HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Page 1 of 2 1, 2  Next

Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:49

திருப்புகழுக்கு பொருள் சொல்லுவது என்பதை விடுத்து, அப்பொருள் வருமாறு எளிய
நடையில், கவிதையாகச் சொல்லலாம் என ஒரு கருத்து பதிந்தது, மனத்தில்!
ஆகவே, 'அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி' முழு முதற்கடவுளாம் விநாயகனின் திருப்புகழோடு இதனைத் தொடங்குகிறேன்.
குற்றம், குறை எதுவானாலும், நடை கடினமாக இருந்தாலும், உடனே சொல்லி என்னைத் திருத்துமாறும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
வாரம் ஒரு பதிவிடலாம் என எண்ணுகிறேன்.
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
முருகனருள் முன்னிற்கும்!

1. கைத்தல நிறைகனி... [விநாயகர் துதி]

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

தந்தன தனதன தந்தன தனதன
தந்தன தனதன......தனதான

.......பாடல்......

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்

கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை

மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.

.....விளக்கம்.....

//கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக.....னடி பேணிக்//


இருகைகளில் நானேந்தி மனமுவந்துஅளிக்கின்ற
பழம், அப்பம், பொரி அவல் இவையனைத்தையும்,
துதிக்கையால் வாரி விருப்பமுடன் உண்ணுகின்ற
வேழமுகத்தானின் திருவடியை மிக விரும்பி,

//கற்றிடு மடியவர்பு த்தியி லுறைபவ
கற்பக மெனவினை..... கடிதேகும்//


இறைநூலைக் கற்கின்ற அடியவரின் சித்தத்தில்
நிறைவாக நீங்காது வாழ்கின்ற தெய்வமே!
குறைவின்றித் தருகின்ற கற்பகத் தருவே!- என
நிறைவாக உனை வாழ்த்த, வினையெல்லாம் விரைந்தோடும்.

//மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்பு ய....மதயானை//


ஊமத்தை மலருடனே, பிறைநிலவும் சடை தரித்த
அழிக்கின்ற தொழில் செய்யும் சிவன் மகனும்,
போருக்குச் செல்கின்ற வலுவான தோளுடையவனும்,
மதயானை போல்கின்ற பலத்தினை உடையவனும்,

//மத்தள வயிறனை உத்தமிபு தல்வனை
மட்டவிழ் மலர்கொடு...... பணிவேனே//


மத்தளம் போலொரு பெரு வயிறு படைத்தவனும்,
உத்தமியாம் பார்வதியாள் செல்வனாம் கணபதியை
தேன் துளிர்த்துப் பூத்திருக்கும் புதுமலர் கொண்டு
நானிங்கு வணங்கிப் பதமலர் பணிவேனே!

//முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய......முதல்வோனே//


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் நூல்வகையை
பயில்வதற்கு மனமிரங்கி, மலைகளிலே முதன்மையான
மேருவென்னும் மாமலையில், முதன்முதலில் எழுதிவைத்த
மூத்தவனே! முதன்மையானவனே! முழுமையானவனே!

//முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த......அதிதீரா//


நின்னை வணங்காமல், திரிபுரத்தை அழிக்க எண்ணி
போர்புரிய விரைந்துசென்ற சிவனாரின் திருத்தேரின்
முன்னச்சு முறிந்து, பொடிப்பொடியாய் போகச் செய்த
தன்நிகரில்லா வீரனே! தீரனே! சூரனே!

//அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை.....இபமாகி//


தினைப்புனத்தில் குறத்தியினைத் தேடிச்சென்று
அவள்மீது மையல்கொண்டு மனம் வருந்தி
நடைநடையாய் நடந்து சென்ற தம்பியாம்
சுப்பிரமணியன் துயர் தீர ஆனையாய் முன் தோன்றி.

//அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள்.....பெருமாளே.//


குறமகளைப் பயமுறுத்தி சிறியவனிடம் செல்லவைத்து
எதிர்த்து வந்த அனைவரையும் திறத்தாலே வெருளவைத்து
அப்போதே அங்கேயே அவளை இளையவனுக்கு மணம் முடிக்க
அருள் செய்த பெருமகனே! பெரியவனே! பெருமாளே!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:51

.அ.திருப்புகழ்". -- 3 "முத்தைத்தரு"


""அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3""


"முத்தைத்தரு"

ராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான

........பாடல்.......

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.


"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "


முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்கு
ஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனே
தேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்ட
தேவயானை எனும் கரிமகளின் நாயகனே!

"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"

அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட
சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்ற
சரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!
முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!
தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி
தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற
குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!

"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"


என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு
முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளான
சுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான
"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து
அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்த
பிரமன் திருமால் இருவரும் கூட
முப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து
நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,

"பத்துத்தலை தத்தக் கணை தொடு"

திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட
தென்னிலங்கைத் தேவனாம் இராவணனின் தலைகள் சிதறி வீழ
அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,

"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"

ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினை
மத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,

"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"

அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே
மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே
அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற
ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை,
"மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள்
என்மகனின் மறைவுக்குக் காரணமான
ஜயத்திரதனைக் கொல்லானேயாகில்,
அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என
சூளுரைத்த பத்தனைக் காக்கவென
'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்து
தன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்து
சூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே
வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனை
விரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,

"பத்தற்கு இரதத்தைக் கடவிய"

இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும்
அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத்
தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட

"பச்சைப் புயல்"


மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட
அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும்
மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்

"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"

மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ
பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்
உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!

[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]

"தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக்"


தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாக
முத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த
நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து
பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும்
எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,

"கழுகொடு ..... கழுது ஆடத்"

பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன்
பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,

"திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"


எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும்
அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும்
ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,

"கொத்துப்பறை கொட்டக்"

கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற
பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,

"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்று எழ"


பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட
கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து
குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" என
கூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று
இட்டமுடன் மேலே எழுந்திடவும்,

"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"

தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும்
இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களை
வெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,

"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."

அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட
கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு
பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று
அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!

*************************************************************************************
[அருஞ்சொற்பொருள்: அத்திக்கிறை:: தெய்வயானை அம்மைக்குத் தலைவரே!;
சுருதி:: வேதம்;
ஒற்றைகிரி:: ஒப்பற்ற மந்தரமலை;
திகிரி: சக்கரம்;
பச்சைப்புயல்:: பச்சைமாமலை போல் மேனி கொண்ட திருமால்; பரிபுர:: சிலம்புகள் அணிந்த;
கழுது:: பேய்கள்;
சித்ரப் பவுரி:: அழகிய கூத்து;
கொத்துப்பறை:: கூட்டமாக பல பறை வாத்தியங்கள்; முதுகூகை:: கிழக்கோட்டான்;
கொட்பு:: சுழலுதல்;
அவுணர்:: அரக்கர்;
குலகிரி:: அசுரர்களின் குலத்துக்கு இயைந்த கிரௌஞ்ச மலை; பொரவல:: போர் செய்ய வல்ல;
பெருமாள்:: பெருமை மிகுந்தவர்]
*************************************************************************************

அருணாசலத்தில், அருணகிரிநாதர் முருகனிடமிருந்து, "சொல்லற; சும்மா இரு!" என உபதேசம் பெறுகிறார்.
அதனைக் கேட்டு, சமாதியில் ஆழ்ந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் மீண்டும் தோன்றி, "நம் புகழைப் பாடுக!" எனப் பணிக்கிறான்.
"என்ன சொல்லிப் பாடுவேன்? எப்படி உன்னை அழைப்பேன், கல்வியறிவு சிறிதுமில்லா இவ்வேழை" என அருணகிரியார் வேண்டுகிறார்.
"முத்தைத்தரு" எனத் தொடங்கிப் பாடு என செவ்வேட் பரமனும் அருள எழுந்ததே இந்தப் பாடல்.
அதன் பின்னர் திறந்த வெள்ளம்தான் திருப்புகழ்!

*************************************************************************************
'மு' எனும் சொல்லைப் பிரித்தால் வருவது, ம்,உ,அ.
இம்மூன்றும் சேர்ந்ததே பிரணவம் என்னும் ஓம் எனும் மந்திரம்.
பிரணவத்தில் தொடங்கியே திருப்புகழ் அமைந்ததைக் கண்டு மகிழ்வோம்!
*************************************************************************************
வேலும் மயிலும் துணை!
முருகன் அருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:51

"அ.அ.திருப்புகழ்" -- 4 "உனைத் தினம் தொழுதிலன் "

இப்பாடல்
சற்று கடினமான பாடல். விரித்துப் பொருள் சொல்ல வேண்டிய பாடல். பதிவு சற்றே
நீளமாக இருக்கும். அருள் கூர்ந்து அருணகிரியார் மேலிருக்கும் அன்பினால்,
விரிவாகப் பொருள் சொல்லத் துணிந்தேன். இதனைப் பதிவெடுத்து, சிறிது
சிறிதாகப் படித்து உணர்ந்தால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!
*************************************************************************************

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 4"

"உனைத்தினந் தொழுதிலன்"

ராகம் -- சாவேரி
தாளம் -- ஆதி

தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன -- தனதான

>>>>>>>>>>>பாடல்>>>>>>>>>>>>

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடு னடியிணை
உறப்ப ணிந்தில னொருதவ மிலனுன -- தருள்மாறா

உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் -- மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலித னுழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு -- பொருபோதே

கலக்கு றுஞ்செய லொழிவற அழிவறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தி லென்பய மறமயில் முதுகினில் -- வருவாயே

வினைத்த லந்தனி லலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெ யுகுதசை கழுகுண
விரித்த குஞ்சிய ரெனுமவு ணரையமர் -- புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி யழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை -- யுடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுனி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுனி வரர்தொழ -- மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண -- பெருமாளே.

****************************************************************************************************
இப்பாடலின் இரண்டாம் பகுதிக்குப் பொருள் சொல்லி, பின்னர் முதற் பாதியை உணரலாம்!

"வினைத்தலம் தனில் அலகைகள் குதிகொள"

சீறுகின்ற வீரர்கள் தீரமுடன் போரிடும் வீரமிகு போர்க்களத்தில்
கோரமிகு பேய்களும் குறைவில்லா மகிழ்வுடனே குதித்துக் கூத்தாடவும்,

"விழுக்கு உடைந்தும், மெய் உகு தசை கழுகு உண"

தோலுக்கு உள்ளிருக்கும் நிணமென்னும் சதை உடைந்து
உடலினின்று சிந்துகின்ற தசையென்னும் மாமிசத்தை
கொடிய வல்லூறு எனும் கழுகுகள் கொத்தித் தின்னவும்,

"விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா"

அள்ளி முடியும் வழக்கமிலாக் காரணத்தால்
விரிந்து கிடக்கின்ற தலைமுடியினையுடைய
அவுணர் எனும் இராக்கதக் கூட்டங்களை
அழித்திடவே போர்புரியும் வேலாயுதப் பெருமானே!

"மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுகடு உழு
நறைவிரைத்த சந்தன ம்ருகமத
புயவரை உடையோனே"


இனிய குரலுடன் அழகிய பண் பாடும்
குயிலினை ஒத்த மொழியினைப் பேசிடும்
கொடியினை நிகர்த்த இடையினையுடைய
குறிஞ்சிப்பெண்ணாம் வள்ளிமலைக்காரியின்
பொலிந்த குங்குமம் திளைந்த மார்பில்
வலிந்து பரவி, மணந்த சந்தனமும்
உயர்ந்த மானின் உடலினின்று விளைந்திடும்
கஸ்தூரியென்னும் வாசனைப்பொருளும்
படிந்து நிற்கும் தோளினை உடையோனே!

"தினத்தினம் சதுர் மறைமுனி முறைகொடு"

நல்வேதம் உணர்ந்திட்ட நான்முகனாம் பிரமனும்
வல்விதியில் சொன்னபடி நாள்தோறும் முறைப்படியே

"புனல் சொரிந்து அலர் பொதிய"

நன்நீரைக் கொண்டுவந்து திருமஞ்சன நீராட்டி
வாசமிகு பூக்களால் அருச்சனை செய்யவும்,

" விணவரொடு சினத்தை நிந்தனை செயும் முனிவரர் தொழ மகிழ்வோனே"

வானுறையும் விண்ணவரும், சினம் ஒழிந்த முனிவோரும்
உனைப்பணிந்து அடிதொழவும், உளம்மகிழச் சிரிப்பவனே!

"தெனத்தெனந்தன என வரியளி நறைதெவிட்ட
அன்பொடு பருகு உ யர் பொழில் திகழ்"


'தெனத்தெனந்தன'வென ரீங்காரம் செய்திடும்
வரிகளையுடைய வண்டுகளும் மலர்ந்திருக்கும் பூவின்
தேனினைத் தெவிட்டும் அளவினிலே மகிழ்வுடன் உண்ணும்
விண்ணினை எட்டும் உயர் சோலைகள் திகழும்,

"திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே"

திருப்பரங்குன்றமெனும் திருத்தலத்தில் வீற்றிருக்கும்
சரவணபவ எனும் பெருமைக்கு உடையவரே!

"உனைத் தினம் தொழுதிலன்"

முத்தி அடைந்திட முதல் படியாக
சத்திச் சரவணனை இருகை கூப்பி
பத்தியுடன் எப்போதும் பயனுறவே நானும்
துதித்திடும் செயலினைச் செய்ததுமில்லையே!

"உனது இயல்பினை உரைத்திலன்"

நாவு படைத்ததன் பயனறியாமலே
தாவும் மயிலேறி சங்கடங்கள் தீர்க்க வரு ம்
தேவயானைத் துணைவனைப் போற்றிடும்
மேவுகுணங்களைசொன்னதுமில்லையே!

"பல மலர்கொடு உன் அடி இணை
உறப் பணிந்திலன்"


கலி வந்து வாட்டிடுகையில் என்செய்வோமென
நலிந்தோரெல்லாம் நடுங்கி நிற்கையில்
'மலர்போலும் சிவனது பாத மலருண்டு
மலரிட்டு வணங்கிட நறுமலரும் உண்டு
குளிர்ந்த நீர்க் குளியாட்டலும் உண்டு'என
எளியவர்க்கு அருளிடும் கண்ணபிரான் உரைத்தபடி
விடியுமுன்னர் எழுந்திருந்து தூய நீராடி
கூடையினை நாபிக்குக் மேலேந்தி சோலை அடைந்து
முந்தை வினையழிக்கும் இறைவனது நாமம் சொல்லி
செடியினிலே பூத்திருக்கும் நறுமலரைப் பறித்து
வடிவான மாலைகளும் தனி மலரும் சேர்த்துவந்து
அடியார்க்கு அருளிடும் பரமனது நாமம் செப்பி
திருவடியிற் பொருந்துமாறு நெற்றியினை வைத்து
இருகால், இருதோள், இருகை, நெற்றி, மார்புயெனும்
எட்டங்கமும் படுமாறு நிலத்தில் வீழ்ந்து
உனை வணங்கும் நெறியினையும் புரிந்தேனில்லையே!

"ஒரு தவம் இலன்"

மன்னு பிறவி தந்த உந்தன் கருணையினை எண்ணி எண்ணி
உன்னை நினைந்தே உள்ளும் உடலும் உருகி உருகி
என்பெலாம் கரைந்திடவே கண்ணீர் விட்டு அழுது அழுது
அன்புமயமாகி அசைவற்று ஓரிடத்திலே நினைந்து நினைந்து
இன்பத்தவத்தினையே ஓர் கணமேனும் செய்தேனில்லையே!

"அருள்மாறா உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்"

உள்ளன்பு பூண்டு வெளிவேடம் காட்டாமல்
கள்ளமிலா மனத்துடன் உனைப் பணியும்
வெள்ளமெனப் பெருகிடும் அருளை வழங்கிடும்
நின்னடியார் இருக்கின்ற இடம் நாடி அவர் பாதம்
பணியும் திண்மையும் அறிந்தேனில்லையே!

"விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்"

கால்கள் பெற்ற பயன் நீ இருக்கும் மலைகளையும்
வேலவனின் கோயிலையும் வலம் வந்து பணிதலே என்னும்
சீலமிகு வழியினையும் செய்தேனில்லையே!

"உவப்பொடு உன் புகழ் துதிசெய விழைகிலன்"

உன்புகழைப் பாடுதலே உவப்பிலா இன்பமெனில்
திருப்புகழைப் பாடிடுதல் எத்துணை பேரின்பம்!
இப்புகழை உணராமல் வாழ்நாளை வீணாக்கி
நின்புகழை விருப்புடன்பாட விரும்பினேனில்லையே!

[இவையனைத்தும் செய்யாமல் இப்பொழுதைக் கழித்ததாலே]

"மலைபோலே கனைத்து எழும் பகடு அது பிடர்மிசை வரு
கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறடு கதைகொடு பொருபோதே"


மலை போலும் உருவுடன், சினத்துடன் கனைத்து எழும்
எருமையின் மீதேறி அடங்காக் கோபத்துடன்
காலனின் தூதுவர்கள் கையில் பாசக்கயிறேந்தி
கொல்லுகின்ற கதையெனும் ஆயுதமும் தாங்கியே
வெல்லுதற்காக என்னெதிரே வேகமாக வரும்போது,

"கலக்குறும் செயல் ஒழிவற அழிவறு"

'என் செய்வேன்'எனக் கலக்கம் எனை வாட்டிடும் வேளையில்
'யானிருக்க பயமேன்'என என்கவலை அனைத்தினையும்
அழிந்தும் ஒழிந்தும் போகுமாறு செய்திடவும்,

"கருத்து நைந்து அலம் உறுபொழுது
அளவைகொள் கணத்தில் என் பயம் அற"


பயத்திலும், சோகத்திலும் என்வசமிழந்து உளம் நலிந்து
நான் வருத்தம் கொண்டிடும் வேளையினில்
என்னிடம் ஏற்பட்ட இப்பயங்கள் நீங்கிடவும்,

"மயில் முதுகினில் வருவாயே"

குறையிலாத திருமயிலின் முதுகினில் நீ அமர்ந்து
விரைந்து வந்து எனக்கு அருளிட வேண்டும்!
___________________________________________________________________________________________________________

அருஞ்சொற்பொருள்:

பகடு:
எருமைகிடா
மறலி: எமன்
உழையினர்: தூதுவர்
அலம்: மனக்கவலை
<strong>அளவைகொள் கணத்தில்: அளவுபடுகின்ற ஒரு கணப்பொழுதில்
வினைத்தலம்: போர்க்களம்
<strong>அலகை: பேய்
விழுக்கு: சதை
குஞ்சியர்: தலைமுடியை உடையவர்
அவுணர்: இராக்கதர்
கொடிச்சி: கொடி போன்ற இடை உடையவள்
நறை: வாசனை
ம்ருகமத: கஸ்தூரி மான் உடலினின்று வரும் கஸ்தூரி எனும் வாசனைப் பொருள்
சதுர்மறைமுனி: பிரமன்
புனல்: நீர்
அலர்: மலர்
அளி: வண்டு
*************************************************************************************
வேலும் மயிலும் துணை!
முருகன் அருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:52

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 6

"புகரப் புங்கப் பகரக் குன்றில்"

மூவரும் அறியா முதன்மொழிப் பொருளாம் "ஓம்" எனும் பிரணவப்பொருளைத் தனக்கு உபதேசிக்க அருணையார் வேண்டும் அற்புதப் பாடல் இது.
இப்பாடலின் சந்தம் பாடி மகிழக்கூடிய ஒன்று. அருஞ்சொற்கள் நிறைந்த,.. ஆனால், எளிய பாடல்!

ராகம் -- ரஞ்சனி
தாளம் --ஆதி..திஸ்ர நடை

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ......தனதான

.......பாடல்........

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் பொலிவோனும்

பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் புகல்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கத் திருமாலும்

திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
தெளிதற் கொன்றைத் தரவேணும்

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் துறைவோனே

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் றருள்வோனே

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே.

-------------------------------------------------------------------------------------

[பின் பார்த்து முன் பார்ப்போம்!]

"தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றித்
தட நல் கஞ்சத்து உறைவோனே"


வீடு பேறு பெற விழைவோர் வேண்டிடும் வித்தையொன்று
இதயமெனும் தாமரையின் உள்ளின்று ஒளிர்ந்திடும்
பரமான்வாவினைத் உணர்ந்து தெரிதலே !
தகராகாசம் எனும் அவ்வழகிய தாமரையின்
உயரிய சிகரத்தின் உச்சியில் உறைவோனே!

"தருணக் கொங்கைக் குறவிக்கு இன்பத்தையளித்து
அனபுற்று அருள்வோனே"


இளமுலை நாயகியாம் குற வள்ளிப் பிராட்டிக்கு
பேரின்பம் வழங்கி அன்புவைத்து அருள்பவனே !

"பகரப் பைம்பொன் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் தொடும்வேலா"


பொன் போலும் ஒளி சிந்தும் உயரிய சிகரங்களை
ஆங்காரமாய்த் தான் கொண்ட கிரவுஞ்ச மலையினை
விட்ட வேலாயுதம் விடுத்து படபடவெனப் பொடிசெய்து
இப்பூமியில் விழுமாறு செய்திட்ட அதிதீரனே!

"பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் பெருமாளே."


பவளம்போற் சிவந்து தூய்மையுடன் விளங்கும்
திருமதில்கள் சூழ்ந்து நிற்கும் திருச்செந்தூர்
எனும் பதியில் பெருமையுடன் எழுந்தருளி நிற்கின்ற
கந்தனெனும் பெருமை மிக்க தலைவனே!

"புகரப் புங்கப் பகரக் குன்றில்"

முறம் போலும் காதினிலும், அழகிய துதிக்கையிலும்,
புள்ளிகளைக் கொண்டு மற்றெல்லா உடல் முழுதும்
வெள்ளை நிறம் கொண்டு அழகுற மலைபோல் விளங்கும்
ஐராவதம் என்னும் யானை வாகனத்தின் மீதினிலும்,

"புயலில் தங்கிப் பொலிவோனும்"

மற்றொரு வாகனமாம் மேகத்தின் மேலும்
உலவுகின்ற விண்ணவர் கோமான் இந்திரனும்,

"பொருவில் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பில் புகல்வோனும்"


இணையற்றதும், அனைத்துக் கலைகட்கும் புகலிடமுமான
வேதத் தொகுதிகளின் சீர்மிகு பொருளை உணர்ந்து
சொல்ல வல்ல நான்முகனெனும் பிரமனும்,

"திகிரிச் செம் கட்செவியில் துஞ்ச
அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"


மலையினை ஒத்ததும், செம்மைப் பண்புகள் மிக்கதுமாய
ஆதி சேடன் எனும், கண்களே காதாய்க் கொள்ளும்
அரவத்தின் மேல் அறிதுயில் கொள்பவரும்,

"அத் திகிரிச் செங்கைத் திருமாலும்"

சக்கராயுதம் தாங்குவதால் சிவந்த கரமலருடைய
நாரயணன் என்னும் திருமாலும்,

"திரிய"

இவர்கள் அனைவரும் தமக்கிந்த உபதேசம்
கிடைத்திடவில்லையே என இங்கும் அங்குமாய்
அலைந்து திரிந்திடும் வேளையினில்,

"பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் தரவேணும்"


மனதினிலே உவகை பொங்கி, எண்ணமெனும் மாய அலைகள்
என் உள்ளத்தினின்று அகன்று செல்லுமாறும்
பேரின்பப் பொருளான சிவானுபூதியினை
யான் உட்கொண்டு, என் உள்ளம் தெளியும் வண்ணம்
அருள் மொழி ஒன்றினை அடியேன் எந்தனுக்கு
உபதேசித்து அருள வேணும்.
-------------------------------------------------------------------------------------

"அருஞ்சொற்பொருள்"

புகர = புள்ளிகளை உடைய
புங்க; துங்க = தூய்மையானது
பகர = அழகியது; ஒளி பொருந்தியது
பொரு இல் = இணையற்றது
சுருதிச் சங்கம் = வேதத் தொகுப்புகள்
திகிரி = மலை; சக்கரம்
கட்செவி = கண்+செவி= கண்ணையே காதாய் உடைய்து பாம்பு. பாம்புக்கு காதுகிடையாது. கண்களாலேயே உணரும் ஆதலின், கட்செவி எனப்படும்.
செங்கை = செம்+கை + சிவந்த கை
திரை அற்று = [எண்ண]அலைகள் நீங்கி
தகரம் = இதயத் தாமரை எனும் கோயில் = தகராலயம்; தகராகாசம் = தகரத் தடம் = எல்லையற்ற பரந்த ஆனந்த வெளி
கஞ்சம் = தாமரை
படி = பூமி
தொடு = விட்டு எறிந்த
புரிசை = மதில்
பெருமாளே = பெருமை மிக்கவரே
-------------------------------------------------------------------------------------

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!


********************************************************************








எழுதியது
VSK


; எழுதிய நேரம்
8/05/2006 11:41:00 PM


, Links to this post


, 14
பின்னூட்டங்கள்





"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Icon18_email







குறிசொற்கள்:
Arunagirinaadhar,
thirupugazh,
திருப்புகழ்





Saturday, July 22, 2006








அ.அ.திருப்புகழ் -- 5 "தண்டையணி வெண்டையம்"







அருணகிநாதர் அருளிய திருப்புகழ் -- 5

"தண்டையணி வெண்டையம்"


http://www.musicindiaonline.com/p/x/zJbgYyr0Bt.As1NMvHdW

[மீண்டும் ஒரு நீள் பதிவு! விரித்துக் கூறாமல் அப்படியே சொல்லிவிட்டுப் போக மனம் வரவில்லை. அருள் கூர்க!சிறப்பு இணைப்பாக "திருமுருகனின் திருப்பெருவடிவம்" பற்றிய ஒரு விளக்கம் காண்க!]


ராகம்: சிம்மேந்திர மத்யமம்/தன்யாஸி
தாளம்: கண்டசாபு

தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் --- தந்ததான

>>>>>>>>பாடல்>>>>>>>>

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் --- கொஞ்சவேநின்

தந்தையினை முன் பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொட மணைந்துநின் --- றன்பு போலக்

கண்டுறக டம்புடன், சந்தமகு டங்களும்
கஞ்சமலர் செங்கையுஞ் --- சிந்து வேலும்

கண்களு முகங்களுஞ் சந்திர நி றங்களுங்
கண்குளிர என்றன்முன் --- சந்தியாவோ?

புண்டரிக ரண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் --- கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் --- சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலு மென்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் --- கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமண முண்டிடுங்
கும்பமுனி கும்பிடுந் --- தம்பிரானே !

-------------------------------------------------------------------------------------

------பொருள் விளக்கம்-------


"தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே"


மாதவம் செய்ததாலே மாசு மிக்க தாரகனும்
மரணிக்கும் போது காணுகின்ற பேறடைந்த
சீலமிகு இரத்தினத்தால் சீராக நிரப்பப்பட்ட
கோலமிகு காலணியும் தண்டை எனும் ஆபரணமும்,

நடனமிடும் வேளையினில் இனிய ஒலி செய்கின்ற
வெண்டையம் என்கின்ற வீரமிகு ஆபரணமும்,

பதினாலுலகும் எக்களித்த[க.அ.93]
பதித்த மணிகளால் அணி செய்த
திருவரையில் திகழுகின்ற
கிண்கிணி என ஒலி செயும் ஆபரணமும்,

பொன்னாலும் மணியாலும் புனைந்து கட்டிய
நான்கு வேதங்களின் கீதமிசைக்கும்
பொன்னடியிலும், திருவிடையிலும் திகழும்
சதங்கை எனும் நல் ஆபரணமும்,

வீரமிகும் பாதங்களில்
சீராக ஒலி செய்திடும்
நல்லோசை கேட்டிடவே
நாமகளும் அமர்ந்திருக்கும்
தண்கழல் எனும் தனி ஆபரணமும்,

கற்பென்பது பொதுவெனக் காட்டுதல் போலக்
கற்றிடும் அடியவரின் துயர் களைய
அற்புதமாய் ஒலி கிளப்பி அழகுறவே
ஆடிடும் சிலம்பு எனும் ஆபரணமும்,

சேர்ந்தங்கு இனிதாய் ஒலித்திட,

"நின் தந்தையினை முன் பரிந்து இன்ப அரி கொண்டு
நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலக் கண்டுற"


நடனத்தின் நாயகனாம் நடராசன் முன் நின்று
பண்புடனே வலம் வந்து பவுரி எனும் கூத்தாடலை
இன்பமுற ஆடியே இனிதே களிப்புற்று
அன்புடனே சேர்ந்து நின்றிட்ட நிலை போல
அடியவனும் கண்டின்று ஆனந்தம் அடைந்திடவே,

"கடம்புடன், சந்த மகுடங்களும், கஞ்சமலர் செம்கையும்
சிந்து வேலும், கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்
கண் குளிர என்றன் முன் சந்தியாவோ?"


அழகுறத் தொடுத்த கடப்ப மலர் மாலையும்,
எழிலுற அமைந்த மணி முடி மகுடமும்
கமல மலரொத்த சிவந்த திருக்கரங்களும்,
பகலென ஒளிவீசும் ஞான வேலாயுதமும்,
நிலவின் அருள் பொழியும் விழிமலர் பனிரன்டும்,
மலர்ந்து நகைபுரியும் ஆறு திருமுகமும்,
வளரும் மதி போலும் ஒளிச்சிதறல்களும்,
பலவும் காட்டியே என் விழிகள் குளிர்ந்திடவே
உலவும் இவ்வடியவன் முன் தோன்றி அருள் புரியாவோ?

"புண்டரிகர் அண்டமும், கொண்ட பகிர் அண்டமும்,
பொங்கி எழ, வெம் களம் கொண்ட போது"


தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும்
நான்முகனாம் பிரமனின் உலகமும்,
அதனையும் உள்ளடக்கிய வெளி அண்டங்களும்,
இதனால் நம் துயர் தீர்ந்ததென
மகிழ்வுடன் எழுந்து ஆரவாரம் செய்ய,
தகித்திடும் போர்க்களம் நீ புகுந்த போது,

"பொன்கிரி என அம் சிறந்து எங்கினும் வளர்ந்தும்
உன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர"


பொன்னாலான மலை போல அழகிற் சிறந்து
அளவற்ற தவஞ் செய்த சூரனுக்கு அருளிடவே,
அகிலமனைத்தையும் நின் திருமேனியில் அடக்கியே
மூவுலகையும் ஈரடியால் அளந்திடவே அன்றொரு நாள்
வாமனனாய் வந்த [பிரமனின் தந்தையாம்]
நாரணனும் தன்வடிவம் அதில் கண்டு வியத்தல் போலே,
----------------------------------------------------------------
[முருகனின் திருப்பெருவடிவம். [மாரியம்மன் தாலாட்டு மெட்டில்]]

ஐயன் திருவடிவில் ஆரார் அடங்கி நின்றார்!
உள்ளடியில் அத்துணை மலைகளும் அடங்கின!
திருவடியின் முற்பாதியில் கடல்களும்,
விரல்களிலே இடி, தாரகை, கிரகங்கள் அடங்கின!
வருணனும், குபேரனும், நிருதியும் இராக்கதரும்
மீதமுள்ள கால் பகுதியில் அடங்கி நின்றார்!
கணைக்காலில் முனிவர்களும், தெய்வமணிகளும்,
முழங்காலில் வித்தியாதரர் எனும் அறவோரும்
தொடையினில் இந்திரனும், அவன் மைந்தன் சயந்தனும்,
தொடைமூலத்தில் இயமனும்,
அரையின் முற்பக்கலில் அசுரரும்
விலாப்பகுதியினில் விண்னவரும்,
யாவருமே அடங்கி நின்றார்!
மூலாதாரத்தில் நாகர்களும்,
கோசநுனியினில் அமிர்தமும்,
உந்தியில் உயிர்களும், மார்பினிலே அனைத்துக் கலைகளும்,
முப்புரி நூலில் ஞானமும், நுனிமுடியில் அண்டங்களும்,
உள்ளங்கையினிலே போகப்பொருள்களும்,
தோள்களிலே திருமாலும், பிரமனும் அடங்கினர்!
கைவிரல்களிலே தெய்வப்பெண்டிரும்,
கண்டத்தில் நாதமும் அக்கினியும்,
திருவாயில் வேதங்களும், தமிழ்மறையும்,
பற்களிலே எழுத்துக்களும்,
நாவினிலே ஆகமங்களும்,இதழினில் எழுகோடி மந்திரங்களும்,
நாசியில் வாயுவுமே அடங்கி நின்றார்!
இருகண்களிலே சந்திர சூரியரும்,
செவிகளிலே ஒரு நூறு உருத்திரரும்,
நெற்றியிலே ஓங்காரமும்,
சென்னியிலே சிவபெருமானும் அடங்கி நின்றார்!
ஐயன் உருவினிலெ அனைவருமே அமர்ந்திருந்தார்!
கூடிக் களித்திருந்தார் குவலயத்தோர் மகிழ்ந்திடவே!
------------------------------------------------------------------------
"கொண்ட நடனம் பதம்"

அத்திருப்பெரும் வடிவு கொண்டு
நீ ஆடிய நடனப் பாதங்கள்

"செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி
நடனம் கொளும் கந்தவேளே!"


தில்லையிலும், கொடுங்குன்றத்திலும் முன்பெனக்குக்
காட்டியருளிய நின் திருமலர்ப் பாதங்களை
இந்தச் செந்தூரிலும் கொஞ்சும்படி ஆடிக்காட்ட
வந்திருக்கும் கந்தன் எனும் அழகனே!

"கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும்"

மலையிற் பிறந்த சந்தனத்தை
கலையாகப் பூசிகொள்ளும்
மலைக் குறத்தியாம் வள்ளியாரின்
வளைக்கரத்தின் வாசம் நுகரும்

"கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!"

நீ உரைத்த தமிழ் உரைத்த
மாமுனியாம் அகத்தியனார் வணங்கிடும்
தனிப்பெருந் தலைவனே! குமரனே!
-----------------------------------------------------------------------------------

...அருஞ் சொற் பொருள்...

அரி:
பவுரி எனும் கூத்தாட்டு
சந்தொடம்: மகிழ்ச்சி [சந்தோஷம் என்பதன் திரிபு]
புண்டரிகர்: அரியின் நாபித்தாமரை மலர் மேல் இருக்கும் பிரமன்
பகிர் அண்டம்: அண்டத்தையும் உள்ளடக்கிய வெளி அண்டம்
வெங்களம்: சூடான போர்க்களம்
புண்டரிகர் தந்தை: திருமால் [பிரமனின் தந்தை]
கூர: உவகை அடைய
கும்பமுனி: அகத்தியர்
தம்பிரான்: தனிப்பெரும் தலைவன்
------------------------------------------------------------------------------------
அருணகிரி தாள் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:56

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் [7] -- "அல்லசலடைந்த"

தய்யதன தந்த தய்யதன தந்த
தய்யதன தந்த தனதான

............பாடல்............

அல்லசல டைந்த வில்லடல/னங்கன்
அல்லிமல ரம்பு தனையேவ

அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட அணையூடே

சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று முனியாதே

துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு தரவேணும்

கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை கண்ட புலவோனே

கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை யருள்வோனே

வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த மயில்வீரா

வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே.

********************************************************************


அகப்பொருள் துறையில் பாடப்பெற்ற அற்புதப் பாடல் இது.
நாயகனை விரும்பி, வேட்கை கொண்டு வாடி வருந்தும் தன் மகளைக் குறித்துத் தாய் இரங்கிப் பாடுகின்றாள் என்னும் வகையில் அமைந்துள்ளது.
துணையைப் பிரிந்தோ, அல்லது இணக்கமின்றியோ வருந்தும் ஒவ்வொருவரும் பாடி வேண்டக் கூடிய பாடல்.
இனி பொருளைப் பார்ப்போம்! பின் பாதி முதலில் கண்டு, முன் பாதி அடுத்து வரும்.

********************************************************************

"கல் அசல மங்கை எல்லையில் விரிந்த
கல்வி கரைகண்ட புலவோனே"


அன்றொரு நாள் தேவரும், முனிவரும் கூடி
இன்றிங்கு வீற்றிருக்கும் புலவோரில்
முன்நின்று முதன்மை செய்யும்
நன்றான புலவர்க்கு விருதளித்து
சிறப்பொன்று செய்தல் வேண்டுமென
ஒன்றாக முடிவு செய்து,

நாமகளின் வடிவான ஔவைக்கே
பூமாலை சூட்டவெண்ணி
தாம்பூலம் பெற்று தயவு செய்கவென
வேண்டிக் கேட்டிடவே ஔவையும்,
"புலவரெனில் அது மற்றும்
தேவரையே குறித்தலாயின்
அவர்க்குத் தலைவனாம்
இந்திரனையே அது சாரும்
ஐந்திரமெனும் இலக்கண
நூலொன்று படைத்ததனால்"
எனப் புகல, அவ்வண்ணமே அவரும்
இந்திரனை நாடியே தாம்பூலம் நீட்ட,

இந்திரனும் நடு நடுங்கி
"ஒரு நூலைச் செய்ததினால்
நான் புலவன் ஆகமாட்டேன்!
பல நூலும் கற்றிட்ட
அகத்தியரையே இது சாரும்!
அவரிடமே தந்திடுக!" எனச் சொல்லி,

அகத்தியரிடம் நீட்டுங்கால்
அகத்தியரும் தான் நகைத்து,
"பலநூலைக் கற்றதினால்
நான் புலவன் ஆவேனோ?
எனக்கிதனைத் தந்தவளாம்
கலைவாணி அவர்க்கன்றோ
இவ்வருமை தரலாகும்!" என அனுப்ப,

வாணியோ தான் மறுத்து
"வேதத்தில் வல்லவராம்
என் கணவர்க்கே இது சேரும்" எனச் சொல்ல,
பிரமனோ மனம் கலங்கி,
"வாக்கிற்கும், அறிவிற்கும்
தலைவியாம் உமையவளே
இதைப் பெற்றிடும் தகைவுடையாள்!
அவரிடமே ஈந்திடுக! எனப் பணிக்க,

அவ்வாறே இவர்களும் உமையை நாடி வேண்ட,
வாகீச்வரியும் முறுவலித்து,
"நன்று, நன்று ! நான் இதற்கு
உரியவள் அன்று! என் குமரன்
ஞானஸ்கந்தன், ஞானபண்டிதன்
சிவகுருநாதன் குமரவேளே
இதற்குரியவன்!" என அருள,

"மூவர் முதல்வா! முத்தமிழ் வேளே!
வித்வத் தாம்பூலம் ஏற்றருள்க!" எனப் பணிய,
"நல்லது! அவ்வண்ணமே ஆகுக!" என
கந்தவேளும் தாம்பூலம் ஏற்றருளினார்!

இவ்வண்ணம் மலைமங்கை வரையில் போய்
அவ்வம்மையே "புலவன் என் குமரனே!"
எனச் சொன்னதனாலே 'புலவன்'
எனும் பெருமை படைத்த முருகோனே!

"கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று
கல்லல் அற ஒன்றை அருள்வோனே"


'நமசிவாய'வெனும் ஐந்தெழுத்தைக்
குறித்தாற்போல் ஐந்துஇதழ் கொண்டு
அதன் நடுவே வளைந்திருக்கும்
தோகையும் 'ஓம்'என்னும் பிரணவத்தைக்
காட்டுதல் போல் வடிவமைந்த

கொன்றையெனும் மலர் சூடி
அடியவர்க்கு அனைத்தையும் வழங்குதலால்
வள்ளலெனும் பெயர் கொண்ட
சிவன் பணிந்து கேட்டிடவே
அன்றவர்க்கு பிரணவத்தின் பொருள் சொல்லி
அவர் ஐயம் தீர்த்திட்ட அருள் மழையே!

"வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச
வல்லமை தெரிந்த மயில்வீரா"


பலம்கொண்ட அசுரர்படை அஞ்சி ஓட
நலமான விண்ணவரும் பிழைக்கும் வண்ணம்
திறம் காட்டிச் சமர் புரிந்த
மயில் மீதமர்ந்த பெருவீரனே!

"வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த பெருமாளே"


வள்ளிக்கொடி படர்கின்ற
வள்ளிமலை அடைந்து
வள்ளியெனும் குறமகளை
அள்ளி மணம் செய்த பெருமாளே!

"அல் அசல் அடைந்த வில் அடல் அனங்கன்
அல்லிமலர் அம்பு தனையேவ"


காரிருள் படரும் நள்ளிரவு வேளையினில்
வேறிடத்தினின்று வந்து வில்லேந்தி
அன்றங்கு சிவனால் உடல் எரிந்து போனதினால்
'அனங்கன்' எனும் பேர் படைத்த மன்மதனும்
தாமரை மலர்க்கணையைச் செலுத்தவும்,

"பிள்ளைமதி தென்றல் அள்ளி எரி சிந்த"

பிறை நிலவும், வீசு தென்றலும்
தன்நிலை மறந்து இயல்புக்கு மாறாய்
கொதிக்கின்ற நெருப்பினையே
அள்ளி வீசித் துயர் செய்யவும்,

"ஐயம் உது கிண்ட அணையூடே"

என் தலைவன் வருவானோ, வந்தருள் புரிவானோ
என்னுமொரு ஐயத்தை தன் மனதில் கொண்டு
மலர்ப்படுக்கையும் நொந்து போக

"சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று
தொல்லை வினை என்று முனியாதே"


தோழியர் சொல்லுகின்ற சொற்களால் மனம் வருந்தி
தாமரை மலர் வாழும் இலக்குமி போலும் இம்மங்கை
தனியே படுத்து தான் நோக உளம் வாடி
'யான் செய்த தீவினையால் இவ்வண்ணம் வாடுகிறேன்'
என வருந்தி, வெறுத்து, நொந்து போகா வண்ணம்,

"துய்யவரி வண்டு செய்ய மது உண்டு
துள்ளிய கடம்பு தரவேணும்"


சுத்தமான வரிகளைக் கொண்ட வண்டினங்கள்
உத்தமமான சிவந்த தேனை உன்டு
மதிமயங்கித் துள்ளிக் குதித்திடும்
கடம்ப மலர்களால் ஆன மாலையினை நீயிங்கு
நங்கையவள் துயர் தீரும் வண்ணம்
தந்தருளிக் காக்க வேணும்!
*****************************************************************************

அருஞ்சொற்பொருள்:

அல்
= இரவு
அசல் = அயல்= வேறிடம்
அனங்கன் = உடல் எரிந்து போனதால், உடல் இல்லாதவன் = மன்மதன், காமன்
எரி = தணல், நெருப்பு
உது கிண்ட = கலக்கம் வந்து வாட்ட
அரவிந்தவல்லி = தாமரை மலர் மேல் வாசம் செய்யும் இலக்குமி, அலர் மேல் வல்லி
முனியாதே = வெறுக்காமல்
துய்ய வரி வண்டு = தூய்மையான வரிகளைக் கோண்ட வண்டுகள்
கல் அசல மங்கை = மலை மேல் வாழும் மலைமகள்
வள்ளல் = அனைத்தையும் குறைவறத் தரும் சிவபெருமான்
கல்லல் அற = குழப்பம் நீங்குமாறு
ஒன்றை = முழு முதற் பொருளான ஓம் எனும் பிரணவம்
சுரர் = விண்ணவர்
விஞ்ச = பிழைக்குமாறு
******************************************************************

முருகன் அருள் முன்னிற்கும் !
வேலும் மயிலும் துணை !
அருணகிரிநாதர் தாள் வாழ்க !
**********************************************************************
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:57

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 8 "வங்கம் பெறு கடலெங்கும்"
----------------------------------------------------------------

சென்ற பாடல் பார்த்து குமரன் கேட்டிருந்தார், 'நாயகன் - நாயகி பாவத்தை அருணையார் பாடிக் கேட்டதில்லை இதுவரையில்' என!

இதோ அதே கருத்தில் இன்னுமொரு எளிய பாடல்!

இதன் உள்ளின்று கவனித்தால், அருணையார் மற்றவர்களைப் போல, தன்னை நாயகி பாவத்தில் வைத்துப் பாடவில்லை என்பது புலனாகும்!

அவர்தான் அனுபூதி பெற்றவராயிற்றே!

அவர் நமக்காக, நம் மீது கருணை கொன்டு, நம் நலம் நாடி வேண்டுகிறார்!
என்னே அவர் கருணைத் திறம்!

நாடு பார்த்ததுண்டா?
இது போன்ற நல்லவரை!
------------------------------------------------------------

...........பாடல்............


[தந்தந் தன தந்தந் தனதன
தந்தந் தன தனதான]

வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை

வந்துந் தியதிரு மதனாலே

வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு மதனாலே

பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு கொடியான

பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை நினையாயோ

தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி லதனூடே

தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு மயிலாடப்

பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைக
ளென்றும் புகழ்பெற மலரீனும்

பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல பெருமாளே.
______________________________________________________________

.......பொருள் விளக்கம்.........

"தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள்

சென்று ஒன்றிய பொழில் அதனூடே

தெந்தெந் தெனதென என்று அண்டு உற அளி

நின்றும் திகழ்வொடு மயில் ஆட

பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள்

என்றும் புகழ்பெற மலர் ஈனும்

பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழுபுவி

என்றும் செயவல பெருமாளே."

நீண்டு வளர்ந்ததோர் சோலை !
அதன் நீடெங்கும் நிறைந்து நிற்கும்
தென்னை மரங்களும் வாழை மரங்களும்!
இருக்க இடமின்றி அடர்ந்திருக்கும் அச்சோலையுள்
தெந்தெந்தெனவென ரீங்காரம் செய்தவண்ணம்
அமர இடமின்றி போட்டிபோடும் வண்டினங்கள்
அடுத்தவரை விரட்ட எண்ணி அழகிசை பாடவும்,

அவ்விசை கேட்டு அதற்கேற்ப மயிலினங்கள்
தம்தோகை விரித்தங்கு அழகு நடம் ஆடிடவும்,

சோலை செழித்திடக் காரணமாய் பொங்கி நிறைந்து
வழிந்தோடுகின்ற நீர்ச்சுனைகள் முழுதினிலும்
குவளைமலர்க் கூட்டம் இவைகண்டு கண் மலரவும்,

இதுபோன்ற அழகுக் காட்சிகள் அத்தனையும்
நிறைந்திருக்கும் பெருமை பெற்ற தலமதுவாம்
திருத்தணிகை மலையதனின் மீதமர்ந்து
தன் செயல்கள் யாவையும் முடித்து விட்டு இனி
ஏழுலகும் படைத்தழித்துக் காக்கவென
வீற்றிருக்கும் பெருமை கொண்ட முருகோனே!

"வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை
வந்து உந்தி அதிரும் அதனாலே"

ஒரு சேர அலை அடித்தால் ஒலியங்கு இனித்திருக்கும் !
பல வேறு கப்பல்கள் தொடர்ந்தங்கு செல்வதனால்
அலைகளின் ஓட்டமங்கு மாறி மாறி வேறுபட்டு
கரையதினில் சேர்கையிலே தடதடவெனவே
அதிர்ந்தங்கு ஒலிப்பதனால் உளத்தினிலே எழுகின்ற
வேட்கையதின் தாக்கம் இவளை வருத்துவதாலும்,

"வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழல் உற
அஞ்சு அம்பு அதும் விடும் அதனாலே பங்கம் படும்"
தான் நினைக்கும் நேரம் பார்த்து
ஆசையென்னும் தீ மூட்டி,
அவர் மீது மலர்க்கணை தொடுத்து,
அடங்காத மனத்தினரையும்,
அம்பு விட்டு அவர் உள்ளம்
தளரச் செய்யும் மன்மதனால்
நாணம் என்னும் பண்பு மறந்து
காதல்வயத்தால் அவமானம்
அடைந்திங்கு வாடுகின்ற,

"எனது அங்கம் தனில் உதி
பண்பு ஒன்றிய ஒரு கொடியான
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல்
பொன்றும் தனிமையை நினையாயோ"

என் உடலினில் இருந்து பிறந்தவள்;
நற்பண்புகள் பொருந்தியவள்;
கொடி போலும் மெல்லிய உடலை உடையவள்;
பஞ்சு போலும் மென்மையுடையவள்;
மயில் போலும் சாயல் ஒத்தவள்;
இன்று உம் மீது கொண்ட காதல் தீயை
உள்ளத்தில் பொருத்தி உழலுகின்றாள்!
அதனால் இறந்து படுகின்ற
நிலைமையில் இன்றவள் நிற்கின்றாள்!

பெண்ணென்றால் பேயும் இரங்கிடுமே!
முருகா! இவள் துயர் பார்த்து
நீவிர் திருவுளம் இரங்கிடக் கூடாதோ!
இவளது தனிமை கருதி இப்போதே
இனிமை செய்திடல் வேண்டும், பெருமானே!
_____________________________________________________________________________

அருஞ்சொற்பொருள்:

திரை
= அலை
அழல்= நெருப்பு
பங்கம்= அவமானம்
நெஞ்சொன்றிய அழல்= காமத்தீ
தெங்கம்= தென்னை
கதலி= வாழை
அண்டு உற = நெருக்கமாக நின்று
அளி= வண்டு
திகழ்வொடு= விளக்கமாக
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:57

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 9 "தொந்தி சரிய"


"ஆவி பிரியுங்கால் மயில் மீது வந்து எனையாள்!"

.............பாடல்.............

தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன -- தனதான

தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி

தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி

வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி

மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்

எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம

இங்குவருக அரசே வருகமுலை
யுண்கவருக மலர்சூ டிடவருக
என்றுபரிவி னொடுகோ சலைபுகல -- வருமாயன்

சிந்தைமகிழு மருகா குறவரிள
வஞ்சிமருவு மழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய -- அதிதீரா

திங்களரவு நதிசூ டியபரமர்
தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே.
00000000000000000000000000000000000000000000000000000000000
சைவம், வைணவம் இவற்றில் பேதம் ஒன்றுமில்லை எனப் பகரும் அற்புதக் கவிதை இது!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


...........பொருள்.................

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம் !]

"எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனது ஆருயிர் வருக
அபிராம இங்கு வருக அரசே வருக
முலைஉண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினோடு கோசலை புகல
வருமாயன்சிந்தை மகிழு மருகா"

பலவாறு தவம் செய்துவேண்டியதின் விளைவாய்
மன்னு புகழ் கோசலைதன்மணிவயிறு வாய்த்த
ரகுகுலம் தழைக்க வந்தஎந்தையே வருக!

'மைந்த வருக' வென அழைத்ததற்கோர்
காரணமும் இங்குண்டு!

தனக்குரிய வயது வந்தும்
தன் கையை நம்பாமல்
தந்தையின் வருவாய் அறியாமலும்,
அவர் அணைப்பில் இருக்கிறவன் 'பாலன்'.

வயதான தந்தையங்கு
வருவாயைக் கொன்டுவர,
தானதற்கு உதவிடாமல்
தான் தோன்றியாய் இருப்பவன் 'பிள்ளை'.

தந்தைக்கே ஞானம் உரைக்கும்
அறிவு பெற்றவன் 'குமாரன்'.

தந்தை தாயின் நலம் பேணி
அவர்க்குக் கருமம் செய்தங்கே
நற்கதிக்கு அனுப்புபவன் 'புத்திரன்'.

இருக்கும் காலத்தில்
பெற்றவர் நலம் பேணி
நற்செயல்கள் புரிபவன் 'புதல்வன்'.

தன் குடும்ப நலன் பேணி
தந்தையவன் கடனேற்று
ஆலமரம் போல் காப்பவ்னே 'மகன்'.

தன் குடும்பம், தன் தாய்
தந்தையர் குடும்பம்
குருவின் குடும்பம் மற்றும்தம்
நண்பரின் குடும்பம்
இவையனைத்தும்
தன் குடும்பம் போல்காப்பவனோ 'மைந்தன்'!

இராமனோ தன் குடும்பம் மட்டுமின்றி
குகன், சுக்ரீவன், விபீடணன்குடும்பமதையும்
காத்திடுவான் நாளை என அறிந்து
'மைந்த வருக' வென வழைத்து,
பின், தன் குடும்ப மானமும்
காப்பவனும் இவனெனத் தெளிந்து
'இனி மகனே வருக' வெனவும்
அழைத்திட்டாள் மாதரசி கோசலை!

எனது கண்ணின் மணியே வருவாய்!
என் ஆருயிர்க்கு நிகரானவனே வருவாய்!
அழகிற் சிறந்தவனே வருவாய்!
இம்மாநிலத்தின் அரசனே வருவாய்!

தான் அந்தக் குண நலன்கள்
தன்னங்கே கொண்டதனால்,
தாயின் முலைப்பாலைக் குடிக்கின்ற
அவனுக்கும் அந்நலங்கள் வரட்டுமென
'முலையுண்க வருக'
வெனவும் அழைக்கின்றாள்!

மணக்கும் இந்த நறுமலரைச்
சூடிடவே வருவாய்!

என அன்னையாம் கோசலையும்
மகிழ்ந்து கொண்டாடி
மனம் குளிர அழைக்கின்ற
மாயவனாம் இராமனெனும்
அவதாரமாய் வந்த அந்தநாராயணனும் ,

தானங்கு மாயத்தால் கோசலையின் அன்பிற்குக்
கட்டுண்டு கிடந்த நிலை போலே
இங்கிந்த சரவணனும் கார்த்திகைப்
பெண்டிர் அழைத்திடவே அறுமுலையுண்ணும்
காட்சியினைக் கண்டே மனம் மகிழும் படி
திருவிளையாடும் முருகா!

"குறவர் இளவஞ்சி மருவும் அழகா"

அழகன் இவனே எனத் தெளிந்து
உனை அணைக்க வருகின்ற
குறவள்ளியின் மணாளனே!

"அமரர் சிறை சிந்த,
அசுரர் கிளை வேரொடு மடிய அதிதீரா"

பல யுகமாய் சிறையில் உழன்று
நெடுந்துயர் அடைந்திட்ட
தேவரெனும் நற்குணங்கள்
அசதி, சோம்பல் எனும்
தாமச குணம் என்னும்
அசுரரால் வருந்தி நிற்க
அயர்வை அகற்றி, நல்லுணர்வை அளிக்க,
அசுரரை வாட்டி, தேவரை சிறை மீட்ட
பெருவீரம் படைத்த முருகா!

"திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர"

நீயே சரணமெனத் தனை
நாடி வந்த சந்திரனையும்,
உனைக் கொல்வேன் எனச் சபதம் செய்து
ஓடி வந்த பாம்பினையும்,
ஒரு சேர அன்பு கொண்டு அபயமளித்து,
பாய்ந்து வந்த கங்கையின்
சீற்றமடக்கிக் கருணையினால்,
தன் தலையில் இன்பமுடன்
சