவநாமத்தை விண்ணெட்ட முழக்கினர். ஞானசம்பந்தரை வாழ்த்தினர். சமணர்கள்
கழுவிலேறி உயிர் நீத்தார்கள்.தென்னவன் நெடுமாறன் சைவ சமயத்துக்குப்
பணிந்தான். திருவெண்ணீற்றின் உயர்வையும், பெருமையையும் உணர்ந்தான்.
மங்கையர்க்கரசியாரும், அமைச்சரும் அகமகிழ்ந்தனர்.திருவாலவாய் அண்ணலைச்
சிந்திக்கத் தவறிய தன் தவற்றை எண்ணிக் கலங்கினான். மன்னன் ஞானசம்பந்தரை
வணங்கித் திருநீறு பெற்றான்.பாண்டியன், நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற
சிறப்புப் பெயர் உலகு போற்ற வாழ்ந்தான்.திருஞானசம்பந்தர் சில காலம்
மன்னனின் விருந்தினராகத் தங்கியிருந்து, அனுதினமும் ஆலவாய் அண்ணலை வணங்கிப்
பல திருப்பதிகங்கள் பாடி வந்தார்.இதுசமயம் திருஞானசம்பந்தரின் தந்தை
சிவபாத விருதயர் சீர்காழியினின்றும் புறப்பட்டு, மதுரைக்கு வந்தார்.
சிவக்கொழுந்தை கண்டார். அன்பின் பெருக்கால் ஆரத்தழுவி ஆனந்தக் களிப்பு
எய்தினார்.தகப்பனாரைக் கண்ட பெருமிதத்தில் ஞானசம்பந்தர் தோணியப்பரைப்
போற்றிப் பதிகம் ஒன்றை பாடினார். சிறிது காலம் சம்பந்தருடன் தங்கியிருந்து
சிவ தரிசனத்தால் சிந்தை மகிழ்ந்த சிவபாதவிருதயர், சீர்காழிக்குத்
திரும்பினார்.அதன் பிறகு பாண்டிய நாட்டுத் திருத்தலங்களைத் தரிசிக்க
ஞானசம்பந்தர் தென்னவனுடனும், தேவியாருடனும், அமைச்சருடனும்
புறப்பட்டார்.பாண்டிய நாட்டிலுள்ள திருத்தலங்கள் பலவற்றை தரிசித்துப்
பதிகம் பாடிப் களிப்பெய்திய ஞானசம்பந்தர் பாண்டியனிடம் விடைபெற்றுக் கொண்டு
சோழ நாட்டை நோக்கிப் புறப்பட்டார். மன்னன் சம்பந்தப் பெருமானுக்குப்
பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்.ஞானசம்பந்தர் சோழ நாட்டை அடைந்தார்.
ஆங்காங்கே உள்ள கோயில்களைத் தரிசித்து மகிழ்ந்தார்.முள்ளிவாய் எனும்
ஆற்றின் கரைதனை அடைந்தார். ஆற்றின் எதிர்க்கரையில் அமைந்துள்ள
திருக்கொள்ளம் பூதூர் இறைவனைத் தரிசிக்க எண்ணங்கொண்டார். ஆனால் ஆற்றில்
வெள்ளம் மிகுந்திருக்கவே ஓடக்காரர்கள் ஓடம் செலுத்த மறுத்து
நின்றார்கள்.ஞானசம்பந்தர், அடியார்களுடன் ஓடமொன்றில் ஏறிக்கொண்டார். அதனை
அவிழ்த்து விடச் சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.சம்பந்தர், கொட்டமே
கமழும் என்னும் பதிகத்தைப் பாட, ஓடம் தானாகவே சென்று எதிர்கரையை
அடைந்தது.அக்கரையை அடைந்த ஞானசம்பந்தர் எம்பெருமானை வணங்கி வழிபட்டார்.
அங்கியிருந்து பல திருத்தலங்களைத் தரிசித்த வண்ணம் போதி மங்கை என்ற இடத்தை
அடைந்தார். சிவநாமத்தை முழக்கிய வண்ணம் வந்து கொண்டிருந்த ஞானசம்பந்தரைக்
கண்டு போதி மங்கை பவுத்தர்கள் சினங்கொண்டு தங்கள் தலைவனான புத்தநத்தி
என்பவனிடம் சென்று முறையிட்டனர். ஞானசம்பந்தருடன் வந்த அடியார்களின் உள்ளம்
பவுத்தர்களின் போக்கைக் கண்டு வருந்தியது. அவர்கள் ஞானசம்பந்தரிடம்
முறையிட்டார்கள்.அடியார்கள் மொழிந்ததைக் கேட்டுச் சினங்கொண்ட ஞானசம்பந்தர்,
புத்த நந்தியின் தலையில் இடி விழக்கடவது என்று பதைப்புடன் சபித்தார்.
மறுகணம் புத்த நந்தி இடியுண்டு அழிந்து மடிந்தான். பவுத்தர்களோ அஞ்சி
ஓடினர்.இதை மனத்தில்கொண்டு வெகுண்ட பவுத்தர்கள் சாரிபுத்தன் என்பவனைத்
தங்கள் தலைவனாகக் கொண்டு ஞானசம்பந்தரை வாதில் வெல்லக் கருதி
வந்தனர்.சம்பந்தர் அப்புத்தர்களையும் வாதில் வென்று வெற்றிவாகை சூடினார்.
பவுத்த சமயமும் சமணத்தின் வழி சென்று சம்பந்தரிடம் தோற்றது. ஞானசம்பந்தர்
மீண்டும் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். தொண்டர்களுடன் அவர் சிவிகையில்
புறப்பட்டு திருக்கடலூரை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைப்
பணிந்து இன்புற்றார்.

ஞானசம்பந்தருக்கு அப்பரடிகளைக் காண வேண்டும்
என்ற பேரவா எழுந்தது. அப்பரடிகள் எங்கே இருக்கிறார்கள்? என அடியார்களைக்
கேட்டார்.அடியார்கள் மூலம் அப்பர் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளி
இருப்பதை அறிந்து, அத்தலத்தை நோக்கி அடியார் குழாத்தோடு
புறப்பட்டார்.ஞானசம்பந்தர் வருவதை முன்பே அறிந்திருந்த அப்பரடிகள்,
ஞானவள்ளலை எதிர்ச் சென்று வரவேற்று வழிபடப் பேராவல் கொண்டார்.தொண்டர்கள்
புடைசூழ வந்து கொண்டிருக்கும் ஞானசம்பந்தரைக் கண்டு பேருவகை கொண்ட
அப்பரடிகள், எவரும் அறியாத வண்ணம், அவ்வடியார் கூட்டத்திடையே புகுந்து,
அவர் எழுந்தருளிவரும் சிவிகையைத் தாங்குவோருடன் ஒருவராய்ச் சேர்ந்துகொண்டு
தாமும் சுமந்தார்.தம்மை எதிர்கொண்டு அழைத்துச் செல்லவரும் தொண்டர்
கூட்டத்தைக் கண்டு, களிப்பெய்திய ஞானசம்பந்தர், அக்கூட்டத்திடையே,
அப்பரடிகளைக் காணாது, எங்குற்றார் அப்பர்? எனக் கேட்க, அப்பரடிகள் ஒப்பரிய
தவம் புரிந்தேன். ஆதலால் உம் அடிகளை இப்பொழுது தாங்கி வரப்பெற்று
<உய்ந்தேன் என மொழிந்தார்.அப்பரடிகளின் குரலைக் கேட்டு, ஞானசம்பந்தர்
சிவிகையினின்று இறங்கி, அப்பர் அடிகளைப் பார்த்து திகைத்து இங்ஙனம்
செய்யலாமா? எனக் கேட்டார்.அதற்கு அவர் பின் எவ்வாறு செய்தல் தகும்? என்று
கேட்டவாறே பிள்ளையாரை வணங்கினார்.அடியார்களும், தொண்டர்களும் மனம்
உ<ருகும் இக்காட்சியைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றனர்.இரு
சிவச் செம்மல்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் களித்து மகிழ்ந்தனர்.
இருவரும் திருப்பூந்துருத்தி எம்பெருமானை வணங்கி வழிபட்டனர்.அப்பரடிகள்
ஞானசம்பந்தரிடம் தொண்டை மண்டலத்திலுள்ள சிவத்தலங்களைப் பற்றிக்
கூறிக்களிப்பெய்தினார். அவர் மொழிந்தது கேட்டு ஞானசம்பந்தருக்குத்
தொண்டைநாட்டு சிவத்தலங்களைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசை மேலிட்டது. ஓரிரு
நாட்களில் ஞானசம்பந்தர் அப்பரடிகளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
நேராகச் சீர்காழியை அடைந்தார். திருத்தொண்டர்களுடன் சிவபாதவிருதயர்
சம்பந்தப்பெருமானை எல்லையிலே வரவேற்று எதிர்கொண்டு அழைத்தார்.அனைவரும்
கோயிலுக்குச் சென்றனர். திருஞான சம்பந்தர் திருத்தோணியப்பரை வழிபட்டு,
உற்று உமைச் சேர்வது மெய்யினையே எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப்
பரவசமுற்றார். தந்தையாருடன் இல்லத்திற்குச் சென்றார். சீர்காழியில் சில
காலம் பெற்றோர்களுடனும், சீர்காழி அன்பர்களுடனும் தங்கியிருந்து தினமும்
தோணியப்பரைத் தரிசித்து சந்தோஷித்தார். மீண்டும் சிவ யாத்திரையைத்
தொடங்கினார். தில்லை, காஞ்சி மற்றும் பல தலங்களைத் தரிசிக்கத் திருவுள்ளங்
கொண்டு அன்பர்கள் புடைசூழ புறப்பட்டார் சம்பந்தர். தில்லைச் சிற்றம்பலத்தை
வந்தடைந்த ஞானசம்பந்தர் நடராசப் பெருமானைத் பணிந்து எழுந்தார். அங்கிருந்து
புறப்பட்டுத் திருத்தலங்கள் பலவற்றைக் கண்டுகளித்து தேவாரப் பாடல்ளைப்
பாடியவாறு திருவோத்தூரை அடைந்து வேதபுரீசரரை வணங்கி
வழிபட்டார்.இத்திருத்தலத்தில் எம்பெருமான் அமரர்க்கு வேதங்களை ஓதுவித்து
அருளிச் செய்ததாகவும், வேதங்களுக்கு இறைவன் தமது திருக்கூடத்தினை காட்சி
அளித்து அருளியதாகவும் வரலாறு கூறுகிறது. இதுபற்றியே இப்பெயர் பெற்றது.
அத்து என்றால் வேதம் என்று பொருள்!திருஞானசம்பந்தர் அத்திருத்தலத்தில்
தங்கியிருந்து வேதபுரீசுரரை, தினமும் வணங்கினார். அந்நாளில் வியக்கத்தக்க
நிகழ்ச்சி ஒன்று நடந்தது.அரனாரிடத்தும், அடியார்களிடத்தும் எல்லையில்லாப்
பேரன்புடைய திருத்தொண்டர் ஒருவர் திருஞானசம்பந்தரைச் சந்தித்துத் தமது
குறையை விளக்கினார்.

சீர்காழிப் பெருமானே! அடியேன் நட்ட சில பனைகள்
காய்க்காத பனைகளாக இருக்கின்றன. அதனால் சமணர்கள் எமக்கு வெறுப்பு
ஏற்படுமாறு என்னிடம் ஆண் பனை எங்காகிலும் காய்ப்பதுண்டா எனக் கேட்டுக் கேலி
செய்கின்றனர் என நெஞ்சு நெகிழக் கூறிக் கலங்கினார். அதுகேட்டு
புகலிவேந்தர், பூ தேர்ந்தாய் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட, அப்போதே ஆண்
பனைகள் எல்லாம் நற்பனைகளாக மாறி காய்த்துக் குலைகள் விட்டன.ஞானசம்பந்தரின்
அருள் வல்லமையைக் கண்டு அனைவரும் வியந்தனர். இழித்துக் கூறிய சமணர் சிலர்
அஞ்சினர். பலர் சைவ மதத்தில் சேர்ந்தனர்.சில நாட்களில் அங்கியிருந்து
புறப்பட்ட ஞானசம்பந்தர் பல திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே காஞ்சியை
அடைந்தார்.காஞ்சிபுரத்துக் தொண்டர்கள் புகலி மன்னரை வரவேற்க நகரை கவின்பெற
அழகு செய்தனர். கமுகு, வாழை, கொடி, மாலை முதலியவை நிறைந்த எழில்மிகுப்
பந்தல்கள் வீதியெங்கும் அமைத்தனர். பாவையர் நீர்தெளித்து வண்ணவண்ண
கோலமிட்டு பொன்விளக்குகள் ஏற்றினர். நறுமலர் தூவினர். மங்கள வாழ்த்தொலி
எழுப்பினர். மறைவேதம் எங்கும் முழங்கியது. காஞ்சியின் எல்லையிலே
அன்பர்களும், தொண்டர்களும் மங்கல மங்கையர்களும் புடை சூழ்ந்து கொண்டு
காத்திருந்தனர். எல்லையை வந்தடைந்த ஞானசம்பந்தரை பூரண பொற்கும்ப கலசங்கள்
வைத்து எதிர்கொண்டழைத்து, நகருள் எழுந்தருளச் செய்தனர். காமகோட்டம்
அழைத்துச் சென்றனர். கண்களிலே பக்தி வெள்ளம் பெருக பதிகம் ஒன்றைப் பாடிப்
பரவியவாறு காமக் கோட்டத்தில் காஞ்சி காமாக்ஷியைத்
தொழுதெழுந்தார்.ஏகாம்பரேசுவரர் ஆலயம் வந்து பெருமானை தூய பதிகத்தால்
ஏற்றிப் பணிந்தார்.காஞ்சியிலுள்கள பல சிவ சந்நதிகளுக்கு விஜயம் செய்தார்
சம்பந்தர்! காஞ்சியம்பதியில் சில நாள் தங்கியிருந்து திருப்பணிகள்
பலபுரிந்த சம்பந்தர் அங்கியிருந்து புறப்பட்டு மற்றும் பல சிவத்தலங்களைத்
தரிசித்துக் கொண்டே திருக்காளத்திமலைத் தரிசனத்தை முடித்துக் கொண்டு,
திருவொற்றியூரை வந்தடைந்தார். விடையவன் எனத் தொடங்கும் பாசுரம் ஒன்றைப்
பாடியவாறு முத்துச் சிவிகையகன்று இறங்கித் திருக்கோயிலுள் சென்று
திருவொற்றியூரான் திருத்தாளினைப் போற்றிப் பணிந்தார். திருவொற்றியூரானை
விட்டுப் பிரிய மனம் வராது ஞானசம்பந்தர் சில காலம் அங்குள்ள மடம் ஒன்றில்
தங்கியிருந்து நாள்தோறும் இற
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:16

மெய்ப் பொருளையே ஆராய்ந்து அறியும் ஆற்றல்மிக்க அருந்தவத்தை உணர்ந்து
வாழ்வை நடத்தி வந்தார். பொய்மை இல்லாத இவ்வணிக குலப்பெருந்தகையார் வாணிபம்
செய்து பெரும் பொருள் ஈட்டினார்.இவர்க்கு அரனார் அருளால் பூமகளைப் போன்ற
பொலிவும், நாமகளைப் போன்ற அறிவும் உடைய பூம்பாவை என்னும் பெயருடைய மகள்
இருந்தாள். அம்மகள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வந்தாள். ஞானசம்பந்தரை
மனதிலே தியானித்து அவரையே தன் குலத்தின் முழுமுதற் கடவுள் எனக் கருதி வந்த
சிவநேசர் தமது அருமை மகள் பூம்பாவையையும், பொன்னையும், பொருளையும்,
தன்னையும் திருஞான சம்பந்தருக்கே அர்ப்பணம் செய்வதாய் உறுதிபூண்டார்.
அதனால் தம் மகளைக் கன்னிமாடத்தில் வளர்த்து வரலானார். ஒருநாள் தோழியருடன்
மலர்வனத்திற்கு மலர் கொய்யச் சென்ற பூம்பாவையை அரவம் ஒன்று தீண்டிவிட்டது.
சிவநேசர் விஷத்தை நீக்க மந்திரம், வைத்தியம், மாந்திரீகம் எல்லாம்
செய்வதும், அனைத்தும் பலிக்காமல் பயனற்றுப் போயின. பூம்பாவை உடல் பூவுலகை
விட்டு மறைந்தது. துயரக் கடலிலே ஆழ்ந்த சிவநேசர் செய்வதறியாது திகைத்தார்.
தகனம் செய்யப்பட்ட மகளின் சாம்பலையும், எலும்பையும் ஒரு குடத்திலிட்டு
கன்னி மாடத்தில் வைத்துக் காப்பிட்டார். இவ்வாறு இருந்து வரும் நாளில்தான்
ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு எழுந்தருளினார். சிவநேசர் மகிழ்ச்சி
கொண்டார். தமது தவப் பயனால்தான் அவர் எழுந்தருளினார் என்று எண்ணினார்.
திருவொற்றியூர் சென்று சம்பந்தப் பெருமானைத் திருமயிலைக்கு எழுந்தருளுமாறு
பிரார்த்தித்தார். சம்பந்தர் சம்மதித்தார். சிவநேசர் மகிழ்ச்சி மிகப்பூண்டு
சம்பந்தப் பெருமானை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கினார்.
திருவொற்றியூரிலிருந்து மயிலை வரை அலங்காரம் செய்தார். ஞானசம்பந்தரை
வரவேற்க பல வகையான ஏற்பாடுகளைச் செய்தார். ஞானசம்பந்தர் மயிலையில்
எழுந்தருளியிருக்கும் கபாலீச்சுரரைத் தரிசிக்க அடியார்களுடன் முத்துச்
சிவிகையில் புறப்பட்டு வந்து கொண்டே இருந்தார். சிவநேசர், மகிழ்ச்சி பொங்க,
எதிர்சென்று ஞானசம்பந்தரை வரவேற்று வணங்கினார்.ஞானசம்பந்தர் சிவநேசருடன்
மயிலையை அடைந்து கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள் தரும் அம்பிகை
கற்பகாம்பாளையும், கருணைக் கடலான கபாலீச்சுரரையும் பைந்தமிழ்ப் பாசுரத்தால்
போற்றினார்.

அடியார்கள் மூலம் சிவநேசருக்கு ஏற்பட்ட சோகக்கதையை
முன்னதாகவே கேள்விப்பட்டிருந்த ஞான சம்பந்தர் சிவநேசரிடம், உம்முடைய மகளின்
எலும்பு நிறைந்த குடத்தை மதிற்புற வாயிலின் முன்பு கொண்டு வருக என்று
பணித்தார். சிவநேசர் கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தை எடுத்து வந்து
கோயிலுக்குப் புறத்தே ஞானசம்பந்தர் எழுந்தருளியிருந்த முத்துச் சிவிகையின்
முன்னால் வைத்தார்.ஞானசம்பந்தர் கபாலீச்சுரரைப் பணிந்தவாறு, மட்டிட்ட
புன்னையைக் கானல் மடமயிலை என்னும் திருப்பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.
முதல் பாசுரத்திலேயே பூம்பாவாய் என விளித்தார்.மண்ணிலே பிறந்தவர்கள் பெறும்
பயன் பிறைமதி சூடிய அண்ணலாரின் மலரடிகளுக்கு அமுது செய்வித்தலும்,
கண்களால் அவர் நல்விழாவைக் காண்பதும்தான் என்பது உண்மையாகும் என்றால்
உலகோர் காண நீ வருவாய் என உரைத்தார்.முதற் பாட்டிலே வடிவு பெற்று அடுத்த
எட்டுப் பாட்டுக்களில் பன்னிரண்டு வயதை எய்தினாள் பூம்பாவை.சமணரைக்
குறிப்பிட்டு பாடி முடித்ததும் குடம் உடைந்தது. பூம்பாவை பொங்கி எழும்
எழிலோடு கூம்பிய தாமரை மலர்ந்தாற்போல் திருமகளை ஒத்தப் பேரழகு மிக்க
வடிவோடு எழுந்து நின்றாள்.பூம்பாவை குடத்தினின்றும் வெளியே வந்து இறைவனை
வழிபட்டு ஞானசம்பந்தரின் திருவடித்தாமரைகளில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள்.
சிவநேசரும், அடியார்களும் வியக்கத்தக்க இவ்வருட் செயலைக் கண்டு மெய்யுருகி
நின்றனர்.சிவநேசர் ஆளுடைப் பிள்ளையாரிடம் தன் மகளை மணம் புரிந்து
வாழ்த்தியருள வேண்டும் என பணிவன்போடு பிரார்த்தித்தார். ஞானசம்பந்தர்
புன்முறுவல் பூக்கச் சிவநேசரை நோக்கி, உமது மகள் அரவந்தீண்டி
இறந்துவிட்டாள். ஆனால் இவளோ அரனார் அருளால் மறுபிறப்பு எடுத்துள்ளாள்.
எனவே, இவள் என் மகளுக்கு ஒப்பாவாளேயன்றி நான் மணம் செய்ய ஏற்றவளல்ல என
மொழிந்தார்.சிவநேசரும் உண்மையை உணர்ந்து தெளிந்தார். அவர் ஞானசம்பந்தரின்
திருவடியை வணங்கி தம் மகளோடு திரும்பினார்.பூம்பாவை முன்போல கன்னி
மாடத்தில் வாழ்க்கையைத் தொடங்கினாள். சிவனாரை எண்ணித் தவமிருந்து இறுதியில்
அவரது திருவடித் தாமரையை அடையும் சிறந்த ஆற்றலையும் பெற்றாள்.இவ்வாறு
பூம்பாவைக்கு மறுபிறப்பு கொடுத்த ஞானசம்பந்தர் கற்காம்பாள் சமேத
கபாலீச்சுரரை வணங்கி விட்டு தமது புண்ணிய யாத்திரையை புனித மண்ணில்
துவங்கினார். திருவான்மியூர், திருஇடைச்சுரம், திருக்கழுக்குன்றம்,
அச்சிரப்பாக்கம், திருவரசிலி, திருப்பனங்காட்டூர் முதலிய தலங்களைத்
தரிசித்தவண்ணம் மீண்டும் தில்லையை வந்தடைந்தார்.
தில்லைவாழ் அந்தணர்கள்
எதிர்கொண்டு அழைக்கத் திருஞானசம்பந்தர் தில்லை அம்பல நடராசப் பெருமானைத்
தரிசித்தார்.பைந்தமிழ்ப் பாமாலையால் ஆடும் கூத்தனைக் கொண்டாடினார்.
அங்கியிருந்து புறப்பட்டு முத்துச்சிவிகையில் தமது பிறந்த ஊரான சீர்காழியை
வந்தடைந்தார். பெற்றோர்களும் மற்றோர்களும் மேளதாளத்துடன் பிள்ளையாரை
வரவேற்றனர். எல்லையில் நின்றவாறே தோணியப்பரைச் சேவித்து அம்பலத்துள்
எழுந்தருளினார். பிரம்மபுரீசுரர் திருமுன் சைவப்பிழம்பாய் நின்று வழிபட்ட
ஞானசம்பந்தப்பிரான் அன்பர்களும் தொண்டர்களும் புடைசூழத் தமது
திருமாளிகைக்கு எழுந்தருளினார். இத்தருணத்தில் திருமுருக நாயனார்.
திருநீலநக்க நாயனார் முதலிய சிவனருட் செல்வர்கள் மற்றும் அன்பு அடியார்கள்
தங்கள் சுற்றத்தாருடன் சீர்காழிக்கு வந்தனர். ஞானசம்பந்தர் அவர்களை வணங்கி
வரவேற்றார்.ஞானசம்பந்தர் பெருமகிழ்ச்சியோடு அவர்களது வருகையைச்
சிறப்பித்துப் பெருமையுற்றார். அவ்வடியார்களும் சம்பந்தரைப் போற்றி
பணிந்தனர்.அவ்வடியார் களோடு தினந்தோறும் திருத்தோணி யப்பரை வழிபட்டு
சிவப்பாடல்களைப் பாடி வந்தார் சம்பந்தர்.இவ்வாறு சீர்காழியில்
தங்கியிருந்து தோணியப்பரின் தாளினுக்குத் தண்தமிழ்ப் பதிகப் பாமாலைகள் பல
சூட்டி மகிழ்ந்த ஞானசம்பந்தருக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று
பெற்றோர்களும், சுற்றத்தார்களும் தீர்மானித்தனர்.அவர் ஞானசம்பந்தரை அணுகி,
வேதநெறியின் முறைப்படி வேள்விகள் பல செய்வதற்கு இத்தருணத்தில் திருமண
வாழ்க்கையை மேற்கொள்வதுதான் மிக்கச் சிறப்புடையதாகும் என்று
செப்பினர்.அவர்கள் மொழிந்தது கேட்டு, உங்கள் முடிவு உலகோரால்
ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும் என்பதனை நான் மறுப்பதாக இல்லை. இருந்தாலும்
தற்போது மண வாழ்க்கையை மேற்கொள்வதை நான் சற்றும் விரும்பவில்லை என்று
விடையிறுத்தார்.<உலகப்பற்று எனும் பாசத் தொடர்பை விட்டு அகலும்
அரும்பெரும் நிலையை இறைவன் திருவருளால் அடைந்துவிட்ட ஞானசம்பந்தர் திருமணம்
செய்து கொள்ள இசையவே இல்லை. ஆனால் சிவபாதவிருதயரும், மறையவர்களும்
மறையவர்களுக்குரிய அறத்தை எடுத்துக்கூறி அவரை வைதீக நெறிப்படி ஒழுகுமாறு
வற்புறுத்தினர். இறுதியில் ஞானசம்பந்தர் அவர்களது வேண்டுகோளுக்கு ஒருவாறு
இசைந்தார். அனைவரும் பெரும் மகிழ்ச்சி பூண்டனர்.

திருப்பெருண
நல்லூரில் வாழும் நம்பியாண்டார் நம்பியின் திருமகளே ஞானசம்பந்தருக்கு
மணமகளாக வரத் தகுதியுடையவள் என்பதைத் தீர்மானித்தனர். அக்குலமகளையே மணம்
முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர்.கணித மங்கல நூலோர் வகுத்துக்
கொடுத்த சிறந்த ஓரையில் திருமண நந்நாள் குறிக்கப்பட்டது. நாளோலை
உறவினருக்கும், சுற்றத்தாருக்கும் அனுப்பப்பட்டது. திருமணத்திற்கு ஏழு
நாட்கள் முன்பே சுற்றமும், நட்பும் சிவபாதவிருதயர் பெருமனையில் மகிழ்ச்சி
பொங்க வந்து கூடினர்.திருஞானசம்பந்தரின் திருமணத்தை விண்ணவர் வியக்குமளவு
மிக்கச் சிறப்புடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.எங்கும்
விதவிதமான அலங்காரங்கள் செய்தனர். முத்து வளைவுகள் அமைத்து அழகிய மாவிலைத்
தோரணங்களும், புத்தம் புது மலரால் கட்டப்பட்ட பூமாலைகளும் தொங்க
விட்டனர்.வீதி முழுவதும், ஆலயத்தைச் சுற்றியும் மிகப் பிரம்மாண்டமான
அலங்காரப் பந்தல்கள் போடப்பட்டன.முரசங்கள் முழங்க, இசைக் கருவிகள் ஒலிக்கப்
பொன்மணிப் பாலிகை மீது புனித முளையை நிறைத்து பாலும் நீரும் கலந்து
தெளித்தனர். மாடமாளிகைகளையும், மணிமண்டபங்களையும் எண்ணத்தைக் கவரும் வண்ண
ஓவியங்களால் அழகுற அலங்கரித்தனர். வேதியர் குலப் பெண்கள் வாயிற் புறங்களில்
அழகுக் கோலமிட்டனர்.தீபங்களை ஏற்றினர். பொற்சுண்ணங்களையும், மலர்த்
தாதுக்களையும் எங்கும் தூவினர். புண்ணிய புது நீரைப் பொற்குடங்களில்
நிறைத்தனர்.சிவபாதவிருதயர் சீர்காழியிலுள்ள திருத்தொண்டர்களை வரவேற்று
வணங்கினார். திருமணத்திற்கு வருகை தந்துள்ளோரை உபசரித்து மனம் மகிழ்ச்சியுற
செய்தார். தான தருமங்களைச் செய்து கொண்டேயிருந்தார். எங்கும் மகிழ்ச்சி
வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. திருமணத்திற்கு முதல் நாள் மறையோர்களும்,
தொண்டர்களும் திருஞான சம்பந்தருக்கு இறைவன் திருவருள் பொருந்திய
திருக்காப்பு நாணினைச் செய்து அத்திருக் காப்பு நாணினை நகர்வலம் கொண்டு
வந்தனர். தேவகீதம் ஒலிக்க மங்கள முழக்கத்துடன் மணமலரும், சாந்தும், பொன்
அணிகளும், அழகிய துகிலும் அணியப்பெற்று, புண்ணியத்தின் திருவுருவத்தைப்
போல் மலரணையில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரின் திருக்கையில்
மறைமுமைப்படி வேதியர்கள் திருக்காப்பு நாணினைக் கட்டினர். மறுநாள்
திருமணத்தன்று வைகறைப் பொழுது துயிலெழுந்த ஞானசம்பந்தர் திருத்தோணியப்பர்
தரிசனத்திற்குப் பிறகு திருமணச் சடங்கினை மேற்கொள்ளலானார். சீர்காழிப்
பதியிலிருந்து பொன்னொளி பொருந்திய முத்துச் சிவிகையில் அமர்ந்து
திருநல்லூர்ப் பெருமணம் என்னும் திருப்பதிக்கு எழுந்தருளலானார்.இயற்கை
அருளோடும், இறைவன் அருளோடும்முத்துச் சிவிகைக்கு முன்னும் பின்னும் மங்கள
வாத்தியங்களும், தேவ துந்துபிகளும் முழங்கின. சிவயோகிகள் உற்றார் உறவினர்
புடைசூழ திருஞானசம்பந்தர், திருசடைபிரானின் சேவடியைத் தமது திருவுள்ளத்தில்
சிந்தித்தவாறு திருநல்லூர்ப் பெருமணம் என்னும் தலத்தை
அடைந்தார்.திருநல்லூர்ப் பெருமணத்து அடியார்களும், பெண்வீட்டார் பலரும்
ஞானசம்பந்தரை எதிர்கொண்டழைக்க எல்லையிலேயே காத்திருந்தனர்.ஞானசம்பந்தர்
முத்துச் சிவிகையில் எல்லையை வந்தடைந்ததும், வீணை ஒலியும் வேத ஒலியும்
வாழ்த்தொலிகளும் விண்ணை முட்டின. அடியார்கள் ஞானசம்பந்தரை வரவேற்று
திருவீதி வழியாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சிவன் மீது சுந்தரத்
தமிழில் பாட்டிசைத்துப் பணிந்து மனம் குளிர்ந்த ஞானசம்பந்தர் பரமன் அருள்
பெற்றுப் புறப்பட்டார். கோயிலின் புறத்தே உள்ள மடத்தில் ஞானசம்பந்தர்
எழுந்தருளினார். ஞானசம்பந்தரைத் திருமண கோலத்திலே அணிபுனையத் தொடங்கினார்.
அத்தொழிலில் தேர்ச்சி பெற்ற முதிய அந்தணர்கள் அவரைப் பொற்பீடத்தில் அமரச்
செய்து, தூய திருமஞ்சன நீரை எண்ணற்ற பொற்குடத்தில் கொண்டு வந்து
திருநீராட்டினர்.வெண்பட்டாடையினை அணிவித்தனர். நறுமண மிக்க சந்தனக் கலவையை
அவரது திருமேனியில் பூசினர். திருவடிகளிலே முத்துக் கோவைகளையுடைய இரத்தின
வளையினைப் புனைந்தனர்.முத்து மாலைகளைக் கொத்தாகத் திரட்டிய அணி வடத்தினை
மணிக்கட்டிலே அழகுறப் புனைந்தார்கள். பொற்கயிற்றிலே பரு முத்துக்களைக்
கோர்த்துத் திருவரையில் அரைஞாணாக விளங்கச் செய்தனர்.முத்து வடங்களாலாகிய
அரைப்பட்டையின் மேல் வீரசங்கிலியினைப் புனைந்தனர். முத்துக் கோரையாலாகிய
பூணூலினை முறைப்படி மந்திரம், வேதம் ஓதி மாற்றி அணிவித்தனர்.கழுத்திலே
முத்துமாலை, விரல்களிலே வயிரமணி மோதிரம், கையிலே முத்துத்தண்டையும்,
கைவளையும், முழங்கையிலே, மணிவடங்கள், தோளிலே முத்துமணி ஆபரணங்கள்,
கழுத்திலே உருத்திரச் சண்டிகையும் முத்துவடமும், காதுகளிலே மகரக்
குண்டலமும் ,சிரசிலே முத்து வடமும், இவரது வைரமிழைத்த பொன்னாற் மேனிதனிலே
நவரத்தின மணிகளாலும், தெய்வத்தன்மை பிரகாசிக்கத் திருமண அலங்காரத்தை
ஒளியுறச் செய்தனர்.

அலங்கார வைபவம் முடிந்ததும் ஞானசம்பந்தர்
உருத்திராட்ச மாலையினை எடுத்து நமச்சிவாய என்ற திருநாமத்தை மனதிலே
தியானித்தவாறு தொழுது தாமே கழுத்தில் அணிந்து கொண்டார்.ஞானசம்பந்தர் கோடி
சூரிய பிரகாச ஒளியுடன், அன்பர்களும், அடியார்களும், <உறவினர்களும்
சூழ்ந்துவர, திருமணம் நடக்க இருக்கும் நம்பியாண்டார் நம்பியின்
பெருமனைக்குள் எழுந்தருளினார்.பந்தலிலே போடப்பட்டிருந்த முத்துக்குடை
நிழலின் கீழ் பொற்பலகையில் அமர்ந்தார்.சங்கநாதங்களும், சுந்தர கீதங்களும்,
மங்கல இசைக் கருவிகளும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன. வாழ்த்தொலிகளும், வேத
முழக்கங்களும் இடையறாது ஒலித்துக் கொண்டேயிருந்தன.இதே சமயத்தில்
நம்பியாண்டார் நம்பியின் அருந்தவப்புதல்விக்குக் காப்பு கட்டிச் சங்கற்பம்
முதலிய வேதச் சடங்குகளைச் செய்தனர்.அப்பவளக் கொடி பெண்ணுக்கு வைரத்தாலும்,
நவமணிகளினாலும் செய்யப்பட்ட பசும் பொன் ஆபரணங்களை வரிசையாகச் சூட்டி
அலங்காரப் பொன் விளக்கு போல் பொலிவு பெறச் செய்தனர்.அந்தணர் குலக்
குழந்தைகள், ஓங்கி எழுந்த ஓமப்புகையில், வாசனைத் தூளை வீசினர். வேதியர்கள்,
பொற் கலசத்திலிருந்து நன்னீரையும், அரசிலையும், தருப்பையும் கொண்டு
தெளித்தார்கள்.அழகு மகளிர் நறுமலர்களைத் தூவினர். குறித்த நேரத்தில்
சிவக்கொழுந்தும், அக்கொழுந்தின் கரம்பற்றப் போகும் பொற்கொடி போன்ற நற்குண
நங்கையும் ஆதிபூமி என்னும் மணவறையின் உள்ளே அமர்ந்தருளினார்.நம்பியாண்டார்
நம்பி ஞானசம்பந்தருடைய கரத்தில் மங்கள நீரினை மும்முறை வார்த்துத் தமது
மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தார்.ஞானசம்பந்தர், மங்கை நல்லாளின் கரம்
பற்றி ஓமத்தைச் சுற்றி வலம் வந்தார்.அபபொழுது அவரது திருவுள்ளத்திலே,
எனக்கு ஏன் இந்த இல்லற வாழ்க்கை வந்தமைந்தது? சிற்றின்பத்தில்
உழலு<வதைவிட, இவளுடன் எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தே தீருவது
என்று பேரின்ப ஆசை அமிர்தம் போல் சுரந்தது. அத்தகைய மெய்ஞ்ஞான எண்ணத்தோடு,
ஞான சம்பந்தர் மனைவியோடும், மற்றவரோடும், உற்றார் உறவினர்களோடும் திருமணப்
பெருங்கோயிலை வந்தடைந்தார். சிவனடியார் மலரடியை மனதிலே நிறுத்தி, தன்னை
அவரது சேவடியில் சேர்த்துக் கொண்டருள வேண்டும் என்ற கருத்துடன், நல்லூர்ப்
பெருமணம் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடி அருளினார். அப்பொழுது
விண்வழியே அசரீரியாக எம்பெருமான், நீயும், உன் மனைவியும், உன் புண்ணிய
திருமணத்தைக் காண வந்தவர்களும், எம்மிடம் சோதியினுள்ளாகக் கலந்தடையுங்கள்
என்று திருவாய் மலர்ந்து அருள் செய்தார்.எம்பெருமான் மூன்று உலகங்களும் தம்
ஒளியால் விளங்கும் வண்ணம் சோதிலிங்கமாக காட்சி அளித்தார். அப்பேரொளி
திருக்கோயிலையும் தன்னகத்தே கொண்டு மேலோங்கி ஒளிமயமாக ஓங்கி நின்றது.
அச்சோதியிலே ஓர் வாயிலையும் காட்டியருளினார்.அன்பும், அறமும், அருளும்,
திருவும் உருவாகக் கொண்ட உமையாளின் திருமுலைப் பாலுண்ட புண்ணியத்தின் திரு
அவதாரமாகிய திருஞானசம்பந்தப் பெருந்தகையார் - சைவத்தை வளர்த்து,
செந்தமிழ்ப் பதிகம் பல பாடிய தென்னகத்துத் தெய்வப் புதல்வன் சிவபரஞ்
சுடராகிய மனநல்லூர்ப் பெருமானைத் தொழுது போற்றினார்.தண் தமிழால் பாடிப்
பரவசமுற்றார். தேன் தமிழால் அபிஷேகம் செய்தார். பக்தி வெள்ளத்தில்
மூழ்கினார்.உலகம் உய்ய, சிவஞான நெறியினை எல்லார்க்கும் அளிக்க வல்லது
நமச்சிவாய என்னும் திருவைந் தெழுத்துப் பெருமந்திரமாகும் என்று திருவாய்
மலர்ந்தருளினார்.காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி எனத் தொடங்கும்
நமச்சிவாயத் திருப்பதிகத்தினை, விண்ண வரும், மண்ணவரும் கேட்கும் வண்ணம்
பாடினார் சம்பந்தர்.திருஞான சம்பந்தர் அனைவரையும் நோக்கி, பிறவித் துயரம்
தீர யாவரும் இப்பேரொளியிலே புகுவீர்களாக என்று கேட்டுக் கொண்டார். சிவாய
நம; சிவாய நம என்ற வேத மந்திரத்தினை விண்ணை முட்டும் வண்ணம் பெருமழை போல்
கோஷித்து வாழ்த்தினர். எல்லையில்லாத பிறவி என்னும் வெள்ளத்திலே மூழ்கித்
தத்தளித்துக்கொண்டு, காற்றடைத்த பையாகிய காயத்திலே அடைபட்டு, உய்ய
உணர்வின்றி மயங்கும் மக்களுக்கு பேரின்ப வழிகாட்டிய திருஞான சம்பந்தரின்
திருவடியைத் தொழுது, நமச்சிவாய மந்திரத்தை மனதிலே தியானித்த வண்ணம் மக்கள்
யாவரும் சோதியினுள்ளே புகுந்தனர்.திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார்,
திருநீல கண்ட யாழ்ப்பாண நாயனார், சிவபாத விருதயர், நம்பியாண்டார் நம்பி
ஆகிய சிவனருட் செல்வர்கள் தம் இல்லறத்தாருடன் பேரொளியில் புகுந்தனர்.
ஏனையவர்களும், திருமணத்திற்கு வந்தணைந்தவர்களும், திருமணத்திற்கு பணிகள்
செய்தோரும் தத்தம் மனையார்களோடு பேரொளியில் புகுந்தார்கள்.அருந்தவசிகளும்,
மறைமுனிகளும், ஆலயம் தொழ வந்த சால்புடை மக்களும் சோதியினுள் கலந்தனர்.
பேரின்ப வீட்டிற்குப் பெருவழிகாட்டிய ஞான சம்பந்தப் பெருமான் தம்
மனைவியாரின் கையைப் பிடித்தவாறே அச்சோதியினை வலம் வந்தார். நமச்சிவாய என்ற
நாமத்தை முழக்கியவாறு, சோதியினுள் புகுந்தார்.அதன் பின்பு அப்பேரொளியில்
காணப்பட்ட வாயிலும் மூடிக்கொண்டது.தேவர்களும், முனிவர்களும்,
சிவகணத்தவர்களும் சிந்தை மகிழ்ந்து போற்றித் துதித்தனர்.கொன்றை மாலையை
அணிந்த செஞ்சடை வண்ணர், உமாதேவியாருடன் விடைமேல் தோன்றி அருளினார்.பேரொளி
புகுந்த சிவனருட் செல்வர்களைத் தமது திருவடி நீழலை அடைந்து திருப்பணி
புரியும் திருப்பேற்றை அளித்தார்.வேதங்களையும், ஏழுலகங்களையும் ஈன்று கருணை
வடிவமாக நின்ற உமாதேவியாரின் திருமுலைப் பாலினைச் சிவஞான அமுதத்தோடு
உண்டு, அருள்பெற்று, சைவத்தை உயர்வித்த அருந்தவச் செல்வன் திருஞான
சம்பந்தப் பெருமானையும் அவர் தம் மனைவியாரையும் எம்பெருமான் தமது அருகிலேயே
அணைந்து வாழும் நிகரில்லாப் பெருவாழ்வை அளித்தருளினார்.

குருபூஜை: திருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:16

திருநாவுக்கரசு நாயனார்


திருமுனைப்பாடி
பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும்,
கூடகோபுரங்களும், பண்டக மாலைகளும், மணிமண்டபங்களும் சிவத் தலங்களும்
நிறைந்துள்ளன. புத்தம் புதுமலர்க் கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு பெருகி
ஓடிவரும் பெண்னண ஆற்றின் பெருவளத்திலே செந்நெல்லும், செங்கரும்பும்
செழித்து காணப்பட்டன. இங்கு வாழும் மக்கள் நல்லொழுக்கத்திலும்,
நன்னெரியிலும் தமக்குவமை இல்லாதவர்களாய் வாழ்ந்து வந்தனர். உலகமெங்கும்
சைவநெறியை நிலைநிறுத்திய சமயக்குரவர் நால்வருள் அப்பர், சுந்தரர் என்னும்
இரு நாயன்மார்கள் தோன்றிய பெருøம இப்பழம் பெரும்பதி‌யையே சேரும் !
இத்த‌ைகைய பல்வளம் கொழிக்கும் திரு‌முனைப்பாடியில் தெய்வத் தன்மைமிக்கத்
திருவாமூர் என்னும் சிவத்தலம் உள்ளது. சைவ நெறி வழங்கிய பெருமையையும்,
புகழையும் தன்னகத்தே கொண்டுள்ளது !இங்கு வருந்துவன கொங்கைகளின் பாரத்தைத்
தாங்கமுடியாத மங்கையர்களின் நாரினும் மெல்லிடைகளே! ஒலிப்பன அம்மகளிர்
அணிந்துள்ள அழகிய காற்சிலம்புகளே ! இரங்குபவன அம்மெல்லிடையார்களின் இடையிலே
அழகுற அறியப் பெற்றுள்ள மாணிக்காஞ்சியே! ஓங்கி உயர்ந்து காணப்படுவது
மாடமாளிகைகளே ! ஒழுகுபவன அறங்களே ! நீங்குபவன தீய நெறிகளே ! நெருங்குபவன
பெருங்குடியே ! இப்படியாகப் புகழ்படும், இப்பெரு நகரிலே வேளாண் மரபிலே
குறுக்கையர்குடி மிகச் சிறந்த தொன்றாக விளங்கி வந்தது. இக்குறுக்கையர்
கு‌டியிலே புகழனார் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து
வந்தார். இவரது மனைவியாக மாதினியார் என்னும் பெருமனைக் கிழத்தியார்
அமைந்திருந்தார்.அம்மையார் பெண்களுள் மென்மையும், இனிமையும் பூண்ட
தன்மையினராய் விளங்கினார்கள். கணவனும் மனைவியும் இல்லற நெறி உணர்ந்து
வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப வாழ்ந்தனர். இவ்வாறு, இவர்கள் இல்லறமெனும்
நல்லறத்தை இனிது நடத்தி வரும்பொழுது இறைவன்‌ அருளால் மாதினியார்
கருவுற்றாள்.

அம்மையார் மணி வயிற்றில் நின்றும் திருமகளே வந்து
தோன்றினாற்போல் அருள்மிக்க அழகிய பெண்மகவு பிறந்தது. அப்பெண் குழந்தைக்குத்
திலகவதி என்று திருநாமம் சூட்டிப் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி பூண்டனர்.
திலகவதியார் தளிர்நடை பயின்று மழலையமுதம் பொழியும் நாளில் அம்‌மையார்
மீண்டும் கருவுற்றார். அம்மையார் மணிவயிற்றிலிருந்து திருசடையானின்
அருள்வடிவமாக சைவம் ஓங்க தமிழ் வளர கலைகள் செழிக்க மருள் எல்லாம் போக்கும்
அருள் வடிவமாக கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது.
பெறோர்கள் அந்த ஆண் குழந்தைக்கு மருள் நீக்கியார் என்று நாமகரணம்
சூட்டினர். மருள் நீ்ககியார் முற்பிறப்பில் வாகீச முனிவராக இருந்தார். இவர்
திருக் கைலாயத்திதல் அமர்ந்து எம்பெருமானின் திருவடியை அடைய அருந்தவம்
புரிந்து வந்தார். ஒரு சமயம் இராவணன் புஷ்பக விமானத்தில் வந்து
கொண்டிருந்தான். கைலாய மலையைப் புஷ்பக விமானம் அணுகியதும் அங்கு
எழுந்தருளியிருந்த நந்தியெம்பெருமான் ராவணனிடம், இப்புண்ணிய மலை
எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருமலை. அதனால் நீ வலப் பக்கமாகப்
போய்விடு என்று பணித்தார். மதியற்ற ராவணன் நந்தியெம்பெருமானுடைய
பெரு‌மையையும் அவர் எம்பெருமானிடம் கொண்டுள்ள பக்தியின் திறத்தினையும்
எண்ணிப் பார்க்க இயலாத நிலையில மந்தி போல் முகத்தை வைத்துக் கொணடிருக்கும்
நீ இந்த மாவீரன் இராவணனுக்கா அறிவுரை கூறுகின்றாய் ? என்று சினத்தோடு
செப்பினான். அளவு கடந்த கோபம் கொண்ட நந்தியெம்பெருமான் அப்படி என்றால்
உன்நாடும், உன் வீரமும் குரங்கினாலேயே அழிந்து போகக்கடவது ! என்று கூறித்
சாபம் கொடுத்தார்.இராவணன் ஆத்திரத்தோடு என்னைத் தடுத்து நிறுத்திய இந்த
கைலாய மலையை அடியோடு பெயர்த்துõக்கி எறிகிறேன் பார் என்று கூறித் தனது
வலிமை பொருந்திய இருபது கரங்களாலும் மலையை அசைத்தான். அது சமயம்
ஈசுவரியுடன் நவமணி பீடத்தில் எழுந்தருளியிருந்த எம்பெருமான் தமது தண்டை
சிலம்பணிந்த சேவடி பாதப் பெருவிரல் நுனி நகத்தால் லேசாக அழுத்தினார்.
அக்கணமே இராவணனது இருபது கரங்களும் மலையினடியில் சிக்கியது. இராவணன்
கரங்களை அசைக்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தான். ஓலக்குரல்
எழுப்பினான். அத்திருமலையில் தவமிருந்து வந்த அருந்தவசி‌யான வாகீசரின்
செவிகளில் இராவ்ணனின் ஓலக் குரல் வீழ்ந்தது. இராவணின் நிலைக்கண்டு மனம்
இளகினார் முனிவர். அவனது துயரம் நீங்குவதற்கு நல்லதொரு உபாயம் சொன்னார்.

எம்பெருமான்
இசைக்குக் கட்டுப்பட்டவர். அவரை இசையால் வசப்படுத்தினால்
இத்துயரத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த மார்க்கும்
பிறக்கும்.வாகீசமுனிவரின் அருளுரை கேட்ட ராவணன் தனது நரம்பை யாழாக்கி பண்
இசைத்தான். பரமனின் பாதகமலங்களைப் போற்றி பணிந்தான்.பக்தனின் இசைவெள்ளம்
ஈசனின் செவிகளில் தேனமுதமாய்ப் பாய்ந்தது. சிவனார் சிந்தை குளிர்ந்தார்.
அவன் முன்னால் பெருமான் பிரசன்னமானார்.இராவணின் பிழையைப் பொறுத்தார்.
சந்திஹாஸம்ய என்னும் வாள் ஒன்றை அவனுக்கு அளித்ததோடு ஐம்பது லட்சம்
ஆண்டுகள் உயிர்வாழும் பெரும் பேற்றினையும் அளித்தார். இராவணன்
எம்பருபெருமானைத் தோத்திரத்தால் மேலும் வழிபட்டான். பேரின்பப் பெருக்குடன்
இலங்கைக்குச் சென்றான்.அதே சமயம் நந்தி தேவருக்கு வாகீச முனிவரின் செயல்
சினத்தை மூட்டியது. இராவணனுக்கு உதவிசெய்த வாகீச முனிவரை பூலோகததில்
பிறக்குமாறு சாபம் கொடுத்தார். அவரும் மாதினியார் மணிவயிற்றில்
அவதரித்தார். நாவின் நலத்தினால் நாடு போற்ற அவதரித்த வாகீசரும்
மருள்நீக்கியார் என்னும் நாமத்தை பெற்றார். மருள் நீக்கியாரும்
நற்பண்புகளு‌க்கெல்லாம் திலக்ம் போன்ற திலகவதியும் நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து குழந்‌தைப் பருவத்தைக் கடந்தனர். இருவரும்
கல்வி கேளிவிகளில் மேம்பட்டு சகல கலா வல்லவர்களாக விளங்கினர். அப்பொழுது
திலகவதியாருக்கு பன்னிரண்டாவது பிராயம். பெற்றோர்கள் திலகவதியை அரசனிடம்
சேனாதிபதியாக பணியாற்றும் கலப்பகையார் என்னும் வீரருக்கு மணம்
முடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இத்தருணத்தில் புகழனார் விண்ணுலகை
எய்தினார். கணவன் இறந்து போன துயரத்தைத் தாங்கமுடியாத மாதினியாரும்
தொடர்ந்து அவரோடு எம்பெருமானின் திருவடியில் ஒன்றினாள்.பெற்றோர்கள்
விண்ணுலகு எய்திய துக்கத்தைத் தாளமுடியாமல் திலகவதியாரும்,
மருள்நீக்கியாரும்‌ பெருந்துயரத்தில் ஆழ்‌ந்தனர். இந்த நிலையில்தான்
ஊழ்வினை அவர்களை மேலும் துன்புறுத்தியது. திலகவதியாருக்கு நிச்சயித்திருந்த
கலிப்பகையார், போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தார் ! இந்தச்
செய்தியைக் கேள்வியுற்ற திலகவதியாரும் மருள்நீக்கியாரும் வெந்த புண்ணில்
வேல் பாய்ந்தாற்போன்ற வேதனையை அடைந்தார்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:17

கலிப்பகையார் உயிர் துறந்த பின்னர் திலகவதியார் உ‌யிர் வாழ விரும்பவில்லை,
கலிப்பகையாருக்கும் தனக்கும் திருமணமாகாவிட்டாலும் அவரை மனதில் கணவராக
வரிந்துவிட்ட நிலையில் திலகவதியார் இந்த முடிவுக்கு வந்தாள். நான் என்
கணவர் சென்ற இடத்திற்கே சென்றுவிடப் போகிறேன் என்று திலகவதியார் உலகை
வெறுத்து உயிர் துறக்க எண்ணினாள். அம்முடிவைக் கண்ட மருள்நீக்கியார்
தமக்கையாரிடம் பணிந்து வேண்டினார்.அருமைச் சகோதரி ! தாயும் நம்மைவிட்டு
மறைந்த பின்னர் உம்மையே அவர்களாக எண்ணி நான் ஓரளவு மன உறுதியுடன் வாழ
நினைத்தேன். எனக்குக் ‌கொழுகொம்பாக உள்ள தங்களும் என்னை இந்த தரணியில்
தனியே விட்டுச் செல்வதனால் நான் தங்களுக்கு முன்பே உயிர் துறப்பது திண்ணம்
என்று கூறி அழுதார். உடன்பிறந்தோன் மீது தாம் கொண்டுள்ள அளவற்ற
கருணையினாலும், அன்பினாலும் திலகவதியார் மனம் மாறினாள். மருள்
நீக்கியாருக்காக வேண்‌டி மண்ணுலகில் வாழ முடிவு பூண்டõள். அம்மையார் மங்கள
அணிகளையும் மின்னும் வைரங்களையும், பளபளக்கும் பட்டாடடைகளையும் களைந்து உலக
பற்று அற்று, எல்லா உயிர்களிடத்தும் கருணை பூண்டு மனைத்தவம் புரியும்
மங்கையராக வாழ்த் தலைப்பட்டாள்.தமக்கையார் தமக்காக உயிர்வாழ்த் துணிந்தது
கண்டு மருள்நீக்கியார் துயரத்தை ஒழித்து மனமகிழ்ச்சி பூண்டார்.
மருள்நீக்கியார் உலகில் யாக்கை நிலையாமை இளமை நிலையாமை செல்வ நிலையாமை
ஆகியவற்றை சிந்தித்துத் தெளிந்து அறிந்து நல்ல அறங்களைச் செய்வதில் மிகுந்த
ஈடுபாடு கொண்டார். திருவாமூரில் பொன்னும் மணியும் வேண்டிய அளவிற்குப்
செலவு செய்து அறச்சாலைகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் அமைத்தார்.
சாலைகளைச் செப்பனிட்டார். அழகிய சோலைகளை வளர்த்தார். நீர் நிலைகள் பல
வெட்டினார். விருந்தினரை உபசரித்து, உண்பித்து வகையோடு வழிபட்டு வேண்டியதை
ஈந்து மகிழ்ந்தார் ! தம்மை நாடிவந்த புலவர்கள், பாடி மகிழக் கேட்டு
அவர்களது வாடிய முகம் மாறப் பரிசு‌கள் பல அளித்துப் பெருமை பூண்டார்.
இவ்வாறாக, மருள்நீக்கியார் பற்பல தருமங்களைப் பாகுபாடின்றி வாரி வாரி
வழங்கி வற்றாத பெருமையை சீரோடு பெற்றுச் சிறப்போடு வாழ்ந்து வந்தார்.
இத்தகைய அறநெறி ஒழுக்கங்களை இடையறாது நடத்தி வந்த மருள்நீக்கியார் பற்றற்ற
உலக வாழ்க்கைகய விட்டு விலகுவதற்காக வேண்டி சமண சமய‌‌‌‌மே சிறந்த என்று
கருதினார். அச்சமயத்தில் ‌சேர்ந்தார். ஐந்தெழுத்து மந்திரத்தின்
மகிமையையும், திருவெண்ணீற்றின் திறத்தினையும் உணர்ந்தவருக்கு சமண நூல்களை
எல்லாம் கற்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

சமண நூல்களைக்
கற்றறிந்து வரும் பொருட்டு, அருகிலுள்ள பாடலிபுரத்திற்கு சென்று அங்குள்ள
ஓர் சமணப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு சில, நாட்கள் தங்கியிருந்து சமண
நூல்களைக் கற்றுணர்ந்து வல்லுனர் ஆனார். மருள்நீக்கியார் சமண மதத்தில்
பெற்‌ற பெரும் புலமையைப் பாராட்டி மகிழந்த சமணர்கள் அவருக்கு தருமசேனர்
என்னும் சிறப்புப் பட்டத்தைக் கெõடுத்து கெளரவித்தனர். மருள்நீக்கியார் சமண
மதத்தில் பெற்ற புலமையின் வல்லமையால் ஒரு முறை பெளத்திர்களை வாதில்
வென்று, சமண சமயத்தின் ‌தலைமைப்பதவியையும் பெற்றார். சமண மதத்தில் மிகுந்த
ஈடுபாடு உடையவராக மருள் நீக்கியார் வாழ்ந்து வந்ததற்கு நேர்மாறாக அவரது
தமக்கையாரான திலகவதியார் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுடையவராய் சிவநெறியைச்
சார்ந்து ஒழுகலானாள். சித்தத்தை சிவனார்க்காக அர்ப்பணித்த திலகவதியார்
திருக்கெடிலத்தின் வடகரையில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானத்தில் மடம்
ஒன்றை அமைத்துக் கொண்டாள். வீரட்டானேசுரர்க்குத் திருத்தொண்டுகள் பல
புரியத் தொடங்கினாள். தினந்தோறும் திலகவதியார் வைகரைத் துயிலெழுந்து தூய
நீராடி ‌கோயிலின் முன்னே அலகிட்டு கோமாய நீரால் சுத்தமாக மெழுகிக்
கோலமிடுவாள். மலர்வனம் சென்று, நறுந்தேன் மலர்களைக் கொய்து வந்து மாலைகள்
தொடுத்து எம்பெருமானுக்குச் சாத்தி வணங்கி வழிபடுவாள் திலகவதி !இவ்வாறு
அம்மையார் கோயிலில் அருந்தவம் புரிந்து வரும் நாளில் மருள்நீக்கியார் சமண
சமயத்தில் புலமை பெற்று அச்சமயத்திலேயே மூழ்கி வாழ்கிறார் என்ற செய்தி
கேட்டாள். அளவு கடந்த துயரமடைந்தான். தமது சகோதரனை எப்படியாகிலும்
சமணத்தைத் துறந்து சைவத்தில் சேரச் செய்ய முயற்ச்சித்தாள். நாள்தோறும்
எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்தாள். ஒருநாள் இறைவன் திலகவதியின் கனவிலே
எழுந்தருளி, திலகவதி ! கலங்காதே ! முற்பிறப்பில் மருள்நீக்கியார் ஓர்
முனிவனாக இருந்து என்னை அடைய அருந்தவம் புரிந்தவன். இப்பிறப்பில் அவனைக்
சூலை ‌நோயால் தடுத்தாட்கொள்வோம் என்றார். எம்பெருமானின் அருள்மொழி கேட்டுத்
திலகவதியார் துயில் நீங்கினாள். துயர் மறந்தாள். சிவநாம சிந்தை பூண்டாள்.
மன அமைதி கொண்டாள். உடன் பிறந்தோன் உளம் திருந்தி வரும் நன்னாளை
எதிர்ப்பார்த்து இருந்தாள். எம்பெருமான் மருள் நீக்கியாரை தடுத்தாட்கொள்ளத்
திருவுள்ளம் கொண்டு அவர் உடலில் சூலை நோய் உண்டாகச் செய்தார். சூலை நோ‌ய்
அவரது வயிற்றுள் புகுந்து அதனது உக்கிரத்தைத் தொடங்கியது.வடவைத்தீயும்,
கொடிய நஞ்சும், வச்சிரமும் ‌போல் புகுந்த சூலைநோ்ய் மருள்நீக்கியாரின்
குடலைக் குடைந்து தாங்க முடியாத அளவிற்கு அவருக்குப் பெரும் ‌‌வேதனையைக்
கொடுத்தது. வெந்தணல் ‌போல் மேனியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூலை
நோயின் கொடிய துயரத்தைத் தாங்க முடியாத மருள்நீக்கியார் சேõர்ந்து கீழே
சாய்ந்தார். அவர் தாம் சமணச் சமயத்தில் பயின்ற மணி மந்திரங்களைப்
பயன்படுத்தி, நோயினைத் தீர்க்க முயன்றார்.நோயின் உக்ரம் சற்றும்
குறையவில்லை. வினாடிக்கு வினாடி வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது.
வேதனையைத் தாங்க முடியாத அவர் தணலிடைப் புழுப்போல் துடித்தார். சற்று
நேரத்தில் மயக்கமுற்றார்.

மருள் நீக்கியாரின் மயக்க நிலையைக் கண்ட
சமண குருமார்கள் அக்கணமே ஒன்றுதிரண்டார்கள். பற்பல சமண நெறிவழிகளைக்
கையாண்டு நோயைக் குணமாக்க முயன்று பயன் ஒன்றும் காணாது தோற்றுப் போயினர்.
சமண குருமார்கள் நடத்திய வழிமுறைகளால் மருள் நீக்கியாரைப் பற்றிக்
கொண்டிருந்த சூலைநோய் முன்னைவிட அதிகப்பட்டதே தவிர சற்றுக்கூடக்
குறையவில்லை. சமண குருமார்களோ அவருக்குத் தொடர்ந்து மயிற்பீலியைக் கொண்டு
தடவுவதும், குண்டிகை நீரை மந்திரித்து அவரைக் குடிக்கச் செய்வதுமாகவே
இருந்தனர். இறுதியில், சமண குருமார்கள் தங்களால் இக்கொடிய நோயைத தீர்க்க
முடியாது என்று தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவரைக் கைவிட்டு
விட்டுச் சென்றனர்.மருள்நீக்கியார் வேறு வழியின்றி தமக்கையாரிடம் செல்லத்
தீர்மானித்தார். சமையற்காரனை அøழத்தார். தமக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைப்
பற்‌றித் திலகவதியாரிடம் சென்று அறிவிக்குமாறு ‌சொல்லி அவனை அனுப்பி
வைததார். சமயற்காரனும் அக்கணமே பாடலிபுரத்தை விட்டகன்றான். பொழுது புலரும்
தருணத்தில் திருவதிகையை வந்து அடைந்தான். நான் தங்கள் உடன் பிறந்தவரால்
அனுப்பப்பட்டவன். அவருக்குக் கடுமையான சூலை நோய் கண்டுள்ளது. சமண
குருமார்கள் அனைவரும் அந்நோயின் கொடுமையைப் போக்க முடியாத நிலையில் அவரைக்
கைவட்டு போயினர். தமது இத்த‌கைய துயர நிலையைத் தங்களிடம் அறிவித்து
வரும்படி என்னை அனுப்பியுள்ளார்கள். சமையற்காரன் சொன்ன செய்தி
அம்மையாருக்குத் ‌தீயாகச் சுட்டது. அம்மையார் மன வருத்தங் கொண்டார்கள்.
இருந்தும் சமணர்களை வெறுக்கும் அம்மையார், அப்பா! சமணர்கள் தங்கியிருக்கும்
இடத்திற்கு நான் ஒருபோதும் வர‌மாட்டேன் என்று அவனிடம் சென்று உரைப்பாயாக !
என்று விடை பகர்ந்து அவனைத் திரும்ப அனுப்பி வைத்தாள் திலகவதி !
சமையற்காரன் விடைபெற்றுப் புறப்பட்டான். சமையற்காரன் பாடலிபுரத்தை
வந்‌தடைந்தான். மருள்நீக்கியார் ஆவலோடு அவனை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார். அவன் மருள்நீக்கியாரிடம் திலகவதியார் கூறியவற்றைக்
கூறினான். தமக்கையாரின் பதிலைக் கேட்டு மருள்நீக்கியார் மனம் வாடிச்
சோர்வுற்றார். வேறு வழியின்றி திருவதிகைக்குப் புறப்பட முடிவு
செய்தார்.இத்தகைய எண்ணம் எழுந்த‌ை மாத்திரத்தி‌லேயே, நோயின் உக்கிரம்
உடம்பில் சற்று தணிந்தாற்போல் இருந்தது அவருக்கு! பாயினால் அணியப்பட்ட உடை
களைந்தார். கமண்டலத்தையும், மயிற்பீலியையும், ஒ‌ழித்தார். தூய வெண்ணிற
ஆடையைத் தரித்தார். சமணர்கள் எவரும் அறியாவண்ணம் இரவோடு இரவாக அரங்கிருந்து
தமது பணியாளுடன் புறப்பட்டுத்ச திருவதிகையை அடைந்தார். அம்மையார்
தங்கியிருக்கும் மடத்துள் புகுந்தார் மருள்நீக்கியார். மடத்துள்
ஐந‌்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறு அமர்ந்திருந்த தமக்கையை
நமஸ்கரித்தார் மருள்நீக்கியார். திலகவதியார் ஒருபுறம் மகிழ்ச்சியும்,
மறுபறம் வேதனையும் கொண்டாள். மருள்நீக்கியார் மனவேதனையுடன் திலகவதியாரிடம்
தமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை பற்றிக் கூறினார்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:18

நம் குலம் செய்த அருந்தவத்தால் அவதாரம் செய்த தமக்கையே ! என் குடலுள்
புகுந்து உடலை வருத்தும் இக்கொடி‌ய சூலை நோயினைத் தீர்த்துக் காத்திடல்
வேண்டும் என்று கண்களில் நீர் மல்க வேண்டி நின்றாள் மருள்நீக்கியார் !
திலகவதியார் சகோதரனைப் பார்த்து மேலும் உளம் உருகினாள். புரமெரிந்த
புண்ணியரது பொன்னடிகளை நினைத்து மலர்க்கைக் கூப்பித் தொழுது இறைஞ்சினான்
திலகவதி. மருள்நீக்கியார் திருமேனியைத் தொட்டு நல்ல கொள்கையில்லாது
புறச்சமயப் படுகுழியில் விழ்ந்து அறியாது அல்லூற்றாய். இனமேல்
எழுந்திருப்பாயாக ! என்று மொழிந்தாள். அம்மையாரின் அமுத மொழிக்கேட்டு
மருள்நீக்கியார் தாம் பற்றிக் கொண்டிருந்த சகோதரியின் கால்களை இரு
கைகளாலும் கண்களில் ஒற்றிக்கொண்டு பிணியின் துன்பம் சற்று குறைந்த நிலையில்
மெதுவாக எழுந்தார். திலகவதியார் கண் கலங்க சகோதரா ! வருந்தாதே ! இச்சூலை
நோய் உனக்கு ஏற்பட்டதற்குக் காரணம் எம்பெருமானின் அருளேயாகும். மீண்டும்
உன்னை அவரது அடியாராக ஏற்றுக்கொள்வதற்காக இம்முறையில் உன்னை ஆட்கொண்டார்.
பற்றற்ற சிவனடியார்களை நினைத்து வழிபட்டுச் சிவத்தொண்டு புரிவாயாக! உன்னைப்
பற்றிய மற்ற நோயும் அற்றுப்ப‌‌ோகும் என்று கூறினாள். மருள்நீக்கியாருக்கு
சமய மாற்றம் வேண்டித் திலகவதியார், திருவெண்ணீ்‌ற்றினை எடுத்து ஐந்தெழுத்து
மந்திரத்தை ஓதியவண்ணம் கொடுத்தாள். அம்மையார் அருளிக் கொடுத்த
திருவெண்ணீற்றினைத் தாழ்ந்து பணிந்து பெற்றுக்கொண்ட மருள்நீ்க்கியார்,
எனக்குப் பற்றற்ற பெருவாழ்வு கிட்டிற்று. பரமனைப் பணிந்து மகிழும்
திருவாழ்வு பெற்றேன் என்று கூறிக் திருவெண்ணீற்றை நெற்றியிலும் மேனி
முழுவதும் தரித்துக் கொண்டார். திருவெண்ணீற்றின் மகிமையால் மருள்நீக்கியார்
நோய் சற்று நீங்கப்பெற்ற நிலை கண்டார். அதுகண்டு அத்திருத்தொண்டர் மனம்
குளிர்ந்தார். பெருவாழ்வு பெற்ற மருள்நீக்கியார் முன்போல் சைவராய்த்
திகழ்ந்தார். அம்மையார் தம்பியாரை அழைத்துக்கொண்டு திருவலகும்,
திருமெழுகுத் தோண்டியும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தாள்.
மருள்நீக்கியார், தமக்கையோடு கோயிலை வலம் வந்து, எம்பெருமான் திருமுன்
வணங்கி நின்றார். சிவச்சந்நதியில் சைவப்பழமாக நின்று கொண்டிருந்தார்
மருள்நீக்கியார் ! பேரொளிப் பிழம்பான எம்பெருமானின் திருவருள் அவர் மீது
பொழிந்தது. தமிழ்ப் பாமாலை சாத்தும் உணர்வு அவருக்கு உதித்தது. உணர்ச்சி
ஊற்றெடுத்துப் பெருகியது. மருள்நீக்கியார், தம்மைப் பற்றிக்கொண்டு படாத
பாடுபடுத்திய சூலைநோயினையும், மா‌யையினையும் அறுத்திடும் பொருட்டு
கூறிறாயினைவாயு விலக்கிலீர் என்று தொடங்கும் பதிகத்த‌ினைப் பாடினார்.பாடி
முடித்ததும் அவரைப் பற்றிக் கொண்டிருந்த சூலை நோய் அறவே நீங்கியது.
எம்பெருமானின் திருவருளை வியந்து போற்றி, திலகவதி கண்ணீர் விட்டாள்.
மருள்நீக்கியார் சிரமீது கரம் குவித்து நின்று மெய்யருவி பிரார்த்தித்தார்.

ஐயனே
! அடியேன் உயிரையும், அருளையும் பெற்று உய்ந்தேன் என்று மனம் உருகக்
கூறினார் மருள்நீக்கியார் ! அப்‌பொழுது விண்வழியே அசரீரி கேட்டது. இனிய
செந்தமிழ்ப் பாக்களால் திருப்பதிகத் தொகையை பாடியருளிய தொண்டனே ! இனி நீ
நாவுக்கரசு என்று நாமத்தால் ஏழுலகமும் ஏந்தப் பெறுவாய். மருள்நீக்கியார்
திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தைப் பெற்றார். எம்பெருமானின் திருவருளை
எண்ணிப் பூரித்துப் போன திலகவதியார் தமது உடன்பிறந்தோர் சமணப் பித்து,
சூலைப் பிணியும் நீங்கியது கண்டு உவகை பூண்டாள். திருநாவுக்கரசர்
சைவத்திருத் தோற்றம் பூண்டார். அவரது தலையிலும், கழுத்திலும், கையிலும்
உருத்திராட்ச மாலைகள் அணியெனத் திகழந்தன. திருவெண்ணீறு அவரது மேனியில் பால்
போல் பிரகாசித்துது. அவரது மனம் ஐந்தெழுத்து மந்திரத்தை நினைக்க - மொழி
திருப்பதிகமாக காயம் திருத்தொண்டுகள் புரியத் தொடங்கின. இங்ஙனம நாவுக்கரசர்
எம்பெருமானின் சேவடிக்கு மனத்தாலும், வாக்காலும், ‌‌காயத்தாலும் சைவத்
தொண்டு புரிந்து பரலானார். சைவ நெறியைப் பின்பற்றி மருள்நீக்கியார்
வாழ்வதைக் கேள்வியுற்ற சமண குருமார்கள் கொதித்தெழுந்தார்கள்.
வெகுண்டார்கள். ஒழித்துக் கட்டுகிறோம் என்று அவர்கள் வீண் சபதம் எடுத்துக்
கொண்டார்கள். கெடுமதி படைத்த அச்சமணர்‌கள், பெருங்கூட்டமாகக் கூடி,
மன்னனைக் காண வி‌ரைந்தார்கள். அரண்மனை‌யை அடைந்த சமணர்கள், மன்னனை வணங்கி,
அரசே, அரசே ! தருமசேனர் தம்மைச் சூலைநோய் பற்றி கொண்டதாகப் பொய் கூறி,
நம்மைவிட்டு அன்றதோடல்லாமல் அவரது தமக்கையாரிடம் சென்று சைவத்தைச்
சரணடைந்து விட்டார் . நம் சமண சமயத்தை புறக்கணித்துவிட்டார் என்று
கூறினார். அவர்கள் மொழிந்‌ததைக் கேட்ட மன்னன், அருந்தவ முனிவர்க‌ளே !
அஞ்சாதீர்! சொல்லுங்கள்! தருமசேனருக்குத் தண்ட‌னை கொடுக்க நான் ஒருபோதும்
தயங்கமாட்டேன் ! என்று ஆறுதல் பகர்ந்தான். அரசன் அமைச்சரை நோக்கி, உடனே
அவைக்களத்திற்‌கு மருள்நீக்கியாரை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான்.
மன்னனின் ஆணைக்கு அடிபணிந்த அமைச்சர்கள், ‌சேனைகள் சூழ, நாவுக்கரசர்
எழுந்தருளியிருக்கும் திருவதிகையை அடைந்தனர்.திருவெண்ணீற்றைப் பொலிவுடன்
அமர்ந்திருந்த நாவுக்கரசரை அணுகி, தருமசேனரே! மன்னன் மகேந்திரவர்மன் தங்களை
உடனடியாக அழைத்து வருமாறு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். ஆதலால் நீவிர்
இக்க‌ணமே எங்களுடன் புறப்பட்டு வரவேண்டும் என்று அரச தோரணையில் ஆணையைப்
பிறப்பித்தனர், நஞ்சை அமுதாக உண்ண நீலகண்டரின் திருவடியில் தஞ்சம் புகுந்த
திருநாவுக்கரசர், சற்றும் அஞ்சாது நெஞ்சு நிமிர்ந்து, நாமார்க்கும்
கு‌டியல்லோம்; நமனை‌‌யஞ்சோம் எனத் தொடங்கும் மறுமாற்றத் திருத்தாண்டகத்
திருப்பதிகத்தைப் பாடினார்.

அமைச்சர்கள் நாவுக்கரசரின்
திருப்பதிகத்தில் மெய் உருகினார். அவரது மலர்த்தாளினைப் போற்றி வணங்கினர்.
ஐயனே தயவுசெய்து எங்களுடன் எழுந்தருளல் வேண்டும் என்று பணிவன்போடு வேண்டிக்
கொண்டனர். அமைச்சர்கள் இவ்வாறு வினவியதும் நாவுக்கரசர்ல இங்குவரும்
வினைகளுக்கு எம்பிரான் எம்‌மோடு துணை உள்ளார் என மொழிந்தாவாறு அவர்களுடன்
புறப்பட்டார். நாவுக்கரசர் பல்லவன் அரண்மனையை அடைந்தார். பல்லவன் முன்னால்
சிவஜோதி வடிவான நாவுக்கரசர் தலைநிமிர்ந்து நின்றார். நாவுக்கரசரைக்
கண்டதும் சமணர்கள் பொங்கி எழுந்தனர். அருள் வடிவாய் நின்றுகொண்டிருந்த
நாவுக்கரசர் முன்னால் அக்கிரமமே உருவெடுத்தாற் போல் அறந்துறந்து சமணர்கள்
நின்று கொண்டிருந்தனர். சமணத்தை நம்பிய பல்லவ மன்னன் அறம் மறந்து
அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அக்கொற்றவன் சமணர்களிடம் தருமசேனரை யாது
செய்யவேண்டும் ? என்று கேட்டான். மன்னன் மொழிந்‌ததைக் கேட்டு மதியற்ற சமண
மத குருமார்கள் சினத்துடன் அரசரைப் பார்த்து, அரசே! திருவெண்ணீற்றை அணியும்
இத் தருமசேனரைச் சுண்ணாம்புக் காளவாயில் தள்ள வேண்டும் என்று கூறினார்.
அரசன் எவ்வித விசாரணையுமின்றி சமண மயக்கத்தில் அமைச்சர்களிடம் தருமசேனரை
சுண்ணாம்புக் காளவாயில் தள்ளுமாறு கட்டளையிட்டான். மன்னன் ஆணைப்படி
ஏவலாளர்கள் நாவுக்கரசரைக் கொழுந்து விட்டெரியும் தீயுடன் கூடிய நீற்றறையில்
விடுத்து கதவை அடைந்து வெளியே காவல் புரிந்தனர். நீற்றறையில் அடைபட்ட
நாவுக்கரசர் எம்‌பருமான் நாமத்தை மனத்தால் தியானித்த வண்ணமாகவே இருந்தார்.
இறைவனின் அருளால், வெப்பம் மிகுந்த அந்த சுண்ணாம்பு நீற்று, இளவேனிற்
காலத்தில் வீசும் குளிர்த் தென்றலைப் போல் - குளிர்ச்சி பொருந்திய தடாகம்
‌போல் யாழின் மெல்லிமை போல் தண்மை மிகும் குளிர் நிலவு போல்
நாவுக்கரசருக்கு இன்பத்தைக் கொடுத்தது. பிறைமுடி வேணியரை நினைத்து
மகிழ்ந்து, மாசில் வீணையும் மாலை மதியும் எனத் தொடங்கும் திருப்பதிக்ம்
ஒன்றைப் பாடினார். ஏழு நாட்கள் செனற பின்னர், பல்லவ மன்னனின் கட்டளைப்படி
சமண குருமார்கள் அறையைத் திறந்து பார்க்க வந்தனர்.கரியமேகக் கூட்டம்
திரண்டு வந்தாற் போல் நீற்றறையை வந்‌தடைந்த சமணர்கள் கதவுகளைத் திறந்ததும்
அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
திருநாவுக்கரசர் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி அம்பலவாணராது பாதமலர்க்
கமலங்களில் ஊறுகின்ற தேனமுதத்தை உண்டுகளித்து, எவ்வகையான ஊனமும் ஏற்படாமல்
உவகை பொங்க எழுந்தருளியிருப்ப‌தைக் கண்டனர். ஆத்திரத்தோடு கொதித்தெழுந்த
சமணர்கள், மன்னனிடம் விரைந்து சென்று, ""அரசே தருமசேனர், நமதுசமண நூல்களில்
இறவாமல் இருப்பதற்கு கூறப்பட்டுள்ள மந்திரங்களை, ஜபித்து சாகாமல் உயிர்
தப்பியுள்ளார் என்று கூறினர். அது கேட்ட பல்லவ மன்னன், அங்ஙனமாயின்
இப்பொழுது தருமசேனரை யாது செய்தல் வேண்டும் ? என்று கேட்க சமணர்கள்,
தருமசேனரைக் கொடிய நஞ்சு ஊட்டிக் கொல்லவேண்டும் என்று கூறினார்.

பல்லவ
வேந்தனும் அநத பாவிகளின் கூற்றிற்கு இணங்கி, அவ்வாறே தண்டனை கொடுப்போம்
என்று கூறி, தரு‌மசேனரைக் கொல்ல ஆணையிட்டார். சமணர்கள், நஞசு கலந்த பால்
சோற்றை எடுத்துக் கொண்டு நாவுக்கரசரை அணுகி, அவரை உண்ணுமாறு செய்தனர்.
நாவுக்கரசர், பால்சோற்றினை வாங்கிக் கொண்டு, எங்கள் நாதருடைய அடியாருக்கும்
நஞ்சும் அமுதமாகும் என்று கூறியவாறு உண்டார். அமரரைக் காக்க ஆலகாலத்தை
அமுதம் போல் அள்ளிப் பருகிய நீலகண்டர், நாவுக்கரசர் உண்ணும் நஞ்சு கலந்த
பால் சோற்றையும் திருவமுதாக்கி அருளினார். முன்னைவிடப் புதுப்பொலிவுடன்,
மகிழ்ச்சி ‌பொங்கக் காணப்பட்டார் நாவுக்கரசர்! சமணர்கள் அஞ்சினர். தங்கள்
சமயத்திற்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தனர். மீண்டும்
அக்கொடியவர்கள் பல்லவ மன்னனை அணுகி, விவரத்தை விளக்கிக் கூற, மூன்றாவது
முறை அவரை, மத யானையால் இடறச் செய்து கொன்றுவிடுவது என்று உபாயத்தைச்
சொல்லினர். மன்னனும் அங்ஙனமே மதங்கொண்ட யானையால் மாய்த்துவிடுவோம். உடனே மத
‌யானையை ஏவி விடுக என்று கட்டளையிட்டான். வில்லிலிருந்து புறப்படும் கொடிய
அம்பு போல் மன்னனது ஆணை புறப்பட்டதும் சற்றும் தாமதியாமல் காவலர் மத
யானையை அவிழ்த்து விட்டனர். சமணர்கள் நாவுக்கரசரை அழைத்து வந்து மத யானை
வரும் திசைக்கு எதிரில் நிறுத்தினர். நாவுக்கரசர் சிவநாமத்தை
சிந்தையிலிருத்தி சுண்ணவெண் சந்தைனச் சாந்தும் எனத் தொடங்கும் சிவப்பாடலைப்
பாடினார். திருப்பாட்டின் இறுதியில், அஞ்சுவது யா‌தொன்று மில்லை அஞ்ச
வருவது மில்லை என்று அமையுமாறு திருப்பதிகம் அமைத்தார்
நாவுக்கரசர்.அப்‌பொழுது புயல் போல் முழக்கமிட்டுக் கொண்டு வந்த மத யானை
நாவுக்கரசரின் அருகே வந்ததும் துதிக்கையை உயர்த்தி அவரைச் சுற்றிச் சுற்றி
வலம் வந்தது. நிலத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செய்தது. மத
யானையின் மாறுபட்ட செயலைக் கவனித்த சமணர்கள் பாகர்களிடம் நாவுக்கரசரைக்
கொல்லுமாறு யானைக்கு செய்கை காட்டுங்கள்‌ என்று பொருமினர். அவர்களும்
குறிப்பால் ‌யானைக்கு அதனை உணர்த்தினர். உடனே மத யானை மதம் பொங்க
துதிக்கையால் பாகர்களைத் தூக்கி எடுத்து வீசி எறிந்து கொன்றது; அத்தோடு
‌யானை அடங்கவில்லை. அந்த மத யானை சமணர்களின் மீது பாய்ந்து அவர்களையும்
காலால் மிதித்துத் தந்தத்தால் குத்திக் கிழித்தது. துதிக்கையால் தூக்கி
எறிந்து கொன்று குவித்தது.மந்திரகிரி திருப்பாற் கடலைக் கலக்கியது ‌போல்,
மத யானை அத்திரு நகரை ஒரு கலக்கு கலக்கி சமணர்களைக் கொன்று குவித்தது. மத
யானையின் பிடியில் விழாமல் தப்பிப் பிழைத்த ஒருசில சமணர்கள் அஞ்சி நடுங்கி
பல்லவ வேந்தனிடம் தஞ்சம் புகுந்தனர். சமணர்கள் மீது வெறுப்பு கொண்ட அரசன்,
ஆத்திரத்தோடு சமணர்களைப் பார்த்து இனிமேல் செய்வதற்கு என்னதான் இருக்கிறது?
என்று வெறுப்போடு கேட்டதும், சமணர்கள் இம்முறை தருமசேனரைக் கல்லோடு
சேர்ந்து கட்டி கடலில் போட வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். அந்த
நிலையிலும் சமணர்களின் செருக்கு அடங்கவில்லை. அவர்களது இத்தகைய
முடிவிற்குத் தலைவணங்கிய வேந்தன், நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில்
கொண்டு போய்த் தள்ளிவிடுங்கள் என்று ஏவலாளருக்குக் கட்டளையிட்டான்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:19

ஏவலாளர் நாவுக்கர‌சரைப் படகில் ஏற்றிக் கொண்டு சமணர்களுடன் கடலில்
புறப்பட்டனர். நடுக்கடல் சென்றதும், அவரைக் கல்லோடு கட்டி கடலில்
வீழ்த்திவிட்டுக் கரைக்குத் திரும்பினார். கடலுள் வீழ்ந்த நாவுக்கரசர்,
‌எப்படி ‌வேண்டுமானாலும் ஆகட்டும்; இவ்வெளியோன் எம்பிரானை ஏத்துவேன் என்று
நினைத்தார். சொற்றுணை என அடி எடுத்து நற்றுணையாவது நமச்சிவாயவே என்று
பதிகம் பாடி கடலில் மூழ்கினார். ஆழ்கடலில் அருந்தமிழ் முத்தை கொடுத்தார்.
பைந்தமிழ் பாமாலை கோர்த்தார். புலித்தோலைப் போர்த்த அரவணிந்த அண்ணலுக்கு
அழகிய ஆரமாய் அணிவித்தார். கல்லும் கனிய இன்மொழியில், நாவரசர் பாமாலை
தொடுத்து, ஐந்தெழுத்தை ஓதியதும், அவரது உ‌டலைப் பிணித்திருந்த கயிறு
அறுபட்டு வீழ்ந்தது. அக்கயிற்றோடு கட்டியிருந்த கல்லும், தெப்பமாகக் கடல்
மீது மிதந்தது. நாவுக்கரசர் அதன் மீது எழுந்தருளினார். கல்லும் கனிய
இன்மொழியில், நாவரசர் பாமாலை தொடுத்து, ஐந்தெழுத்தை ஓதியதும், அவரது உடலைப்
பிணித்திருந்த கயிறு அறுபட்டு வீழ்ந்தது. அக்கயிற்றோடு கட்டியிருந்த
கல்லும், தெப்பமாகக் கடல் மீது மிதந்தது. நாவுக்கரசர் அதன் மீது
எழுந்தருளினார். நாவுக்கரசர் வருணனின் உதவியால் திருப்பாதிரிப்
புலியூருக்கு அருகிலே கரை சேர்த்தார். அத்தலத்தின்கண் வாழும் அன்பர்களும்,
அடியார்களும் விரைந்தோடி வந்து நாவுக்கரசரை அன்பு கொண்டு அழைத்து அக
மகிழந்தனர். சிவநாமத்தை விண்ணெட்ட ஒலித்த வண்ணம் நாவுக்கரசரை
திருப்பாதிரிப்புலியூர் ஐயனின் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே
குடிகொண்டிருக்கும் முக்கண்ணரின் மென்‌மலர்த்தாளினை ஏத்தி வழிபட்டு,
ஈன்றாளுமாயெனக்கெழுந்தையுமாய் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தை
இறைவனின் செவிகுளிர ஓதினார் நாவுக்கரசர். உருத்திராக்ஷ மாலைகளும,
திருவெண்ணீரும் மேனியில் துலங்க, கையிலே உழவாரமும் தாங்கியவாறு அப்பர்
பெருமான் நின்ற ‌கோலம்கண்டு அன்பர்கள் பேரானந்தம் பூண்டனர். இவற்றை எல்லாம்
கேள்வியுற்ற பல்லவ மன்னன் மனம் மாறினான். மதி தெளிந்தான். எஞ்சிய சமணர்களை
அடியோடு ஒழித்தான். நாவுக்கரசருக்குத் தான் செய்த பாவத்திற்கு
பிரா‌யசித்தம் தேடப் புறப்பட்டான். அதற்குள் நாவுக்கரசர் அங்கிருந்து
புறப்பட்டு, பல சிவத்தலங்களைத் தரிசித்தவாறு, திருவதிகையை வந்‌தடைந்தார்.
நாவுக்கரசரை வரவேற்க, திருவதிகைவாழ் அன்பர்கள் மிகப்பெரிய ஏற்பாடுகள்
பலவற்றைச் செய்தனர். தமிழுக்கு அரசராகிய நாவுக்கரசர், சிவமே உருவெடுத்து
வந்து கொண்டிருந்தார். திருவதிகைத் தொண்டர்களும், அன்பர்களும் இன்னிசை
முழக்கத்தோடும், வேத ஒலியோடும், எல்லையிலேயே நாவுக்கரசரை வணங்கி வரவேற்று,
நகருள் அழைத்துச் சென்றனர். அவரது அன்புத் திறத்தையும், பக்தி திறத்தையும்,
அருட் திறத்தையும் எண்ணி விம்மித முற்றனர். இவ்வாறு அன்பர்கள் சூழ்ந்துவர,
வீதிவழியே வலம் வந்த திருநாவுக்கரசர், ஆலயத்த‌ை அடைந்து
திருவீரட்டானேசுவரரைப் பார்த்து, இறைவன் தன்னை ஏழையேன் நான்
பண்டிகழ்ந்தவாறே என்று முடியும் திருத்தாண்டகப் பதிகத்தைப் பாடிப் பரமனைப்
பேணினார்.

வீரட்டானேசுவரரிடம் ஆராக்காதல் கொண்ட நாவுக்கரசர், சில
நாட்கள் அத்திரு நகரிலேயே தங்கி, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபட்டு உழவாரப்
பணி ‌செய்து கொண்டிருந்தார். நாவுக்கரசர், திருவதிகைத் தலத்தில்
எழுந்தருளியிருந்து பரமனைப் பாடிப் பணிவதைக் கேள்வியுற்றான் மன்னன் !
நால்வகைப் படை சூழ, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க திருவதிகையை அடைந்தான் பல்லவ
மன்னன் ! திருமடத்தில தங்கியிருக்கும் நாவுக்கரசர் மலரடியில் வீழ்ந்து
வணங்கி எழுந்தான். பிழை பொருத்தருளப் பிரார்த்திததான். அவரது அருளையும்,
அன்பையும் பெற்றான்; முக்தி நெறியினை உணர்ந்தான். சிவமே உருவெடுத்து
செந்தமிழ்ச் செல்வரின் கருணை உள்ளத்திலே கட்டுண்ட பல்லவன், அன்னையின் அன்பு
அரவணைப்பிலே சிக்கித் தவித்த மழலை போலானான். தனது தவற்றை எல்லாம்
உணர்ந்து, தம் முன்னால் சிவப்பழமாக நிற்கும் பல்லவ மன்னனுக்கு நாவுக்கரசர்,
ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்துத் திருவெண்ணீறு கொடுத்தார். அரசன்
திருவெண்ணீற்றைப் பக்தியோடு பெற்றுக் கொண்டு தனது நெற்றியிலும்,
திருமேனியிலும் பூசிக்கொண்டவாறு, நாவுக்கரசரின் அடிமலரைப் பணிந்தான். சில
நாட்கள் அவரோடு தங்கியிருந்து, மனம் மகிழ்ந்த மன்னன், ஓர்நாள் அவரிடம் விடை
பெற்றுக் கொண்டு பாடலிபுரத்துக்குப் புறப்பட்டான். பாடலிபுரத்தை அடைந்த
மன்னன். முதல் வேலையாக சமணர்களின் பள்ளிகளையும், பாழிகளையும் இடித்துத்
தள்ளினான். திருவதிகையில் குண பாலீசுரம் என்றும் திருக்கோயிலைக் கட்டி, சைவ
சமயத்திற்குச் சிறந்த தொண்டாற்றத் தொடங்கினான். திருநாவுக்கரசர் பல
சிவத்தலங்களைத் தரிசித்து வரும் பொருட்டு, திருவதிகைப் பெருமானை வணங்கித்
தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர்,
திருக்கோவிலூர் போன்றத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் துதித்த
வண்ணம் பெண்ணாடத்தைப் வ்நதணைந்தார். பரம்‌பொருளைப் பாமாலை சாத்திப்
போற்றினார். ஐ‌யனே! எம்மை ஆட்கொண்டு அருளிய அருள் வடிவே ! சமணத்தோடு
சேர்ந்து சில காலம் அவர்களுக்காகவே உழைத்த இந்த ஈன உடம்பு உலகில் உயிர் வாழ
விரும்பவில்லை. அடியேன் உலகில் உமது திருநாமம் போற்றி மகிழ்ந்து வாழ்ந்திட
வேண்டுமென்றால் தேவரீர் திருவுள்ளம் கனிந்து, இந்த ஏழையின் வெண்ணீறு
அணிந்த மேனியிலே, உமது குலச்சினையான சூலத்தையும் இடபத்தையும் பொறித்து
அருள்புரிவீராகுக என்று வேண்டினார் நாவுக்கரசர். பொன்னாற் திருவடிக்
கொன்றுண்டு விண்ணப்பம் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.

திருநாவுக்கரசர்
பதிகம் பாடி முடித்தார். எவரும் அறியா வண்ணம் பூதகணத்தவர் தோள்களில் சூல
முத்திரையையும், இடபமுத்திரையையும் பொறித்து விட்டு அகன்றனர்.
திருநாவுக்கரசர் ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றார். விண்ணவர் மலர்மாறி
பொழிந்தனர். ஆலயத்துள் ம‌றையொலி முழங்கியது. அருள் ஒளி பிறந்தது. அடிகளார்
உய்ந்தேன் எனக்கூறி மகிழ்ந்து தம்மை மறந்த நிலையில், பரமனின் பாத
கமலங்களில் வீழ்ந்தார். அருந்தவசிகளும், அமரர்களும், திருமூர்த்திகளும்
பேõற்றி வணங்கும் வேணியர் பிரானின் மலரடியில் அன்பின் அருள்வடிவமாய்
வீழ்ந்த அண்ணல் அம்மையப்பரின் அருத்திறத்தினை எண்ணிப் பெருமிதமுற்றார்.
அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து முக்காலமும், முக்கண்ணரைப் போற்றிச்
செந்தமிழ்ப் பாமாலை சாத்தி, சிந்தை மகிழ, திருத் தொண்டுகள் பல நடத்தி
வந்தனர். ஒருநாள் அத்திருத்தலத்திலிருந்து புறப்பட்டார். திருவரத்து‌றை,
திருமுதுகுன்றம் போன்ற தலங்களில் எழுந்தருளியிருக்கும் பரமனைப் பாடிய
வண்ணம் தில்லையை அடைந்தார். நாவுக்கரசர், கோபுரத்தைக் கண்டு, கண்களில்
நீர்மல்க, சிவநாமத்தைப் ‌பாடிப் பணிந்தார். சிதம்பரம் தில்லை நடராஜர்
கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜரை தரிசித்தார்.
தி்ல்லைவாழ் அந்தணர்கள் சூழ ஆலயத்துள் எழுந்தருளிய நாவுக்கரசர்,
பேரம்பலத்த‌‌ை வணங்கினார். ஆனந்தத் தாண்டவம் ஆடும் பொன்னம்பலத்தரசரைப்
பேரன்புருகத் தொழுதார். கையுந் தலைமிசை புனையஞ்சலியன எனத் தொடங்கும்
செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடினார். எம்பெருமானின் ஆனந்த வடிவத்தைப்
பார்த்துப் பார்த்து மகிழ்ந்து நின்ற திருநாவுக்கரசருக்கு, பாத
கி்ண்கிணிகள் பரதமாட - அரவமணிந்த அழகிய வெண்ணீறு துலங்கும் மலர்க்கரங்கள்
அபிநயத்தோடு தெரிவது கண்டார், இறைவன் தன்னைப் பார்த்து, என்று வந்தாய் ?
என்று கேட்பது போன்ற குறிப்பைப் புலப்படுத்த நடனம் புரிகின்றாய் என்று
உணர்ந்து கொண்டவராய், கருநட்ட கண்டøன என்னும் விருத்தத்தையும், பத்தனாய்ப்
பாடமாட்‌டேன் என்னும் நேரிசையையும் பாடிப் பணி்ந்தார் திருநாவுக்கரசு !
அத்தலத்தில் சிலகாலம் தங்கியிருந்து உழவாரப்பணி செய்து வந்‌தார்.
எம்பெருமானை வணங்கி பாமாலை பல பாடினார். ஒருநாள் நாவுக்கரசர்
தில்லையைவிட்டுப் புறப்பட்டுத் திருநாரையூர் வந்தார். ‌பொள்ளõப் பிள்ளையாரை
வணங்கினார். அங்கிருந்து புறப்பட்டுச் சீர்காழிப் பதியின் எல்லையை
வந்தடைந்தார். தோணியப்பருக்குத் திருத்தொண்‌டு ‌புரிநதுவரும் ஞான
சம்பந்தர், அன்பர்‌களோடும், அடியார்களோடும் புறப்பட்டுச் சென்று
நாவுக்கரசரை அகமும், முகமும் மலர எதிர்க்கொண்டு அழைத்தார். நாவுக்கரசர்
திருக்கூட்டத்தின் இடையே சென்று அவருடைய மலரடியைப் பணிந்தார்.ஞான
சம்பந்தர், நாவுக்கரசரை தமது தந்தையாரைப் போன்ற தலைமையான சிறப்பு மிக்கவர்
என்பதை உளமாற உணர்ந்து, அப்பரே என்று அழைத்ததும், திருநாவுக்கரசர் அடியேன்
என்று தமது பணிவான அன்பை வெளிப்படுத்தினார். அருட்கடலும், அன்புக்கடலும்
கலந்தாற்போன்று, இணைந்த இவ்விரு ஞானமூர்த்திகளும் அன்பர்கள் புடைசூழ
தோணியப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர். திருக்கோபுரத்தை வழிபட்ட இருவரும்
வானளாவி ஓங்கி நிற்கும் விமானத்தை வலம் வந்து ‌தொழுதனர்.
ஆளுடைப்பிள்ளையார்அப்பரடிகளைப் பார்த்து, அப்பரே! நீவிர் உம்மை
ஆட்கொண்டருளிய எம்பெருமானை இன்பத் தழிழால் பாடுவீராக ! என்று வேண்டினார்.
ஆனந்தக் கடலில் மூழ்கி நின்ற அப்பரடிகள், பார் கொண்டு முடி என்னும்
பைந்தமிழ்ப் பாமாலை சாத்தித் திரு‌த்தோணியப்பரையும்,
பெரியநாயகியம்மை‌யாரையும் பணிந்தார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:19

கலைஞானக் கன்றாகிய ஆளுடைப்பிள்ளையின் விருப்பதிற்கிணங்க அருள்ஞான அரசராகிய
அப்பரடிகளும் சீர்காழியில், ஞானசம்பந்தருடன் சிலகாலம் தங்கி இருந்தார். இரு
சிவநேசர் செல்வர்களும் நாடோறும் எம்பெருமானை வணங்கி, பதிகம் பல பாடிப்
பணிந்து வந்தனர். சீர்காழிப் பதியிலுள்ள மெய்யன்பர்கள் அருள்பெற்ற இந்த
நாயன்மார்களின் செந்தமிழ்த் தேன் சிந்தும் பக்திப் பாடல்களைப் பருகிப்
பெருமிதம் பொங்கினர். சீர்காழி நகரம் விழாக்கோலம் பூண்டது ! ஒரு நாள்
சோழநாட்டிலுள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்து வரவேண்டும் என்று ஆராக்
காதலுடன் இரு ஞானமூர்த்திகளும் சீர்காழியை விட்டுப் புறப்பட்டனர். பல
சிவதலங்களைத் தரிசித்தவாறு திருகோலக்கா என்னும் தலத்தை வந்தடைந்தனர். அங்கு
இருவரும், எம்பெருமானைத் தரிசித்து சிந்தை குளிர்ந்தனர்.
ஆளுடையப்பிள்ளையார் அப்பர் சுவாமிகளிடம் விடைöபற்றுக்கொண்டு
சீர்காழி்க்குத் திரும்பினார். அப்பரடிகள் ‌கோலக்காவிலிருந்து
புறப்பட்டார். கருப்பறியலூர், திருப்புன்கூர், நீடூர், திருக்குறுக்கை,
வீராட்டம், திருநின்றயூர், திருநனிப்பள்ளி வழியாக பல சிவத்தலங்களைத்
தரிசித்தவாறு திருச்சத்தி முற்றத்தை வந்தடைந்தார். உமாதேவியார் போற்றிப்
பணிந்‌த புனிதத்தலமாகிய திருச்சத்தி முற்றத்தில் எழுந்தருளியிருக்கும்
இறைவனை வணங்கி வழிபட்டார். அப்பரடிகள் அவ்வூரில் தங்கியிருந்து
எம்பெருமானுக்கு உழவாரப் பணி‌செய்யத் திருவுள்ளம் பற்றினார். திருச்சத்தி
முற்றத்து பக்தகோடிகள் திருநாவுக்கரசரின் வருகையால் புளங்காகிதம்
அடைந்தனர். நாவுக்கரசர் உழவாரப் பணிபுரிந்து பரமனை வழிபட்டார். ஆன்மீக
அன்பர்களும் அப்பரடியாருக்கு உறுதுணையாக நின்றனர். அப்பரடிகள் எம்பெருமானே!
கூற்றவன் வந்து எனது உயிரைக் கவர்ந்து செல்லுமுன் உமது திருவடி அடையாள்ம்
பதியுமாறு அடியேன் சென்னிமீது வைத்து அருளவேண்டும் என்ற கருத்தமைந்த கோவாய்
முடுகியடுறதில் எனத் தொடங்கி, திருச்சத்தியமுற்ற துறையும் சிவக்கொழுந்தே
என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். அருள்வடிவமாகி எம்பெருமான்,
திருநல்லூருக்கு வா என்று அப்பரடிகளுக்கு அருள்புரிந்தார். அடிகள் ஆனந்தம்
மேலிட அக்கணமே திருச்சத்தி முற்றத்தை விட்டுப் புறப்பட்டார். திருநல்லூர்
என்னும் பழம்பதியை வந்தடைந்தார். நலம் தந்த நாதரை வலம் வந்து வணங்கினார்.
அப்பொழுது கருணைக் கடலாகிய நல்லூர்ப் பெருமானார், திருச்சத்தி முற்றத்தில்
உளம் உருக என்னிடம் வேண்டியதற்கு ஏற்ப உனது எண்ணத்தை முடி்க்கின்றோம் என்று
திருவாய் மலர்ந்து, தமது திருப்பாத மலர்களை அப்பர் சுவாமிகளின் சென்னியின்
மீது சூட்டி அருளினார். எம்பெருமான் கருணைக் கடலில் மூழ்கி கரைகாணாமல்
தத்தளித்துப் போன அப்பரடிகள் நினைத்துருகும் அடியாரை எனத் தொடங்கி
நல்லூர்ப் பெருமானார் நல்லவாரே எனப் பாடினார். அங்கிருந்து புறப்பட்டு
திங்களூர் வந்‌தடைந்த அப்பரடிகள், அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு
எழுந்தருளினார். அங்கு திருவமுது உண்ணப்போகும் தருணத்தில் அபபூதி அடிகளின்
மகன்களுள் மூத்தவன் அரவம் தீண்டி இறந்தான் என்பதறிந்து அவனைத் திருப்பதிகம்
பாடி உயிர் பெற்று எழச் செய்தார் நாவுக்கரசர்.

நாவுக்கரசர் அப்பூதி
அடிகளோடு திங்களூரில் தங்கியிருந்து எம்பெருமானைப் பணிந்து வந்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாவுக்கரசர். திருப்பழனம் வழியாக நல்லூர்,
பழையாறை, வலஞ்சுழி, திருக்குடமுக்கு, திருச்சேறை, திருக்குடவாயில்,
திருநா‌ரையூர், திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளாமர் முதலிய தலங்களைத்
தரிசித்துக்கொண்டே வந்தார். பெருமானை வண்டமிழ்ப் பாமாலை பாடிப்போற்றினார்
நாவுக்கரசர். எண்திசையும் அவரது புகழ் ‌பேச சிவதரிசனம் செய்துகொண்டே
திருவாரூரை வந்தணைந்தார். திருவாரூர்ச் சிவத்தொண்டர்களுகளும், சிவ
அன்பர்களும் அப்பரைக் கோலாகலத்தோடு வணங்கி வரவேற்றார்கள். அடியார்கள் சூழ,
அப்பரடிகள் தேவாசிரிய மண்டபத்தின் முன்சென்று வணங்கிய வண்ணம் கோயில் உள்ளே
செனறார். புற்றிடங் கொண்ட தியாகேசப்பெருமானை அன்போடு துதி செய்து திருத்
தாண்டகம் பாடி அன்போடு துதி செய்து திருத் தாண்டகம் பாடி மகிழ்ந்தார்.
திருவாதிரைத் திருநாளைக் கண்டுகளித்தனர். அப்பரடிகள் அத்தலத்திலேயே
எழுந்தருளியிருந்து தினந்தோறும் தியாகேசப் பெருமானை வழிபட்டு இனிய பக்திப்
பாமாலைகளைச் சாத்திச் சிந்தை குளிர்ந்தார். அடுத்துள்ள வலிவலம்,
கீழ்வேளூர், கன்றாப்பூர் ‌போன்ற திருப்பதிகளுக்கும் சென்று வந்தார்.
திருவாமூர் திருவாதிரைத் திருவிழாவைக் கண்டு களிப்புற்றார். பின்னர்
அங்கிருந்து திருப்புகலூருக்குப் புறப்பட்டார். இத்தருணத்தில் சீர்காழியில்
இருந்து எழுந்தருளிய ஞானசம்பந்தர் பல சிவ தலங்களைத் தரிசித்த வண்ணம்
திருப்புகலூரை வந்தணைந்தார். முருகநாயனார் மடத்தில் தங்கியிருந்து நாடோறும்
ஆலயம் சென்று அரனாரை வணங்கி வழிபட்டு வந்தார் சம்பந்தர். அவ்வமயம்
அப்பரடிகள் தமது அன்பர்களுடன் திருப்புகலூருக்கு வந்து கொண்டிருந்தார்.
இவ்விவரத்தை முன்னதாகவே அறிந்துகொண்ட ஆளுடைப் பிள்ளையார் திருப்புகலூர்த்
தொண்டர்களுடன் அப்பரடிகளை எதிர்கொண்டு வரவேற்று ஆரத்தழுவி மகிழ்ந்தார்.
‌தொண்டர்கள் புடைசூழ இரு ஞான செல்வர்களும் முருகநாயனார் மடத்திற்கு
வந்தனர். முருகநாயனார், பேரானந்தத்துடன் இரு சிவனருட் செல்வர்களையும்
வரவேற்று மடத்துள் எழுந்தருளச் செய்தார்; சிவஞானப் பதிகம் பாடி
மகிழ்ந்தார். ஆளுடைபிள்ளையார் அப்பரடிகளிடம், அப்பரே! திருவாதிரைத்
திருநாளில் நிகழ்ந்த அற்புதங்களையும் புற்றிடங் கொண்ட பெருமானின்
பெருமையையும் ஏற்றமிகும் இன்பத் தமிழால் எடுத்துரைப்பீர் என்று வேண்டினார்.
அம்மொழி கேட்டு அகமகிழ்ந்த அப்பரடிகள் தியாகேசப் பெருமானின் திருக்கோலத்
திருவிழா வைபவத்தை முத்துவிதான மணி்ப பொற்கவரி எனத் தொடங்கும் தண்தமிழ்ப்
பதிகத்தால் நெக்குருக பாடினார். இவ்வற்புதத் திருப்பதிகத்தைச் செவி குளிரக்
‌கேட்டு இன்புற்ற ஆளுடைப் பிள்ளையார், தியாகேசப் பெருமானைத் தரிசிக்க
வேண்டும் என்று அளவிலா ஆசை கொண்டார். சிலநாட்கள் அப்பருடன் முருகநாயனாரின்
மடத்தில் தங்கியிருந்து சம்பந்தர், அப்பரடிகளிடம் விடை பெற்றுக் கொண்டு சிவ
அன்பர்களுடன், திருவாரூருக்குப் புறப்பட்டார்.

அப்பரடிகள்,
புகலூர்ப் பெருமானுக்கு உழவாரப் பணி செய்து மகிழ்ந்து வந்தார்.
திருப்புகலூரில் தங்கியிருந்து திருத்தொண்டுகள் புரிந்து வந்த அப்பரடிகள்,
அடுத்துள்ள திருச்சாத்தமங்கை, திருமருகல் ‌போன்ற சிவத்தலங்களுக்கு
அன்பர்களுடன் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். திருவாரூர் சென்‌றிருந்த
ஆளுடைப் பி‌ள்ளையார் புற்றிடங் கொண்ட பெருமானை வழிபட்டு அன்பர்களுடன்
திருப்புகலூருக்குத் திரும்ப வந்தார். அப்பரடிகள், திருத்தொண்டர்களுடன்
சென்று, எல்லையிலேயே ஆளுடைப் பிள்ளையாரைச் சந்தித்து, எதிர்கொண்டு
வரவேற்றார். இரு ஞானமூர்த்திகளும் திருப்புகலூர்ப் பெருமானை வழிபட்டவாறு
மடத்தில் தங்கியிருந்தனர். சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும்,
முருக நாயனாரும் மடத்திற்கு எழுந்‌தருளினர். இரு திருஞான
மூர்த்தியர்களையும் வணங்கி மகிழ்ந்தனர். அச்சிவனடியார்கள், இரு ஞான
மூர்த்திகள் திருத்தொண்டில் அருட்திறத்தினை வானளாவப் புகழ்ந்து போற்றினர்.
அருள்பெற்ற சிவனருட் தொண்டர்களாடு, முருக நாயனார் திருமடத்தில்
தங்கியிருந்த ஆளுடைப் பிள்ளையாருக்கும், அப்பரடிகளுக்கும்,
சிவயாத்திரைக்குப் புறப்பட வேண்டும் என்ற பெருவிருப்பம் ஏற்பட்டது. அவர்கள்
அனபர்களக அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு திருப்புகலூர்ப் புண்ணியரின்
அருளோடு திருக்கடவூர் என்னும் திருத்தலத்திற்குப் புறப்பட்டனர். இரு
திருவருட் செல்வர்களும் திருக்கடவூரை அடைந்து, காலனை உதைத்த
விமலநாதரைஅமுதத்தமிழால் பாடிப் பணிந்து குங்குலியக் கலயனார் மடத்திற்கு
எழுந்தருளினார். குங்குலியக் கலயனார் எல்லையில்லா மகிழ்வோடு இரு
ஞானமூர்த்தியர்களையும் வழிபட்டு வரவேற்றார். இத்திருநகரில் குங்குலிய
கலியநாயனாருடன் சில நாட்கள் தங்கியிருந்து, திருத்தொண்டுகள் பல புரிந்து
வந்த இரு ஞானமூர்த்திகளும், குங்குலியக்கலய நாயனாரிடம் விடைபெற்க் கொண்டு,
திரு ஆக்கூர் வழியாக தங்கள் சிவயõத்திரையத் தொடங்கினார். போகும் வழியிலேயே
பல புண்ணிய சிவத்தலங்களைத் தரிசித்து, அரவணிந்த அண்ணலை, அழகு தமிழில்
வழிபட்டனர். திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஒருமுறை திருமால் சக்ராயதம் பெருவதற்காக எம்பெருமானை, ஆயிரத்தெட்டு கமல
மலர்களால் வழிபடலானார். எம்பெருமான், அம்மலருள் ஒரு மலர் குறையுமாறு
செய்தருளினார். அதை அறியாத திருமால் ஒவ்வொரு ‌மலர்களாக எடுத்து,
ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்து வந்தார். இறுதியில், ஒரு மலர்
குறைகிறது என்பதை உணர்ந்து உளம் உருகினார். திருமால் வேறு மலர் கொய்து
வருவதற்குள் தாமதம் ஏற்பட்டு, வழிபாடு தடைப்பட்டுவிடும் என்பதை உணர்ந்தார்.
வழிபாட்டை நிறைவோடு முடிக்கக் கருதினார். தமது மலர் கண்களிலே ஒன்றை
எடுத்து அர்ச்சனை செய்வது என்ற முடிவோடு ஒரு விழியைத் தோண்டி எடுக்கத்
துணிந்தபொழுது, எம்பெருமான் எழுந்தருளி அவ‌ரைத் தடுத்தாட் கொண்டார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:20

திருமாலின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருசடைப் பிரான் சக்ராயுதம்
கொடுத்தருளினார். திருமால் விழிகளில் ஒன்றை ‌எடுத்து இறைவனுக்கு
அர்ச்சிக்கத் துணிந்தால் இத்திருத்தலம் திருவீழிமிழலை என்று திருநாமத்தைப்
பெற்றது. இத்திருநகரில் அடியார்களின் கூட்டம் கடல் வெள்ளம் போல் பொங்கி
எழுந்தது. நக்ர்ப்புறம் வநது இரு ஞானமூர்த்திகளையும் எதிர்கொண்டு வணங்கி,
மலர் தூவி வரவேற்றனர் அடியார்கள். அருட்செல்வங்கள் மட்டற்ற மகிழ்ச்சிப்
பெருக்கோடு தொண்டர் குழாத்தோடு கலந்து, மாடவீதி வழியாக விண்விழி
விமானத்தையுடைய கோவிலுள் எழுந்தருளினர். கோயிலை வலம் வந்து திருமுன்
பக்திப் பழமாக நின்ற இரு ஞானமூர்த்திகளும், தமிழ்ப் பதிகத்தால் வீழி அழகரை
ஏற்றித் துதித்தனர். அப்பரடிகள், திருவீழிமிழலையானைச் சேராதார் தீயநெறிக்கே
சேர்கின்றாரே என்ற ஈற்றிடியினைக் கொண்‌ட திருத்தாண்டகப் பதிகம் பாடினார்.
திருவீழிமிழலை அன்பர்கள் இரு சிவன் அடியார்களும் தங்குவதற்குத்
தனித்தனியழகிய திருமடங்களை ஏற்பாடு செய்தனர். இரண்டு மடங்களிலும் ஆண்டவன்
ஆராதனையும் அடியார் துதியாராதனையும் சிறப்பாக நடந்தன. இருவரும்
அத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து
வந்தனர். இந்த சமயத்தில் வானம் பொய்த்தது; மழையின்றி எங்கும் வறட்சி
ஏற்பட்டது. நாடெங்கும் விளைச்சல் இல்லாமற் போனது, மக்கள் தாங்க முடியாத
பஞ்சத்தால் பெரிதும் துயருற்றனர். மக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை எண்ணி
அப்பரும், ஆளுடைப் பிள்ளையும் செய்வதறியாது சிந்தித்தனர். திருவீழிமிழலை
திருசடை அண்ணலைத் தியானித்த வண்ணமாககே இருந்தனர். ஒருநாள் எம்பெருமான், இரு
ஞானமூர்த்திகளுடைய கனவிலும் எழுந்தருளி, உங்களைத் தொழுது வழிபடும்
தொண்டர்களுக்காக உங்களுக்குத் தினந்தோறும் படிக்காசு தருவோம். அதனைக்
கொண்டு அடியார்களின் அவலநிலையை அகற்றுங்கள் என்று திருவாய் மலர்ந்து
மறைந்தார். மறுநாள் எம்பெருமான், கனவி்ல் அருளிச் செய்ததற்கு ஏற்ப, கிழக்கு
பீடத்தில் ஆளுடை பிள்ளையாருக்கும், மேற்கு பீடத்தில் அப்பரடிகளுக்கும்,
‌பொற்காசுகளை வைத்தார். திருஞான சம்பந்தர் அம்பிகையின் ஞானப்பாலுண்ட
திருமகனாரானதால் அவருக்கு வாசியுடன் கூடிய காசும், அப்பரடிகள்
எம்பெருமானிடத்து மெய் வருந்த அருந்தொண்டு ஆற்றிகிறவராதலால் அவருக்கு வாசி
இல்லாத காசும் கிடைக்கப் பெற்றது. இருவரும் படிக்காசுகளைக் கொண்டு
பண்டங்கள் வாங்கி வந்து அடியார்க்கு அமுதளி்க்க வகை செய்தனர். எல்லோரும்
அமுது உண்டு செல்லுங்கள் என்று பறை சாற்றினர். மக்களுக்கு அன்னதானம்
புரிந்து பஞ்சத்தைப் போக்கினர். இவ்விரு சிவனடியார்களின் இருமடங்களிலும்
தினந்தோறும் தொண்டர்கள் அமுதுண்டு மகிழ்ந்த வண்ணமாகவே இருந்தனர். இறைவனின்
திருவருளாலே, மாதம் மும்மாரி பொழிந்தது. நெல்வளம் கொழித்தது. எங்கும்
முன்போல் எல்லா மங்களங்களும் பொங்கிப் பொழிந்தன. இரு சிவ மூர்த்திகளும்,
தங்கள் சிவ தரிசன யாத்திரையைத் தொடங்கினர். திருவாஞ்சியம் முதலிய
சிவத்தலங்களை வழிபட்ட வண்ணம் வேதாரணியம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு
என்னும் தலத்தை வந்தணைந்தார்.

ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும்
ஆலயத்திற்கு வந்தனர். கோயிலில் கதவுகள் அடைககப்பட்டிருந்தன. அதுகண்டு
வியப்பு மேலிட்ட இரு ஞானமூர்‌த்திகளும் அன்பர்களிடம் கதவுகள்
அடைக்கப்பட்டிருப்பதின் காரணத்தை வினவினர். அச்சிவ அன்பர்கள், இருவரையும்
தொழுது வணங்கியவாறு விவரத்தை விளக்கினர். சுவாமி! ஆதிகாலத்தில்,
இத்திருமறைக் காட்டில் எழுந்தருளியுள்ள பெருமானை வழிபட்ட மøறகள், கதவைக்
காப்பிட்டுச் சென்றனர். அன்று முதல் இன்று வரைக் கதவு திறக்கப்படாமலே
இருந்து வருகிறது. வாயிலைத் திறக்க வல்லார் ஒருவரும் வராமையால், நாங்கள்
மற்றொரு வாயில் வழியாக அரனாரை வழிபாடு செய்து வருகின்றோம். அன்பர்கள்
மொழிந்ததைக் கேட்டு இரு ஞான மூர்ததிகளும் எப்படியும் கதவுகளைத் திறத்தல்
வேண்டும் என்று எண்ணினார். ஆளுடைப் பிள்ளையார், அப்பரடிகளைப் பார்த்து,
அன்பரே! மறைகள் வழிபட்ட வேணிபிரானை நாம் எப்படியும் இந்த நேர்வாயிலின்
வழியே சென்று தரிசித்து வழிபடுதல் வேண்டும். எனவ‌ே திருமுன் காப்பிட்ட
கதவும் திறக்கும்படி திருப்பதிக்ம் பாடி அருள்வீராக! என்று ‌கேட்டுக்
கொண்டார். ஆளுடைப்பிள்ளையாரின் அன்புக் கட்டளையக் கேட்டு், அகமகிழ்ந்த
நாவுக்கரசர் இறைவனைத் தியானித்த வண்ணம், பண்ணின் நேர்மொழியாள் எனத்
தொடங்கும் பதிகத்தைப் பாடினார். இருந்தும் கதவம திறக்கத் தாமதமாவதைக் கண்டு
இறக்க மொன்றிவிர் என்று திருக்கடைக் காப்பிலே பாடினார். இங்ஙனம்
திருநாவுக்கரசர் மெய்யுருகப் பாடிமுடித்த அளவில் மறைக்காட்டு மணிகண்டப்
பெருமானின் திருவருளால் மணிக் கதவம் தாள் நீங்கியது. திருக்கதவும
திறக்கப்பட்டது. அப்பரடிகளும்,ஆளுடைப் பிள்ளையும் அகமும், முகமும்
மலர்ந்தனர். அன்பரகளும், அடியார்களும், சிவநாமத்தை விண்ணெட்ட முழக்கினர்.
இரு ஞானமூர்த்திகளும் மற்ற சில அன்பர்களோடு. ஆலயத்திற்குள் சென்றனர்.
வேதவனப் பெருமானின் ஆலயத்திற்குள் சென்றனர். வேதவனப் பெருமானின் தோற்றப்
பொலிவைக்கண்டு மருள்கொண்டு நின்றனர், அழகு தமிழால் வழிபட்ட இரு
ஞானமூர்த்திகளும் புறத்தே வந்தார்கள். அப்பரடிகள், இம மணிக்கதவம்
அடைக்குமாறு நீரும் பாடியருள்க என்று ஆளுடையப் பிள்ளையாரிடம் வேண்டிக்
கொண்டார். அம்பிகையின் ஞானப்பாலுண்ட சிவக் கொழந்து பாடினார்.
திருப்பதிகத்தில், முதற்காட்டிலேயே திண்ணிய கதவம் தானே மூடிக்கொண்டது.
அன்று முதல் ஆலயத்தின் மணி கதவுகள் தானாகவே திறக்கவும், மூடவும்
ஏற்றாற்போல் அமைந்தது. இத்தயை மகிழ்ச்சிப் பெருக்கில் அனைவரும் இருஞானச்
செல்வர்களையும் மலர் தூவிக் கொண்டாடினர். அத்திருத்தொண்டர்கள் புடைசூழ
மடத்திற்குப் புறப்பட்டனர். மொழிக்கு முதல்வராகிய நாவுக்கரசர் மடத்தில் ஒரு
புறத்தே படுத்துக்கொண்டார். அவருக்கு உறக்கம் வரவில்லை. மனதில் எழுந்த ஒரு
சிறு கலக்கம் அவரை அளவு கடந்து குழப்பிக் கொண்டிருந்தது.

முதலில்
வாயில் காப்பு நீங்குவதற்கு அடியேன் இரு தடவைகள் முயன்று பாடிய பின்னரே
திறந்தது. ஆனால் ஞானசம்பந்தர் காப்பு மூடுவதற்குப் பாடத் தொடங்கியபொழுதே
கதவும் அடைபட்டு விட்டது. அது ஏன் ? நான் பாடியவுடன் மட்டும் கதவம் ஏன்
திறக்கவில்லை ? எம்பெருமானுடைய திருவுள்ளக் கிடக்கை யாதோ என்பதை இந்த
அடியேன் அறி‌ய இயலாது போனேனே ! என்ற எண்ணம் நாவுக்கரசரின் நித்திரையைக்
கெடுத்தது. கண்களை மூடிக்கொண்டு சிவசிந்தையில் ஒருவாறு கண் அயர்ந்தார்.
இறைவன் அவரது கனவில் எழு்ந்தருளினார் ! வாகீசா ! நாம் திருவாய்மூரில்
இருப்போம். அங்கு நீ எம்மைத் தொடர்ந்து வருவாயாக ! என்று எம்பெருமான்
அருள்வாக்கு மலர்ந்தருளினார். அப்பரடிகள் உறக்கம் கலைந்து எழுந்தார்.
எம்பெருமானைப் பணிந்து, எங்கே என்னை இருந்திடத் தேடிக்கொண்டு எனத்
தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார் அப்பரடிகள். அந்த இரவிலேய திருவாய்மூர்
புறப்பட எண்ணினார். அந்த நள்ளிரவு வேளையில் சம்பந்தரின் நித்திரை‌யைக்
கெடுக்க விரும்பவில்லை நாவுக்கரசர். மடத்திலுள்ள சில அடிகளாரிடம் மட்டும்
கூறிவிட்டு புறப்பட்டார். எம்பெருமான், அந்தணர் கோலத்துடன் அடியார்
முன்னால் சென்று கொண்டிருந்தார். எம்பெருமானுக்கு பின்னால் அப்பரடிகள்
அதிவேகமாக நடக்கலானார் நிறைந்த அமுதம் கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாதது
போல், தம்மால் முயன்றவரை முழு வேகத்தடன் விரைந்து சென்றும் அவரால்
எம்பெருமானை நெருங்க முடியவில்லை ! இத்தருணத்தில் எம்பெருமானின்
திருவருளால் இமைமூடித் திறப்பதற்குள் இவர்கள் செல்லும் பாதையில்
ஒருமருங்கில், பொன்மயமான திருக்கோயில் ஒன்று எழுந்தது. எம்பெருமானும்,
அதனுள் மறைந்தார். அப்பரடிகள் அப்‌பொன் வண்ணக் கோயிலுள் விரைந்து சென்றார்.
அங்கே பெருமாளைக் காணாது கண்களில் நீர் மல்க நின்றார். அங்கே‌யே
துயினறார். மறுநாள் ஞானசம்பந்தர் அப்பரடிகள் இறைவன் அருளியதற்கு ஏற்ப
திருவாய்மூர் சென்றுள்ளார் என்று விவரத்தை கேள்விப்பட்டு அக்கணமே
அன்பர்களுடன் திருவாய்மூருக்கு விரைந்தார். திருவாய்மூரில், எம்பெருமானால்
அருளப்பட்ட பொன்வண்ணக் கேõயிலை வந்‌தணைந்தார். ஞானசம்பந்தர் ! அப்பரடிகளைக்
கண்டு அப்பரே! என்றார். ஞானசம்ப்ந்தர் குரல் கேட்டுச் சற்று மனக் கலக்கம்
நீங்கி அகமகிழ்ந்த அப்பரடிகள் அவரை வணங்கி வரவேற்றார். எம்பெருமானிடம் குறை
ப்கர்ந்தார். ஐயனே ! என்னை இங்கு அ‌ழைத்து வ்ந்து உமது அருள் ‌தோற்றத்தைக்
காட்டாமல் மறைத்து விட்டீரே ! வேதாரண்யத்திலும் பெருமான் எனை சோதித்தீர் !
எளி‌யவன் மீது ஐயனின் கருணை இம்மட்டும்தானா ? உமது அன்புத் தொண்டர்
திருஞான சம்பந்தரே பதிகம் பாடிக் காப்பு நீங்கச் செய்ய வேண்டும் என்ற உமது
திருவுள்ளத்தினை உணராமல் நான் பதிகம் பாடி காப்பு நீங்கச் செய்த கதவைத்
திறப்பித்தது அடியேன் செய்த பிழைதான். அதற்காக இக்கோயிலுள் மாயமாய்
ஒளிந்துக் கொண்டிருப்பது சரிதானா!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:20

எம்பெருமானே! திருத்தொண்டின் ஒப்பற்ற திறத்தினால் முதற்பாட்டிலேயே கதவை
அடைக்கச் செய்த அளுடைப் பிள்ளையார் இங்கு எழுந்தருளியுள்ளார். ஐயன்
அவருக்குக் கட்சியளிக்காமல் இவ்வாறு மறைநது கொள்வதும் முறையோ ? என்று
வேண்டினார் அப்பரடிகள். இவ்வாறு அப்பரடிகள் உள்ளம் உருக இறைஞ்சி நின்றதும்,
பிறையணிந்த வேணியப்பிரான், ஆளுடைப் பிள‌்ளைக்குக் காட்சி
அளித்தார்.ஞானசம்பந்தர், அக்காட்சியைக் கண்டு பரமனைப் பணிந்தவாறு
அப்பரிடம், அப்பரே! ஐயனைப் பாரும் என்று கூறினார். அம்பலவாணரின் ஆனந்தத்
‌தோற்றத்தைக் கண்டு பேரின்பம் பூண்ட அப்பரடிகள், இறைவனின் பாதக்கமலங்களைப்
பணிந்து எழுந்து, பாவ வடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் தமிழ்ப்
பாமாலையால் பூமாலை சாத்தி புளகாங்கிதம் அடைந்தார். அவரது பாமாலைய
ஏற்றுக்கொண்ட கயிலையரசர் மறைந்தருளினார்.இரு ஞான மூர்த்திகளின் பக்தியின்
வலிமையைக் கண்டு, சூழ்ந்திருந்த அன்பர்கள் ஆராவாரித்தனர். இருவரும்
அன்பர்களுடன், திருவாய்மூரில் சில காலம் தங்கியிருந்து பெருமானுக்குத்
திருத்தொண்டு புரிந்தனர். பின்னர் அன்பர்களுடன திருவாய்மூரை நீத்து
திருமறைக் காட்டிற்கு திரும்பி வந்தனர்.வேதவனப் பெருமா‌ன் வழிபட்டு இரு
சிவனருட் செல்வர்களும் தத்தம் மடத்திற்குச் சென்றனர். இவ்விரு ஞான
சீலர்களும் திருமறைக் காட்டில் தங்கியிருந்த நாளில், ஆளுடைப் பிளளையாரைப்
பார்க்க மதுரையிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் சுவாமிகளை வணங்கி
பாண்டியமாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும், சமணத்தில் வளர்ச்சியைத்
தடுத்து சைவத்தை உய்விக்கும் பொருட்டு மதுரைக்கு எழுந்தருள வேண்டும் !என்று
கேட்டுக் கொண்டதாக விண்ணப்பித்தனர். ஆளுடைப் பிள்ளையாரும் அவர்களிடம்,
விரையில் வருவோம் என்று செய்த‌ி சொல்லி அனுப்பி வைத்தார்.ஆளுடைப்
பிள்ளையார் பாண்டிய நாடு பேõகத் தீர்மானித்தார் என்பதைக் கேள்வியுற்ற
அப்பரடிகள் அவரது திருமடத்திற்கு விரைந்து வந்து அவரைப் பாண்டியநாடு
போகாதவாறு தடுக்க எண்ணினார். அப்பரடிகள் அன்பு மேலிட, ஆளுடைப்
பிள்ளையாரிடம், மாசு படிந்த உடலும், தூசி படிந்த கொள்கையும் கொண்டு வாழும்
வஞ்சக நெஞ்சம் கொண்ட மாயையில் வல்ல சமணர்களை ஒழிக்க, தூய்மையும்,
வாய்மையும் மிக்கத் தாங்கள் செல்வது ந்‌ன்றன்று. அக்கொடியவர்கள் எனக்கு
இழைத்த ‌கொடுமைகள் கணக்கிலடங்கா. தேவரீர் ! அங்கு செல்ல வேண்டாம். அடியேன்
ஒருபோதும் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று மொழிந்தார். அப்பரே! திருசடை
அண்ணலையும், திருத்தொண்டர்களையும் ‌திருவெண்ணீ‌ற்றையும் பேõற்றுகின்ற
ஆற்றல் மிக்கவர்கள் பாண்டியமாதேவியும், அமைச்சரும் ! அவர்கள் அழைப்பிற்கு
இணங்கி, நேரில் ‌செல்வதால் எனக்கு எவராலும் எவ்வித இடர்பாடும் ஏற்படாது !
சமணத்தை நம்பி அதர்மத்தில் உழலும் பாண்டிய மன்னனைக் கொண்டே அச்சமணர்களின்
செருக்கை அடக்குவேன். சைவத் தவ நெறியினைப் பாண்டிய நாட்டில்
நிலைநாட்டுவேன். அதுவரைத் தாங்கள் இத்தலத்திலேயே இருங்கள். எப்படியும்
பாண்டியநாட்டைச் சூழ்ந்துள்ள பிற சமய இருளை நீக்கி சைவத் திருவிளக்கை ஏற்றி
வெற்றிவாகை சூடி வருகிறேன் ! என்றார். அப்பரடிகளும் மறுமொழி பேசாது வி‌டை
கெடுத்தார். வேதவனப் பெருமாளை வணங்கி வழிபட்டு, ஆளுடைப் பிள்ளையார்
மதுரைக்குப் புறப்பட்டார். அதன் பின்னர், அப்பரடிகள் மட்டும்,
திருமறைக்காட்டில் எழுந்தருளியிருந்து, வேதவனப் பெருமானுக்கு நாடோறும்
திருப்பணிகள் செய்து வந்தார்.

ஒருநாள் அப்பரடிகள்,
அத்தலத்திலிருந்து புறப்பட்டு நாகைக் காரோணம், திருவீழிமிழலை, திருவாடுதுறை
வழியாக திருப்பழையாறை என்னும் பழம்பெரும் பதியை வந்தணைந்தார். வடதளி
என்னும் பெயர் பெற்ற பழையாறை அடுத்துள்ள கோயிலில் சிவலிங்கப் பெருமானைச்
சமணர்கள் தங்கள் சூழ்ச்சியால் மறைத்து சமணக் கோவிலாக மாற்றியிருந்தனர்.
இச்செய்தியை அவ்வூரிலுள்ள சிவ அன்பர்கள் வாயிலாகக் கூறக்கேட்ட அப்பரடிகள்
அளவிலா வேதனை கொண்டார். மனம் பொறாது உளம் நொநது வருந்தினார். அப்பரடிகள்
அக்கோயிலின் தெய்வ சந்நிதானத்தின அருகில் ஓர் இடத்திலமர்ந்து
எம்பெருமானுடை‌ய பாதகமலங்களை மனதில் தியானித்தவராய், பித்தா! பிறைசூடிப்
பெருமானே ; அருளாளா! இளம் பிறையணிந்துஐ விடையேறுமு் பெருமானே ! சமணர்களின்
சூழ்ச்சியை அழித்து தேவரீருடைய திருவுருவத்தை வடதளி விமானத்தில் காட்டி
அருளினாலன்றி, இவ்விடத்தை விட்டு நான் ஒரு அடிகூட எடுத்து வைக்கமாட்டேன்
என்று தமது கருத்தை உறுதியிட்டுப் பரமனுக்கு உணர்த்தியவாறு தியானத்தில்
அமர்ந்தார். அன்றிரவு கொன்றை மலர் அணிந்த மாதொரு பாகர், சோழ அரசருடை கனவில்
எழுந்தருளினார். அறிவில்லாத சமணர்கள் சிவ அன்பர்களுக்கு அடுக்கடுக்காக
இன்னல் அளிப்பதோடு, நம்முடைய வடதளி விமானக் கோயிலை ம‌றைத்து எமது மேனியை
மண்ணுக்குள் மறைந்து வைத்துள்ளனர். இப்‌பொழுது எமது அன்பு பக்தன் -
நாவுக்கரசன் எம்மைத் தரிசித்து வழிபடக் காத்துக் ‌கிடக்கிறான். நாவுக்கரசன்
கருத்தை நிறைவேற்றுவாயாக! கண்ணுதற் கடவுள் சோழ வேந்தனுக்கு, சமணர்கள் தம்
திருமேனியை மறைத்து வைத்திருக்கும் இடத்தின் அடையாளங்களையும் விளக்கி அருளி
மறைந்தார். சோழ மன்னர் கனவு தெளிந்து எழுந்தார். அமைச்சர்களுடனும் ,
வீரர்களுடனும் வடதளி ஆலயத்தை வந்தடைந்தார். எம்பெருமான் அருளிய
அடையாளத்தைக் கொண்டு சிவலிங்கப் பெருமானைக் கண்டு எடுத்தார். பின்னர்
அரசர், வெளியே தியானத்தில் இருக்கும் அப்பரடிகளின் திருவடிகளை வணங்கி
சிவலிங்கப் பெருமானை, சமணர்கள் மறைந்த இடத்திலிருந்து வெளிப்படுத்திக்
கெõண்டு வந்துள்ளோம் என்றார் திருநாவுக்கரசர் பேரின்பம் பூண்டார். சோழப்
பேரரசன் வாழ்த்தினார். திருநாவுக்கரசர் அன்பர்களுடன் ஆலயத்துள் சென்று
வடதளி அண்ணலப் பணிந்து அகமகிழ்ந்தார். சோழ வேந்தன் சிவபெருமானுக்கு
வடதளியில் விமானம் அளமத்து நல்லோரையில் பெருவிழா நடத்தி சிவலிஙகப் பெருமானை
பிரதிஷ்டை செய்தார். வடதளிநாதர் ‌கோயிலில் மீண்டும் முன்போல் நித்திய
நைமித்தியங்கள் சிறப்பாக நடந்தேற எல்லா ஏற்பாடுகளையும செய்தார். ஆலய
வழிபாட்டிற்கு ஏராளமான் நிலபுலன்களை அளித்தார் மன்னர். இவ்வாறு நாடு போற்ற
நற்பணி செய்த மன்னர், முதற் காரியமாக சமணர்களை யானைகளால் கொல்லச் செய்தார்.
சிவ மதத்தை ஓங்கச் செய்தார், அப்பரடிகள், வடதளியில் எழுந்தருளியிருக்கும்
சிவலிங்கப் பெருமானைப் பணிந்து பதிகங்கள் பாடினார். அங்கிருந்து புறப்பட்டு
காவிரிக்கு இருமருங்கிலுமுள்ள சிவத்தலங்களை தரிசித்துத் தமிழ்மாலை சாத்திய
வண்ணம் திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி,
திருக்கற்குடி, திருப்பாத்துறை வழியாக, திருப்பைஞ்ஞீலியை நோக்கிப்
புறப்பட்டார் அப்பரடிகள். நாட்க‌ணக்காக நடந்த காரணத்தால் அப்பரடிகளுக்கு
களைப்பு ஏற்பட்டது. பசியும், தாகமும் மேலிட்டது ; சோர்வினால் உடல்
வருத்தியது. இருந்தும் அத்திருஞான சீலர் உள்ளம் கலங்காது உடல் சேர்வையும்
எண்ணிப்பாராது திருப்பைஞ்ஞீலிப் பெருமானை தியானித்தபடியே வழிநடந்தார்.
அப்போது எம்பெருமான் தமது தொண்டரின் வேதனையைப் போக்கத் திருவுள்ளம்
கொண்டார். திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் குளிர்நீர்ப் பொய்கையயையும்,
எழில்மிகு‌ சோலையையும் உருவாக்கினார். அத்தோடு அந்தணர் கோலத்தில் கையில்
பொதி÷சாறுடன் அப்பரடிகள் வரும் வழியில் அவரை எதிர்பார்த்து வீற்றிருந்தார்.
சற்று நேரத்தில் அப்பரும் அவ்வழியே வந்து சேர்ந்தார்.

எம்பெருமான்
அப்பரடிகளுக்குப் பொதி சோறு கொடுத்தார். அப்பரடிகள் பொதி சோற்றை உண்டு
அருகிலுள்ள குளத்தில் குளிர்ந்த நீரைப்பருகி தளர்வு நீங்கப் பெற்றார்.
அந்தணர்க்குத் தமது நன்றியை தெரிவித்தார். எம்பெருமான், அன்பரே! நீர் எங்கே
செல்கின்றீர்கள் ? என்று கேட்டார். சுவாமி ! அடியேன் திருப்பைஞ்ஞீலியில்
எழுந்தருளியிருக்கும் திருசடைப் பெருமானை தரிசிக்கப் போய்க்
கொண்டிருக்கிறேன். அன்பரே நன்று. நானும் அத்திருக் கோயிலுக்குத் தான்
போகிறேன். என்று கூறினார். அவரையும் அழைத்து்க்கொண்டு திருப்பைஞ்ஞீலிக்குப்
புறப்பட்டார். இருவரும் ஆலயத்தை வந்தடைந்தனர். அந்தணர் வடிவில்
எழுந்தருளிய நீலகண்டப் பெருமான் மாயமாக மறைந்தார், அநதணர் வடிவில், தம்மோடு
எழுந்தருளியது எம்பெருமான் என்பதை உணர்ந்த அப்பர் எல்லையில்லா பரமனைப்
போற்றிப் பணிந்தார். அங்கிருந்து புறப்பட்டு, வடதிசையிலுள்ள திருவண்ணாமலை
போன்ற பல சிவத்தலங்களை வழிபட்ட வண்ணம் தொண்டை நன்னாட்டுப் பதிகளைத்
தரிசிக்க வேண்டும் என்ற பெரு விருப்பத்துடன் திருவேõத்துரை அடைந்தார்
அப்பரடிகளார். அங்கு எழுந்தருளியிருக்கும் வேதம் ஓதும் பெருமானைக் கண்டு
களித்துப் பாடிப் புளங்காகிதமடைந்தார். சிறிது காலம் அத்திருத்தலத்தில்
தங்கியிருந்து உழவாரப் பணிபுரிந்து வந்தார். ஒருநாள் விடையேரும்
பெருமானிடம் வி‌டை பெற்றுக் கொண்டு காஞ்சிபுரத்தை வந்‌தணைந்தார். காஞ்சி
மாநகரத்து அன்பர்களும், சிவதொண்டர்களும் நாவுக்கரசரை எல்லையிலே எதிர்கொண்டு
வணங்கி வரவேற்றனர். ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
அப்பரடிகள், தழிழ்ப்பதிகம் சாத்தி ஏகாம்பரேசுவரளர வழிபட்டார். அங்கு சில
நாட்கள் தங்கியிருந்து அடுத்துள்ள பல சிவத்தலங்களைத் தரிசிதது வந்தார்
அப்பரடிகள். ஏகாம்பரநாரைப் பிரிய மனமில்லாமல் பக்தி மயக்கத்தில்
மூழ்கினார். ஒரு நாள் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.
திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவொற்றியூர்,
திருப்பாச்சூர், திருவாலங்காடு, திருக்காரிகை வழியாகத் திருக்காளத்திமலையை
அணுகினார் அப்பர். திருக்காளத்தியப்பரையும், திருக்காளத்தியப்பரின்
வலப்பக்கத்தில் வில்லேந்தி நிற்கும் அருள் வல்லவர் கண்ணப்ப நாயனாரது
திருச்‌சேவ‌டிகளையும் வணங்கி வண்ணத் தமிழ்ப் பாமாலையால் அர்ச்சனை செய்தார்.
சில நாட்கள் அத்திருமலையில் தங்கியிருந்து புறப்பட்ட அப்பரடிகள்,
திருப்பருபதம் என்னும் ஸ்ரீ சைலத்தை வந்தணைந்தார். இத்திருத்தலத்தில்
நந்தியெம்பெருமான், எம்பெருமானைத் தவஞ்செய்து வரம் பெற்று இம்மலை வடிவமாக
எழுந்தருளி எம்பெருமானைத் தாங்குகிறார் என்பது புராண வரலாறு. தேவர்களும்,
சித்தர்களும், கின்னரர்களும், நாகர்களும், இயக்கர்களும், விஞ்சையர்களும்,
சிவமுனிவர்களும், தினந்தோறும் போற்றி மகிழ்நது வணங்கி வழிபடும்
மல்லிகார்ச்சுனரை உளம் குளிரக் கண்டு பக்திப் பாமாலை சாத்தி வழிபட்டார்
அப்பரடிகள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, தெலுங்கு நாடு, மாளவதேசம்,
‌மத்தியப் பிரதேசம் முதலியவற்றைக் கடந்து காசியை வந்தடைந்‌தார் நாவுக்கரசர்
! அத்திரு நகரிலுள்ள தொண்டர்கள், அப்பரடிகளை வணங்கி மகிழ்ந்தனர். அவரோடு
தலயாத்திரைக்குப் புறப்பட எண்ணினார். அப்பரடிகள் தடங்கண்ணித் தாயாரையும்,
விசுவ லிங்கத்தையும் போற்றி தமிழ்ப் பதிகம் பாடியருளினார். அப்பரடிகள்
தம்முடன் வந்த அன்பர்களை விட்டு விட்டு திருக்கயிலாய மலைக்குப்
புறப்பட்டார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:21

அடர்ந்த காடுகளையும், உயர்ந்த மலைகளையும், காட்டாறுகளையும் க‌டந்து,
கங்கைவேணியர் ம‌ீது தாம் கொண்டுள்ள அரும்பெருங் காதலுடன் தன்னந்தனியாக
வழிநடக்கலானார் அப்பரடிகள். அவர் சிந்தை அனைத்தும் சிவநாமத்தைப் பற்றிய
தாகவே இருந்தது. காய், கனி, கிழங்கு, குலை முதலியவற்றை உண்பதையும் அறவே
நிறுத்திவிட்டார்! இரவென்றும், பகலென்றும் பாராமல் பரமன் மீது ஆறாக் காதல்
பூண்டு நடந்து செல்லலானார். அத்திருவருட் செல்வரது பட்டுப் பாதங்கள் தேயத்
தொடங்கின. இரவு வேளையில் காடுகளில் காணும் கொடிய விலங்குகள் அவருக்கு
எவ்வித துண்பத்தையும் கொடுக்காமல் அஞ்சி நடுங்கி ஒளிந்தன. நல்ல பாம்புகள்
படமெடுத்து அதனது பணாமகுடத்துள்ள நாகமணிகளால் அவருக்கு விளக்கெடுத்தன.
இவ்வாறு அப்பரடிகள் நடந்து கொண்டே பாலை வனத்தைக் கடக்கும் நிலைக்கும்
வந்தார். கதிரவனின் கொடிய வெப்பத்தால், பாலைவனத்தில் நடந்த அவரது
திருவடிகள் பரடுவரையும் தேய்ந்தன. கால்கள் தேய்ந்து ரத்தம் சொட்ட
‌தொடங்கின. அதைப் பற்றியும் சறறும் வருந்தாமல் திருக்கைகளை ஊன்றி தத்தித்
தத்தித் ‌சென்றார். அதனால் கரங்களும் மணிக்கட்டுவரைத் தேய்ந்தன.
அப்‌பொழுதும் அயர்ந்து விடாத அப்பரடிகள் மார்பினால் தவழ்ந்து சென்றார்.
சற்று தூரம் சென்றதும், மார்பும் தேய்ந்து குருதி பொங்க, சதைப்பற்று அற்று
எலும்புகள் முறிந்தன. அப்பரடிகள் எதைப் பற்றியும் வருத்தப்படாமல் கயிலை
அரசரின் சிந்தையிலே உடல் தசைகள் கெட, உடம்பை உருட்டிக் கொண்‌‌டே சென்றார்.
இவ்வாறு புற உறுப்புக்கள் எல்லாம் உபயோகமற்றுப் போனதும், அப்பரடிகள்
செய்வதறியாது நிலத்தில் வீழ்ந்தார். அப்பரடிகள் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு
அருகே ஓர் அழகிய தாமரைத் தடாகத்தைத் தோற்றுவித்தருளிய பரமன், ஓர் தவசி
வடிவம் கொண்டு அப்பர் எதிரில் தோன்றினார். விழிகளை மூடியவாறு சயனித்திருந்த
அப்பரடிகள் கண்னைத் திறந்துப் பார்த்தபோது தம்மைச் சுற்றித் தடாகமும்,
அத்தடாகத்தருகே அருந்தவசியும் இருக்கக் கண்டு வியந்தார். அப்பொழுது
அத்தவசி, அன்பரே! உள்ளம் உருக உடல் தேய்ந்து, சிதைந்து, அழிந்து
போகுமளவிற்கு இந்தக் கொடிய கானகத்தில் இப்படித் துயறுருவது ‌யாது கருதி ?
எனக் கேட்டார். அத்தவசியின் கோலத்தைக் கண்டு அவரது பாதங்களைப் ‌பணிந்தார்.
கண்களிலே நீர் மல்க, சுவாமி ! மலைமகளுடன் கயிலையில் எழுந்தருளி யிருக்கும்
எம்பெருமானைத் தரிசித்து வழிபட ஆறாக்காதல் கொண்டேன். ஆளும் நாயகனைக்
கண்டுகளிக்காதவரை, என் வாழ்வு முற்றுப் பெறாது. பிறவித் துன்பத்தில்
நின்றும் நான் விடுவிட, பிறையணிந்த பெருமானைக் கயிலைக்குச் சென்று
எப்படியாகிலும் பேõற்றி÷ய தீருவேன். என்று மிகுந்த சிரமத்துடன் அப்பரடிகள்
பதிலுரைத்தார். அது கேட்ட அத்தவசி புன்னகை முகத்தில் மலர, அப்பனே !
‌பாம்பணிந்த பரமேசுரர் பார்வதியுடன் வீற்றிருக்கும் கயிலைமலையை மானுடர்
சென்று காண்பது என்பது ஆகாத காரியம் அப்படியிருக்க இறைவன் தரிசனம் உனக்கு
மட்டும் எப்படியப்பா கிட்டும் ? எதற்கப்பட இந்த வீண் முயற்‌‌‌சி ?
‌‌‌தேவர்களுக்கும் அது அரிது. கயிலையையாவது நீ காண்பதாவது? பேசாமல் வந்த
வழியே திரும்ப போவதே தக்கச்செயல். இல்லையேல் கயிலைக்குப் போவதற்குள் உன்
உடல்தான் அழியும்.

சுவாமி! அழியப் போகும் இந்த உடலுக்காக அஞசேன்.
கயிலைமலை பூமியில் எழுந்தருளியிருக்கும் என் அப்பனின் ஆனந்த தாண்டவத்தை
கண்டு களித்த பின்னரன்றி நான் மீளேன். இந்தப் பொய்யான மெய்யுடம்பை
ஒருபோதும் திரும்பச் சுமந்து செல்லேன். தவசியாக வந்த பெருமான் மறைந்தார்.
நாவுக்கரசர் வியப்புற்றார். ஓங்கு புகழ் நாவுக்கரசனே ! எழுந்திரு என்ற
இறைவனின் அருள்வாக்கி ஒலித்தது. அப்பரடிகள், பூரித்தார். அவரது தேய்ந்து
அழிந்த உறுப்புக்கள் எல்லாம் முன்போல் வளர்ந்து பிரகாசித்தது. அவர் உடல்
வன்மை பெற்று எழுந்தார். நிலமதில் வீழ்ந்து வணங்கினார். சிவ சிவ
சுந்தரதேவனே! அருட்கடல் அண்ணலே! அடியேனைக் காத்த ஐ‌யனே! ஆடுகின்ற அரசனே!
மண்ணிலே தோன்றி விண்ணிலே மறைந்தருளி அற்புதம் புரிந்த தேவநாயகனே! தேவரீர்
திருக்கயிலைமலை மீதில் எழுந்தருளியிருக்கும் திருக்‌கோலத்தைக் கண்டு வழிபட
இந்த அடியேனுக்கு அருள்வீர் ! இறைவன் அசரீரியாக அப்பரடிகளுக்கு, அன்ப!
இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்திருப்பாயாக ! அங்கு
திருக்கயிலையில் நாம் வீற்றிருக்கும் காட்சியைக் காட்டியருளுவேன் என்று
மொழிந்தருளினார். அம்பலத்தரசனின் ஆணையைச் சிரமேற்கொண்டு சிந்தை குளிர்ந்த
அப்பரடிகள் செந்தமிழ்ப் பதிகத்தால் செஞ்சடை அண்ணலைப் போற்றிப் பணிந்தவாறு
தூய தடாகத்தில் மூழ்கினார். பிறையணிந்த பெருமானின் பெருமையை யாரே
அறியவல்லார் ? அத்தடாகத்தில் மூழ்கிய அப்பர் பெருமான் திருவையாறு
ப‌ொற்றாமரைக் குளத்தில் தோன்றிக் கரையேறினார். அப்பரடிகள் இறைவனின் அருளை
எண்ணி எண்ணி கண்ணீர் மல்கி கரைந்துருகினார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர்.
அவரது பொன் திருமேனியிலும், நெற்றியிலும், ‌தெய்வீகப் பேரொளி பால்
வெண்ணீறு போல் பிரகாசித்தது. சிரம் மீது கரம் உயர்த்தியவாறு நீரிலிருந்து
கரையேறினார் அப்பரடிகள் ! கோயிலை அடைந்தார். பூங்கோயில் கயிலைப் பனிமலை
போல் காட்சி அளித்தது. எம்பெருமான் அப்பர் அடிகளுக்கு சக்தி சமேதராய் நவமணி
பீடத்தில காட்சி கொடுத்தார். அப்பரடிகள், சிவானந்தச் சமுத்திரத்தைக்
கண்கள் என்னும் திருக்கரங்களால் அள்ளி அள்ளி்ப பருகினார். வீழ்ந்து பணிந்து
எழுந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார்; சிவக் கடலில் மூழ்கி திளைத்தார்.
அப்பரடிகள், திருத்தாண்டகப் பதிகங்களைப் பக்திப் பெருக்கோடும பாடிப் பாடி
அளவிலா இன்பம் எய்தி நின்றார். அப்பரடிகளின் ஆசையை நிறைவேற்றிய பெருமான்
அத்திருக் காட்சியைக் மறைந்தருளினார். கயிலைக் காட்சி சட்டென்று மறைந்தது
கண்டு திகைத்த அப்பரடிகள் மாதர் பிறைக் கண்ணியாளை மலையான் மகளொடும் எனத்
தொடங்கும் தமிழ்ப் பதிகம் பாடினார். திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும்
பஞ்ச நதீசுவரரின் திருவடித் தாமரைகளைப பணிந்தார். அத்திருத்தலத்தை விட்டுச்
செல்ல மனம் வராத அடியார் திருவையாற்றில் தங்கியிருந்து உழவாரப் பணி செய்து
வரலானானர். சில நாட்களில், அங்கிருந்து புறப்பட்டு சிவத்தலங்களைத்
தரிசித்துத் தமிழ்ப் பாமாலை பாடிய வண்ணம் திருப்பூந்துருத்தி என்னும்
தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானுக்குத்
திருத்தொண்டுகள் பல புரிந்து வரலானார். இந்தச் சமயத்தில் பாண்டிய நாட்டிலே
சமணரை வென்று வெற்றி வாகை சூடிய ஞானசம்பந்தர், சோழநாடு திரும்பினார்.
திருப்பூந்துருத்தியில் அப்பரடிகள் அவரைக் கண்டு மகிழ அடியார்களும் புடைசூழ
தமது முத்துச் சிவிகையில் புறப்பட்டார். அதுபோல, ஞானசம்பந்தரின் வருகையைக்
கேள்விப் பட்ட அப்பரடிகள், உவகைப் பொங்க அக்கணமே அவரை எதிர் கொண்டழைக்கப்
புறப்பட்டார்.

அப்பரடிகள் முத்துச் சிவிகையில் சம்பந்தர் வருவதைக்
கண்டார். அப்பரடிகள் தம்மை எவரும் காணாதபடி ஞானசம்பந்தர் வீற்றிருக்கும்
முத்துச் சிவிகைதனைத் தோள் கொடுத்துச் சுமந்து நடக்கலானார்.
திருப்பூந்துருத்தியை வந்‌தடைந்த ஆளுடைப்பிள்ளை அப்பர் அடிகளை எங்கும்
காணாது அப்பர் எங்கிருக்கிறார் என்று கேட்க திருநாவுக்கரசர் தேவரீருடைய
அடியேன், முத்து சிவிகையினைத் தாங்கி உமது திருவடிகளைப் போற்றி வரும்
பெறும்பேறு பெற்று இங்குள்ளேன் என்று மகிழ்ச்சிப் பொங்க கூறினார்.
அப்பருடைய ‌மொழி கேட்டு, ஆளுடைப் பிள்‌ளையார் சிவிகையினின்றும் விரைந்து
கீழே இறங்கினார். உள்ளமும், உடலும் பதைபதைக்க அப்பரடிகளை வணங்க வந்தார்.
அதற்குள் அப்பரடிகள் விரைந்து ஆளுடைப் பிள்ளை தம்‌மை வணங்குவதற்கு முன்
அவரை வணங்கி மகிழந்து உள்ளம் உருகில கண்களில் நீர்மல்க நின்றார்.
இக்காடசியைக் கண்ட சிவனடியார்கள் அனைவரும் மெய்யுருகி நின்றனர். இரு
திருத்தொண்டர்களையும் வணங்கினர். இரு ஞானமூர்த்திகளும், அத்தலத்தில்
எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் தாளைத் தலையால் வணங்கி திருத்தாண்டகம்
பாடி மகிழ்ந்தனர். அன்பர்களுடன் இரு சிவநேசச் செல்வர்களும் மடத்தில்
தங்கினர். அப்பரும், ஆளுடைப்பிள்ளையும் அடியார்கள் புடைசூழ, மேளதாள
வாத்தியங்கள் முழங்க திருக்கோயில் சென்று திருப்பூந்துருத்திப் பெருமானைப்
பாமாலையால் போற்றிப் பணிந்தனர். பக்தர்கள் பரமனையும், பரமன் அருள்பெற்ற
தவசியர்களையும் வணங்கி மகிழந்தனர். ஒருநாள் ஆளுடைப்பிள்ளையார்
அப்பரடிகளிடம் பாண்டி நாட்டில் தாம் சமணர்களை வாதில் வென்று வெற்றி பெற்ற
விவரத்தை கூற, நாவுக்கரசர் பாண்டிய நாடு செல்ல ஆவல் கொண்டார். அப்பரடிகள்
ஆளுடைப்பிள்ளையாரிடம், நான் பாண்டிய நாடு சென்று வருகிறேன். தாங்கள் தொண்டை
நன்னாட்டிலுள்ள சிவத்தலங்களைத் தரிசித்து வருவீராகுக என்று கூறினார்.
ஆளுடைப்பிள்ளையாரும் அவ்வாறே செய்யச் சித்தம் பூண்டார். ஞானசமபந்தர்
அப்பரடிகளிடம் விடைபெற்றுப் புறப்‌பட்டார். ஞானசம்பந்தரை வழி அனுப்பிவிட்டு
அப்பரடிகள் தமது பாத யாத்திரையைத் தொடர்ந்தார். பல திருத்தலங்களைத்
தரிசித்துக் கொண்டே மதுரையம் பதியை வந்தடைந்தார் அப்பரடிகள் ! அப்பரடிகள்,
மதுரையம்பதிக்கு எழுந்தருளியுள்ளார் என்று செய்தியறிந்தான் பாண்டியன் !
மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும், அன்பர்களாடு,
அடியார்களோடு அப்பரடிகளைத் தொழுது வணங்கி, உபசரித்து வரவேற்றார். ராஜ
மரியாதைகளுடன் அப்பரடிகளை கெளரவப்படுத்தினான் மன்னன். அத்திருத்தலத்தில்,
அடியார் சிலகாலம் தங்கியருந்தார். எம்பெருமானு்க்குத் தமிழ்த்
தொண்டாற்றினார். மன்னர் மனம் மகிழ்ந்தார். அரசியாரும், அமைச்சரும்
அடியாரைப் போற்றி பெருமிதம் கொண்டனர். அங்கிருந்து புறப்பட்ட அப்பரடிகள்
திருப்புவனம், திருராமச்சுரம், திருநெல்வேலி, திருகானப்பேர் போன்ற பல
பாண்டி நாட்டுக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் பரமனைப் பாடிப் பரவிய
வண்ணம், சோழ நாட்டை நோக்கிப் புறப்பபட்டார். பொன்னி நாட்டில் ஒளிவிடும்
பொன்னார் மேனியனுடைய புனிதத் தலங்களையெல்லாம் கண்குளிரக் கண்டு பற்பல
பைந்தமிழப் பதிகங்களைப் பாடி வணங்கிய வண்ணம் திருப்புகலூரை அடைந்தார்.
திருப்புகலூர்ப் பெருமானின் தாளை வணங்கி ஆறாக் காதலுடன், உள்ளமும், உடலும்
உருக, அத்திருத்தலத்திலேயே தங்கியிருந்து, புகலூர்ப் புனிதர்க்கு உழவாரப்
பணிசெய்து வராலனார் அப்பரடிகள். அப்பொழுது அப்பரடிகள் நினற திருத்தாண்டகம்,
தனித் திருத்தாண்டகம், திருத்தலக்கோவை, குறைந்த திருநேரிசை,
தனித்திருநேரிசை, ஆருயிர் திருவிருத்தம், தசபுராணம், பாவநாசப்பதிகம்,
சரக்கறைத் திருவிருத்தம் முதலிய பல திருப்பதிகங்களைப் பாடினார்.
அப்பரடிகளின் பற்றற்ற பரம நிலையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி புகலூர்ப்
பெருமான், உழவார பணிபுரிந்து வரும் மன்றலிலே, பொன்னும், நவரத்தினங்களும்
மின்னும்படிச் செய்தார்.

அப்பரடிகள் பொன்னையும், நவமணிகளையும்
உழவாரப் பணிபுரியும் மன்றலிலே உருளும் கற்களுக்கு ஒப்பாகவே கருதி, அவற்றை
உழவாரப் படைகொண்டு எடுத்து அருகிலுள்ள தாமரைத் தடாகத்தில் வீசி எறிந்தார்.
பொன்னாசையும், பொருளாசையும் கொள்ளாத அப்பரடிகள், பெண்ணாசையும் வெறுத்த
துறவு நிலையை மேற்கொள்ளும் பெரு ஞானி என்பதையும் உலகிற்கு உணர்த்துவான்
வேண்டிப் புகலூர் சிவபெருமான் அரம்பையர்களை மன்றலிலே தோன்றச் செய்தார்.
வில்லைப் போன்ற புருவங்களையும், மின்னலைப் போன்ற மேனியையும், கன்னலையொத்த
மொழியையும், தென்றலைப் போன்ற குளுமையையும் உடைய அரம்பையர், அப்பரை
நோக்கினர். அப்பரடிகள் தியானத்திலேயே இருந்தார். அரம்பையர்கள் மெல்லிய
மலர்ப் பாதத்திலே சிலம்புகள் ஒலித்தன. செங்கழுநீர் மலர் போன்ற மெல்லிய
விரல்களினை வட்டணையோடு அசைத்தனர். அக்கரங்களின் வழியே கெண்டைமீன்
வடிவங்கொண்ட வட்டக் கருவிழிகளைச் செலுத்தி, பொற்‌கொடி போல் அசைந்தாடினர்.
தித்திக்கும் தேன்போல் கொவ்வை இதழ்களில் பண் இசைத்து சுழன்று, சுழன்று
மயக்கும் அழகு நடனம் புரிந்தார்கள். மலர்மாரி பொழிதலும், தழுவுபவர் போல
அணைத்தலும், காரிருள் கூநதல் அவிழ, இடை துவள மான் போல் துள்ளி ஓடுதலுமாக,
தாங்கள் கற்ற கலைகளை எல்லாம் காட்டிக் காமன் கணை தொடுத்தாற் போல், பற்பல
செய்ல்களை நடத்தினர் அரம்பை‌யர். அப்பரடிகள் சித்தத்தைச் சிவனாரடிக்கே
அர்ப்பணித்து சற்றும் சித்தநிலை திரி‌யாது திருத்தொண்டு லீலைக‌ளில் அவரது
உள்ளத்தையோ, உடலையோ பறிகொடுத்து விடவில்லை. அப்பரடியார் அரம்பையர்களைப்
பார்த்து, மயங்கும் மாலை வடிவங்களே ! எதற்காக என்னிடம் வந்து இப்படி வீணாக
அலைகிறீர்கள் ? உமக்கு நீவிர் மயக்கி ஆளும் உலகம் மட்டும் போதாதா ? எதற்காக
என்னிடம் வந்து ஆடிப் பாடுகிறீர்கள் ? திருவாரூர் தியாகேசப் பெருமானின்
திருவடிகளில் தமிழ்ப் பதிகம் பாடித் திருத்தொண்டு புரிந்துவரும் சிறந்த
பணியில் நிலையாக நிற்பவன். என்னை உங்கள் வலையில் சிக்கி எண்ணி வீணாக அலைய
வேண்‌டாம். போய்விடுங்கள் என்று கருத்து கொண்ட பொய்ம்மாய பெருங்கடல் எனத்
தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடினார். உடனே அத்தேவக் கன்னிகைகள் அவரது
திருவடியை வணங்கி மறைந்தனர். அப்பரடிகளுடைய உள்ள உறுதியையும், பக்தியின்
திறத்தினையும், பாமாலை பாடும் ஆற்றலையும் ஏழு உலகங்களும் போற்றிப்
புகழ்ந்தன. இவ்வாறு புகலூர்ப் பெருமானுக்கு அரும்பணி ஆற்றிவந்த அன்பு
வடிவம் ‌கொண்ட அப்பரடிகள் எம்பெருமானின் திருவடிகளில் தமது திருமெய்
ஒடுங்கும் காலம் நெருங்கி வந்துவிட்டதே என்பதை தமது திருக்குறிப்பினால்
உணர்ந்தார். அதனால். அவர் அத்திருத்தலத்தை விட்டு சற்றும் நீங்காமல்,
பாமாலைப் பாடிப் பரமனை வழிபட்டு வந்தார். புடமிட்ட பொன்போல் உலகிற்கு
பேரொளியாய்த் திகழ்ந்த திருநாவுக்கரசர் தாம் இறைவனது பொன்மலர் தாளினை
அடையப் போகும் பேரின்ப நிலையை உணர்ந்தார். எண்ணுகேன் என் சொல்லி எனத்
தொடங்கும் திருத்தாண்டகத்தை ஊன் உருக, உடல் உருக, உள்ளம் உருகப் பாடினார்.
எம்பெருமானின் சேவடியைப் பாமாலையால் பூஜித்து திருச்செவியைச் செந்தமிழால்
குளிரச் செய்தார். திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள் -
சதயதிருநக்ஷத்திரத்தில், சிவானந்த ஞான வடிவேயாகிய சிவபெருமானுடைய பொன்
மலர்ச் சேவடிக் கீழ் அமர்ந்தருளி பேரின்பப் பெருவாழ்வு பெற்றாறர்.
விண்ணவரும் மலர்மாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் ஐந்தும் விண்ணில்
முழங்கின. எல்லா உயிர்களும் நிறைந்த மகிழ்ச்சியால் உளம் நிறைவுபெற்று
நின்றன. அப்பரடிகளாக அவதரித்த வாகீசமுனிவர் வேணிபிரானின் திருப்பாத நிழலில்
வைகும் நிலையான சிவலோக பதவியைப் பெற்றார். முன்போல் திருக்கயிலாய மலையில்
தவஞானியாக எழுந்தருளினார்.

குருபூஜை: திருநாவுக்கரசரின் குருபூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:21

சுந்தரர்


திருநாவலூர்
என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும்
செழிப்போடு காணப்படும் இந்நகரில் தெய்வநலமும் சைவ நெறியும் பெருமை பெற்று
ஓங்கியிருந்தன. இத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சகல நற்குணங்களும் ஒருங்கே
அமையப்பபெற்ற சடையனார் என்பவருக்கும், நற்குண நங்கை இசைஞானியார்
என்பவருக்கும் திருமுருகனே வந்து அவதாரம் செய்தாற்போல், சுந்தரமூர்த்தி
நாயனார் தோன்றினார். எம்பெருமான் திருவருளால் அவதாரம் செய்த மகனுக்கு
பெற்றோர்கள் நம்பியாரூரார் என்று இறைவன் திருநாமத்தையே சூட்டினர்.
நம்பியும், காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப்
பருவம், முத்தப் பருவம் போன்ற பருவங்களை எல்லாம் கடந்து மேனியிலே
பிரகாசமும், முகத்திலே தெய்வ ஒளியும் தோன்ற உருவெடுத்து விளங்கலானாள்.
நம்பியின் முடியிலே இரத்தினச்சுட்டியும், அழகு மார்பிலே நவரத்தினப்
பொன்மணிகளும், மென்சீர் அடிகளிலே கொஞ்சும் சதங்கையும், திருவரையில்
செம்பொன் அரை நாணும் அவரது அழகிற்கு அழகு செய்தன. ஒரு நாள் நம்பி ஆரூரர்
வீதியிலே, சிறு தேர் உருட்டி தளிர்நடை போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது திருமுனைப்பாடி நாட்டை அரசாண்டு வந்த நரசிங்கமுனையர்
திருநாவலூர்ப் பெருமானைத் தரிசித்து விட்டு தேரில் வந்து கொண்டிருந்தார்.
அவர் சிறு தேர் உருட்டி விளையாடும் ஆரூரரைக் கண்டார். அப்பால்மணம் மாறாப்
பாலகனின் பேரழகை கண்டு அளவிலா மகிழ்ச்சி பூண்ட அரசர், தேரினின்றும் இறங்கி
வந்து ஆரூரரை வாரி எடுத்து உச்சி முகர்ந்தார். அக்குழந்தையை எப்படியும்
தம்மோடு அழைத்து சென்று விடுவது என்ற முடிவிற்கு வந்தார். அரசர், அக்கணமே
அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு, சடையனார் இல்லத்திற்குள் சென்றார்.
குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் அரசனைக் கண்டு பெற்றோர்கள் அதிசயித்தனர்.
விரைந்தோடு வந்து வேந்தனை வரவேற்றனர். சடையனாரும் நரசிங்கமுனையரும் பால்ய
சிநேகிதர்கள். சுந்தரர் தனது நண்பனின் செல்வன் என்பதனை அறிந்து அரசன்
இரட்டிப்பு மகிழ்ச்சி பூண்டான். அரசன் சடையனாரிடம், நண்பா! உங்கள்
குழந்தையின் அழகில் நான் பேரன்பு பூண்டேன். அதனால் இக்குழந்தையை மகனாக
வளர்க்கும் பாக்கியத்தை எனக்குத் தர வேண்டும், என்று பரிவும் பாசமும்
பொங்கக் கேட்டான். மன்னனின் அன்பு மொழிக்கு அடிமையான பெற்றோர்கள் மறுமொழி
ஏதும் பேச விரும்பவில்லை. தங்களது குமரன் அரண்மனையில் வளர வேண்டும் என்பது
தெய்வ சங்கல்பம் போலும் என்று எண்ணினர். மனநிறைவோடு ஆரூயிர்ச் செல்வனை,
அரசருடன் அனுப்பி வைத்தனர். அரசன் ஆனந்தத்துடன், சுந்தர செல்வனைச் சுமந்து
கொண்டு, தனது தேரில் புறப்பட்டார்.

ஆரூரர், அரண்மனையில்
அரசகுமாரனைப்போல் வாழத் தொடங்கினார். சின்னஞ்சிறு வயதிலேயே, அரசர்க்குரிய
அத்தனை கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றார். மதநூல்களையும், ஆகம நூல்களையும்
பயின்றார். உரிய பருவத்தில் ஆரூரருக்கு முப்புரி நூல் அணிந்து மகிழ்ந்தான்
மன்னன்! இவ்வாறு பெற்றோர்களின் அன்பாலும், அரசரின் அரவணைப்பாலும் ஆரூரர்
வளர்ந்து வரலானார். பெற்றோர்கள், ஆரூரருக்குத் திருமணம் செய்து வைக்கத்
தீர்மானித்தனர். தங்கள் எண்ணத்தை அரசரிடம் கூறினர். அரசரும் அவர்கள்
விருப்பம் போல் திருமணப் பெண்ணைத் தேர்ந்து எடுத்து மணம் முடிக்கக்
கூறினான். அக்கணமே பெற்றோர்கள் ஆரூரருக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேடலாயினர்.
திருநாவலூருக்கு அடுத்தாற் போல் புத்தூர் என்ற ஊரிலுள்ள, சடங்கவி
சிவாச்சாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம்
முடிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். திருமணமும் நிச்சயமானது; நல்ல
நாளும் பார்க்கப்பட்டது. அயலூர் நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும்
திருமண அழைப்பு ஓலையை அனுப்பினார்கள். பெண் வீட்டாரது ஊரான புத்தூரிலேயே
திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும், மிக்க சிறப்போடும், கோலாகலத்தோடும்
நடந்த வண்ணமாகவே இருந்தன. திருமணத்திற்கு முதல் நாள் ஆரூரர் திருநாவலூரில்
இருந்து வெண்புரவியில், புத்தூருக்கு உற்றாரும், உறவினரும் புடைசூழ இன்னிசை
நாதம் முழங்க, மேளதாளத்துடன் புறப்பட்டார். ஆரூரர், மன்னர்
குலத்திற்குரிய, விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்திருந்தாலும் அந்தணர்
கோலத்திற்குரிய அலங்காரத்தையும் செய்து கொண்டிருந்தார். சரிகைக் கரை
போடப்பட்டுள்ள வெண்பட்டு உடுத்தியிருந்தார். காதுகளிலே வைரக் கடுக்கன்கள்
அணிந்திருந்தார். மணமிக்க சந்தனக் கலவையை மார்பிலே பூசியிருந்தார்.
அத்திருமார்பில் ஒளிமிகுந்து மாணிக்கங்கள் இழைத்த அணிகலன்களோடு, நறுமலர்
மாலைகளையும் அணிந்திருந்தார். மங்கல முரசங்கள் முழங்கிட-பண் இசைக்கும்
பாவையர் பரதமாட-மங்கல மங்கையர் பாலிகை ஏந்தி வர, கட்டிளங் கோதையர் திருமணப்
பெண்ணுக்கு, சீர் வரிசைகளைப் பொன் தட்டுகளில் தாங்கிவர, சுந்தரரின் மணவிழா
பவனி புத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தது. சடங்கவியார் தம் மகள் திருமணத்தை
மிகச் சிறப்போடு நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஊர்
எல்லையிலிருந்தே பெரும் பந்தல் அமைத்து, ஆங்காங்கே, பூச்சரங்கள் அழகாகக்
கட்டப்பட்டு, மாவிலைகளோடு கூடிய தோரணங்களும் அணி செய்யப்பட்டிருந்தன. வாழை,
கமுகுகளும் நாட்டப்பட்டு விளங்குகிறது. மங்கல மனைகள் தோறும், நிறைகுடங்கள்
வைக்கப்பட்டிருந்தன. வீதிகள் எங்கும் தூய்மை நிறைந்திருக்க பன்னீர்
தெளிக்கப்பட்டு மாக்கோலமும், இடையிடையே சந்தனக்கோலமும் போடப்பட்டிருந்தன.
பல்வகை வாத்தியங்கள் முழங்கிய வண்ணமாகவேயிருந்தன. வைகறைப் பொழுதில் ஆரூரர்,
புத்தூர் எல்லையை வந்தடைந்தார். பெண் வீட்டார்கள், ஆரூரரை எல்லையிலேயே
தூப, தீப பாலிகை ஏந்தி வரவேற்றனர். வழி எங்கும் நறுமணப் பொடியையும்,
நறுமலரையும் வீசினார்கள். பன்னீர் தெளித்தார்கள். வானத்துப் பேரொளி
வையத்தில் வந்து இறங்கினாற் போல் ஒளிமயத்தோடு புரவி மீது வந்து கொண்டிருந்த
ஆரூரர், திருமணச்சோலைக்குள் நல்ல ஓரையிலே எழுந்தருளினார். திருமணப்
பந்தலிலே, அழகே உருவெடுத்து அமர்ந்திருந்த ஆரூரரின் எழிற் தோற்றத்தைக்
கண்டு, திருமணத்திற்கு வந்திருந்த அனைவருமே திகைத்து நின்றனர். பலரும்
பலவாறு புகழ்ந்து பேசி மகிழ்ந்தனர்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:21

மணநாள் காணப்போகும் ஆரூரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்ளத் திருவுள்ளங்
கொண்டார். அக்கணமே அந்தண வடிவம் தாங்கி புறப்பட்டார். தள்ளாடி தள்ளாடி
நடக்கும் தளர்ந்த வயது! வெள்ளி முடிபோன்ற நரைத்த திருசடை! செவிகளிலே
கண்டிகையும் குழையும்! திருமார்பிலே முப்புரி நூல்! திருத்தோளிலே வெண்ணிற
உத்திரீயம்! நெற்றியிலும், திருமேனியிலும் புனிதமான திருவெண்ணீற்று ஒளி!
ஆதவனின் வெம்மையைத் தணிக்க ஓர் திருக்கையிலே தாழங்குடை! மற்றொரு
திருக்கையிலே தருப்பை முடிந்த மூங்கில் தடி! இங்ஙனம் தாம் ஏற்ற முதிய
அந்தணர் வடிவத்திற்கு ஏற்ப, திருக்கோலத்தை மாற்றிருந்தார் எம்பெருமானார்.
மங்கல சடங்குகள் வழிமுறைக்கு ஏற்ப நடந்த வண்ணமிருந்தன, மங்கலமுரசம்
முழங்கும் நல்ல ஓரையில் ஓர் இடிமுழக்கம்! இறைவர் ஒரு முதிய அந்தணர்
கோலத்தோடு எழுந்தருளினார். பந்தலுக்குள் எழுந்தருளும் போதே, நான்
கூறப்போகும் இம்மொழியை யாவரும் கேளுங்கள் என்று கூறிக்கொண்டேதான் வந்தார்
எம்பெருமான்! அனைவரும் அம்முதியவரைப் பார்த்தனர். மூப்பணிந்த அந்தணரின்
முகப்பொலிவைக் கண்டு நம்பியாரூர், பணிவன்போடு எழுந்து நின்று, கரங்கூப்பி
வணங்கியவாறு, ஐயனே! தங்கள் வரவு நல்வரவாகுக! நாங்கள் என்ன தவம் செய்தோமோ,
இம்மண நாளன்று தேவரீர் எழுந்தருள என்று கூறினார். அம்மொழியைக் காதில்
போட்டுக் கொள்ளாதவர் போல் அம்முதியவர், அப்பனே! உனக்கும் எனக்கும்
முற்காலத்தேயுள்ள ஓர் தொடர்பு காரணமாக, ஒரு பெரும் வழக்குள்ளது.
அவ்வழக்கைத் தீர்த்து விட்டு, நீ உன் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யலாம்
என்று மொழிந்தார். முதியவர் மொழிந்ததைக் கேட்டு, அனைவரும் திகைக்க-சுந்தரர்
மட்டும் சற்றும் கலங்காமல், ஐயனே! உமக்கும் எமக்கும் வழக்கு
இருக்குமேயானால், நீவிர் சொல்வது போல், முதலில் அதை முடித்துவிட்டு,
பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன். வழக்கை இயம்புவீராக! என்றார்.
வேதியர், அந்த அவையில் உள்ளோரை நோக்கி, அந்தணர் குலத்தோரே! எம்மொழியைக்
கேளுங்கள். இந்நாவலூரான் என் அடிமை! என்றார். மங்களகரமான மணச்சடங்குகள்
நடந்து கொண்டிருந்த வேளையில், இப்படியொரு பரபரப்பு நடப்பதை எண்ணி,
செய்வதறியாது திகைத்துப்போன ஆரூரர், வேதியரை நோக்கியவாறு சலனத்தோடு
இருந்தாரே தவிர, அவரால் இதற்கொரு வழிமார்க்கம் காண முடியவில்லை. வேதியர்
தம் கையிலிருந்த நீட்டோலையைக் காண்பித்தவாறே, நீங்கள் எவரும் என்னைப்
பார்த்து நகைக்கவும் வேண்டாம்; பதைக்கவும் வேண்டாம். எனக்கு இவனது பாட்டன்,
பண்டைய நாளிலேயே எழுதிக்கொடுத்த அடிமை ஓலை இதோ என் கையில் இருக்கிறது
என்று சினம் பொங்கக் கூறினார். ஆரூரருக்கு வியப்பு மேலிட்டது. உதட்டிலே
புன்னகை தவழ, வேதியரை இன்னாரென்று அறிய இயலாத நிலையில், ஐயா! வேதியரே!
உமக்கு நன்றாக பித்து பிடித்திருக்கிறது. இல்லாவிடில், குற்றமற்ற என்னை
உங்களுக்கு அடிமை என்று சொல்லிக் கொள்வீர்களா? பாவம்!
பரிதாபத்திற்குரியவர்! நீர் என்ன பித்தனோ? என்று கேட்டார். இறைவன் சினம்
பொங்கினாற்போல் சற்று கடுமையாக சுந்தரரைப் பார்த்து, யான் பித்தனுமாகுக;
அன்றிப் பேயனுமாகுக! நீ என்னைப் பற்றி எவ்வளவு தூரம் இழிவாக மொழிந்தாலும்
சிறிதுகூட வெட்கப்படவும் மாட்டேன்; கவலைப்படவும் மாட்டேன். என்னை உனக்குத்
தெரியாது. நான் யார் என்பதை உன்னால் அறியவும் முடியாது. வீணாக விளையாட்டு
மொழிகளைப் பேசி என் கோபத்தை கிளறாதே! மணவறையில் உட்கார்ந்து கொண்டு
வித்தகம் பேசுகிறாயே எதற்கு? உன் கடன் எனக்குப் பணிசெய்து கிடப்பதே என்பதை
நினைவிற் கொள்! என்றார்.

இதுவரை வேதியரிடம் குதர்க்கவாதம் புரிந்த
ஆரூரர் சிந்திக்கத் தொடங்கினார். இவரது அருள் தோற்றம் ஆரூரரின் இதயத்தை
எதனாலோ உருக்கியது. அவர் இதயத்தில் அன்பு பெருக்கெடுத்தது. அதே சமயத்தில்
வேதியரின் பிதற்றல் வார்த்தைகளும், வயது முதிர்ந்த தோற்றமும் உள்ளத்தை
உருக்கினாலும், அடிமை என்று அவர் மொழிந்த சொல் சுந்தரருக்கு சினத்தை
மூட்டியது. இவ்வாறெல்லாம் மனம் குழம்பிய சுந்தரர். எப்படியும் முதியவரிடம்
இருக்கும் அடிமை ஓலையை வாங்கிப் பார்த்து விடுவது என்ற தீர்மானத்திற்கு
வந்தார். நீங்கள் கூறுவதை உண்மையான வார்த்தைகளா என்று பார்ப்போம். எங்கே
அடிமை ஓலையைக் காட்டுங்கள் ஆரூர் கேட்டார். வேதியர் கோபம் பொங்க, அடிமை ஓலை
கண்டு படித்துணரும் பேராற்றல் உடையவனோவாயோ? வேண்டுமென்றால் அவை அறிய
ஓலையைக் காண்பிப்பேனே தவிர, தனிப்பட்ட முறையில் உன்னிடம் மட்டும் கொடுக்க
முடியாது. துணிவிருந்தால் அவைக்களம் வா! பார்த்துக் கொள்ளலாம் என்றார்.
நம்பியாரூரரின் கோபம் எல்லை மீறியது. அவர் வெகுண்டு எழுந்து, அந்தணர்
கையிலிருந்த அடிமை ஓலையைப் பலாத்காரமாகப் பறிக்க முற்பட்டார். அந்தணர்
மணப்பந்தலைச் சுற்றி, நாற்புறமும் ஓடினார். ஆரூரரும் தொடர்ந்து ஓடினார்.
இருவரும் திருமணப் பந்தலுக்குள் சுற்றி, சுற்றி ஓடிவந்தார்கள். சுந்தரர்
ஒருவாறு அவரைப் பிடித்தார். சுந்தரர் கையிலிருந்த அடிமை ஓலையைப் பிடுங்கி,
அந்தணர் அடிமையாகி ஏவல் புரிவதா? எந்த வேதத்தில் சொல்லியிருக்கிறது
என்பதைப் பார்த்துவிடுவோம் என்று கேட்ட வண்ணம் அவ்வோலையை சுக்கு சுக்காகக்
கிழித்தெறிந்தார். ஓடி ஓடிச் சோர்ந்தவர் போல் காட்சி அளித்த இறைவன்
சுந்தரரின் செயலைக் கண்டித்தார். எவ்வளவு பெருத்த அநியாயம்? இந்த திருமணப்
பந்தலில் என் குறையைக் கேட்டு, உண்மைக்கு வாதாட எவருமே இல்லையா! இது கொடிய
அநியாயம் என்று முறையிட்டுக் கூச்சலிட்டார். மறையொலிக்கும் மாயவன்,
குறையொலித்து நின்றார். கூனிக் குறுகி நின்ற சுந்தரர், செய்வதறியாது
திகைப்பவர் போல் சற்று நிமிர்ந்து அவையோரைப் பார்த்தார். அப்பொழுது
திருமணச் சடங்கிற்று வந்திருந்தவர்களில் சிலர், வேதியரை அணுகி, ஐயா
பெரியவரே! உமது வழக்கு மிகவும் விசித்திரமாகத்தான் இருக்கிறது. உலகில்
எங்குமே இல்லா புது வழக்கம்! அது போகட்டும். தூய மணநாள் அன்று வேண்டுமென்றே
இப்படியொரு கதை கட்டி, கல்யாணத்தை தடுக்க கங்கணம் கட்டிக் கொண்டு வந்து
நிற்கும் நீவிர் யார்? எங்கே இருக்கிறீர்? யாது உம் பூர்வாங்கம்? என்று
கேள்விமேல் கேள்விகளைக் கேட்டனர். நான் அருகிலுள்ள வெண்ணெய்நல்லூரில்
பிறந்து வளர்ந்தவன். இவன் பாட்டன் இவன் எனக்கு அடிமை என்று எழுதிக்
கொடுக்காவிடில், எதற்காக நம்பியாரூரன், அறநெறி தவறி, என் கையிலிருந்த
ஓலையைக் கிளித்தெறிய வேண்டும்? அவன் குற்றமுள்ள நெஞ்சம் தானே இப்படியொரு
நஞ்சான செயலை செய்ய வைத்திருக்கிறது? இவன் என் அடிமைதான் என்பதை
உறுதிப்படுத்தி உலகறியச் செய்ய இதைவிட எங்களுக்கு ஆதாரம் வேறென்ன வேண்டும்?
என்று விடையளித்தார் எம்பெருமான்! அப்படியென்றால், இந்த வழக்கை வெண்ணெய்
நல்லூரிலேயே தீர்த்துக் கொள்ளலாம் வாரும் என்று கூறினார் சுந்தரர்! அங்ஙனமே
ஆகட்டும். இப்போது நீ கிழித்த ஓலை நகலேயாகும். மூல ஓலையைப் பத்திரமாக
வைத்திருக்கிறேன். வெண்ணெய்நல்லூரிலுள்ள அவையோர் முன்னால் மூல ஓலையைக்
காண்பித்து நீ என் அடிமை என்பதை நிரூபிக்கிறேன் என்ற மறையோன், தள்ளாதவரைப்
போல தடியை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:22

இரும்பைக் காந்தம் கவர்ந்தாற்போல் ஆரூரரும் பின் சென்றார். சுற்றமும்,
நட்பும் ஆரூரரைப் பின்தொடர்ந்து சென்றன. திருமண மன்றம் வழக்காடும்
மன்றமானது. மணப்பந்தல் சோகத்தில் மூழ்கியது. அந்தணர் முன்வர அனைவரும்
வெண்ணெய்நல்லூர் அவையை வந்தடைந்தனர். அவையோர் முன்னால் அந்தணர் தமது
வழக்கைச் சமர்ப்பித்தார். செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்களே! இந்நாவலூரன்
என் அடிமை! அதற்கு சான்றாக இருந்த அடிமை ஓலையை, என்னிடமிருந்து பிடுங்கி,
கிழித்து எறிந்துவிட்டான். அவைக்கு இவனை அழைத்து வந்துள்ளேன். இந்த ஏழை
அந்தணரின் முறைபாட்டை சீர் தூக்கிப் பார்த்து உண்மைக்கு தீர்ப்பளியுங்கள்.
முதியவரே! யாது மொழிந்தீர்? அந்தணர் அடிமையாவது என்பது இவ்வுலகில் இதுவரை
நடந்த வழக்கமாகத் தெரியவில்லையே! இதுபோன்ற வழக்கை அவை மட்டுமல்ல, இந்த
அகிலமே இப்பொழுதுதான் சந்திக்கிறது. புதுமையான வழக்குதான் இது! முதியவர்
மொழிந்ததைக் கேட்டு அவையோர் நகைத்துக் கொண்டே மேற்கண்டவாறு கூறினர். இவன்
கிழித்த ஓலை, இன்று நேற்று எழுதப்பட்டதல்ல. பண்டுதொட்டு பாதுகாக்கப்பட்டு
வருவது! ஒரு உடன்பாட்டின் மூலம் இவன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்தது!
இப்படியிருக்க எப்படி என் வழக்கை நீங்கள் அர்த்தமற்றது என்று கேலி பேச
முடியும்? அப்படியா? நன்று வேதியரே நன்று, என்று அந்தணருக்கு ஆறுதல் மொழி
பகர்ந்த அவையோர், நம்பியாரூரரை நோக்கி முதியோர்கள் உடன்பாட்டுடன் எழுதிய
ஓலையை வலிய வாங்கிக் கிழித்தது பிழை! வயது முதிர்ந்த, இப்பெரியோர் தமது
வழக்கைக் கூறிவிட்டார். இதுபற்றி உம்முடைய எண்ணம் யாதோ? என்று கேட்டனர்.
முதியவரின் மாயத்திற்கு முன்னால் நான் என்ன சொல்ல இருக்கிறது? இவர் வழக்கு
எனக்கே விளங்காத புதிராக இருக்கிறது! ஆரூரர் சுற்றி வளைத்து, அவையில் பேச
விரும்பாது, சுருக்கமாகவே கூறி முடித்தார். எல்லா நூல்களையும் கற்று
உணர்ந்த பெரியோர்கள், நம்பியாரூரர் ஆதிசைவர்! அவர் ஒருபோதும் முறை தவறி
நடக்கமாட்டார் என்பதை எண்ணி பார்த்து வேதியரிடம், முதியவரே! இவ்வழக்கு
மிக்க கொடியது! இவர் உம்முடைய அடிமை என்பதை ஆதாரத்தோடு அவை அறியச் செய்தல்
வேண்டும். ஆட்சி முறையிலாவது அன்றி சாட்சி, மூலமாவது அன்றி உடன்படிக்கை ஓலை
மூலமாவது, உமது வாதத்தை உண்மை என்று நிரூபித்துக் காட்டுவீராகுக! என்று
பணித்தனர். அவையோர் ஒருமித்துக் கூறியதைக் கேட்டு, வேதியர் மகிழ்ச்சி
பொங்க, அவையோரைப் பார்த்து, முன்னர் இவன் கிழித்தது நகல் ஓலையே! இவன்
இப்படி செய்தாலும் செய்வான் என்று அறிந்துதான், மூல ஓலையை முன்கூட்டியே
பத்திராக வைத்துள்ளேன்! என்றார். அப்படியானால் மூல ஓலையைக் காட்டுங்கள்.
காட்டுகிறேன். ஆனால் இவன் முன்போல மீண்டும் இந்த மூல ஓலையையும்
கிழித்துவிட்டால் நான் என்ன செய்வேன்? அவையோர் முன்னால், இத்தகைய தவறான
நிகழ்ச்சி எதுவும் நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீவிர்
தைரியமாக ஓலையைக் காட்டலாம். வேதமுதல்வன், ஆரூரருக்கு பயப்படுபவரைப் போல்
பாவனை செய்தவண்ணம், மூலஓலையை எடுத்து அவையோரிடம் கொடுத்தார். அவையோர்
ஆணைப்படி, கணக்கன் ஓலையை வாங்கிப் படித்தான். அவ்வோலையில் பின்வருமாறு
எழுதியிருந்தது. திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் என்னும்
பெயருடைய நான், திருவெண்ணெய்நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும்
என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமை தொழில் செய்து வருவோம்
என்பதற்காக உள்ளும் புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்தேன். இதற்கு இஃது
என் கையெழுத்து. இம்மணிவாசகத்தைக் கணக்கன் வாசிக்கக் கேட்ட அவையோர், ஓலையை
வாங்கிப் பார்த்தனர். சாட்சிக் கையெழுத்து இட்டார்கள் கூட இஃது தங்கள்
கையெழுத்துதான் என்பதனை ஒப்புக் கொண்டனர்.ஆரூரரின் பாட்டனாரின்
கையெழுத்தைச் சரிபார்க்கும் பொருட்டு, அவர் எழுதிய வேறு சில ஓலைகளையும்
கொண்டுவரச் சொல்லி அதையும் சரிபார்த்தனர்.அவையோர் அந்தணர் கூறுவது முறைதான்
என்று ஒப்புக்கொண்டனர்.

ஆரூரன் அந்தணருக்கு அடிமையாய்ப் பணிசெய்வது
தான் கடமை, என்று தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள். ஆரூரர்க்கு ஒன்றுமே
புரியவில்லை. என்றாலும் மறையவர் தீர்ப்புப்படி அந்தணருக்கு அடிமையாகி,
அவையோர் தீர்ப்புக்கு தலை வணங்கினார். அவையோர், அம்முதியவரைப் பார்த்து,
ஐயனே! ஓலையில் நீவிர் வெண்ணெய்நல்லூர் என்று குறிப்பிட்டுள்ளீர்களே,
இவ்வூரில் உமது இருப்பிடம் எங்கே என்று எங்களுக்குக் காட்டுவீராக என்று
கேட்டனர். எம்பெருமான், அவர்களை அழைத்துக் கொண்டு தம் இருப்பிடத்தைக்
காட்டுவதற்காக வேண்டி அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்கின்ற திருக்கோவிலை
நோக்கி புறப்பட்டார். சுந்தரர் உள்பட அனைவரும் அந்தணரைப் பின் தொடர்ந்தனர்.
திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அக்கோயிலுள் அம்முதியோர் புகுந்து மறைந்தார்.
ஆரூரரும் அவர்பின் வந்தவர்களும் நெடுநேம் காத்திருந்தார்கள். அந்தணரைக்
காணாமல் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். ஆனால் ஆரூரர் மட்டும்,
வாயிலிலேயே நின்று கொண்டிருந்தார். இப்பெரியவர் கோயிலுள் புகுந்து
திரும்பாதது ஏன்? என்று ஆரூரர் எம்பெருமான் மீது பூண்டுள்ள அளவற்ற அன்பின்
காரணமாக சிந்திக்கத் தொடங்கினார். ஆரூரர் மட்டும் தனியே அந்தணரைத் தேடி
கோயிலெங்கும் அலைந்தார். அவர் கண்களில் நீர் மல்கியது. கோயிலøச் சுற்றி
சுற்றி வந்து உடல் தளர்ந்தது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாகிய
எம்பெருமான்தான் இன்று தன்னை ஆட்கொண்ட அந்தணர் என்பதை உணர்ந்த ஆரூரர்,
எப்படியும் என் ஐயனை இன்று காணவேண்டும் என்று அன்பின் மிகுதியால்
நினைத்துக் கொண்டார். ஆலயத்தினை வலம் வந்தார். எங்கு தேடியும் தேவாதி
தேவனைக் காணவில்லை. அப்பொழுது கோயிலுள் பேரொளி பிறந்தது. முதிய அந்தணர்
வடிவிலே, வந்து ஆரூரரை அடிமைகொண்ட ஆனந்தக் கூத்தன், அருள் வடிவமாய்-ஆனந்த
மூர்த்தியாய் - உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். ஆலயத்தில் மணி
பலத்த ஓசையை எழுப்பியது. தேவாதி தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். தேவகணங்கள்
இசை முழக்கம் செய்தனர். ஆரூரானுக்கு ஆனந்தக் காட்சியளித்த அம்மையப்பர்
திருவாய் மலர்ந்து, அன்பிற்கினிய ஆலால சுந்தரா! பூர்வத்திலேயே நீ என் அரிய
தொண்டன், அன்று நீ மாதர் மயக்கத்தில் மதி இழந்தமையால் தான் மானிடப்பிறவி
எடுக்க நேர்ந்தது. மீண்டும் பிறவிப் பெருங்கடல் உன்னைத் தொடராவண்ணம் உன்
விருப்பப்படியே உன்னை தடுத்தாட் கொண்டோம் என்று அருளினார். தாய்ப்பசுவின்
குரலைக் கேட்டு களிக்கும் கன்று போல் குழைந்தார் ஆரூரர்! அவருக்கு ஏற்பட்ட
பேரானந்தத்திற்கு எல்லையே இல்லை. அவர் உடல் புளகம் போர்த்தது. தலைமீது
தூக்கிய கரங்களை அவரால் தாழ்த்தவே முடியவில்லை. அப்படியே வணங்கி எழுந்தார்.
இறைவன் ஆரூரரை வாழ்த்தி, நீ எம்முடன் வன்மையாகப் பேசியதால் வன்றொண்டான்
என்று உனக்குத் திருநாமம் சூட்டுகிறேன். எம்மை நீ தமிழ்ப்பாக்களால்
அர்ச்சனை செய்வாயாக! என்று அன்பு கட்டளை இட்டார். சுந்தரர், ஆண்டவனின்
கருணை வெள்ளத்தில் மூழ்கினார். பக்தி பிரவாகத்தில் மூழ்கி வழி தெரியாமல்
தவித்தார். தடுத்தாட்கொண்ட தம்பிரான் தமிழாற் பாடுக என்றதால் சுந்தரர்
சிந்தை மகிழ்ந்து எம்பெருமானின் சேவடிகளை வணங்கி நின்றார். நான்முகனாலும்,
திருமாலாலும் அறிய முடியாத வரும், ஐந்தெழுத்தின் உட்பொருளாக
விளங்குபவருமாகிய சிவபெருமான், தம்மைப் பாடு என்று அருளியது கேட்டு,
வேதியனாகி வந்து என்னை வழக்கினால் வென்று அடிமை கொண்ட தேவரீர்
திருவுள்ளத்தை எளியோன் உணர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் உள்ளத்துக்கு
உணர்வு அளித்து, என்னை ஆண்டருளிய ஆதியே! அரனே! அருட்பெருங்கடலே! யான்
யாதும் அறிந்திலேனே! இச்சிறியோன் யாது கூறிப் பாடவல்லேன்? தேவரீரது கருணையை
என்னென்பேன்? என்று சுந்தரர் விண்ணப்பித்து, உருகி நின்றார். இறைவன்
தம்பிரான் தோழரைப் பார்த்து, உன்னை ஆட்கொண்ட போது எம்மை பித்தா! என்று
அழைத்தாய், ஆதலின் பித்தா என்று அடி எடுத்துப்பாடுவாயாக! என்று திருவாய்
மலர்ந்து அருளினார். சுந்தமூர்த்தி சுவாமிகள், உள்ளமும் உடலும் பொங்கிப்
பூரிக்க ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறே, பித்தா பிறைசூடி
பெருமானே அருளாளா! என்று அடி எடுத்து, தடுத்தாட்கொண்ட தம்பிரான் மீது
திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். சுந்தரரின் இசைத்தமிழ் இன்ப
வெள்ளத்திலே மூழ்கி மிதந்த எம்பெருமான், சுந்தரர்க்கு திருவருள் புரிந்து
மறைந்தார். சுந்தரர், சிந்தை மகிழ திருநாவலூர் திரும்பினார். அங்கு
எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் மீதும் திருப்பதிகங்களைப் பாடினார்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:23

இரும்பைக் காந்தம் கவர்ந்தாற்போல் ஆரூரரும் பின் சென்றார். சுற்றமும்,
நட்பும் ஆரூரரைப் பின்தொடர்ந்து சென்றன. திருமண மன்றம் வழக்காடும்
மன்றமானது. மணப்பந்தல் சோகத்தில் மூழ்கியது. அந்தணர் முன்வர அனைவரும்
வெண்ணெய்நல்லூர் அவையை வந்தடைந்தனர். அவையோர் முன்னால் அந்தணர் தமது
வழக்கைச் சமர்ப்பித்தார். செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்களே! இந்நாவலூரன்
என் அடிமை! அதற்கு சான்றாக இருந்த அடிமை ஓலையை, என்னிடமிருந்து பிடுங்கி,
கிழித்து எறிந்துவிட்டான். அவைக்கு இவனை அழைத்து வந்துள்ளேன். இந்த ஏழை
அந்தணரின் முறைபாட்டை சீர் தூக்கிப் பார்த்து உண்மைக்கு தீர்ப்பளியுங்கள்.
முதியவரே! யாது மொழிந்தீர்? அந்தணர் அடிமையாவது என்பது இவ்வுலகில் இதுவரை
நடந்த வழக்கமாகத் தெரியவில்லையே! இதுபோன்ற வழக்கை அவை மட்டுமல்ல, இந்த
அகிலமே இப்பொழுதுதான் சந்திக்கிறது. புதுமையான வழக்குதான் இது! முதியவர்
மொழிந்ததைக் கேட்டு அவையோர் நகைத்துக் கொண்டே மேற்கண்டவாறு கூறினர். இவன்
கிழித்த ஓலை, இன்று நேற்று எழுதப்பட்டதல்ல. பண்டுதொட்டு பாதுகாக்கப்பட்டு
வருவது! ஒரு உடன்பாட்டின் மூலம் இவன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்தது!
இப்படியிருக்க எப்படி என் வழக்கை நீங்கள் அர்த்தமற்றது என்று கேலி பேச
முடியும்? அப்படியா? நன்று வேதியரே நன்று, என்று அந்தணருக்கு ஆறுதல் மொழி
பகர்ந்த அவையோர், நம்பியாரூரரை நோக்கி முதியோர்கள் உடன்பாட்டுடன் எழுதிய
ஓலையை வலிய வாங்கிக் கிழித்தது பிழை! வயது முதிர்ந்த, இப்பெரியோர் தமது
வழக்கைக் கூறிவிட்டார். இதுபற்றி உம்முடைய எண்ணம் யாதோ? என்று கேட்டனர்.
முதியவரின் மாயத்திற்கு முன்னால் நான் என்ன சொல்ல இருக்கிறது? இவர் வழக்கு
எனக்கே விளங்காத புதிராக இருக்கிறது! ஆரூரர் சுற்றி வளைத்து, அவையில் பேச
விரும்பாது, சுருக்கமாகவே கூறி முடித்தார். எல்லா நூல்களையும் கற்று
உணர்ந்த பெரியோர்கள், நம்பியாரூரர் ஆதிசைவர்! அவர் ஒருபோதும் முறை தவறி
நடக்கமாட்டார் என்பதை எண்ணி பார்த்து வேதியரிடம், முதியவரே! இவ்வழக்கு
மிக்க கொடியது! இவர் உம்முடைய அடிமை என்பதை ஆதாரத்தோடு அவை அறியச் செய்தல்
வேண்டும். ஆட்சி முறையிலாவது அன்றி சாட்சி, மூலமாவது அன்றி உடன்படிக்கை ஓலை
மூலமாவது, உமது வாதத்தை உண்மை என்று நிரூபித்துக் காட்டுவீராகுக! என்று
பணித்தனர். அவையோர் ஒருமித்துக் கூறியதைக் கேட்டு, வேதியர் மகிழ்ச்சி
பொங்க, அவையோரைப் பார்த்து, முன்னர் இவன் கிழித்தது நகல் ஓலையே! இவன்
இப்படி செய்தாலும் செய்வான் என்று அறிந்துதான், மூல ஓலையை முன்கூட்டியே
பத்திராக வைத்துள்ளேன்! என்றார். அப்படியானால் மூல ஓலையைக் காட்டுங்கள்.
காட்டுகிறேன். ஆனால் இவன் முன்போல மீண்டும் இந்த மூல ஓலையையும்
கிழித்துவிட்டால் நான் என்ன செய்வேன்? அவையோர் முன்னால், இத்தகைய தவறான
நிகழ்ச்சி எதுவும் நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீவிர்
தைரியமாக ஓலையைக் காட்டலாம். வேதமுதல்வன், ஆரூரருக்கு பயப்படுபவரைப் போல்
பாவனை செய்தவண்ணம், மூலஓலையை எடுத்து அவையோரிடம் கொடுத்தார். அவையோர்
ஆணைப்படி, கணக்கன் ஓலையை வாங்கிப் படித்தான். அவ்வோலையில் பின்வருமாறு
எழுதியிருந்தது. திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் என்னும்
பெயருடைய நான், திருவெண்ணெய்நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும்
என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமை தொழில் செய்து வருவோம்
என்பதற்காக உள்ளும் புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்தேன். இதற்கு இஃது
என் கையெழுத்து. இம்மணிவாசகத்தைக் கணக்கன் வாசிக்கக் கேட்ட அவையோர், ஓலையை
வாங்கிப் பார்த்தனர். சாட்சிக் கையெழுத்து இட்டார்கள் கூட இஃது தங்கள்
கையெழுத்துதான் என்பதனை ஒப்புக் கொண்டனர்.ஆரூரரின் பாட்டனாரின்
கையெழுத்தைச் சரிபார்க்கும் பொருட்டு, அவர் எழுதிய வேறு சில ஓலைகளையும்
கொண்டுவரச் சொல்லி அதையும் சரிபார்த்தனர்.அவையோர் அந்தணர் கூறுவது முறைதான்
என்று ஒப்புக்கொண்டனர்.

ஆரூரன் அந்தணருக்கு அடிமையாய்ப் பணிசெய்வது
தான் கடமை, என்று தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள். ஆரூரர்க்கு ஒன்றுமே
புரியவில்லை. என்றாலும் மறையவர் தீர்ப்புப்படி அந்தணருக்கு அடிமையாகி,
அவையோர் தீர்ப்புக்கு தலை வணங்கினார். அவையோர், அம்முதியவரைப் பார்த்து,
ஐயனே! ஓலையில் நீவிர் வெண்ணெய்நல்லூர் என்று குறிப்பிட்டுள்ளீர்களே,
இவ்வூரில் உமது இருப்பிடம் எங்கே என்று எங்களுக்குக் காட்டுவீராக என்று
கேட்டனர். எம்பெருமான், அவர்களை அழைத்துக் கொண்டு தம் இருப்பிடத்தைக்
காட்டுவதற்காக வேண்டி அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்கின்ற திருக்கோவிலை
நோக்கி புறப்பட்டார். சுந்தரர் உள்பட அனைவரும் அந்தணரைப் பின் தொடர்ந்தனர்.
திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அக்கோயிலுள் அம்முதியோர் புகுந்து மறைந்தார்.
ஆரூரரும் அவர்பின் வந்தவர்களும் நெடுநேம் காத்திருந்தார்கள். அந்தணரைக்
காணாமல் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். ஆனால் ஆரூரர் மட்டும்,
வாயிலிலேயே நின்று கொண்டிருந்தார். இப்பெரியவர் கோயிலுள் புகுந்து
திரும்பாதது ஏன்? என்று ஆரூரர் எம்பெருமான் மீது பூண்டுள்ள அளவற்ற அன்பின்
காரணமாக சிந்திக்கத் தொடங்கினார். ஆரூரர் மட்டும் தனியே அந்தணரைத் தேடி
கோயிலெங்கும் அலைந்தார். அவர் கண்களில் நீர் மல்கியது. கோயிலøச் சுற்றி
சுற்றி வந்து உடல் தளர்ந்தது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாகிய
எம்பெருமான்தான் இன்று தன்னை ஆட்கொண்ட அந்தணர் என்பதை உணர்ந்த ஆரூரர்,
எப்படியும் என் ஐயனை இன்று காணவேண்டும் என்று அன்பின் மிகுதியால்
நினைத்துக் கொண்டார். ஆலயத்தினை வலம் வந்தார். எங்கு தேடியும் தேவாதி
தேவனைக் காணவில்லை. அப்பொழுது கோயிலுள் பேரொளி பிறந்தது. முதிய அந்தணர்
வடிவிலே, வந்து ஆரூரரை அடிமைகொண்ட ஆனந்தக் கூத்தன், அருள் வடிவமாய்-ஆனந்த
மூர்த்தியாய் - உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். ஆலயத்தில் மணி
பலத்த ஓசையை எழுப்பியது. தேவாதி தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். தேவகணங்கள்
இசை முழக்கம் செய்தனர். ஆரூரானுக்கு ஆனந்தக் காட்சியளித்த அம்மையப்பர்
திருவாய் மலர்ந்து, அன்பிற்கினிய ஆலால சுந்தரா! பூர்வத்திலேயே நீ என் அரிய
தொண்டன், அன்று நீ மாதர் மயக்கத்தில் மதி இழந்தமையால் தான் மானிடப்பிறவி
எடுக்க நேர்ந்தது. மீண்டும் பிறவிப் பெருங்கடல் உன்னைத் தொடராவண்ணம் உன்
விருப்பப்படியே உன்னை தடுத்தாட் கொண்டோம் என்று அருளினார். தாய்ப்பசுவின்
குரலைக் கேட்டு களிக்கும் கன்று போல் குழைந்தார் ஆரூரர்! அவருக்கு ஏற்பட்ட
பேரானந்தத்திற்கு எல்லையே இல்லை. அவர் உடல் புளகம் போர்த்தது. தலைமீது
தூக்கிய கரங்களை அவரால் தாழ்த்தவே முடியவில்லை. அப்படியே வணங்கி எழுந்தார்.
இறைவன் ஆரூரரை வாழ்த்தி, நீ எம்முடன் வன்மையாகப் பேசியதால் வன்றொண்டான்
என்று உனக்குத் திருநாமம் சூட்டுகிறேன். எம்மை நீ தமிழ்ப்பாக்களால்
அர்ச்சனை செய்வாயாக! என்று அன்பு கட்டளை இட்டார். சுந்தரர், ஆண்டவனின்
கருணை வெள்ளத்தில் மூழ்கினார். பக்தி பிரவாகத்தில் மூழ்கி வழி தெரியாமல்
தவித்தார். தடுத்தாட்கொண்ட தம்பிரான் தமிழாற் பாடுக என்றதால் சுந்தரர்
சிந்தை மகிழ்ந்து எம்பெருமானின் சேவடிகளை வணங்கி நின்றார். நான்முகனாலும்,
திருமாலாலும் அறிய முடியாத வரும், ஐந்தெழுத்தின் உட்பொருளாக
விளங்குபவருமாகிய சிவபெருமான், தம்மைப் பாடு என்று அருளியது கேட்டு,
வேதியனாகி வந்து என்னை வழக்கினால் வென்று அடிமை கொண்ட தேவரீர்
திருவுள்ளத்தை எளியோன் உணர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் உள்ளத்துக்கு
உணர்வு அளித்து, என்னை ஆண்டருளிய ஆதியே! அரனே! அருட்பெருங்கடலே! யான்
யாதும் அறிந்திலேனே! இச்சிறியோன் யாது கூறிப் பாடவல்லேன்? தேவரீரது கருணையை
என்னென்பேன்? என்று சுந்தரர் விண்ணப்பித்து, உருகி நின்றார். இறைவன்
தம்பிரான் தோழரைப் பார்த்து, உன்னை ஆட்கொண்ட போது எம்மை பித்தா! என்று
அழைத்தாய், ஆதலின் பித்தா என்று அடி எடுத்துப்பாடுவாயாக! என்று திருவாய்
மலர்ந்து அருளினார். சுந்தமூர்த்தி சுவாமிகள், உள்ளமும் உடலும் பொங்கிப்
பூரிக்க ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறே, பித்தா பிறைசூடி
பெருமானே அருளாளா! என்று அடி எடுத்து, தடுத்தாட்கொண்ட தம்பிரான் மீது
திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். சுந்தரரின் இசைத்தமிழ் இன்ப
வெள்ளத்திலே மூழ்கி மிதந்த எம்பெருமான், சுந்தரர்க்கு திருவருள் புரிந்து
மறைந்தார். சுந்தரர், சிந்தை மகிழ திருநாவலூர் திரும்பினார். அங்கு
எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் மீதும் திருப்பதிகங்களைப் பாடினார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:23

எம்பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட் கொண்டதால் அவரது
திருமணம் தடைப்பட்டது. சடங்கவியாருடைய அருந்தவப் புதல்வியும், ஆரூரரையே
மனக்கோயிலில் தெய்வமாக இருத்தி, அவரது நினைவாலேயே சிவலோகத்தைச் சுலபமாகச்
சேரும் பிறவாப் பெருவாழ்வைப் பெற்றார்கள். திருநாவலூர் கோயிலில்
எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் பாதகமலங்களைப் பணிந்து வழிபட்டு வந்த
சுந்தரர், தலங்கள் தோறும் யாத்திரை செய்து பரமனைப் பைந்தமிழால் பாடிப்
பரவசமடைய எண்ணினார். ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு, அருகேயுள்ள துறையூரை
வந்தடைந்தார். துறையூருறையும் அண்ணலைப் பணிந்து, தவநெறியைத் தந்தருள
வேண்டும் என்று பைந்தமிழ் பாப்பாடி வழிபட்டார். இறைவனும் தவநெறியை அவருக்கு
அருளினார். பின்னர் அங்கிருந்து தில்லைக்குப் புறப்பட்டார். பெண்ணை
ஆற்றைக் கடந்து திருவதிகை என்னும் தலத்தை அடைந்தார் சுந்தரர்.
அத்திருத்தலம், நாவுக்கரசரால் உலகம் போற்ற உழவாரப் படைக்கொண்டு,
எம்பெருமானுக்கு சிவத்தொண்டு புரிந்த புண்ணியத்தலம். அதை உணர்ந்த சுந்தரர்,
தமக்கு அந்த இடத்தில் தங்குவதற்கு தகுந்த இடம் கிடையாது என்று அஞ்சியவாறு,
அருகிலுள்ள சித்தவடம் என்னும் இடத்திற்கு சென்று தங்கினார். எம்பெருமான்
திருநாமத்தை மனதில் நினைத்தபடியே துயின்றார்.அப்பொழுது, திருவதிகைப்
பெருமான், முதிய வேதியர் வடிவம் தாங்கி, எவருமறியாவண்ணம் சுந்தரர் துயிலும்
மடத்துள் எழுந்தருளினார். சுந்தரர் சிரமீது தமது திருவடி படுமாறு வைத்து,
தாமும் தூங்குபவர் போல் கிடந்தார். பரமனின் பாதம்பட்டு சுந்தரர்
விழித்தெழுந்தார். தமது தலையருகே, இரு திருப்பாதங்கள் இருக்க கண்டார்.
சுந்தரர் சற்று தலையை உயர்த்திப் பார்த்தார். அங்கு எவரோ படுத்திருக்கக்
கண்டார். சுந்தரர் அவரை நோக்கி, ஐயா! உம்முடைய பாதங்கள் என் தலை மீது
படும்படியாக வைத்து துயின்றது ஏனோ? என்று கேட்டார். அப்பொழுதுதான்
விழித்தவர் போல் அப்பெரியவர், எம் முதுமையால் நடந்த இச்சிறு பிழையைப்
பொறுத்திடல் வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரர்,
அப்பெரியவர் கூறியதின் உண்மையை உணர்ந்து, மற்றோர் இடம் சென்று முன் போல்
துயில் கொண்டார். இம்முறையும் அம்மாயவன், வேண்டுமென்றே சுந்தரர் அருகே
சென்று, அவருடைய தலை மீது தமது பாதம் படும்படியாக துயின்றார். சுந்தரர்
முன்போல் எழுந்து பார்த்தார். பெரியவரின் பாதங்களைக் கண்டார். எது கருதி
இவ்வேதியர் இவ்வாறு செய்கிறார்? என்று தனக்குள் எண்ணியவாராக அவரை நோக்கி,
தாங்கள் யார்? என்று கேட்டார். என்னை நீ இன்னாரென்று அறியவில்லையே? என்று
கூறியவாறு மாயமாக மறைந்தார். எம்பெருமான் மறைந்ததும் சுந்தரர் மனம்
உருகினார். வேத முதல்வனே! மாதொரு பாகனே! ஆலமுண்ட அண்ணலே! உமது
இத்திருவிளையாடல்களை அறியாது போனேனே! இறுமாப்படைந்தேனே! எம்பெருமானே! உமது
பாதகமலங்கள் என் தலைமீது டப எத்துணைத் தவம் செய்தேனோ? தில்லை நடராஜத்
தேவனே! எம்மை ஆட்கொண்ட அம்பலத்து அரசே! உமது திருவடிகளை இவ்வெளியோன்
சிரமீது வைத்து தீட்சை தந்தருளினீரே! என்றெல்லாம் தம் அறியாமையை எண்ணி
வருந்தினார். தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கித் திருப்பதிகம்
ஒன்றைப் பாடினார். பின்னர் தாளாத மன வேதனையுடன் துயின்றார். மறுநாள்
அங்கிருந்து தில்லைக்குப் புறப்பட்டு சென்றார். தில்லையின் எல்லையில்
நின்று தூலலிங்கமாகிய கோபுரத்தைக் கண்டு ஆராக்காதல் பூண்டு நிலமதில்
வீழ்ந்து வணங்கி, சிரமீது கரந்தூக்கி நின்றார் சுந்தரர். தில்லைவாழ்
அந்தணர்கள் எம்பெருமானின் திருவருளால் சுந்தரரின் வருகையை முன்னதாகவே
அறிந்திருந்தனர். அவர்கள் அவரை மிக்கச் சிறப்போடும் கோலாகலத்தோடும்
எல்லையில் எதிர்கொண்டு வரவேற்றனர். சுந்தரர் தில்லைவாழ் அந்தணர்களை வணங்கி
பேரன்புப் பெருக்கோடு சிற்றம்பலத்தை அடைந்தார்.

பொன்னம்பலத்தைக்
கூப்பிய கரத்துடன் பன்முறை வலம்வந்த சுந்தரர் வேதச் சிலம்பு ஒலிக்க ஆனந்தத்
தாண்டவம் ஆடும் சிற்றம்பலத்துப் பேரரசரின் திருச்சந்நதியைக் கண்டார்.
பக்திப் பெருக்கின் அருள் ஒளியில், விழிகளைத் தவிர மற்ற எல்லா அவயங்களும்
ஒடுங்கிப் போயின. கண்களிலே பேரின்பம் பெருக ஈசனைக் கண்குளிரக் கண்டார்;
உளம் குழைய சேவித்தார். மது உண்ட வண்டு போலானார். மனம், புத்தி, சித்தம்,
அகங்காரம் என்ற நான்கு கரணங்களின் செயல்களும், சிந்தையில் ஒன்றி ஒடுங்க,
தில்லையம்பலத்தரசரின் ஆனந்தக் காட்சியில் மூழ்கினார்; பக்தி வெள்ளத்தில்
பொங்கித் ததும்பினார்; பதிகங்கள் பல பாடி மகிழ்ந்தார் சுந்தரர்! அப்பொழுது
வானவீதி வழியாக இறைவன், சுந்தரா! எம்மை சந்திக்க நீ ஆரூருக்கு வருவாயாக!
என்று அசரீரியாக மொழிந்தார். எம்பெருமானின் இவ்வாணையைச் சென்னி மீது
சுமந்து புறப்பட்ட ஆரூரர், தில்லையை விட்டுச் செல்ல மனமில்லாமல் எல்லையில்
நின்றவாறே உளம் உருகினார். நமச்சிவாய நாமத்தை மனதிலே தியானித்துக் கொண்டே
கொள்ளிட நதியைக் கடந்து புறப்பட்டார். சீர்காழியை அணுகிய சுந்தரர்,
ஞானசம்பந்தர் அவதாரம் செய்த அத்தலத்துள் செல்ல அஞ்சி நடுங்கினார்.
அந்நகரின் எல்லைப் புறத்தே நின்று வணங்கினார். அப்பொழுது, திருத்தோணியப்பர்
உமையாளுடன் இடபத்தின் மேல் எழுந்தருளினார். அந்தப் பேரின்பக் காட்சியைக்
கண்டுகளித்து கொண்டிருந்த சுந்தரர், தோணியப்பரை பதிகம் ஒன்றைப் பாடிப்
போற்றினார். அங்கிருந்து புறப்பட்ட சுந்தரர், திருக்கோலக்கா,
திருப்புன்கூர், மாயூரம், அம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய
சிவத்தலங்களைத் தரிசித்தவண்ணம் திருவாரூரின் எல்லையை வந்தடைந்தார்.
நீராருஞ் சடைமுடிமேல் நிலவணிந்த அண்ணல், சுந்தரரின் வருகையை, திருவாரூர்
சிவனடியார்களுக்கு முன்கூட்டியே உணர்த்த எண்ணினார்.ஐயன் அவ்வன்பர்களது
கனவில் எழுந்தருளி, என் அழைப்பிற்கு இணங்கி எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட
தொண்டன் நம்பியாரூரன் மகிழ்வுடன் இங்கு வருகின்றான். அவனை எதிர்கொண்டு
அழைத்து வருவீர்களாகுக! என்று பணித்தார். அக்கணமே தொண்டர்கள்,
எம்பெருமானின் கட்டளையை, அவ்வூர் மக்கள் அனைவருக்கும் அறிவித்தனர்.
தொண்டர்களும், சிவ அன்பர்களும், சுந்தரரது பெருமையை வியந்து, அவரை வரவேற்க
நகரை நன்கு அலங்கரித்தனர். அறம்பேணும் வீடுகளிலும், பக்தித்திறம் காணும்
பெருவீதிகளிலும் மாலைகளும், தோரணங்களும், வாழை மரங்களும் அழகோடு கட்டினர்.
வீதிகளைக் கோமய நீரால் சுத்தப்படுத்திப் பனிநீரைப் பொழிந்தனர். வீட்டுத்
திண்ணைகளில் சந்தனக் குழம்பால் மெழுகி, மாக்கோலமிட்டு, பொரிகளையும்,
பொற்சுண்ணங்களையும், முத்துக்களையும் பரப்பி, மணிவிளக்கும், சரவிளக்கும்
நிறைகுடமும், பொற்பாலிகைகளும் வைத்தனர். ஆங்காங்கே பெரும் பந்தல்கள்
அமைத்தனர். மலர்மாலைகளைக் கட்டித் தொங்கவிட்டனர். திருவாரூர் தேவலோகம் போல்
காட்சி அளித்தது. பெருங்கடல் ஊருக்குள் நுழைந்தாற்போல் சிவ அன்பர்களும்,
தொண்டர்களும் பொங்கி வழிந்தனர். சுந்தரரைப் பூரண பொற்கும்ப கலசங்களோடு
வணங்கி வரவேற்றனர். பேரிகை முழங்க மங்கல வாத்தியங்கள் ஒலி எழுப்ப சிவ சிவ
என்ற வேத ஒலி விண்ணை முட்டியது. தேவர்கள் ஆகாயத்திலிருந்து ஆரவாரம் செய்து
பூமழை பொழிந்தனர். தேவதுந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களும், தேவ
தேவாதியர்கள் வாழ்த்தி துதி பாடினர். அன்பர்களும், அடியார்களும் புடைசூழ
திருக்கோயிலுக்குப் புறப்பட்ட சுந்தரர், எந்தை இருப்பதும் ஆரூர்! அவர்
எம்மையும் ஆள்வரோ? கேளீர்! என்ற பதிகத்தைப் பாடியவண்ணம் கோயிலுள்
நுழைந்தார். தேவாசிரிய மண்டபத்தை வணங்கித் துதித்தார். எம்பெருமானை
நினைத்து நினைத்து ஊனும், உயிரும் உருகி உருகி கண்ணீர் வடித்தார் சுந்தரர்!
ஆறாக் காதலை ஆரூர்ப் பெருமான் மீது மழையெனப் பொழிந்தார். எல்லையில்லா
பக்திப் பெருக்கிலே, சிரமீது கரங்குவித்து, பரம்பொருளின் பாதகமலங்களில்
வீழ்ந்து வணங்கினார். செந்தமிழ்த்தேன் சிந்த பக்தி சுவையோடு, இன்னிசை
கலந்த, பதிகம் ஒன்றைப் பாடினார். எம்பிரானுடைய திருவடி எனும்
திருப்பாற்கடலிலே மூழ்கினார். அப்பொழுது திருவாரூர் திருக்கோயிலில்
எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமான், ஆலால சுந்தரனே! நாம் உமக்குத்
தோழராகிவிட்டோம். அன்று உம்மைத் திருநாவலூர் மணப்பந்தலிலே தடுத்தாட்
கொண்டோம். ஆனால், இப்பொழுது முன்போல் மணக்கோலம் பூண்டு வாழ்வில்
என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அருள்கின்றோம் என்று வானவழியே அசரீரி
வாக்கினால் உணர்த்தினார்! விண்வழியே வண்ணப் பிறையணிந்த வேணிபிரான்
மொழிந்ததைக் கேட்டு சுந்தரர் சிந்தை குளிர்ந்தார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:24

திருவாரூர்ப் பெருமானே! என்னை ஆட்கொண்டு, அருளிய உன் கருணையை என்னென்பது!
உன் அன்பின் திறத்தினை எப்படித்தான் பாடிப் புகழ்வேன்? ஆரூர் அமர்ந்த
திருமாமணியே! உம்மை எப்படி மகிழ்ந்து பாடுவேன் என்று இறைஞ்சினார். இறைவனால்
தோழராக்கிக் கொள்ளப்பட்ட சுந்தரர் அன்று முதல் தம்பிரான் தோழர் என்ற
திருநாமத்தைப் பெற்றார். அனைவரும், சுந்தரரை அவ்வாறே அழைப்பாராயினர்.
சுந்தரர் திருவாரூரில் சிலகாலம் தங்கியிருந்து, தியாகேசப் பெருமானை இனிது
சேவித்து, தேனினும் இனிய தண் தமிழ்ப் பாக்களால், பாமாலை சாத்தினார். கைலாய
மலையிலே, ஆலால சுந்தரர் விரும்பிப் பார்த்த உமாதேவியாரின் சேடியர் இருவருள்
ஒருத்தியாகிய கமலினி என்பவள், திருவாரூரில், உருத்திர கணிகையர் மரபில்
பரவையார் என்னும் பெயருடன் பிறந்து வளர்ந்து வரலானாள். பரவையார், இளமை
முதற்கொண்டே சிவனாரிடத்தும், அவர் தம் அடியார்களிடத்தும் எல்லையில்லா பக்தி
கொண்டிருந்தாள். தினந்தோறும் வைகறைத் துயிலெழுந்து, தூய நீராடி,
கோயிலுக்கு சென்று தியாகேசப் பெருமானை தரிசித்து வந்தாள் பரவையார்.
வழக்கம்போல பரவையார் தமது சேடிகளுடன் கோயிலுக்கு வந்திருந்தாள். அது சமயம்
சுந்தரரும், அன்பர்கள் புடைசூழ ஆலயம் வந்திருந்தார். கோயிலுள் பரவையாரும்
சுந்தரரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் நோக்குகின்ற சந்தர்ப்பம்
ஏற்பட்டது. சுந்தரர், பரவையாரின் அழகைக் கண்டு சற்று நேரம் மெய் மறந்து
நின்றார். பரவையாரும் சுந்தரரின் சுந்தர ரூபலாவண்யத்தில் தன்னை மறந்து ஒரு
கணம் சிலையாக நின்றாள். இருவரது கண்களும் சந்தித்தன. உள்ளங்களும் உறவாடின.
சுந்தரரின் அழகிலே மதிமயங்கிய பரவையார், முருகப்பெருமானோ? அன்றி மன்மதனோ?
வித்தியாதரனோ? அரனாரின் அருள்பெற்ற அடியவனோ? இவர் இன்னாரென்பதே
புரியவில்லையே! எந்த ஆடவரையும் தீண்டாத என் மனம், எப்படியோ இவர்பால் சென்று
பனிபோல் ஓடிவிட்டதே! என்றெல்லாம் மனத்தால் எண்ணி வியந்தாள். காதல்
கனிந்துருக, தளிர்க்கால்கள் தளர்நடை பயில, தன் உள்ளத்தை அவர்பால் ஈந்து
இல்லத்திற்கு புறப்பட்டாள் பரவையார்! பரவையார் சென்ற பின்னர், மனதிலே அவளை
நினைத்துருகலானார் சுந்தரர். அருகில் இருந்தோரைக் கேட்டு பரவையாரின்
பெயரையும், அவள் இருப்பிடத்தையும், பெற்றோர்களையும் பற்றித் தெரிந்து
கொண்டார் சுந்தரர்! பக்தி உள்ளத்தில் காதல் விதை ஊன்ற, பரமன் நினைவோடும்,
பரவையார் நினைவோடும் இறைவனை வணங்கி, தேவாசிரிய மண்டபத்தை வந்தடைந்தார்.
பரவையார் நினைவாக அங்கேயே தங்கிவிட்டார் சுந்தரர். பகலவன் மேற்குக் கடலில்
மறைந்தான். எம்பெருமானின் திருவைந்தெழுத்தை உணரப் பெறாத அறிவற்ற வஞ்சகர்
நெஞ்சம்போல், பெரிய வானத்தில் இருள் சூழந்து படர்ந்தது. திருவெண்ணீற்றின்
தூய ஒளி போன்ற திங்கள், பாருக்குப் பாலைப் பொழிந்த வண்ணம் வானத்திலே பொங்கி
எழுந்தது. நிலவிலே அல்லி மலர்ந்தது. குளிர் தென்றல் மிதமாக வீசிக்
கொண்டிருந்தது. தேவாசிரிய மண்டபத்திலிருந்த சுந்தரர்க்கு குளிர் நிலவும்,
குளிர் தென்றலும், காமன் தொடுத்த கணையால் துன்பத்தை கொடுத்தன. அதே வெள்ளி
நிலவின் பொன்னொளியில் பரவையாரும், நிலாமுற்ற மேடையில் நவரத்தினங்களால் அழகு
செய்யப்பட்ட அழகிய மலர் தூவிய மஞ்சத்தில், தோழியருடன் அமர்ந்திருந்தாள்.
பரவையாருக்கும் சுந்தரர் நிலைதான்! பரவையார் தோழியரைப் பார்த்து, என்
உயிர்த்தோழியர்களே! நாம் பூங்கோயிலுக்குள் நுழையும் போது சந்தித்த அந்த
சுந்தர அழகன் யார்? என்று ஏக்கத்தோடு வினவினாள். அதற்கு தோழியருள் ஒருத்தி
ஓ! அவரா தலைவி! அவர்தான் தம்பிரான் தோழர் என்பவர். அவர் எம்பெருமான்
திருவருளால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர். எம்பெருமானின் அன்புத்தொண்டர்!
உங்கள் சுந்தரர்-நம்பியாரூரர்! என்று விடையிறுத்தாள். தோழியர் மொழிந்ததைக்
கேட்டு, பரவையார் சுந்தரர் மீது மேலும் மையல் கொண்டாள். காதல் மேலிட்டு
பெருமூச் செறிந்தாள். மன்மதன் தொடுத்த மலர்க்கணையில் மனம் வாடி
மலர்ப்படுக்கையில் மயங்கிய நிலையில் வீழ்ந்தாள் பரவையார். உணவு
செல்லவில்லை; உறக்கம் கொள்ளவில்லை, மலர் பிடிக்கவில்லை; பஞ்சணை நொந்தது.
மனம் வாடினாள். வருந்தினாள். காதல் கடலில் வீழ்ந்து கரையேறமுடியாது
தவித்தாள்.

ஆலாலசுந்தரரையும், கமலினியையும் இம்மண்ணுலகில்
பிறக்குமாறு கட்டளையிட்டருளிய பெருமான் அன்றிரவு தம் அடியவர் கனவில்
எழுந்தருளி, பரவையாருக்கும், சுந்தரருக்கும் திருமணம் செய்து வையுங்கள்
என்று பணித்தார். பின்னர் இறைவன் சுந்தரர் கனவில் எழுந்தருளி, பரவையாரை
உனக்கு மணம் செய்து வைக்குமாறு எமது அடியவர்கட்கு ஆணையிட்டுள்ளோம் என்று
அருளியபடியே, பரவையார் கனவிலும் தோன்றி, உன்னைத் தம்பிரான்தோழன் திருமணம்
புரிந்து கொள்வான் என்றும் திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். பொழுது
புலர்ந்தது! சிவநேச செல்வர்கள் திரளாக வந்து சுந்தரரை வணங்கினர். இறைவன்
கனவிலே தோன்றி தங்களுக்கு பணித்த அன்பு கட்டளையைக் கூறினர். சுந்தரர்
அகமும் முகமும் மலர்ந்தார். அதுபோலவே அவ்வன்பர்கள், பரவையாரையும் சந்தித்து
சர்வேசுவரனின் சித்தத்தைச் சொல்லினர். பரவையாரும் பரவசம் மிகக் கொண்டாள்.
அனைவரும் இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.ஓர் சுபயோக
சுபமுகூர்த்தத்தில் மண்ணும் விண்ணும் வியக்கும் வண்ணம் சுந்தரர்க்கும்
பரவையாருக்கும் மிக்க சிறப்புடன் திருமணம் நடந்தேறியது.பரவையாரும்
சுந்தரரும் மலரும் மணமும் போல-மகரயாழும் இசையும் போல-அடியார்களும்
திருவெண்ணீறும் போல-இல்லறத்தில் இணைந்தனர்.இருவரும் சிவபக்தியுடன்
இல்லறத்தை இனிது நடத்த வரலாயினர். இல்லற தர்மப்படி அடியார்களுக்கு
விருந்தளிக்கும் திருத்தொண்டினைத் தவறாது நடத்தினர் இத்தெய்வீகத்
தம்பதிகள். அடியார் சேவையும், ஆண்டவன் சேவையும் அவர்களுக்கு அகமகிழ்வை
கொடுத்தது. ஒருநாள் சுந்தரர் மட்டும் தனியாக கோயிலுக்கு வந்தார்.
கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் தொண்டர்கள் பலர் கூடியிருந்தனர். இறைவனை
வழிபடுவது எளிது; அவர்தம் அடியார்களை வழிபடுவது அரிது; அடியார்களை
வணங்குவதற்குரிய தகுதியும், பக்தியும் நமக்கு ஏற்படவில்லையே என்று
எண்ணினார். அவர்களை மனத்தால் போற்றினார். இவ்வடியார்களுக்கெல்லாம் நான்
அடியேனாகும் நாள்தான் என்றோ? என்று எண்ணியவாறு, அடியார்களை மனத்தால்
தியானித்தவாறு சற்று ஒதுங்கிச் சென்றார். தேவாசிரிய மண்டபத்தில்
கூடியிருந்த அடியார்களுள் விறல் மிண்ட நாயனாரும் ஒருவர். இவர் சுந்தரரது
செயலைத் தவறாகப் புரிந்து கொண்டார். சுந்தரது, ஒப்பற்ற நல்ல எண்ணத்தை உணர
முடியாது போன விறல்மிண்டர் அவர் மீது சினங்கொண்டார். சுந்தரர் செவிகளில்
விழுமாறு, முதலில் வணங்கத்தக்க தேவாதி தேவர்கள் இந்த தேவாசிரிய மண்டபத்தில்
கூடியிருப்பதைப் புறக்கணித்துவிட்ட கோயிலுக்குள் சென்று என்ன பயன்?
வன்றொண்டன் அடியார்களுக்கு புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப்
பெருமானும் இவ்வடியார்களுக்கு புறம்பானவன் என்று கடுமையாக சொன்னார்.
விறல்மிண்டர் மொழிந்தது கேட்டு, சுந்தரர், விறல்மிண்டர் அடியார்களிடத்து
கொண்டுள்ள பக்தி எத்துணை சிறப்புடையது என்று எண்ணிப் பெருமை கொண்டார். அந்த
எண்ணத்துடனேயே கோயிலுக்குள் சென்றார். வீதிவிடங்கப் பெருமானை தொழுது,
சுவாமி! அடியார்களுக்கெல்லாம் அடியானாகும் பேரின்ப நிலையைத் தந்தருள
வேண்டும்! என்று பிரார்த்தித்தார் சுந்தரர். அக்கணமே எம்பெருமான்
எழுந்தருளி, தமது அடியார்கள் பெருமையையும், திறத்தினையும் மொழிந்து,
அவர்களைப் பற்றி பொருள்மிக்க பைந்தமிழ் பாக்களால் பாடுமாறு திருவாய்
மலர்ந்தார். ஐயனின் ஆணைகேட்டு, அஞ்சி நடுங்கிய ஆரூரர், ஐயனே!
திருத்தொண்டர்களைப் பாடுவதற்கு இந்த எளியேன் எவ்வித தகுதியும் உடையவன்
அல்லன். அடியார்களின் வரலாற்றினையும், பெருமையினையும், பக்தியின்
சிறப்பினையும் சற்றும் அறியாதவனாகிய நான், எவ்வாறு அவர்களை
விரித்துரைக்கும் திருப்பதிகத்தைப் பாடுவேன்? ஐயனே! இவ்வடியார்களைத்
துதித்து இவர்களின் பெருமையையும் புகழையும் செந்தமிழ்ப் பாக்களால்
பாடிடும் திறத்தினை அடியேனுக்கு தந்தருளல் வேண்டும்! என்று பக்திப்
பெருக்கோடு இறைஞ்சி நின்றார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:24

உலகம் உய்ய, வேதங்களை அருளிச் செய்த எம்பெருமான், தில்லைவாழ் அந்தணர் தம்
அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுத்து பாடும்படி
பணித்தருளினார். சுந்தரர் மெய்யுருக, பரமனின் பாதகமலங்களைப் பணிந்தவாறு,
தேவாசிரிய மண்டபம் சென்றார். திருத்தொண்டர்களை வணங்கினார். எம்பெருமான்
திருவருளினால் தொண்டர்களின் தூய சரித்திரத்தைத் தொகுத்து விரித்துக்கூறும்
திருப்பதிகத்தை இனிய தமிழில் பாடி மனம் குளிர்ந்தார் சுந்தரர்!
அத்திருப்பதிகமே திருத்தொண்டத் தொகையாகும். இவ்வாறு, எம்பெருமான்
திருவருளினாலே திருத்தொண்டத்தொகையைப் பாடியருளிய சுந்தரர், முப்பொழுதும்
முக்கண் அண்ணலின் தாள் பணிந்து பரவையாரோடு இனிது வாழ்ந்து வந்தார்.
அந்நாளில், நாவலூரை அடுத்துள்ள குண்டையூர் என்னும் தலத்தில் பரமனிடத்தும்,
அடியார்களிடத்தும் பேரன்புடைய குண்டையூர்க்கிழார் என்பவர் வாழ்ந்து
வந்தார். இப்பெரியார், சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் எல்லையில்லா அன்பும்,
பக்தியும் பூண்டிருந்தார். தொண்டர்களுக்கு விருந்தளித்துத் திருத்தொண்டு
புரிந்துவரும் சுந்தரமூர்த்தி நாயனாரின், திருத்தொண்டிற்கு தேவையான அளவு
நெல், பருப்பு, வெல்லம் முதலிய பொருட்களை குண்டையூர்க்கிழார், தட்டாமல்
அனுப்பிக் கொண்டிருந்தார். ஒருமுறை மழையின்றி பயிர்கள் வாடின. நாட்டில்
பஞ்சம் ஏற்பட்டது. இதனால், பரவையார் மாளிகைக்கு குண்டையூர் கிழாரால்
வழக்கம்போல் தானியங்களைத் தாராளமாக அனுப்ப முடியாது போனது. அப்பெரியார்
மனம் புண்பட்டார். எம்பெருமானிடம் தமது குறையை சொல்லி இறைஞ்சினார்.
கண்ணுதலார் அடியார் கனவில் எழுந்தருளி, அன்பு உளம் வருந்தற்க! சுந்தரர்
பொருட்டு உமக்கு வேண்டியளவு நெல்லினைத் தந்துள்ளோம் என்று திருவாய்
மலர்ந்தார். எம்பெருமான் குபேரனுக்கு கட்டளையிட்டு வானத்தை
மறைக்குமளவிற்கு, நெல்லை மலை போல் குண்டையூர் முழுவதும் குவிந்திடச்
செய்தார். குண்டையூர்க்கிழார் அந்த நெல்மலையைக் கண்டு அதிசயித்தார்.
சுந்தரரின் பெருமையையும், எம்பெருமானின் திருவருளையும் எண்ணிப் பார்த்து,
மகிழ்ந்த குண்டையூர்க் கிழார், இந்நெல் மலையை எங்ஙனம் திருவாரூர் பரவையார்
திருமாளிகைக்கு அனுப்புவது என்று நினைத்து திகைத்தார். இத்தகைய
வியக்கத்தக்க இறைவனின் அருட்கருணையை, சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம்
தெரிவிக்கும் பொருட்டு திருவாரூருக்கு புறப்பட்டார் குண்டையூரார். அதற்குள்
எம்பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார் கனவில் எழுந்தருளி, குண்டையூரில்
நெல்லை மலை போல் குவித்துள்ளோம் என்று அருள்வாக்கு சொன்னார். குண்டையூரில்
எம்பெருமான் நடத்திய அதிசயத்தை காணும் பொருட்டு, குண்டையூருக்குப்
புறப்பட்டார் சுந்தரர்.வழியிலேயே அடியார்கள் இருவரும் ஒருவரை ஒருவர்
சந்தித்துக் கொண்டனர். ஆரத்தழுவி அகமகிழ்வு பூண்டனர். குண்டையூர்க்கிழார்
சுந்தரரை வணங்கி எதிர் கொண்டு அழைத்து, தேவரீருக்கு எவ்வித இடர்பாடுமின்றி
நெடுங்காலமாக அடியேன், செய்துவரும் திருத்தொண்டிற்கு இப்பொழுது சற்று தடை
ஏற்பட்டிருந்தது. அது கண்டு, கண்ணுதலார் கருணைகாட்டி, தேவரீர் அன்பிற்காக
எமக்கு நெல்மலையைக் குவித்தருளினார். அந்த நெல்மலை, மனிதர்களால் அகற்றப்பட
முடியாத அளவிற்கு ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது. அதனை எவ்வாறு தேவரீர்
மாளிகைக்கு அனுப்புவது! என்று விண்ணப்பம் செய்தார். சுந்தரர் அடியாரின்
அன்பிற்கு தலைவணங்கினார். அவரோடு இனிது உரையாடிய வண்ணம் குண்டையூர்
வந்தடைந்தார் சுந்தரர்! நெல்மலையைக் கண்டு வியந்தார்! அவர்,
குண்டையூர்க்கிழாருடன், திருக்கோளிலி என்னும் பகுதிக்கு சென்றார். அங்கு
எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பணிந்து, நெல்மலையை திருவாரூருக்கு
சேர்க்கும் பொருட்டு, நீள நினைத்தடியே எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப்
பாடினார். அப்பொழுது வானத்திலே அசரீரி ஒலித்தது.

இன்றிரவு நம்முடைய
பூதகணங்கள், பரவையார் மனையளவு மட்டுமின்றி திருவாரூர் முழுவதும் நிறையுமாறு
நெல் மலையினைக் கொண்டு போய் சேர்க்கும். இறைவன் விண்வழியே மொழிந்தது
கேட்டு சுந்தரர் மனம் மகிழ்ந்தார். சுந்தரர், குண்டையூர்க்கிழார்
இல்லத்திற்கு சென்று அவரோடு அமுதுண்டு மகிழ்ந்து இருந்தார்.மறுநாள்
குண்டையூர்க் கிழாரிடம் விடை பெற்றுக் கொண்டு திருவாரூருக்கு புறப்பட்டார்
சுந்தரர். அன்றிரவு சிவபெருமானின் ஆணைப்படி பூதகணங்கள் குண்டையூரிலுள்ள
நெல்மலையை எடுத்துச் சென்று பரவையார் மாளிகையிலும், திருவாரூர்ப்
பெருவீதிகளிலும் நிரப்பினர். பொழுது புலர்ந்தது. ஊர் முழுவதும்
நிரம்பியிருக்கும் நெற்குவியலை கண்ட மக்கள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின்
பெருமையை வானளாவப் புகழ்ந்தனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், அவரவர் வீட்டின்
முன்னே உள்ள நெற்குவியலை அவரவர்களே, தத்தம் இல்லத்தில் சேமித்து வைத்துக்
கொள்ளலாம் என்று ஊர் முழுவதும் அறிவித்தார். சுந்தரர், உலகம் வியக்கப் பல
அதிசயங்களை நிகழ்த்திய வண்ணம் புகழ் பொங்க வாழ்ந்து வந்தார். இந்நாளில்,
குண்டையூர்க்கிழாரைப் போலவே, ஆரூரரிடம் உழவலன்பு பூண்டுள்ள அன்பன் ஒருவர்
திருவாரூரை அடுத்துள்ள திருநாட்டியாத்தான் குடி என்னும் திருத்தலத்தில்
வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கோட்புலி நாயனார். ஒருமுறை கோட்புலி நாயனார்
விரும்பி அழைத்ததன் பொருட்டு, சுந்தரர், பல சிவத்தலங்களை வணங்கியவாறு
திருநாட்டியத்தன் குடிக்குப் புறப்பட்டார். கோட்புலியார், சுந்தரரை
எதிர்கொண்டு அழைத்து மகிழ்வுடன் தமது திருமாளிகைக்கு அழைத்து சென்றார்.
கோட்புலியார், சுந்தரரை நவரத்தின மணிகளினாலாகிய பசும்பொற் பீடத்தில் அமரச்
செய்து அவரது பாதகமலங்களைத் தூய நீராட்டினார். அப்பாத நீரை தம் மீதும்,
தமது குடும்பத்தார் மீதும் தெளித்துக் கொண்டார். மாளிகை முழுவதும்
தெளித்தார். கலவைச் சந்தனம், அகிற் சாந்து, கஸ்தூரிக் குழம்பு வகைகள்,
பலவித பரிவட்டங்கள் முதலியவற்றையும் வரிசையாக வைத்து முறைப்படி வழிபட்டுத்
தொழுதார். திருவமுது செய்வித்து பெருமகிழ்ச்சி பூண்டார். தமது அருந்தவப்
புதல்வியர்களாகிய சிங்கடியார், வனப்பகையார் இருவரையும் சுந்தரர் திருவடிகளை
வழிபடச் செய்தார். எம்மையாட்கொள்ளும் எந்தையே! இவ்விருவரும் எம்
புதல்வியர்கள்! இவள் சிங்கடியார். இவள் வனப்பகையார். இவ்விருவரையும் ஐயன்
அடிமைகளாக ஏற்றுக்கொண்டு, அவர்கள் உய்யுமாறு அருள்புரிதல் வேண்டும் என்று
பணிவன்புடன் கேட்டுக் கொண்டார் கோட்புலியார். சுந்தரர் அப்பெண்மணிகளை
வாழ்த்தி தம்முடைய மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் வேண்டுவனவற்றை
எல்லாம் அளித்தார். எல்லோருமாக சிவாலயத்துக்கு சென்றனர். சுந்தரர்,
கோட்புலி நாயனாரின் தொண்டினை சிறப்பித்து பதிகம் ஒன்றைப் பாடினார். ஓரிரு
தினங்களில், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருவலிவலம்
வழியாக திருவாரூரை வந்தடைந்தார். திருவாரூரில் தங்கியிருந்து அனுதினமும்
தியாகேச பெருமானைத் தண் தமிழ்ப் பதிகங்களால் வழிபட்டு வந்தார். திங்கள் பல
தாண்டின. திருவாரூரில் பங்குனி உத்திரத் திருவிழா நெருங்கியது. ஆண்டுதோறும்
அம்பலத்தரசரின் இவ்வானந்தத் திருவிழா, விண்ணவரும் மண்ணவரும் வியக்கும்
வண்ணம் மிக்க கோலாகலத்துடன் நடைபெறும். இத்திருவிழா காலத்தில் பரவையார்,
பரமனடியார்களுக்கு தான தருமங்கள் செய்வாள். அம்பலத்திலே ஆண்டவன்
சன்னிதானத்தில் அழகு நடனம் ஆடிக் களிப்பாள். இவ்வாண்டும் அதுபோலவே
அடியார்களைப் போற்றுதற்குத் தேவையான பொன்னும், பொருளும் திரட்ட சுந்தரர்
அன்பர்களோடு பரவையாரிடம் விடைபெற்றுக் கொண்டு, புகலூருக்கு புறப்பட்டார்.
புகலூர் தலத்தை அடைந்த சுந்தரர், அவ்விடத்தில் குடிகொண்டிருக்கும்
சடைமுடிப் பெருமானிடம், தாம் வந்துள்ள கருத்தினை கூறி பதிகம் ஒன்றைப்
பாடினார். அன்றிரவு ஆரூரர், அன்பர்களுடன், ஆலயத்திற்கு அருகிலுள்ள எந்த
மடத்திலும் சென்று துயிலாமல் முற்றத்தில் துயில்கொள்ள விருப்பங்கொண்டார்.
திருக்கோயிலின் புறத்தே, திருப்பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுட்ட
செங்கற்கள் பலவற்றைக் கொணர்ந்து உயரமாக பீடம் அமைத்து அதன் மீது தமது
வெண்பட்டாடையை விரித்து படுத்துக் கொண்டார். சுந்தரர், துயிலுணர்வு நீங்கி
எழுந்து பார்த்தபோது, எம்பெருமானுடைய பேரருளினால் செங்கற்கட்டிகள்
அனைத்தும் செம்பொன் கட்டிகளாக திகழக் கண்டார். பேரின்பப் பெருக்குடன்
அகமகிழ்ந்த சுந்தரர், அன்பர்களுடன் ஆனந்தக் கூத்தாடினார். பைந்தமிழ்ப்
பாக்களால் பரமனின் பாதங்களைப் பணிந்தார். அங்கிருந்து பொற்குவியலுடன்
சுந்தரர் பல சிவத்தலங்களை சேவித்த வண்ணம் திருவாரூரை வந்தடைந்தார்.
பரவையாரிடம் புகலூர் பெருமானின் திருவருளை வியந்து கூறி ஆனந்தம் பூண்டார்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:25

ஒருசில நாட்களில், மீண்டும் பரவையாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.
நன்னிலத்துப் பெருங்கோயிலை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும்
பெருமானின் திருவடியைத் தொழுது பதிகப் பாமாலையினைப் புனைந்து
பணிந்தேத்தினார். அன்றிரவு எம்பெருமான், சுந்தரரின் கனவில் எழுந்தருளி
திருமழிப்பாடிக்கு வர மறந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார்.
சுந்தரர் விழித்தெழுந்தார். எம்பெருமானின் ஆணை கேட்டு
புளகாங்கிதமடைந்தார். அப்பொழுதே அன்பர்களுடன் புறப்பட்டு, காவிரியைக்
கடந்து, வடகரையை அடைந்து திருமழப்பாடி என்னும் தலத்தை வந்து சேர்ந்தார்.
அங்குள்ள பெருமானைப் பணிந்து, பொன்னார் மேனியனே புலித்தோலையரைக் கசைத்து
எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி பெருமையுற்றார். ஓரிரு நாட்களில்
அங்கிருந்து புறப்பட்டார். காவிரியாற்றின் இருபக்கங்களிலும் உள்ள
திருப்பதியங்களை வழிபட்ட வண்ணம் மேற்கு நோக்கி சென்ற திருவானைக்காவை
அடைந்தார். அத்தலத்திலுள்ள தொண்டர்கள் ஆரூரரை வரவேற்று மகிழ்ந்தனர்.
அன்பர்கள் புடைசூழ, ஆரூரர் அருள் சுரக்க பக்திப் பாடல்களை பாடிக்கொண்டே
கோயிலை அடைந்து, பெருமானை வழிபட்டு பதிகங்கள் பல பாடினர். பிறகு அவ்வூரை
விட்டுப் புறப்பட்டார். திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் தலத்தை அடைந்தார்.
பரமனிடம் பொன் வேண்டிப் பாடினார்! பரமன் சுந்தரரை சோதிக்கக் கருதி பொன்னை
கொடுத்தருளாது நின்றார். இறைவனையே தமது தோழராய் கொண்ட சுந்தரர் பொன் தராத
அரனை-அவரிடம் தமக்குள்ள அன்பின் உரிமையால் கடிந்து கொள்ளக் கருதி, வைத்தனன்
தனக்கே தலையுமென் நாவும் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஒவ்வொரு
பாடலின் கடைசி அடிதோறும், இவர் இல்லாமற் போய்விட்டாரோ? என்று
பொருள்படுமாறு, இரவலா தில்லையோ பிராமனார் என்று இகழ்ந்து பாடினார். ஆனால்,
சுந்தரருக்கே மனம் பெறாத காரணத்தினால், இத்திருப்பதிகத்தின் திருக்கடை
காப்பில் ஏசின அல்ல எனப்பாடி தாம் இகழ்ந்துரைத்ததைப் பொறுத்தருள்படி
வேண்டினார். சுந்தரருடைய பேரன்பின் சக்தியில் உளம் இரங்கிய பெருமான்,
பொற்குவை கொடுத்தருளினார். சுந்தரர், எம்பெருமான் அருளிய பொற்குவையடன்,
புறப்பட்டு திருப்பைஞ்ஞலியை அடைந்தார். அரனார் மலரடி போற்றினார்.
எம்பெருமான் சுந்தரர்க்கு கங்காள வேடத்துடன் திருக்காட்சி கொடுத்து
அருளினார். சுந்தரர், உள்ளம் உருக பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கிருந்து
புறப்பட்டு திருஈங்கோய் மலையைத் தரிசித்துக் கொண்டே கொங்கு நாட்டில்
காவிரியின் தென்கரையில் விளங்கும் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும்
திருத்தலத்தை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் கொடுமுடி நாதரைப்
போற்றி மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாதமே மனம் பாவித்தேன் எனத்
தொடங்கும் நமச்சிவாயப் பதிகம் ஒன்று பாடி உலகமெல்லாம் உய்ய அருள் செய்தார்.
பின்னர், காஞ்சி நதிக்கரையில் அமைந்துள்ள திருப்போரூர் கோயிலை
வந்தடைந்தார். அங்கு எம்பெருமானைக் காணவில்லை. மனம் புண்பட்டார்.
அங்கிருந்த நந்தி தேவரின் குறிப்பால், எம்பெருமான் இருக்குமிடத்தை
அறிந்துகொண்ட சுந்தரர் வயற்பக்கம் வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை
மெய்மறக்க செய்தது! வயற்புறத்தில் திரிபுரம் எரித்தவன், உழவுத்தொழில்
செய்யும் பணியாளனாகவும், அவன் உடம்பில் பாதியைப் பெற்ற பார்வதி தேவியோ
பணிப் பெண்ணாகவும் திருக்கோலம் கொண்டிருந்தார்கள். இலக்குமி, சரஸ்வதி,
இந்திராணி முதலிய தேவியர்கள், சிவகணத் தலைவர்களும் வயலில் உழுவதும், நீர்
பாய்ச்சுவதும் நாற்று நடுவதுமாக இருந்தனர்.

மதுரையிலே
திருவிளையாடல்கள் பலபுரிந்த திருசடையான், இன்று தம் பொருட்டு உழவன்
திருக்கோலம் பூண்டு நடத்தும் திருக்கூத்து கண்டு ஐயன் மீது ஆராக் காதலுடன்
மறையவனரசன் செட்டி தன் தாதை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார்.
இங்ஙனம் வயலில் வருந்தி உழுவது யார் பொருட்டு ஐயனே என்று நிலத்தில்
வீழ்ந்து பணிந்து வினவியதும், எம்பெருமான் தில்லையம்பலத்திலே நின்றாடுகின்ற
தமது நர்த்தனக் கோலத்தினைச் சுந்தரர்க்கு கோயிலுள் காட்டியருளினார். அங்கு
சில நாட்கள் தங்கியிருந்து இறை வழிபாடுகளை இடையறாது நடத்திய சுந்தரர்
அவ்விடத்தை நீத்து திருவெஞ்சாமக்கூடல், திருக்கற்குடிமலை, திருப்புறம்பய்
வழியாக சிவதரிசனம் செய்துகொண்டே கூடலையாற்றூர் என்னும் பதியை அணுகினார்.
அவ்வூர் அருகே சென்றவர் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வணங்காமல்,
முதுகுன்றத்தினை நோக்கிப் புறப்படலானார். அப்பொழுது எம்பெருமான் அந்தணர்
வடிவம் கொண்டு சுந்தரர் முன்னால் எதிர்ப்பட்டார். சுந்தரர் அவரிடம், ஐயனே!
திருமுதுகுன்றூருக்கு செல்லும் வழியினை எமக்கு சொல்லும் என்று வினவ
அவ்வேதியர், இவ்வழி கூடலையாற்றுக்குப் போகும் வழியாகும் என்று விடை பகர்ந்த
வண்ணம் சுந்தரர்க்கு அவ்வூர் எல்லைவரை வழித்துணையாக வழிகாட்டிச் சென்று
மறைந்தருளினார். இஃது இறைவனின் திருவருட்செயல்தான் என்று எண்ணிய சுந்தரர்
கூடலையாற்றுப் பெருமானைத் தொழுது பாமாலைப் பாடி பின்னர் முதுகுன்றூரை
வந்தடைந்தார். முதுகுன்றூர் திருக்கோயிலின் கோபுரத்தை, எல்லையில்
நின்றவண்ணம் தொழுது போற்றிய சுந்தரர் திருக்கோயில் புகுந்து, வலம் வந்து
வணங்கி, நஞ்சிடை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். பொருள்
வேட்கையால் பரமனின் பதம் போற்றி மெய்யை முற்றுப்பொடி பூசி என்று தொடங்கும்
நம்பி என்ற திருப்பதிகத்தைப் பாடினார். பனிமதிச் சடையார், சுந்தரரின்
பாமாலையில் திருவுள்ளம் மகிழ்ந்துருகி, பன்னிரெண்டாயிரம் பொற்காசுகளை
கொடுத்தருளினார். பொற்காசுகளைப் பெற்று பெருமகிழ்ச்சி பூண்ட அன்பன், இவற்றை
எடுத்து செல்வது எங்ஙனம்? என்று சித்தம் கலங்கியபோது, எம்பெருமான்
விண்வழியே, இப்பொற்காசுகளை மணிமுத்தாற்றில் மூழ்கச் செய்து திருவாரூர்
திருக்குளத்திலே எடுத்துக்கொள்வாயாக என்று அசரீரி வாக்கால் அருளி
மறைந்தார். சுந்தரர், பொன்னின் ஒரு பகுதியை அடையாளமாக வெட்டி
எடுத்துக்கொண்டு மணிமுத்தாற்றில் பொன்னை விடுத்தார். அத்திருவிடத்தில் சில
காலம் தங்கியிருந்து தொண்டுகள் பல புரிந்து தொடர்ந்து தமது சில
யாத்திரையைத் தொடங்கினார். முதுகுன்றைவிட்டுப் புறப்பட்டசுந்தரர்
தில்லையிலே நடனம்புரியும் பரமனின் அற்புத நடனத்தைக் கண்டு களித்து மகிழப்
பெரு விருப்பங்கொண்டார்.சித்தத்தை தில்லையில் இருத்திய சுந்தரர், கடம்பூர்
முதலிய சிவதலங்களை வணங்கி வழிபட்ட வண்ணம், பேரின்ப வீடு காண அரும்பணி
ஆற்றும் அந்தண சிறாக்கள் கூடிவாழும் தில்லையம்பதியை வந்தடைந்தார்.
தில்லைவாழ் அந்தணர்கள் சுந்தரரை வரவேற்று அம்பலத்துள் அழைத்துச் சென்றனர்.
சுந்தரர் கண்ணீர் பெருக அம்பலத்தரசின் திருவருட்தாளினை வீழ்ந்து வணங்கி,
மடித்தாடு மடிமைக்கண் அன்றியே என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார்.
எம்பெருமானைப் பார்த்து பார்த்து பரவசமடைந்தார். தில்லைவாழ் அந்தணர்களோடு
சிலகாலம் தங்கியிருந்து பரமனின் திவ்யதரிசனத்தை அகமாறக் கண்டார்.
அங்கிருந்து புறப்பட்டு கருப்பறியலூர், பழமண்ணிப் படிக்கரை வழியாகத்
திருவாரூர் வந்தடைந்தார். திருக்கோயில் கோபுரத்தை வணங்கிய சுந்தரர்
அடியார்களுடன் புற்றிடங்கொண்ட பெருமானைப் பாமாலை சாத்தி வணங்கினார். ஓரிரு
தினங்களில் அவ்வூர் அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தம்முடன் வந்த
தொண்டர்களுடன், சிவநாமத்தை ஜபித்தவாறு ஊர் திரும்பினார். பரவையார்
திருமாளிகையை அடைந்த சுந்தரரை, பரவையார் அகமும், முகமும் மலர வரவேற்றாள்.
அவரது பாதகமலங்களில் நறுமலர்களைத் தூவி வணங்கினாள்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:25

சுந்தரர் பரவையாரிடம், முதுகுன்றூர் பெருமான் நமக்கு அளித்த பொற்குவியலை
மணிமுத்தாற்றில் இட்டோம். இப்பொழுது எம்பெருமான் திருவருளால்
அப்பொற்குவியலை இத்திருத்தலத்திலுள்ள கமலாலயப் பொய்கையிலே
எடுத்துக்காட்டுவேன். எம்முடன் பொற்றாமரைக் குளத்திற்கு வருவாயாக என்று
கூறியவாறு முதுகூரில் நடந்தவற்றை விளக்கினார்.அம்மையார் முகம் கமலம் போல்
மலர்ந்தது. அம்மையார் பெரும் வியப்பில் மூழ்கினாள். ஐயனே! தாங்கள்
இயம்புவது எமக்கு பெருத்த வியப்பினைக் கொடுக்கிறது. தாங்கள் கூறுவது
எங்ஙனம் சாத்தியமாகும்? என்று ஐயத்துடன் கேட்டாள். அவள் இதழ்களில்
புன்னகையும் மலரத்தான் செய்தது. சுந்தரர், பரவையாரையும் அழைத்துக் கொண்டு
கோயிலுக்கு புறப்பட்டார். பூங்கோயிலினுள் சென்று வான்மீகிநாதரின் பாத
கமலங்களைப் பதிகம்பாடிப் போற்றினார். கோயிலை வலம் வந்தார். மேற்கு திசையில்
அமைந்துள்ள கமலாலயக் குளத்தை அடைந்தார். கமலாலயத்தில் சுந்தரர்
பொற்குவியல் எடுக்கப் போகும் செய்தி எங்கும் பரவியது. அந்த அதிசயத்தைக் காண
திருக்குளத்தைச் சுற்றி அன்பர்கள் கூட்டம்! சுந்தரர் பரவையாரைக் கரையில்
ஒருபுறம் அமரச் செய்து குளத்துள் இறங்கினார். எம்பெருமானைத் தியானித்த
வண்ணம் பொற்குவியலைத் தேடலானார். அவரது பூங்கரத்தில் பொன் என்பதே
தென்படவில்லை. சுந்தரர் நீரிடை மூழ்கி, துருவி துருவித் தேடினார். மிக்க
சிரமத்துடன் தேடியும் நாடிவந்த பொன் மட்டும் கைக்குக் கூடிவரவில்லை. வாடிய
முகத்தோடு, சுந்தரர் நிற்பது கண்டு பரவையார், ஆற்றினில் இட்டுவிட்டு
குளத்தினில் தேடுகின்றீரே! என்று நகைப்போடு கேட்டவாறு புன்னகை பூத்தாள்.
சுந்தரரின் பைந்தமிழ்ப் பாமாலையில் பெரு விருப்பங்கொண்ட எம்பெருமான்,
வேண்டுமென்றே தான் பொற்றாமரைக் குளத்தில் பொன்னைத் தருவிக்காமல் இருந்தார்.
ஐயனின் திருவிளையாடல்தான் இதுவும்! என்பதை உணர்ந்தார் சுந்தரர்.
பழமலைநாதரை மனதில் நினைத்தவண்ணம் பொன்செய்த மேனியீர் எனத் தொடங்கும்
பதிகத்தை அன்பு கனிந்துருக, பக்தி பெருகிவர, செந்தமிழ்ப் பூவினால்
பாமாலைகளாய்த் தொகுத்து பரமனின் அணிமார்பில் சாத்தினார். பொற்குவியல் அவரது
கைக்கு கிட்டவில்லை! சுந்தரர்க்கு வேதனை மேலிட்டது! முதுகுன்றத்தில்
தந்தருளிய பொற்குவியலைப் பெற முடியாது வருந்தும் எம் துயரத்தை இப்பரவையார்
எதிரிலேயே தீர்த்தருளும் என்ற கருத்துடைய எட்டாவது பாடலைப் பாடினார்.
அப்படியும் பரமன் மனம் உருகி தமக்கு அருள் சுரக்காதது கண்டு வருந்தினார்.
அருட்பெருங்கூத்தனே! ஆனந்தத் தாண்டவனே! பழமலைநாதரே! பொற்குவியலை
இப்பரவையார் முன்னே தந்தருள்வாயாக! என்னும் பொருள்பட, ஏத்தாதிருந்தறியேன்
எனத் தொடங்கும் ஒன்பதாவது பாட்டால் இறைவனைத் துதித்துப் பாடியதும், இறைவன்
சுந்தரர்க்கு திருவருள் புரிந்தார். பொற்குவியலை அவரது கரத்திற்குத் தட்டு
பட செய்தார். மகிழ்ச்சி பொங்க, பொன்னோடு கரையேறினார் சுந்தரர். பொற்றாமரை
குளத்தில் கூடியிருந்தோர் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். பரவையார் அதிசயித்து
நின்றாள். சுந்தரர், பொன்னின் மாற்றினை உரைத்துப் பார்த்து தாம் அடையாளமாக
எடுத்து வந்த பொன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தார். சற்று மாற்றுக்
குறைந்திருக்கக் கண்டு, இதுவும் திருநாவலுரான் திருவிளையாடலே என்று
எண்ணியவராய் மீண்டும் திருப்பாடல் ஒன்றைப் பாடினார். அக்கணமே பொன்னின்
மாற்று சரியானது. சுந்தரர் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார். பரவையார், இறைவன்
தமது நாயகியிடம் கொண்டுள்ள திருவருளை நினைத்து வியந்தார். அனைவரும் ஆனந்தக்
கூத்தாடினார்கள். குளத்தில் சூழ்ந்திருந்த தொண்டர் பலர், சுந்தரமூர்த்தி
சுவாமிகளின் திருவடியைப் போற்றினர். அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர். அவ்வாண்டு
பங்குனி உத்திரப் பெருவிழாவை சுந்தரரும் பரவையாரும் வெகு விமர்சையாக
கொண்டாடினர். சுந்தரரும் பரவையாரும் சில காலம் சிவத்தொண்டுகளைப் புரிந்து
வாழ்ந்து வந்தனர். சுந்தரர் திருத்தல யாத்திரை புறப்பட எண்ணினார். ஒருநாள்
பரவையாரிடம் விடை பெற்றுக் கொண்ட தொண்டர்கள் புடைசூழ திருத்தலங்களை
தரிசிக்கப் புறப்பட்டார். திருநள்ளாறு, திருக்கடவூர், திருவலம்புறம்,
திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருநனிப்பள்ளி, திருச்செம்பொன்பள்ளி,
திருநின்றியூர், திருநீடுர், திருப்புன்கூர், திருக்கோலக்கா முதலிய
பதிகளில் எழுந்தருளியிருக்கும் தேவதேவரின் தூய திருவடிகளைப் பணிந்து
துதித்தார். திருப்பதிகம் பலவும் பாடி உள்ளம் உருகினார். சீர்காழியை
வந்தடைந்தார். திருத்தோணியப்பரைத் தொழுது வணங்கி பதிகம் பாடினார்.

திருஞானசம்பந்தர்
திருவடிகளை மனத்தால் தியானித்தவண்ணம் குருகாவூர் என்னும் திருப்பதியை
நோக்கி புறப்பட்டார். குருகாவூர் செல்லுகையில் சுந்தரரும் அவர் தம்
தொண்டர்களும் வழிநடந்த களைப்பினாலும், தாகத்தினாலும், பசியினாலும் உடல்
தளர்ந்தனர். இங்ஙனம் இவர்கள் துயறுருவதை உணர்ந்த சிவபெருமான் இவர்கள் வரும்
வழியே குளிர்ப்பந்தல் ஒன்றை அமைத்தார். தாம் வேதியர் வடிவம் பூண்டு,
சுந்தரரின் முன்னே எழுந்தருளினார். சுந்தரரும், அடியார்களும் தணலில் வெந்து
வாடிய மலர் போல், உடல்வாடி வந்து கொண்டிருக்கும் பொழுது சற்றுத் தொலைவில்
குளிர்ப்பந்தல் ஒன்று இருப்பது கண்டு அப்பந்தலை விரைந்து வந்து அடைந்தனர்.
அங்கு நின்று கொண்டிருந்த வேதியரை வணங்கி அனைவரும் உள்ளே சென்று
அமர்ந்தனர். வேதியர் வேடத்திலிருந்த வேதமுதல்வன், சுந்தரர்க்கும் அவரது
கூட்டத்தாருக்கும் உணவும், தண்ணீரும் அளித்தார். அனைவரும், வேதியரைப்
போற்றி துதித்தனர். சிவநாமத்தை தியானித்த வண்ணம் களைப்பு மேலிட துயின்றனர்.
சுந்தரர்க்குத் தொண்டு புரிந்த தில்லைநாதர், மறைந்தார். தம்மோடு தண்ணீர்ப்
பந்தலையும் மறையச் செய்தார். துயிலெழுந்த சுந்தரரும், தொண்டர்களும்
பந்தலையும், அந்தணரையும் காணாது திகைத்தனர். இதுவும் எம்பெருமானின்
திருவருட் கருணை என்பதை உணர்ந்து மனம் மகிழ்ந்தார் சுந்தரர்! இத்தனையாம்
ஆற்றை அறிந்திலேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கிருந்து
தமது யாத்திரையை தொடர்ந்தார். குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை போன்ற
தலங்களை தரிசித்தவாறு தில்லையை அடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சுந்தரரை
எதிர்கொண்டு அழைத்தனர். அவர்களோடு சேர்ந்து நடராஜ தரிசனத்தைக்
கண்டுகளித்தார் சுந்தரர். அங்கிருந்து புறப்பட்டு நாவலூர் வழியாக
திருக்கழுக்குன்றத்தை வந்தடைந்தார். திருக்கழுக்குன்ற சிவாலய தரிசனத்தை
முடித்துக் கொண்டு திருக்கச்சூர் என்னும் தலத்தை வந்தடைந்தார். அத்தலத்தில்
காட்சிதரும் மாதொருபங்கனைப் பணிந்தவாறு, பசியினாலும், வழி நடந்த
களைப்பினாலும், உடல் வாட்டத்துடன் மதிற்புறத்தே வந்து தங்கினார். பசியால்
வருந்திடும் சுந்தரரின் பசியினைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்ட
திருக்கச்சூர் பெருமான் முன்போல் வயது முதிர்ந்த அந்தணர் வடிவம் பூண்டார்.
கையிலே திருவோடு ஒன்றை ஏந்திக்கொண்டு, மதிர்ப்புறத்தே வந்தார். அவ்வேதியர்,
சுந்தரரைப் பார்த்து, நீர் உம் அன்பர்களுடன் பசியால் மிகவும் வருந்தி
இளைப்புற்றிருக்கின்றீர். உங்கள் பசி வேட்கை நீங்கும்படி இப்பொழுதே சென்று
நான் உமக்கு, சோறு இரந்து வந்து கொடுக்கிறேன். நீர் எங்கும் போய்விடாமல்
எமக்காக இங்கேயே சற்று நேரம் அமர்ந்திரும் என்று செப்பினார். சுந்தரரும்
வேதியரின் இன்மொழிக்கு மறுமொழி செப்பினாரில்லை. வேதமுதல்வன், வெள்ளிய தூய
வெண்ணீற்றின் அழகு திகழவும், அழகிய முப்புரிநூலின் பேரொளி அசைந்து
விளங்கவும், பாதகமலங்கள் நிலவுலகில் தோயவும், கண்டவர் மனமெல்லாம் உருகவும்,
கடும் பகலில், திருக்கச்சூர் வாழும் அந்தணர்களின் வீடுதோறும் சென்று
சோற்றினை இரந்து பெற்றார். தடுத்தாட்கொண்டருளிய தம்பிரான் தோழரின் பசியைப்
போக்க, இத்தகைய அன்புச் செய்ல் புரிந்த ஈசன், பிச்சை எடுத்துப் பெற்ற
அமுதுடன் ஆரூரார் முன் வந்தார். அமுதினைக் கொடுத்தார். இவ்வமுதினையும்,
காய்கறிகளையும் உண்டு பசியைத் தீர்த்துக் கொள்வீர்களாக! என்று முகம் மலர
திருவாய் மலர்ந்தார் ஈசன். சுந்தரரும், அடியார்களும் அமுதினை உண்டு
மகிழ்ந்தனர். அதற்குள், அருள் வடிவமான அண்ணலார் மறைந்தார். வேதியர்
மறைந்தது கண்டு சுந்தரர் மனம் வாடினார். எம்பெருமான், தம்பொருட்டு செய்த
அருஞ்செயலை எண்ணிக் கலங்கினார். நாதச்சிலம்பணிந்த சேவடி நோவ நண்பகலில்
நிலவுலகில் எழுந்தருளிய ஐயனின் பெருங்கருணையை எண்ணிப் பார்த்து மனம்
உருகினார். விழிகளில் நீர் வழிய, முதுவாயோரி எனத் தொடங்கும் திருப்பதிகம்
ஒன்றைப் பாடிப் பணிந்தார். அங்கு திருக்கூட்டத்தாருடன் சில நாட்கள்
தங்கியிருந்தார். அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரத்தை வந்தடைந்தார்.
சுந்தரரின் வருகையைப் பற்றி முன்னதாகவே அறிந்த காஞ்சிநகரத்து மெய்யன்பர்கள்
சுந்தரரை எதிர் கொண்டழைக்க மேளவாத்தியங்களுடன் காஞ்சி நகரின் எல்லைக்கு
வந்தனர். சுந்தரரைப் பூரண பொற்கும்ப கலசங்களுடன் மலர் தூவி
எதிர்கொண்டழைத்து நகரத்துக்குள் பிரவேசித்தனர். சுந்தரர் அன்பர்களும்,
அடியார்களும் புடைசூழ, மங்கல இசைகள், வேத முழக்கத்தோடு சேர்ந்து ஒலிக்க,
அலங்காரமாக விளங்கும் பெருமாட வீதி வழியே திருக்கோயிலை வந்தடைந்தார்.
சுந்தரர், சிரமீது கரங்கூப்பிக் கொண்டு, அகத்தெழுந்து எழில் மேவும் அணி
மாளிகைகள் பலவற்றையும் தனித்தனியே வலம் வந்து வழிபட்டவாறே, திரு ஏகம்பர்
திருச்சன்னதிக்குள் சென்றா
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:26

காமாட்சி அம்மையார் வழிபடும் ஏகம்பவாணரின் திருவடியை வீழ்ந்து வணங்கி பக்தி
வெள்ளத்தில் மூழ்கினார். அருள்வடிவமாய் நின்றார். பக்திப்பெருக்கால்
பரவசமாகிப் பாடிப் பரவினார். சுந்தரர் காமாட்சி அம்மனையும் தரிசித்து
சிந்தை குளிர்ந்தார். காஞ்சிபுரத்திலேயே திருத்தொண்டர்களுடன் சில நாட்கள்
தங்கியிருந்து அடுத்துள்ள பல சிவன் கோயில்களையும் வழிபட்டு வந்த சுந்தரர்,
மீண்டும் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். திருவன் பார்த்தான்,
பனங்காட்டூர், திருமாற்பேறு, வல்லம் முதலிய தலங்களை தரிசித்து துதித்த
வண்ணம் காளத்தி மலையை அடைந்தார். கண்ணப்பருக்கு அருள் தந்து, தம் அடிச்
சேர்த்துக் கொண்ட குடுமித்தேவரின் திருவடியைப் போற்றி, செண்டாடு விடையாய்
எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு
திருவொற்றியூரை வந்தடைந்தார் சுந்தரர்! சுந்தரர் திருக்கோபுரத்தை
வணங்கியவாறு திருமாளிகையினை வலம் வந்து, பாட்டும் பாடிப் பரவி எனத்
தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். திருவொற்றியூரானை விட்டுப் பிரிய
மனம் வராத சுந்தரர், திருக்கூட்டத்தாருடன் திருவொற்றியூரிலேயே தங்கலானார்.
திருவொற்றியூர் என்னும் தலத்தருகே, ஞாயிறு என்னும் ஊரில், வளம் கொழிக்கும்
வேளாண்மரபில் ஞாயிறுகிழார் என்னும் பெயருடைய பெருஞ்செல்வர் ஒருவர்
வாழ்ந்து வந்தார். இப்பெரியார் செய்த அருந்தவப் பயனாய், திருக்கயிலை
மலையில் உமையாளுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்து மங்கையர் இருவரில்
ஒருவரான அநிந்திதையார், அன்புத் திருமகளாய் வந்து பிறந்திருந்தாள்.
ஞாயிறுகிழார், தமது அழகு மகளுக்கு சங்கிலியார் என்னும் நாமத்தை சூட்டி
மகிழ்ந்தார். சங்கிலியார், இறைவன் அருளால் அழகோடும், பக்தியோடும், சிறந்த
ஆற்றலோடும், தெய்வத்தன்மை மிக்க பொற்புடைச் செல்வியாய் விளங்கினாள். நாளொரு
மேனி கண்டாள். பொழுதொருவண்ணம் கண்டாள். எழில்பொங்கும் மங்கைப்
பருவத்தையும் கண்டாள். திருமணப் பருவம் எய்திய சங்கிலியாருக்கு, தங்கள்
குலநலத்துக்கும், பண்பிற்கும் தக்கபடி ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணமுடிப்பது
என்ற தீர்மானத்திற்கு வந்தனர் பெற்றோர். பெற்றோர்களின் இத்தகைய உள்ளக்
கருத்தினை அவர்களது உரையாடல் பலவற்றுள்ளிருந்து உணர்ந்து கொண்ட
சங்கிலியார், பெரும் வேதனையடைந்தாள். தனது லட்சியத்தை பெற்றோர்களிடம் கூற
முடியாமல் தவித்தாள். ஒருநாள், தனது எண்ணத்தைக் கூறக்கூடச் சக்தியற்ற
நிலையில், அஞ்சி நடுங்கியவளாய் மயக்கமுற்றாள்.எதிர்பாராமல், மகள்
மயக்கமுற்று விழுந்ததைக் கண்ட ஞாயிறுகிழாரும், அவரது மனைவியாரும் உள்ளத்
தடுமாற்றத்துடன், விரைந்து சென்று குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து,
அம்மையாரின் முகத்தில் தெளித்தனர். சங்கிலியாரும் சற்று நேரத்தில் மூர்ச்சை
தெளிந்து எழுந்தாள். பெற்றோர்கள் வேதனையால் பெருமூச்செறிந்தனர். அன்பு
மகளே! உனக்கு யாது குறை? எது கருதி இவ்வாறு மயக்கம் ஏற்படும் நிலையை
அடைந்தாய்? உள்ளத்தில் எதையாவது எண்ணிச் சொல்ல முடியாமல் தவிக்கின்றாயா?
சொல்! தயங்காதே! என்றனர். சங்கிலியார், சற்றும் தயங்காமல் மனதை
உறுதிப்படுத்தியவாறு, பெற்றோர்களிடம் தமது உள்ளக் கிடக்கையை வெளியிட்டாள்.
என் திருமணம் பற்றி நீங்கள் பேசி வருவதை நான் அறிந்தேன். எவருக்காகிலும்
என்னை மணம் முடித்து விடவேண்டும் என்பது என் முடிவிற்கு சற்றும்
பொருந்தாது. எம்பெருமானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்ற திருவருட்
செல்வருக்குத்தான் உரியவளாவேனே தவிர, மற்றெவர்க்கும் அல்ல. அதனால் என்னைத்
தடுக்காதீர்கள். நான் திருவொற்றியூரை அடைந்து சிவபெருமான் திருவருள்
வழியிலேயே ஒழுகி நிற்க ஆசைப்படுகிறேன். எனக்கு சம்மதம் சொல்லுங்கள்.
பெற்றோர்களுக்கு இடி இடித்தாற்போல் இருந்தது. பயமும், பீதியும், பரிவும்,
பாசமும், அச்சமும் எல்லாம் ஒன்றோடொன்று சேர்ந்து அவர்களைக் கதி கலங்கச்
செய்தது. இருப்பினும் அவர்கள், சங்கிலியார் கூறியவற்றை வெளியே தெரியாவண்ணம்
அப்படியே மறைத்து விட்டனர்.

சங்கிலியாரின் வைராக்கிய குணத்தை உணரப்
பெறாதவனாகிய ஒரு செல்வந்தன், சங்கிலியாரைத் தனக்கு மணம் பேச சிலரை
ஞாயிறுகிழாரிடம் அனுப்பி வைத்தான். மணம் பேச வந்தவர்களை எங்ஙனம் திருப்பி
அனுப்பி வைப்பது என்பது புரியாது, தர்மசங்கடமான நிலைக்கு ஆளான பெற்றோர்,
சங்கிலியாரைப் பற்றிய உண்மையான விவரங்களைக் கூறுவது சிறப்புடையதன்று என்று
நினைத்தவராய், அவர்களிடம் தந்திரமாகப் பேசி, மிக்க சாமர்த்தியமாக திரும்ப
அனுப்பினர். இதே சமயத்தில் அச்செல்வந்தன் எதிர்பாராமல் மரணம் அடைந்தான்.
இந்நிகழ்ச்சி ஞாயிறுகிழார் செவிகளுக்கு எட்டியது. அவரும் மனம் புண்பட்டார்.
இவ்விவரம் உற்றார் உறவினருக்கும் தெரியவந்தன. இதனால் சங்கிலியாரைப் பற்றிய
பல தப்பான எண்ணங்களும், பேச்சுக்களும் மக்கள் மத்தியில் புயலெனப்
புகுந்தது. இந்நிகழ்ச்சி நடந்த பிறகு சங்கிலியாரை மணம் பேச உறவினர்களோ,
சுற்றத்தார்களோ எவருமே வரவில்லை. பெற்றோர்கள், தெய்வத்தன்மை மிக்க
சங்கிலியாரை இனியும் அவளது விருப்பத்திற்கு மாறாக வீட்டில் வைத்துக் கொண்டு
இருக்க விரும்பவில்லை. அவளது உள்ளக்கருத்திற்கு ஏற்ப, திருவொற்றியூர்
கோயிலில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவது என்று எண்ணினர். திருவொற்றியூரில்
கன்னிமாடம் ஒன்றை அமைத்து சங்கிலியாரை அங்கேயே வாசம் புரிய வழி செய்தனர்
பெற்றோர்கள். திருவொற்றியூரில் இறைவன் கோயிலின் பக்கத்தில் கட்டியிருந்த
கன்னிமாடத்தில், சங்கிலியார் அருந்தவசியைப் போல் வாழ்வை நடத்தினாள்.
அம்மையாருக்குப் பணிவிடை செய்ய சேடிகளும், ஏவல் புரியும் பெண்டிர்களும்
இருந்தனர். எம்பெருமான் நினைவாகவே வாழ்ந்து வரும் சங்கிலியார், வைகறைப்
பொழுது தூய நீராடி, அழகிய நெற்றியில் திருவெண்ணீற்றை அணிந்து கொண்டு,
சேடிகளுடன் மலர்வனம் செல்வாள். விதவிதமான வாசமிகு மலர்களை நிறையப் பறித்து
வந்து, வெவ்வேறாக பிரித்து எடுத்து கொள்வாள். அவற்றை சற்றும் கசங்காமல்
எடுத்துக் கொண்டு வந்து தனி இடத்தில் அமர்ந்து பல்வேறு திருமாலைகளாக உரிய
காலத்திற்கு ஏற்றபடிக் காட்டுவாள். வழிபாட்டுக் காலங்களில் திருமாலைகளை,
திருவொற்றியூர்ப் பெருமானின் பாத கமலங்களிலே அன்போடு சாத்தி வழிபடுவாள்.
உள்ளன்போடு, திருவைந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாமல் ஓதிக்கொண்டிருப்பாள்.
இங்ஙனம், கன்னிமாடத்தில் சங்கிலியார் சங்கரனின் செஞ்சேவடிகளுக்குத்
திருத்தொண்டு புரிந்தவாறு வாழ்ந்து வரலானாள். சங்கிலியார், கன்னி மாடத்தில்
தங்கியிருக்கும் தருணத்தில் சுந்தரர், திருவொற்றியூருக்குத் தமது
திருக்கூட்டத்தாருடன் வந்து சேர்ந்தார். மடம் ஒன்றில் தங்கியிருந்து
நாடோறும் எம்பெருமானை வணங்கி வந்தார். ஒருநாள், சுந்தரர் அன்பர்களுடன்,
ஆலயத்தை வலம் வந்த வண்ணம் மண்டபத்தினுள் புகுந்தார். அவ்வமயம், சங்கிலியார்
எம்பெருமானுக்குச் சாத்துவதற்காக, வாசமிகு நறுமலர் மாலையைக் கையில் ஏந்திய
வண்ணம் திரை மறைவிலிருந்து வெளியே வந்தாள். நொடிப் பொழுதில் சங்கிலியார்,
மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு, மின்னல் போலத் திரைக்குள் மறைந்து
கன்னிமாடம் சென்றாள். தென்றலாக வந்து மின்னலாக மறைந்த சங்கிலியாரைத் தம்
ஊழ்வினைப் பயனாலேயே கண்ணுற்றார் சுந்தரர். அந்த எழிற் பாவையின் ரூப
லாவண்யத்தில் தம்மை மறந்து நின்றார். தம் எதிரிலே வானவில் போல் அழகுறத்
தோன்றி மறைந்த எழுதாத ஓவியத்தின் ஒப்பற்ற பொன்மேனி அழகில் மனம் பேதலித்துப்
போனார். கோவைபடாத முத்தினையும், வண்டுகள் மொய்க்காத மென்மையான
அரும்பினையும் ஒத்த சங்கிலியாரைச் சந்தித்த சுந்தரர், மனம் தடுமாறினார்.
உணர்வு மங்கினார், மையல் நோயின் துன்பம் தாளாது அருகிலிருந்தவர்களிடம்
சங்கிலியாரைப் பற்றி விசாரித்தார். இங்கு திரைமறைவிலிருந்து தோன்றி
மறைந்தவள் யார்? பொன்னும், மணியும் ஒளியிடும் புத்தொளியின் புதுச்சுவையோடு,
அமிழ்தத்தையும் கலந்து, தண்நிலவின் நீர்மையாலே குழைத்துச் செய்த அழகுப்
புதுமை பூத்துக் குலுங்குகின்ற புதுமலர் போன்ற பெண்ணொருத்தி என்னை உள்ளம்
திரியும்படிச் செய்தனள். அப்பெண்மனி யார்? அவள் எங்குள்ளாள்? என்று
வினவினார் சுந்தரர். அருகிலுள்ளோர், அவள் பெயர் சங்கிலியார் என்பதையும்,
தெய்வத் தன்மை பொருந்திய அவள் அருந்தவத்தினால், எம்பெருமானின்
பாதகமலங்களைப் போற்றி வணங்கி வரும் கன்னியராவாள் என்று விடையிறுத்தனர்.
சங்கிலியாரைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட சுந்தரர்,
பரவையாரைப் பரமன் அருளாள் மணம் புரிந்தாற்போல் சங்கிலியாரையும் அடைந்தே
தீருவேன் என்று தமக்குள் தீர்க்கமானதோர் முடிவிற்கு வந்தார்.

எம்பெருமானே!
உமையாளைப் பொன் திருமேனியில் மறைத்ததுமன்றித் திருச்சடையில் கங்கையையும்
மறைத்து எழுந்தருளும் மறை முதல்வனே! எமக்குற்ற துன்பத்தைத் தீர்த்தருள
வல்லவர் நீவிர் ஒருவரே! அன்று பரவையாரை எமக்குத் திருமணம் செய்து வைத்த
தேவாதி தேவா! இன்று, உமது பாதகமலங்களுக்குச் சாத்த பூமாலையினைத் தொடுத்துக்
கட்டி மகிழும் சங்கிலியார் எனும் அழகுக்கோதை, எனது உள்ளமெனும் பூமாலையினை
அவிழ்த்து எமக்கு அவள்பால் ஆராக் காதலைத் தோற்றுவிட்டாள். இத்தருணமும்
ஐயன், எமக்காக எழுந்தருளி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சங்கிலியாரை எமக்கு
அளித்து என் துயரைப் போக்க வேண்டும். உம் திருத்தாளினை எண்ணுகின்ற எனது மன
வலிமையை உடைந்து போகுமாறு அவள் செய்துவிட்டாள். இனியாது செய்வதென்பது
அறியாது மனம் பேதலித்து நிற்கும் என்னைக் காத்து, அருள் புரியும் என்று
இறைஞ்சினார் சுந்தரர். அன்றிரவு சங்கிலியார் நினைவாகவே, ஒருபுறத்தே
துயின்றார் சுந்தரர்! எம்பெருமான், சுந்தரரின் கனவிலே எழுந்தருளி, அன்ப!
இந்நிலவுலகில் யாவருக்கும் கிட்டாத அருந்தவத்தினையுடைய சங்கிலியாரை, உனது
விருப்பப்படி மணம் முடித்து வைப்போம் என்றார். மறை முதல்வன், வேதியர்
வடிவம் கொண்டு, சங்கிலியார் கனவிலும் எழுந்தருளினார். சங்கிலியார் செஞ்சடை
அண்ணலின் பொன்சேவடிகளைப் பணிந்து, தேவரீர்! இந்த அடிமை உய்யும் பொருட்டு
எழுந்தருளிய பெரும் பேற்றுக்கு யாது கைம்மாறு செய்வேன்? என்று சொல்லிப்
பரவசமுற்றாள். சிறந்த தவத்தினையுடைய சங்கிலியே! எம்பால் அன்புடையவனும்,
மேருமாமலையைவிட மேம்பட்ட தவத்தினையுடையவனும், வெண்ணெய்நல்லூரில் எம்மால்
தடுத்தாட் கொள்ளப்பட்டவனும் ஆகிய சுந்தரன் எனும் தொண்டன், உன்னை
அடையக்கருதி எம்மிடம் வந்து இரந்து நின்றான். அவன் விருப்பத்தை
நிறைவேற்றும் பொருட்டே யாம் இங்கு வந்துள்ளோம். நீ அவனை மணந்து வாழ்ந்து
மகிழ்வாயாக! என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தார். எம்பெருமானே! என்
ஐயனே! உமது திருவருட் கட்டளையைச் சிரமேற் கொண்டேன். ஆனால், அவர் பரவையாரை
மணந்து திருவாரூரில் சுகமாக, மகிழ்ச்சி பொங்க வாழ்கிறார் என்பது உலகறிந்த
உண்மையாயிற்றே. அங்ஙனமிருக்க என்னை அவருக்குக் கொடுத்தருளுவது எங்ஙனம்
சாத்தியமாகும்? தேவரீர் திருவுள்ளம் கொண்டு, அதற்கு ஒரு வழிமார்க்கம்
செய்து என்னை அவருக்கு அடிமையாக்க அருள் செய்தல் வேண்டும் என்று பணிவன்போடு
கேட்டுக் கொண்டாள் சங்கிலியார்! சங்கிலியே! சுந்தரன் உன்னை விட்டுப்
பிரியாமல் இருப்பதற்கு, உன்னிடம் ஒரு உறுதிமொழி அளிக்குமாறு செய்கிறேன்
என்று அருளி மறைந்தார். எம்பெருமான் முன்போல் சுந்தரர் கனவில்
எழுந்தருளினார். சுந்தரர் பரமனைத் தொழுது நின்றார். ஆரூரா! உன்
விருப்பத்தைச் சங்கிலியாரிடம் கூறினோம்; ஆனால், அவளை நீ மணம் செய்து
கொள்வதில் ஒரு நிபந்தனை ஏற்பட்டுள்ளது. ஐயனே! இந்த அடியேன் ஏற்க வேண்டிய
நிபந்தனை யாதோ? சுந்தரா! நீ சங்கிலியை மணப்பதற்கு அவளுக்கொரு சபதம் செய்து
கொடுத்தல் வேண்டும். எம்பிரானே! மாதவம் புரியும் மங்கையான சங்கிலியை மணக்க,
ஐயனின் ஆணைப்படி எவ்வித சபதம் செய்தல் வேண்டும்? அவளைவிட்டுப் பிரியாமல்
என்றென்றும் அவளுடனேயே இருப்பேன், என்று உறுதிமொழி கொடுத்தல் வேண்டும்.
எம்பெருமானே! திருத்தலங்கள் தோறும் சென்று ஐயனைத் தரிசிக்காமல் என்னால்
இருக்க முடியாது. அதனால், தங்கள் ஆணைப்படி, சங்கிலிக்கு நான் உன்னைப்
பிரியேன் என்ற சபதம் செய்து கொடுப்பதற்காக, தங்கள் திருமுன்னே அவளோடு
வரும்பொழுது, அடியேன் பொருட்டு ஐயன் திருக்கோயிலை விட்டு அகன்று மகிழ
மரத்தின் கீழே எழுந்தருளல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் சுந்தரர்!
அங்ஙனமே செய்வோம் என்றார் எம்பெருமான். செஞ்சடைவண்ணர், முன்போல்
சங்கிலியார் முன்னால் எழுந்தருளி, சாரும் தவத்துச் சங்கிலியே, கேள்!
சுந்தரன் என்னுடைய திருச்சந்நிதி முன்பாக வந்து நின்று உனக்கு சபதம் செய்து
தருகிறேன் என்பான். அது சமயம் நீ அவனது விருப்பத்திற்கு இசையாது, அவனை
மகிழ மரத்திற்கு கீழே நின்று சபதம் செய்து தருமாறு கேட்டுக்கொள்வாயாக!
என்றார். சங்கிலியார், எம்பெருமானின் திருவடியைத் தொழுது எழுந்து,
கரங்கூப்பி, மாலவனால் அறிவதற்கரியவரே! இத்தகைய ரகசியத்தை எமக்கு அருளிச்
செய்து காத்தமையால் யான் ஐயனின் அடியேனாக ஏற்றுக்கொள்ளப் பெற்றேன் என்று
கூறினாள். எம்பெருமான் சங்கிலியாரை வாழ்த்தி மறைந்தார். இவ்வாறு தமது
அன்புத்தொண்டர்களுக்காக அற்புதத் திருவிளையாடல் நடத்தி ஆனந்தித்தார்
திருவொற்றியூர் பெருமான்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:26

சங்கிலியார் விழித்தெழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அதுவரை தம்
எதிரிலேயே எழுந்தருளி ஆட்கொண்ட எம்பெருமானைக் காணாது கலங்கினாள். இறைவனின்
அன்பின் திறத்தினை எண்ணி, எண்ணி பெரும் வியப்பு கொண்டாள். சற்று நேரம் யாது
செய்வதென்பதறியாது மனம் குழம்பிப் போன சங்கிலியார், உறக்கம் வராமல்
தவித்தாள். சற்று சிந்தித்தாள். சட்டென்று ஏதோ ஒரு முடிவிற்கு வந்து தம்
அருகே படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சேடியர்களை எழுப்பினாள். அவர்களும்
திடுக்கிட்டு விழித்தெழுந்தனர். அத்தோழியர்களிடம் இறைவர் தமது கனவில்
எழுந்தருளி திருவாய் மலர்ந்து அருளிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினாள்.
மறுநாள் சங்கிலியார், தோழியருடன் திருமாலைகள் சாத்துவதற்காக வேண்டியளவு
நறுமலர்களைப் பறித்துக் கொண்டாள். திருக்கோயிலை வந்தடைந்ததாள். சுந்தரரும்,
சங்கிலியாரை எதிர்பார்த்து கோயிலுக்கு வந்திருந்தார். அவளருகே சென்று,
எம்பெருமான் தமது கனவில் எழுந்தருளி திருவருள் புரிந்ததனை இயம்பினார்.
அம்மொழி கேட்டு சங்கிலியார் நாணத்தால் கன்னம் சிவக்க, புன்னகையை
சிந்திவிட்டு, இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, செக்க சிவந்த
மென்சீரடி எடுத்து அன்னம்போல நடந்து கோயிலுள் புகுந்தாள். சுந்தரர்
சங்கிலியார் பின்சென்று, ஆயிழையீர்! எம்பெருமான் திருவாய் மலர்ந்து
அருளியதற்கு ஏற்ப, உம்மை மணந்து என்றும் பிரிந்து போகாத நிலையில்
இவ்வூரிலேயே வாழ்கிறேன் என்று ஆணையிட்டுத் தருகிறேன். அதனால் எம்பெருமான்
திருமுன்பு வருவீர்களாக! என்று கேட்டுக் கொண்டார். எமது பெருமானே! இதற்காக
இறைவன் முன்பு ஆணையிட்டுத் தருவதென்பது தகாத செயலாகும் என்றனர் சேடியர்!
சேடியர் சொல்லியவற்றைக் கேட்டு, சுந்தர் பெண்களே! எம்பெருமானின் திருமுன்
சபதம் செய்து தருவதை விட வேறு சிறந்த இடம் எங்குள்ளது? மகிழ மரத்தின் கீழே
இருந்து சத்தியம் செய்து கொடுத்தால் அதுவே எங்களுக்கும், எங்கள்
தலைவிக்கும் போதுமானதாகும். சுந்தரர் சற்று திடுக்கிட்டார். மகிழ
மரத்தடியில் அல்லவா எம்பெருமானை எழுந்தருளியிருக்கச் சொன்னோம் என்றெண்ணி
நிலை தடுமாறினார். இருந்தும் சுந்தரர் தமது தயக்கத்தையோ, ஐயத்தையோ
வெளிப்படுத்தவில்லை! தோழியர்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்க
விரும்பவில்லை. துணிந்து அவர்கள் வினவியதற்கு ஏற்ப மகிழ மரத்தடியில் சபதம்
செய்து கொடுப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு
மகிழ மரத்தருகே சென்றார். சுந்தரர் மகிழ மரத்தை வலம் வந்து எம்பெருமானை
மனதில் தியானித்தார். திருவொற்றியூரை விட்டு அகன்று உன்னை என்றும் பிரியேன்
என்று சங்கிலியாருக்கு திருத்தமாக சத்திய சபதம் செய்து கொடுத்தார்
சுந்தரர்! சங்கிலியார், எடுத்த பிறவியின் முழுப்பயனையும் பெற்றுவிட்ட
பேரின்பக் களிப்பில், சுந்தரர் திருவடி வீழ்ந்து வணங்கினாள். சேடியர்களுடன்
சுந்தரரிடம் விடைபெற்றுச் சென்றாள். சுந்தரர், இறைவனின் பாதகமலங்களைப்
பணிந்து பதிகம் பாடி துதித்தார். அன்றிரவே எம்பெருமான், சுந்தரர்க்கும்,
சங்கிலியாருக்கும் திருமணத்தை நடத்திவைக்கும் பொருட்டு,
திருவொற்றியூரிலுள்ள சிவத்தொண்டர் கனவில் எழுந்தருளி, எம்மால் தடுத்தாட்
கொள்ளப்பட்ட வன்றொண்டனுக்கும், மாதவமிக்க மங்கை நல்லாள் சங்கிலிக்கும்
திருமணத்தை நடத்தை வைப்பீர்களாகுக என்று கட்டளையிட்டார். மறுநாள்,
அச்சிவத்தொண்டர்கள் சங்கிலியாருக்கும், சுந்தரருக்கும் திருமணத்தை
நடத்துவதற்கான ஏற்பாட்டைத் தொடங்கினர். சங்கிலியார் பெற்றோர்களிடம்
விவரத்தைக் கூறினாள். அவர்களும் மகிழ்ந்தனர். மங்களகரமான நன்னாளன்று உலகமே
வியக்கும் வண்ணம் சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் மிக்கச் சிறப்புடன்
திருமணம் நடந்தது. இறைவனின் அருள்பெற்ற சங்கிலியாரும், சுந்தரரும் இல்லற
வாழ்க்கையை இனிது நடத்தினர். சங்கிலியார் பூமாலையால் பரமனைப் பணிய,
சுந்தரர் பைந்தமிழ் பாமாலையால் பரமனைப் பணிந்தார். இருவரும் நாடோறும்
திருவொற்றியூர் ஆலயத்தை வலம் வந்து, நலந்தந்த நாதன் மலரடியைத் தொழுது
வணங்கி சிவத்தொண்டுகள் பல புரிந்து இல்லறமெனும் இன்பக் கடலில் மூழ்கி
மிதந்து எல்லையில்லா இன்பம் பூண்டு வாழ்ந்து வரலாயினர். வசந்த காலம்
வந்தது! திருவாரூர் வீதிவிடங்கப் பெருமானுக்கு வசந்த காலத்தில் தான்
பெருவிழா நடைபெறுவது வழக்கம். பொங்கு தமிழ் வளர்கின்ற பொதிய மலையிலே தோன்றி
சந்தன மரங்களிடையே தவழ்ந்து, மலைச்சாரல்களிடையே வளர்ந்து வரும் தென்றல்
காற்று சுந்தரர் மேனியில் பட்டு இன்பக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய வசந்த காலத் தென்றலில் சுந்தமூர்த்தி நாயனார் சங்கிலியாருடன்
சுந்தரகீதம் பாடிய வண்ணம் சொக்கி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது
உள்ளுணர்வு வசந்த காலத்தில் திருவாரூரில் நடைபெறும் திருவிழாக்
காட்சியையும், அத்திருவிழாக் கோலத்தில் தியாகேசப் பெருமான்
எழுந்தருளியிருக்கும் மாட்சியையும், பரவையார் பக்திப் பெருக்கோடு பரமன்
முன்னால் பரதம் ஆடி அக மகிழ்வதைப் போன்ற காட்சியையும் தோன்றச் செய்தது.
பூங்கோயிலினுள் அமர்ந்தாரை-புற்றிடங் கொண்டாரை-எந்நேரமும் அடியார்களை எண்ணி
அருள்புரிகின்ற அம்பலவாணரை இவ்விடத்து நான் மறந்திருந்தேனே என்று
தியாகேசப்பெருமானின், பிரிவாற்றாமையால் சித்தம் கலங்கினார் சுந்தரர்.

பத்திமையையும்
அடிமையையும் கைவிடுவான் என்று தொடங்கி, எத்தனை நாளும் பிரிந்திருக்கேன்
என்னாரூர் இறைவனையே என்ற குறிப்பை உணர்த்தும் தமிழ்ப் பாமாலையைப் பாடினார்.
அவரால் திருவொற்றியூரில் இருக்கவே முடியவில்லை. சங்கரர் நினைவால் சிந்தை
குளிர்ந்த சுந்தரர் சங்கிலியாருக்குக் கொடுத்த சபதத்தை மறந்தார்.
எப்படியும் திருவாரூருக்குப் புறப்பட்டுப் போய்விடுவது என்ற திடமான
முடிவிற்கு வந்தார். ஒருநாள் சுந்தரர் சங்கிலியாருக்கு தெரியாமல்
திருவொற்றியூர் எல்லையைக் கடந்து அடி எடுத்து வைத்தார். சங்கிலியாருக்குக்
கொடுத்த உறுதிமொழியை மீறியதால் அக்கணமே சுந்தரரது கண்கள் இரண்டும் ஒளியை
இழந்தன. நாயனார் மூர்ச்சித்தார்.சுந்தரர் அப்போதே தமது தவற்றை உணர்ந்தார்.
சங்கிலியாருக்கு அளித்த உறுதிமொழியை முறித்துவிட்டதினால் தான் இறைவன் தன்
கண் ஒளியைப் பறித்துக் கொண்டார் என்பதையும் சுந்தரர் உணர்ந்தார். அழுக்கு
மெய்கொடு என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமனைப் பணிந்தார். இறைவன்
சுந்தரர்க்கு அருள் செய்யாது வாளா இருந்தார்.எப்படியும் திருவாரூரை
அடைந்து தியாகேசப் பெருமானைத் தொழுது வழிபடுவது என உறுதி பூண்டார். ஒருவாறு
தட்டுத்தடுமாறி, முல்லைவாயில் தலத்தில் கோயில் கொண்டுள்ள கருநட்ட கண்டரைத்
தரிசித்தவாறு திருவெண்பாக்கம் என்னும் பழம்பதியை வந்தடைந்தார் சுந்தரர்!
திருவெண்பாக்கத்து எம்பெருமானைக் கண்டுகளிக்க கண்ணுக்கு ஒளி இல்லாமற்
போய்விட்டதே எனச் சித்தம் கலங்கிய நாயனார், பரமனைத் துதித்து, பிறைமுடிப்
பெருமானே நீவிர் இத்திருக்கோயிலின் உள்ளேதான் எழுந்தருளியிருக்கின்றீரோ?
என்று உளம் வருந்த இறைஞ்சி நின்றார். சுந்தரரின் கனிமொழியைக் கேட்டு,
பிரம்படி பட்ட பரமன் ஊன்றுகோல் ஒன்று அவரது கைகளில் வந்து தங்குமாறு
அருள்புரிந்தார். சுந்தரா! யாம் கோயிலின் உள்ளேதான் இருக்கின்றோம் என்ற
கருத்தமைய, யாம் உள்ளோம். நீர் போகீர் என்று இணக்கமில்லாத மொழிகளால் விடை
பகர்ந்தார். விடையேறும் பெருமான் அன்னியனிடம் கூறுவது போல் சற்று கடுமையாக
மொழிந்ததைக் கேட்டு, சுந்தரர் வேதனை தாளாமல் பிழையுறன பொறுத்திடுவர் எனத்
தொடங்கும் பாடலால் மெய்யுருகினார். எம்பெருமானின் அருள் உள்ளம் இந்த
அளவிற்குத்தான் இத்தலத்தில் தமக்கு கிட்டியதுபோலும் என்று உள்ளத்திலே
எண்ணியவாறு, ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார். சுந்தரர்
திருவாலங்காடு, திருவூறல் போன்ற சிவத்தலங்களை வழிபட்டவாறு காஞ்சிமா
நகரத்தினை வந்தடைந்தார். எழில்மிகு சோலைகளால் சுந்தரத் தோற்றமளிக்கும்
திருக்கச்சிக்காமக் கோட்டத்தில் உள்ள காமாட்சி அம்மையாரின் சன்னதியை
வணங்கித் துதித்த சுந்தரமூர்த்தி நாயனார், அப்படியே ஏகம்பவாணர்
சன்னதியையும் அடைந்தார். விண்ணவர் வாழ நஞ்சுண்ட கயிலைமலைக் கண்ணாளா! கச்சி
ஏகம்பனே! பவளவண்ணரே! மறைகட்கும் எட்டாத மாமுனியே! உமது ஆனந்த ரூபத்தைத்
தரிசித்து மகிழ, கடையேனாகிய எனது பிழையைப் பொறுத்து அருளி பார்வையைத் தந்து
காத்திட வேண்டும். அன்று நல்லூர் மணப்பந்தலிலே என்னை தடுத்தாட் கொண்ட
அண்ணலே! இன்று உன் அருட்கோலத்தைக் கண்டு மகிழத் துடிக்கும் உன் தோழனுக்குப்
பார்வையைத் தரலாகாதோ? ஐயனே! என் உணர்வை நீ உணராதவன் அல்லவே! என்றெல்லாம்
பலவாறு கதறிக் கதறி இறைஞ்சி நின்றார். காமாட்சி அம்மையாருடைய தளிர்க்
கரங்களால் வழிபாடு செய்து பணிந்த ஏகம்பவாணரின் பாத கமலங்களைப் பணிந்தார்.
துதித்து பாமாலை பாடினார். சுந்தரரின் பாமாலைக்கு பரமன் மனம் குளிர்ந்தார்.
காமாட்சி அம்மையார் தழுவக் குழைந்த திருசடைப்பெருமான் சுந்தரருக்கு
இடக்கண் பார்வையினை மட்டும் கொடுத்து, தமது திருக்கோலத்தை காட்டி
அருளினார். சுந்தரர் கண் பெற்ற பெருமிதத்தில் ஆடினார்; பாடினார்; நிலமதில்
வீழ்ந்து பன்முறை வணங்கி, வணங்கி எழுந்தார். ஆலந் தானுகந் தமது செய்தானை
என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஏகம்பவாணரின் மலர்த்தாளினைத்
துதித்தார் சுந்தரர்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:27

சுந்தரர் தொண்டர்களுடன் சில நாட்கள் அப்பதியிலேயே தங்கி, சிவ வழிபாடு
புரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து தமது சிவ யாத்திரையைத் துவங்கினார்.
இரவென்றும், பகலென்றும் பாராமல் வழி நடந்தார். அவர் உடலில் நோய் கண்டது.
நடை தளர்ந்தார். அப்படியும் சிவதரிசனத்தை மட்டும் கைவிடவில்லை.எண்ணற்ற
சிவத்தலங்களைத் தரிசித்து, பதிகங்கள் பல பாடியவாறே மாத்தூர்,
திருநெல்வாயில் வழியாக காவிரியாற்றைக் கடந்து திருவாடுதுறை
திருத்துருத்தியினை அடைந்தார்.சிவக்கோயிலை பன்முறை வலம் வந்து
எம்பெருமானின் செஞ்சேவடிகளை தரிசித்து, நம்மை துன்புறுத்தி வரும் உடம்பின்
மேல் உற்ற பிணியை ஒழித்துக் காக்க வேண்டும் என்று பணிந்து
நின்றார்.சுந்தரரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருத்துருத்தி மேவும்
விரிசடைத் தம்பிரான், ஆரூரா! அஞ்சாதே! இக்கோயிலின் வடபுறத்திலுள்ள
குளத்தில் நீராடினால் உன் உடம்பில் பற்றியுள்ள வெப்பு நோய் விலகும் என்று
அருளினார்.அரனாரின் அன்புமொழி கேட்டு ஆனந்தப் பெருக்கோடு சுந்தரர் கோயிலின்
வடபுறத்திலுள்ள குளத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவண்ணம்
மூழ்கி எழுந்தார்.எம்பெருமானின் அருளால் அவரது மேனியில் இடைக்காலத்து
ஏற்பட்ட புதிய வெப்பு நோய் நீங்கப் பெற்ற மாணிக்கம் போல் பேரொளி வீசும்
பொன்மேனியைப் பெற்றார்.சிவனருள் பெற்ற அச்சிவச்செல்வர், தேன் உண்ட வண்டு
போல் இன்பம் பெற்றார்.மின்னுமா மேகம் எனத் தொடங்கும் பதிகத்தை ஏழிசைகளில்
எடுத்துரைத்து எல்லையில்லா இன்பம் கண்டார். எம்பெருமானின் அருளை
நினைத்தவராய்த் தொண்டர்களுடன் திருவாரூரை நோக்கி புறப்பட்டார். திருவாரூர்
எல்லையை வந்தடைந்த சுந்தரர், தியாகேசப்பெருமான் எழுந்தருளியிருக்கும்
பூங்கோயிலின் பெருங்கோபுரத்தைக் கண்டு மகிழ்ந்தார். பொழுது சாயும் வேளையில்
திருவாரூரினுள்ளே நுழைந்தார். தொண்டர்கள் புடைசூழ, திருப்பரவையுண் மண்டலி
என்னும் ஆலயத்தை வலம் வந்து வழிபட்டு, தூவாயத் தொண்டு என்று தொடங்கும்
செந்தமிழ்ப் பாமாலையினை சாத்தி சிந்தை குளிர்ந்தார் சுந்தரர்! குருகுபாய
எனத் தொடங்கும் சிவப்பதிகத்தைப் பாடியவாறே சிவன் அடியார்களுடன், தேவாசிரிய
மண்டபத்தை அடைந்த சுந்தரர், கோபுரத்தைத் தரிசித்தவாறே புற்றிடங்கொண்ட
நாதரின் சிலம்பணிந்த தாளினைப் பணிந்து போற்றினார். எம்பெருமானே! இன்னுமா
தங்கள் தோழர்க்குத் தீராத துயரம். துயரக்கடலில் அல்லலுற்று வருந்தும்
இவ்வடியேனைக் கரைசேர்த்து, மற்றொரு கண்ணுக்கும் ஒளி தந்தருளுவீர்! என்று
இறைஞ்சி நின்ற சுந்தரர், மீளா வடிவை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப்
பாடினார். அப்படியும் இறைவனின் மனமிரங்காதது கண்டு, அருட்பெருஞ்சோதியே!
உமது திருமலர்த்தாளினை இடையறாது, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபடும்
தொண்டனுக்கு ஏற்படும் தீராத துன்பங்கண்டு நீ ஒருபோதும் பொறுத்திருக்க
மாட்டாயே! அக்கணமே அன்பர்களின் துயரத்தைத் தீர்த்து வைத்து மகிழ்வாயே!
அப்படியிருக்க எம்மை காத்தருளலாகாதது ஏனோ? என்று குறிப்புடனே, அடிமையும்,
தோழமையும் கலந்த அருத்திறத்தோடு கூடிய இன்பத் தமிழ்ப்பதிகம் ஒன்றைப் பாடிப்
பரமனைப் பணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகங்களில் சிந்தை
குளிர்ந்த செஞ்சுடர் வண்ணர், சித்தம் இரங்கி, அவருக்கு வலக்கண்
பார்வையினையும் கொடுத்து அருள்புரிந்தார். கதிரவனைக் கண்டு தாமரை
மலர்ந்தாற் போல் பரமன் அருளிலே சுந்தரர் முகம் மலர, ஒளி பெற்ற
பேரானந்தத்தில் பரமனைப் பணிந்து உலகையே மறந்தார்.கண் பெற்ற சுந்தரர், தாம்
கண்மூடித்தனமாக பரவையாருக்குச் செய்த துரோகச் செயலை எண்ணிப் பார்த்தார்.
அவர் மனம் வேதனையாலும், வெட்கத்தாலும் கூனிக் குறுகியது. பரவையார்
மாளிகைக்கு செல்ல அஞ்சியவராய், தேவாசிரிய மண்டபத்திலேயே தங்கிவிட்டார்
சுந்தரர்.

சுந்தரர் பிரிந்து சென்ற பிறகு பரவையார், பிரிவாற்றாமை
தாளாது, எல்லையில்லாத் துன்பமடைந்தாள். அம்மையாருக்கு இரவு பகலாகவும், பகல்
இரவாகவும் கழிந்தன. மனதிலே நிம்மதியென்பது கடுகளவு கூட இல்லாமற் போது.
அன்பரைப் பிரிந்து தணல் மேல் புழுப் போல் துவண்டு கொண்டிருக்கும்
நாளில்தான், திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து
கொண்டார் என்ற செய்தி பரவையாருக்கு எட்டியது. பரவையார் மேலும் வேதனையும்
பெருங்கோபமும் கொண்டாள். இரவும், பகலும் மாலையிட்ட மணாளனின் நினைவாகவே
நெஞ்சு நெகிழ்ந்து, சிறகொடிந்த பறவைபோல்-பற்றுக்கோல் அற்ற முல்லைக்
கொடிபோல்- பாலைவனத்திலே காயும் நிலவு போல்-பாய்மரம் இல்லாத மரக்கலம் போல்
அவதிப்பட்டு கொண்டிருந்தாள் பரவையார். வண்டுகள் மொய்க்கும் அன்றலர்ந்த
மென்மலர் தூவிய பட்டு விரித்த ரத்தின மணிக்கட்டில் நித்திரை கொள்ளாது
எந்நேரமும் விழித்தேயிருந்தாள். இவ்வாறு பரவையார் வாழ்ந்து வரும் நாளிலே,
தேவாசிரிய மண்டபத்திலே தங்கியிருந்த சுந்தரர், பரவையார் மாளிகைக்குச் செல்ல
அஞ்சியவராய், தமது ஏவலாளர் சிலரை அனுப்பி, தமது வருகையை அம்மையாரிடம்
தெரிவிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். பரவையார் மாளிகையை அடைந்த
ஏவலாளர்களால், உள்ளே சென்று பரவையாரைப் பார்க்கக் கூட முடியவில்லை.
எப்படியோ விஷயம் அறிந்த தோழியர்கள் தலைவியின் கட்டளைப்படி கதவடைத்து
அனுப்பி விட்டார்கள். ஏவலாளர்கள் ஏமாற்றத்தோடு சுந்தரரை அணுகி, ஐயனே!
தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரோடு வாழ்ந்து வந்த வரலாற்றைத் தெரிந்து
வைத்திருக்கும் அம்மையார் எங்களைப் பார்க்க மறுத்ததோடல்லாமல்,
தோழியர்களிடம் சொல்லிக் கதவையும் தாழிடச் செய்துவிட்டார்கள் என்றனர்.
சுந்தரர் சித்தம் தடுமாறினார், பரவையார் பிணக்கை போக்கி, அவர்களது
திருமாளிகைக்குச் செல்வதுதான் எங்ஙனம்? என்று தமக்குள் எண்ணி மனம்
கலங்கினார். நெடு நேரம் சிந்தித்தார். முடிவில், உலக இயல்பினைக் கற்றுத்
தெளிந்த திறமைமிக்க மாதர்களை, பரவையாரிடம் தூது அனுப்பி வைத்தார். பரவையார்
மாளிகையை அடைந்த அம்மாதர்கள் பரவையாரை நேரில் சந்தித்து, தங்கள்
வணக்கத்தைத் தெரிவித்து கொண்டனர். நற்றமிவக்க நங்கையே! எம்பிரானால்
தடுத்தாட் கொள்ளப்பட்ட தங்கள் நாயகர் தம்பிரான் தோழர், மீண்டும் தங்களுடன்
சேர்ந்து வாழ வந்துள்ளார்கள். உங்கள் பெருமையையும் அவரது பெருமையையும்
அளவிட முடியாதது. அங்ஙனமிருக்க, நீங்கள் உங்கள் நாயகர் மீது இவ்வாறு ஊடல்
கொண்டு, பிணக்கம் கொள்வது நம் பண்பிற்கு ஒவ்வாதது. இறைவனின் அருளால்
மீண்டும் கண்களைப் பெற்றது உங்களை எண்ணி மனம் உருகிக் கண்ணீர்
வடிப்பதற்கல்ல; உங்கள் அழகு நடனத்தையும், ஒளிமிக்க கமலவதனத்தையும் கண்டு
களிப்பதற்காகத் தான். அதனால் அம்மையார் எங்கள் பொருட்டாவது ஐயன் மீது
கொண்டுள்ள கோபத்தை தணித்து கொள்ளுங்கள் என்று பலவாறு அம்மாதர்கள் கூறினர்.
அவர்களது அறிவுரைகளைப் பரவையார் சற்றும் செவிமடுக்கவில்லை. என்னை மறந்து,
வேறு பெண்ணை மணம் செய்துகொண்டு, எனக்குத் தீராத துயரத்தையும் ஆறாத
கவலையையும் அளித்த அவரது குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் அறிவுரைகள்
பகர்ந்தாலும் என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. நீங்கள் மேலும் மேலும்
பேசிப் பேசி என் மனதை புண்படுத்துவீர்களானால் நான் உயிரை இழப்பது திண்ணம்.
தயவு செய்து போய்விடுங்கள் என்று ஒரேயடியாக, சினத்தோடு மறுத்து அவர்களைத்
திரும்ப அனுப்பி விட்டார் பரவையார். பரவையார் பேச்சிற்கு மறுமொழி பேசாமல்,
ஏமாற்றத்தோடு வெளியே வந்த மாதர்கள், சுந்தரரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும்
கூறிச் சென்றனர். சுந்தரர், மன சோர்வுற்றார். இரவு கழிந்து
கொண்டேயிருந்தது. நடு ஜாமம் வந்தது. இருந்தும் சுந்தரருக்கு உறக்கம்
சற்றுகூட வரவில்லை. அவருடன் சூழ்ந்திருந்த அன்பர்கள் அனைவரும் அயர்ந்து
உறங்கிக் கொண்டிருந்தனர். கவலை தோய்ந்த முகத்தோடு, இறைவனைத் தியானித்த
வண்ணம் கண்விழித்திருந்த சுந்தரர், தமது குறையை இறைவனிடம் முறையிடுவது
என்று எண்ணினார். சுந்தரர், ஒளி கொடுத்த திங்கள் வளர்நாயகரைப் பணிந்து,
என்னைத் தடுத்தாட்கொண்ட தம்பிரானே! அன்பர்க்கு அன்பனே! எமக்கு தேவரீர்
இப்படியும் ஒரு சோதனையைக் கொடுத்து திருவிளையாடல் புரியலாமா? முன்வினைப்
பயனால், இப்பிறப்பில் தேவரீர் அருளோடு மணம் புரிந்து கொண்ட பரவையார்
என்னைத் திரும்ப ஏற்க மறுப்பதைத் தாங்கள் அறியாததல்லவே! எம்பிரானே!
பரவையாருக்கு எம்மோடுள்ள பிணக்கை போக்கி உய்யும் வழிசெய்யும் திறத்தவர்
உம்மையன்றி வேறு எவர் எனக்குள்ளார்? விண்ணவர்களுக்காக விடமுண்ட நீலகண்ட
நாயகரே! இந்நடுராத்திரியில் இவ்வடியேனுக்காக இங்கு எழுந்தருளி,
காத்தருளலாகாதா? என்று வேண்டினார். அக்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள
பரம் பொருளான கயிலையரசன், சுந்தரரின் துயரத்தைத் தீர்க்க திருவுள்ளம்
கொண்டார். அந்த நள்ளிரவு நேரத்தில் எம்பெருமான் சுந்தரர் முன்னால் பேரொளிப்
பிழம்பாகக் காட்சி அளித்தார். சுந்தரர் பக்தி வெள்ளம் போல் பெருக, இறைவனது
சேவடிகளைப் பணிந்து போற்றினார். புற்றிடங்கொண்ட பெருமான், தம்மைப் பற்றிக்
கொண்ட தோழருக்கு அருள் செய்து, அன்பனே! இந்த நடு ஜாமத்தில் அபயக்குரல் எது
கருதி? அப்பனே! உனக்கு நேர்ந்ததுதான் என்ன? என்று ஒன்றுமறியாதவரைப் போல்
கேட்டார். இறைவன் இவ்வாறு கேட்டதும் தம்பிரான் தோழர் உடல் நடுங்க,
மெய்சிலிர்க்க, பித்தா! பிறைசூடி! பெருமானே! அன்பர் மனங்களில் எந்நேரமும்
எழுந்தருளியிருக்கும் அருளாளா! தயாபரா! நீ அறியாததொன்றில்லையே! உமது
சக்தியில்தானே அகில உலகமும் சுற்றிச் சுழலுகிறது
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:28

சுந்தரர் தொண்டர்களுடன் சில நாட்கள் அப்பதியிலேயே தங்கி, சிவ வழிபாடு
புரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து தமது சிவ யாத்திரையைத் துவங்கினார்.
இரவென்றும், பகலென்றும் பாராமல் வழி நடந்தார். அவர் உடலில் நோய் கண்டது.
நடை தளர்ந்தார். அப்படியும் சிவதரிசனத்தை மட்டும் கைவிடவில்லை.எண்ணற்ற
சிவத்தலங்களைத் தரிசித்து, பதிகங்கள் பல பாடியவாறே மாத்தூர்,
திருநெல்வாயில் வழியாக காவிரியாற்றைக் கடந்து திருவாடுதுறை
திருத்துருத்தியினை அடைந்தார்.சிவக்கோயிலை பன்முறை வலம் வந்து
எம்பெருமானின் செஞ்சேவடிகளை தரிசித்து, நம்மை துன்புறுத்தி வரும் உடம்பின்
மேல் உற்ற பிணியை ஒழித்துக் காக்க வேண்டும் என்று பணிந்து
நின்றார்.சுந்தரரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருத்துருத்தி மேவும்
விரிசடைத் தம்பிரான், ஆரூரா! அஞ்சாதே! இக்கோயிலின் வடபுறத்திலுள்ள
குளத்தில் நீராடினால் உன் உடம்பில் பற்றியுள்ள வெப்பு நோய் விலகும் என்று
அருளினார்.அரனாரின் அன்புமொழி கேட்டு ஆனந்தப் பெருக்கோடு சுந்தரர் கோயிலின்
வடபுறத்திலுள்ள குளத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவண்ணம்
மூழ்கி எழுந்தார்.எம்பெருமானின் அருளால் அவரது மேனியில் இடைக்காலத்து
ஏற்பட்ட புதிய வெப்பு நோய் நீங்கப் பெற்ற மாணிக்கம் போல் பேரொளி வீசும்
பொன்மேனியைப் பெற்றார்.சிவனருள் பெற்ற அச்சிவச்செல்வர், தேன் உண்ட வண்டு
போல் இன்பம் பெற்றார்.மின்னுமா மேகம் எனத் தொடங்கும் பதிகத்தை ஏழிசைகளில்
எடுத்துரைத்து எல்லையில்லா இன்பம் கண்டார். எம்பெருமானின் அருளை
நினைத்தவராய்த் தொண்டர்களுடன் திருவாரூரை நோக்கி புறப்பட்டார். திருவாரூர்
எல்லையை வந்தடைந்த சுந்தரர், தியாகேசப்பெருமான் எழுந்தருளியிருக்கும்
பூங்கோயிலின் பெருங்கோபுரத்தைக் கண்டு மகிழ்ந்தார். பொழுது சாயும் வேளையில்
திருவாரூரினுள்ளே நுழைந்தார். தொண்டர்கள் புடைசூழ, திருப்பரவையுண் மண்டலி
என்னும் ஆலயத்தை வலம் வந்து வழிபட்டு, தூவாயத் தொண்டு என்று தொடங்கும்
செந்தமிழ்ப் பாமாலையினை சாத்தி சிந்தை குளிர்ந்தார் சுந்தரர்! குருகுபாய
எனத் தொடங்கும் சிவப்பதிகத்தைப் பாடியவாறே சிவன் அடியார்களுடன், தேவாசிரிய
மண்டபத்தை அடைந்த சுந்தரர், கோபுரத்தைத் தரிசித்தவாறே புற்றிடங்கொண்ட
நாதரின் சிலம்பணிந்த தாளினைப் பணிந்து போற்றினார். எம்பெருமானே! இன்னுமா
தங்கள் தோழர்க்குத் தீராத துயரம். துயரக்கடலில் அல்லலுற்று வருந்தும்
இவ்வடியேனைக் கரைசேர்த்து, மற்றொரு கண்ணுக்கும் ஒளி தந்தருளுவீர்! என்று
இறைஞ்சி நின்ற சுந்தரர், மீளா வடிவை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப்
பாடினார். அப்படியும் இறைவனின் மனமிரங்காதது கண்டு, அருட்பெருஞ்சோதியே!
உமது திருமலர்த்தாளினை இடையறாது, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபடும்
தொண்டனுக்கு ஏற்படும் தீராத துன்பங்கண்டு நீ ஒருபோதும் பொறுத்திருக்க
மாட்டாயே! அக்கணமே அன்பர்களின் துயரத்தைத் தீர்த்து வைத்து மகிழ்வாயே!
அப்படியிருக்க எம்மை காத்தருளலாகாதது ஏனோ? என்று குறிப்புடனே, அடிமையும்,
தோழமையும் கலந்த அருத்திறத்தோடு கூடிய இன்பத் தமிழ்ப்பதிகம் ஒன்றைப் பாடிப்
பரமனைப் பணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகங்களில் சிந்தை
குளிர்ந்த செஞ்சுடர் வண்ணர், சித்தம் இரங்கி, அவருக்கு வலக்கண்
பார்வையினையும் கொடுத்து அருள்புரிந்தார். கதிரவனைக் கண்டு தாமரை
மலர்ந்தாற் போல் பரமன் அருளிலே சுந்தரர் முகம் மலர, ஒளி பெற்ற
பேரானந்தத்தில் பரமனைப் பணிந்து உலகையே மறந்தார்.கண் பெற்ற சுந்தரர், தாம்
கண்மூடித்தனமாக பரவையாருக்குச் செய்த துரோகச் செயலை எண்ணிப் பார்த்தார்.
அவர் மனம் வேதனையாலும், வெட்கத்தாலும் கூனிக் குறுகியது. பரவையார்
மாளிகைக்கு செல்ல அஞ்சியவராய், தேவாசிரிய மண்டபத்திலேயே தங்கிவிட்டார்
சுந்தரர்.

சுந்தரர் பிரிந்து சென்ற பிறகு பரவையார், பிரிவாற்றாமை
தாளாது, எல்லையில்லாத் துன்பமடைந்தாள். அம்மையாருக்கு இரவு பகலாகவும், பகல்
இரவாகவும் கழிந்தன. மனதிலே நிம்மதியென்பது கடுகளவு கூட இல்லாமற் போது.
அன்பரைப் பிரிந்து தணல் மேல் புழுப் போல் துவண்டு கொண்டிருக்கும்
நாளில்தான், திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து
கொண்டார் என்ற செய்தி பரவையாருக்கு எட்டியது. பரவையார் மேலும் வேதனையும்
பெருங்கோபமும் கொண்டாள். இரவும், பகலும் மாலையிட்ட மணாளனின் நினைவாகவே
நெஞ்சு நெகிழ்ந்து, சிறகொடிந்த பறவைபோல்-பற்றுக்கோல் அற்ற முல்லைக்
கொடிபோல்- பாலைவனத்திலே காயும் நிலவு போல்-பாய்மரம் இல்லாத மரக்கலம் போல்
அவதிப்பட்டு கொண்டிருந்தாள் பரவையார். வண்டுகள் மொய்க்கும் அன்றலர்ந்த
மென்மலர் தூவிய பட்டு விரித்த ரத்தின மணிக்கட்டில் நித்திரை கொள்ளாது
எந்நேரமும் விழித்தேயிருந்தாள். இவ்வாறு பரவையார் வாழ்ந்து வரும் நாளிலே,
தேவாசிரிய மண்டபத்திலே தங்கியிருந்த சுந்தரர், பரவையார் மாளிகைக்குச் செல்ல
அஞ்சியவராய், தமது ஏவலாளர் சிலரை அனுப்பி, தமது வருகையை அம்மையாரிடம்
தெரிவிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். பரவையார் மாளிகையை அடைந்த
ஏவலாளர்களால், உள்ளே சென்று பரவையாரைப் பார்க்கக் கூட முடியவில்லை.
எப்படியோ விஷயம் அறிந்த தோழியர்கள் தலைவியின் கட்டளைப்படி கதவடைத்து
அனுப்பி விட்டார்கள். ஏவலாளர்கள் ஏமாற்றத்தோடு சுந்தரரை அணுகி, ஐயனே!
தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரோடு வாழ்ந்து வந்த வரலாற்றைத் தெரிந்து
வைத்திருக்கும் அம்மையார் எங்களைப் பார்க்க மறுத்ததோடல்லாமல்,
தோழியர்களிடம் சொல்லிக் கதவையும் தாழிடச் செய்துவிட்டார்கள் என்றனர்.
சுந்தரர் சித்தம் தடுமாறினார், பரவையார் பிணக்கை போக்கி, அவர்களது
திருமாளிகைக்குச் செல்வதுதான் எங்ஙனம்? என்று தமக்குள் எண்ணி மனம்
கலங்கினார். நெடு நேரம் சிந்தித்தார். முடிவில், உலக இயல்பினைக் கற்றுத்
தெளிந்த திறமைமிக்க மாதர்களை, பரவையாரிடம் தூது அனுப்பி வைத்தார். பரவையார்
மாளிகையை அடைந்த அம்மாதர்கள் பரவையாரை நேரில் சந்தித்து, தங்கள்
வணக்கத்தைத் தெரிவித்து கொண்டனர். நற்றமிவக்க நங்கையே! எம்பிரானால்
தடுத்தாட் கொள்ளப்பட்ட தங்கள் நாயகர் தம்பிரான் தோழர், மீண்டும் தங்களுடன்
சேர்ந்து வாழ வந்துள்ளார்கள். உங்கள் பெருமையையும் அவரது பெருமையையும்
அளவிட முடியாதது. அங்ஙனமிருக்க, நீங்கள் உங்கள் நாயகர் மீது இவ்வாறு ஊடல்
கொண்டு, பிணக்கம் கொள்வது நம் பண்பிற்கு ஒவ்வாதது. இறைவனின் அருளால்
மீண்டும் கண்களைப் பெற்றது உங்களை எண்ணி மனம் உருகிக் கண்ணீர்
வடிப்பதற்கல்ல; உங்கள் அழகு நடனத்தையும், ஒளிமிக்க கமலவதனத்தையும் கண்டு
களிப்பதற்காகத் தான். அதனால் அம்மையார் எங்கள் பொருட்டாவது ஐயன் மீது
கொண்டுள்ள கோபத்தை தணித்து கொள்ளுங்கள் என்று பலவாறு அம்மாதர்கள் கூறினர்.
அவர்களது அறிவுரைகளைப் பரவையார் சற்றும் செவிமடுக்கவில்லை. என்னை மறந்து,
வேறு பெண்ணை மணம் செய்துகொண்டு, எனக்குத் தீராத துயரத்தையும் ஆறாத
கவலையையும் அளித்த அவரது குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் அறிவுரைகள்
பகர்ந்தாலும் என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. நீங்கள் மேலும் மேலும்
பேசிப் பேசி என் மனதை புண்படுத்துவீர்களானால் நான் உயிரை இழப்பது திண்ணம்.
தயவு செய்து போய்விடுங்கள் என்று ஒரேயடியாக, சினத்தோடு மறுத்து அவர்களைத்
திரும்ப அனுப்பி விட்டார் பரவையார். பரவையார் பேச்சிற்கு மறுமொழி பேசாமல்,
ஏமாற்றத்தோடு வெளியே வந்த மாதர்கள், சுந்தரரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும்
கூறிச் சென்றனர். சுந்தரர், மன சோர்வுற்றார். இரவு கழிந்து
கொண்டேயிருந்தது. நடு ஜாமம் வந்தது. இருந்தும் சுந்தரருக்கு உறக்கம்
சற்றுகூட வரவில்லை. அவருடன் சூழ்ந்திருந்த அன்பர்கள் அனைவரும் அயர்ந்து
உறங்கிக் கொண்டிருந்தனர். கவலை தோய்ந்த முகத்தோடு, இறைவனைத் தியானித்த
வண்ணம் கண்விழித்திருந்த சுந்தரர், தமது குறையை இறைவனிடம் முறையிடுவது
என்று எண்ணினார். சுந்தரர், ஒளி கொடுத்த திங்கள் வளர்நாயகரைப் பணிந்து,
என்னைத் தடுத்தாட்கொண்ட தம்பிரானே! அன்பர்க்கு அன்பனே! எமக்கு தேவரீர்
இப்படியும் ஒரு சோதனையைக் கொடுத்து திருவிளையாடல் புரியலாமா? முன்வினைப்
பயனால், இப்பிறப்பில் தேவரீர் அருளோடு மணம் புரிந்து கொண்ட பரவையார்
என்னைத் திரும்ப ஏற்க மறுப்பதைத் தாங்கள் அறியாததல்லவே! எம்பிரானே!
பரவையாருக்கு எம்மோடுள்ள பிணக்கை போக்கி உய்யும் வழிசெய்யும் திறத்தவர்
உம்மையன்றி வேறு எவர் எனக்குள்ளார்? விண்ணவர்களுக்காக விடமுண்ட நீலகண்ட
நாயகரே! இந்நடுராத்திரியில் இவ்வடியேனுக்காக இங்கு எழுந்தருளி,
காத்தருளலாகாதா? என்று வேண்டினார். அக்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள
பரம் பொருளான கயிலையரசன், சுந்தரரின் துயரத்தைத் தீர்க்க திருவுள்ளம்
கொண்டார். அந்த நள்ளிரவு நேரத்தில் எம்பெருமான் சுந்தரர் முன்னால் பேரொளிப்
பிழம்பாகக் காட்சி அளித்தார். சுந்தரர் பக்தி வெள்ளம் போல் பெருக, இறைவனது
சேவடிகளைப் பணிந்து போற்றினார். புற்றிடங்கொண்ட பெருமான், தம்மைப் பற்றிக்
கொண்ட தோழருக்கு அருள் செய்து, அன்பனே! இந்த நடு ஜாமத்தில் அபயக்குரல் எது
கருதி? அப்பனே! உனக்கு நேர்ந்ததுதான் என்ன? என்று ஒன்றுமறியாதவரைப் போல்
கேட்டார். இறைவன் இவ்வாறு கேட்டதும் தம்பிரான் தோழர் உடல் நடுங்க,
மெய்சிலிர்க்க, பித்தா! பிறைசூடி! பெருமானே! அன்பர் மனங்களில் எந்நேரமும்
எழுந்தருளியிருக்கும் அருளாளா! தயாபரா! நீ அறியாததொன்றில்லையே! உமது
சக்தியில்தானே அகில உலகமும் சுற்றிச் சுழலுகிறது
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by மாலதி June 9th 2013, 08:28

சங்கரா! எனக்கு இன்று ஏற்பட்டுள்ள துன்பத்தைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டியது
தேவரீருடைய கடமையாகும். ஐயனின் ஆணைப்படி மகிழமரத்தின் கீழே சபதம் செய்து
சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டு நான் திருவொற்றியூரில் வாழ்ந்த
செய்தி எப்படியோ பரவையாருக்கு எட்டிவிட்டது. அதனால், பரவையார் என் மீது
கோபம் கொண்டுள்ளதோடல்லாமல், என்னால் தனது உயிரையே இழப்பதாகவும்
கூறுகிறாளாம். இந்த எளியோன் தேவரீரின் அடியேன்! ஐயன்தான் எனக்குத் தாயும்
தந்தையும்! துன்பக் கடலினின்றும் நீந்திக் கரையேறுவதற்குரிய மரக்கலம்
இல்லாது மனம் கலங்கும் என்னைக் காக்க வேண்டும். இவ்விரவிலேயே,
இவ்வெளியேனுக்காகப் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, என் நிலையை விளக்கி,
அவளுடைய கோபத்தைத் தணித்து எம்மோடு கூடி வாழச் செய்திடல் வேண்டும் என்று
பணிவன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரா! கவலையை மறப்பாயாக! நான் இப்பொழுதே
பரவையாரிடம் தூது சொல்கிறேன் என்று மொழிந்தார் பரமன். அந்த அருள்
வார்த்தையிலே சிந்தை குளிர்ந்த சுந்தரர் எல்லையற்ற உவகையோடு, ஐயனே!
பரவையார் மாளிகைக்கு விரைந்து சென்று அவரது ஊடலைத் தீர்த்து கூடல் கொள்ளச்
செய்து வருவீராகுக! என்று மீண்டும் அன்புக் கட்டளையிட்டார். எம்பெருமான்,
அந்த அர்த்தயாம வேளையில் தமது திருவடிகள் நிலவுலகில் பொருந்தப் பரவையார்
மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிந்தவண்ணமாகவே
இருந்தது. எம்பெருமானைப் பின் தொடர்ந்து தேவாசிரிய மண்டபத்திலே
எழுந்தருளியுள்ள அமரர்களும், சிவகணங்களும், அருந்தவசிகளும்,
நந்தியெம்பெருமானும், குபேரன் முதலானோரும் பரமனைத் துதித்தவாறு பின்னால்
சென்றனர். திருவாரூர் சிவலோகம் போல் காட்சி அளிக்க, சிவனார் மணிவீதி வழியாக
தூது புறப்பட்டார். அவருடைய திருச்சடையைச் சுற்றி விளையாடும் பாம்புகளும்,
மாணிக்க ஒளி வீசத் தொடர்ந்து படமெடுத்துப் பின் வந்தன. இளம்பிறை நிழலில்
மலர்ந்துள்ள கொன்றைப் பூக்களில் தேன் பருகும் வண்டுகளும், ரீங்காரம் செய்த
வண்ணம் தொடர்ந்து வந்தன. கூடவே சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனமும் பின்
தொடர்ந்தது. வேதங்கள் பின்தொடர, பரவையார் மாளிகையை அடைந்த இறைவன்,
அனைவரையும் புறத்தே தங்குமாறு ஆணையிட்டு விட்டு, தாம் மட்டும் ஓர்
அர்ச்சகரைப் போல் வடிவம் கொண்டு, மாளிகையை அடைந்தார். உள்ளே தாழ்போட்டுள்ள
கதவைத் தட்டியவண்ணம், பரவையே! கதவினைத் திறந்திடுவாய்! எனச் செம்பவளவாய்
திறந்து அழைத்தார் அம்பலவாணர். உறக்கம் வராமல் மலர் மஞ்சத்தில்
படுத்திருந்த பரவையார் திடுக்கிட்டு எழுந்தார். அர்ச்சகரின் குரலோசை கேட்டு
அம்மையார், இந்த அர்த்த ஜாமத்தில் நம்மைத் தேடி அர்ச்சகர் வரவேண்டிய
காரணம் என்ன? என்று எண்ணியவளாய் விரைந்து வந்து கதவைத் திறந்தாள்.
அர்ச்சகர் வடிவில் வந்துள்ள இறைவனை வணங்கி, வரவேற்ற பரவையார், ஊர் உறங்கும்
இவ்வேளையில் தேவரீர் இவ்வடியாளின் இருப்பிடத்திற்கு எழுந்தருளிய காரணம்
யாதோ? என்று பணிவன்புடன் கேட்டாள். பரவையே! வந்த காரணத்தைக் கூறுவேன்;
ஆனால் நீ மட்டும் மறுக்காமல் எமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆணையிடுங்கள் சுவாமி! பரவையே கேள்! சுந்தரர் சற்றுத் தவறியதற்காக நீ அவரை
முற்றும் வெறுத்து இங்ஙனம் ஊடல் கொள்வது முறையாகாது. உனது பிரிவினால்
மிக்கத் துயருரும் நாவலூர் நம்பி உன் நினைவாகவே தேவாசிரிய மண்டபத்தில்
வந்து தங்கியுள்ளார். அவர் மீண்டும் இங்கு வந்து உன்னோடு கூடி வாழ்தல்
வேண்டும். இதற்கு நீ இசைந்து விடுவதுதான் நல்லது. நன்று! நன்று! தாங்கள்
செப்புவது! சிவத்தலங்களை தரிசிக்கப் போகிறேன் என்று என்னிடம் விடை பெற்றுச்
சென்றார். எப்படியும் பங்குனித் திருநாள் அன்று விரைந்து வந்துவிடுவார்
என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். அவரோ திருவொற்றியூரில் சங்கிலியார் என்னும்
பெண்ணை மணந்து வாழ்ந்துள்ளார். இனிமேல் அவருக்கும் எனக்கும் எவ்விதத்
தொடர்பும் கிடையாது. இதற்காகவா, இந்த இரவு வேளையில் தாங்கள் இங்கு
வந்தீர்கள்? பரவையே! கோபம் தணிந்து, உன் நாயகனின் குற்றத்தைப் பொறுத்துக்
கொள், என்று நான் எடுத்துச் சொல்வது உனக்கு புரியவில்லையா? நங்கையே! என்
பொருட்டாவது சுந்தரரை ஏற்றுக் கொள்ளலாகாதா? அதுதான் உனக்கு தகுதியான
செயலும் கூட.
ஐயனே! இவ்வாறு திரும்ப திரும்ப என்னிடம் கதை கூறுவது
தங்கள் பெருமைக்கு ஒருபோதும் ஒவ்வாது. இதற்கு நான் இணங்கப்போவதாக இல்லை.
தயவுசெய்து போய் வாருங்கள் என்று கடுமையாக, தமது முடிவான பதிலைக் கூறினாள்.
அதற்குமேல், பரவையாரிடம் வாதாட விரும்பாத அரனார் அவளிடம் விடைபெற்றுப்
புறப்பட்டார். எம்பெருமானை, பரவையார் மாளிகைக்குத் தூதராக அனுப்பிவிட்டு,
அவரது வரவை எதிர்பார்த்திருந்த சுந்தரர், கங்கையை முடித்த சங்கரா! சற்றும்
அறிவில்லாத இவ்வடியேன், தங்கள் திருப்பாதம் நோகுமாறு இப்பாதி இரவு
வேளையில், பரவை மாளிகைக்கு அவளது புலவி தீர்த்துவரும் பொருட்டு தூதராக
அனுப்பிவிட்டேனே! நான் செய்த இப்பொல்லாத பிழைக்கு மன்னிப்பே கிடையாது.
இதற்கென்று தங்களை வணங்கி வேண்டினேனே! அபச்சாரம்! என் ஐயனுக்கு எவ்வளவு
கொடிய பாவத்தை செய்துவிட்டேன் என்று வாய்விட்டுக் கதறி வருந்தினார். உடனே
பரவையார் நினைவு ஏற்படவே, பரவையார் மாளிகையில், இறைவன் எப்படியும் எனக்காக
வாதாடி, அவளது இசைவினைப் பெற்றே மீளுவார்; கண்டிப்பாக பரவையாரது சிறு
ஊடலைத் தீர்த்து விட்டுத்தான் வருவார் என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டார்
சுந்தரர். நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது. சுந்தரர்க்கு ஓரிடத்தில்
இருப்புக் கொள்ளவில்லை. அப்படியும் இப்படியுமாக அல்லல் பட்டுக்
கொண்டிருந்தார். எம்பெருமான் வரும் வழியே தமது விழியையும் மனதையும்
செல்லவிட்டார். அந்த நிலையில் மன்மதனின் மலர்க்கணை, மாரி போல் சுந்தரர்
மீது பொழிந்தன. அவை மேலும் துன்பத்தைக் கொடுத்தன. இத்தருணத்தில் இறைவன்,
அர்ச்சகர் கோலத்தை மறைத்து பிறையணிந்த அண்ணலாக சுந்தரர் முன்னால்
தோன்றினார். அணையை உடைத்துக் கொண்டு பாய்ந்து ஓடிவரும் வெள்ளப் பிரவாகம்
போல் சுந்தரர், ஆசை பொங்கிப் பெருகி வர, எம்மை ஆட்கொண்ட அண்ணலே! இந்தப்
பாதி இரவில் மலர்ப்பாதம் நோக பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, எமக்காக
வேண்டி அவளது பிணக்கைப் போக்கி வெற்றிப் பெருமிதத்தோடு
எழுந்தருளியுள்ளீர்களே சுவாமி! ஐயனின் கருணையை என்னென்பேன்! என்று அகமும்
முகமும் மலரக் கூறினார்.

சுந்தரர் செப்பியது கேட்டு செஞ்சடை வண்ணர்,
சுந்தரா! உன் ஆற்றலையும், அருந்திறத்தினையும் அளவிட முடியாத அளவிற்கு
அடுக்கடுக்காக எடுத்துக் கூறினேன். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி
விட்டதே. பரவையார் எமது மொழியைச் செவிசாய்க்க மறுத்து, வெறுப்போடு என்னைத்
திரும்ப அனுப்பி விட்டாள் என மொழிந்தார். முக்கண்ணர் அருளியதைக் கேட்டு
மனம் கலங்கிய சுந்தரர், நடுக்கமுற்று கண்கலங்கி, கரங்கூப்பி வணங்கியவாறு,
தேவரீர் திருமொழியை மறுக்க வல்லவள் பரவையார் அல்லவே! ஐயன் அருள் கூர்ந்தால்
அகிலத்தில் ஆகாதது ஒன்றில்லையே! தேவரீர்! இதற்காகவா வலிய வந்து எம்மை
தடுத்தாட் கொண்டீர்கள்? முப்புரம் எரித்த மறையவனே! அமரர் வாழ ஆலகால
விடமுண்ட அருமாமணியே! பாலனுக்காகக் காலனை உதைத்து, மார்கண்டேயன் என்னும்
தொண்டனை அடிமை கொண்டருளிய அம்பலத்தரசே! என் மீது மட்டும் தங்கள் அருட்கண்
மலரவில்லையா? சுவாமி! எம்மை வேண்டத்தகாதவன் என்று கருதி, திரும்ப வந்து
விட்டீர்களோ? இறைவா! எனக்காக வேண்டி மீண்டும் ஒருமுறை பரவையாரிடம் சென்று
அவளது சினத்தைப் போக்குவீர். எனது நோயையும், துயரத்தையும் நேரில் கண்டும்,
உமது திருவுள்ளம் இரங்கவில்லையா? இன்றிரவு ஐயன் அருள் செய்து என்னைப்
பரவையாரோடு சேர்க்காவிட்டால் என்னுயிர் நீங்கி விடும் என்பது மட்டும் உறுதி
என்று புலம்பி கண்ணீரால் எம்பெருமானின் பாதகமலங்களைக் குளிரச் செய்தார்.
தமது திருவடிகளில் சரணமென்று வீழ்ந்து பணிந்து கிடக்கும் சுந்தரரை அருளோடு
பார்த்த எம்பெருமான், சுந்தரா எழுந்திரு! வருந்தாதே! உன் துயரத்தை நான்
உணர்வதுபோல், எப்படியும் பரவையையும் உணருமாறு செய்கிறேன். மீண்டும் உன்
பொருட்டு அவளிடம் சென்று வருகிறோம். கவலையை மறந்து திடமாக இரு. என்று
மதுரமொழிபகர்ந்தவாறு பரவையார் மாளிகைக்கு மீண்டும் புறப்பட்டார் சங்கரர்!
அர்ச்சகர் வடிவில் வந்த அரனார் சென்ற பிறகு பரவையார் மனதில் எதனாலோ, இனம்
தெரியாத ஒருவித கலக்கம் ஏற்பட்டது. அந்தணர் வடிவுடன் எழுந்தருளியவர்
திருவாரூர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானே தான்
என்ற உண்மையயை பரவையாருக்கு உணர்த்துவது போல் வியக்கதக்க நிகழ்ச்சிகள் பல
பரவையார் மாளிகையில் தோன்றின. அது கண்ட பரவையார் மனம் திருக்கிட்டாள்.
எம்பெருமானுக்கு பெரும் பிழை இழைத்து விட்டோமே! ஐயோ! அபச்சாரம்
நடந்துவிட்டது, கெட்டேன்! என் நாயகருக்காக, சிவவேதியர் கோலத்துடன்
வந்தணைந்தவரை இன்னாரென்று அறியமுடியாத அளவிற்கு என் அகக் கண்களும்,
புறக்கண்களும் குருடாகிவிட்டனவே! பரமனுக்கு பெரும் துன்பத்தை கொடுத்த
பாவியாகிவிட்டேனே! என்று பலவாறு கருதிப் புலம்பி, நிலை தளர்ந்து
தோழியர்களுடன் உறக்கமின்றி வாயிலை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள் பரவையார்.
அது சமயம் இறைவன் மீண்டும் பூதகண நாதர்கள் சூழ, பரவையார் மாளிகைக்கு
எழுந்தருளினார். பரவையார் விரைந்து சென்று பரமனின் பொற்பாதங்களை வணங்கி,
வரவேற்று எதிர்கொண்டு மாளிகையுள் அழைத்துச் சென்றாள். பரவையார் மாளிகை,
மகாதேவனின் அருள் ஒளியினால் திருக்கயிலாயத் திருமாமலைபோல் ஜெகஜோதியாகப்
பிரகாசித்தது.பரவையார் கரமிரண்டையும் தாமரை குவித்தாற் போன்று சிரமீது
தூக்கியவண்ணம், கண்களில் நீர்மல்க, அஞ்சி நடுநடுங்கி நின்று
கொண்டிருந்தாள். பெருமான், பரவையாரை திருநோக்கம் செய்தார். பரவையே! என்
தோழனான நம்பியாரூரன் எம்மை அடிமைகொண்ட உரிமையால், தூதராக ஏவ, மீண்டும்
இப்பொழுது உன்னிடம் வந்துள்ளோம்! முன்போல் இம்முறையும் மறுத்துவிடாதே! உனது
பிரிவால் என் தோழன் சொல்ல முடியாத நிலையில் அளவு கடந்து வருந்துகின்றான்.
நீ அவனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார் கண்ணுதற்
கடவுள். அன்பே வடிவெடுத்த அரனார் முன்னே, அச்சமே வடிவாகி, உளம் தடுமாற,
வணங்கிப் பவுடன் நின்று கொண்டிருந்த பரவையார், ஐயனே! முன்பு அந்தணர்
வடிவத்தில் எழுந்தருளிய அண்ணலே! முற்பிறப்பில் நான் செய்த அருந்தவப்பயனை
என்னென்பேன்! தேவரீர் இந்த ஏழையின் மாளிகைக்குத் திருவடி தேய எழுந்தருளும்
அளவிற்குத் தவறு புரிந்தேனே! அறியாது செய்த என் பிழையைப் பொறுத்தருள
வேண்டும். இனியும் தேவரீர் திருமொழிக்கு அடியேன் இசையாமல் வேறு என்செய்ய
வல்லேன்? என்று கூறி நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். எம்பெருமான்
பரவையார் மொழிந்ததைக் கேட்டு நங்கையே! உனது பண்பிற்குத் தக்கவாறு நீ
மொழிந்தது நன்றே! என்று பாராட்டி, மாயமாய் மறைந்தருளினார். பரவையார்,
எம்பெருமான் மறைந்த திசைநோக்கித் தொழுவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவளது
மனதில் சுந்தரரின் தூயவடிவம் பிரகாசித்தது. பரவையார் பொறுமையே வடிவமாய்,
நாயகரின் நினைவினால் சிலையாகி நின்றாள். சுந்தரர் முன்னால் எம்பெருமான்
எழுந்தருளினார். சுந்தரர் நிலமதில் வீழ்ந்து அவரது மலரடிகளைப் பணிந்து,
எம்பெருமானே! இம்முறை எம் பரவையாரிடமிருந்து யாது குறை கொண்டு வந்தீர்கள்?
என்று ஆவலோடு வேட்கை மேலிட வினவினார். எம்பெருமான் சுந்தரரைப் பார்த்து,
நம்பியாரூரனே! உன் மீது பரவையார் கொண்டிருந்த தீராத கோபத்தைத் தணிய
செய்தோம். இனிமேல், எவ்வித தடையுமின்றி நீ அவளைச் சென்று அடைந்து முன்போல்
மகிழ்ந்து வாழலாம் என்று அருளி பூங்கோயிலுள் புகுந்தார். மறுநாள் சுந்தரர்
பரமனை வணங்கி பரவையாரது மாளிகைக்கு அன்பர்களுடனும் அடியார்களுடனும்
புறப்பட்டார். மலர்மாலை, கலவைச் சந்தனம், கஸ்தூரி சாந்து, தங்க ஆபரணங்கள்,
பட்டாடைகள் முதலிய பல நற்சடங்கிற்கான பொருட்களை ஏந்தியவண்ணம் அன்பர்கள்
முன்னால் சென்று கொண்டிருக்க, மங்கல இசைகள் ஒலி எழுப்ப இறைவன் திருநாமம்
விண்ணெட்ட முழங்க சுந்தரர், சுந்தரகோலத்தோடு பவனி புறப்பட்ட காட்சியைக்
கண்டு வியக்காதவரில்லை. சுந்தரர் எழுந்தருளப் போகும் பெருமிதத்தில்,
பரவையார் பொழுது புலரும் நேரத்துள் தமது மாளிகையை அழகுற விளங்கச் செய்தாள்.
மாளிகை எங்கும் நெய் விளக்குகளை ஏற்றி, பொற் சுண்ணங்களையும் மலர்
தாதுக்களையும் சிந்தினர். தூபங்களையும், புண்ணியப் புது நீரை நிறைத்து
வைத்த பொற்குடங்களையும் வரிசையாக வைத்தனர். வண்டுகள் ரீங்காரமிடும் நறுமலர்
மாலைகளையும், ஒளிமிகும் மணிமாலைகளையும் அடுத்தடுத்து அழகிற்கு அழகு
செய்தாற்போல் தொங்கவிட்டனர். வெண்கடுகுப் புகையாலும், நெய்யுடன் கலந்த
அகிற் புகையாலும் மாளிகை முழுவதும் தெய்வமணம் கமழச் செய்தனர். வண்ண மலர்
தூவி, வாழ்த்தொலி எழுப்பி, சுந்தரரை வரவேற்க, பரவையார் தோழியர்களோடு
வாயிலருகே நின்று கொண்டிருந்தாள். மங்கல இசை ஒலி எழுப்ப, தொண்டர்களுடன்
மாளிகையை வந்தடைந்தார் சுந்தரர். பரவையார் காதல் வெள்ளத்தில் மூழ்கித்
திளைத்தவராய், புத்தம் புது மலர்களை, சுந்தரரின் சேவடிகளிலே கொட்டிக்
குவித்து வணங்கி வரவேற்றாள். சுந்தரர் மகிழ்ச்சி பொங்க, பரவையாரின்
திருக்கரத்தைப் பற்றிக்கொண்டு மாளிகைக்குள் சென்றார். முன்போல் உடலும்
உயிரும் ஒன்றாயினர். பரவையாரும், சுந்தரரும் வாழ்க்கைக் கடலில் பக்தி எனும்
ஓடத்தில் அமர்ந்து பரமனின் திருவடி என்னும் கரையை அடைய வழி செய்யத்
தொடங்கினர். பரவையார், பரமனைப் பணிவதோடு, தமது நாயகரான சுந்தரரின்
திருவடிகளையும் வணங்கி வழிபட்டாள். இவ்வாறு இருவரும் இல்லறம் எனும்
நல்லறத்தில் நலம்பெற வாழ்ந்து வரலாயினர். சித்தத்தைச் சிவன்பாற் வைத்து
நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய
திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று
வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு
சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே
ஊற்றெடுத்து பெருகியது
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நாள்தோறும் நாயன்மார்கள்  Empty Re: நாள்தோறும் நாயன்மார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum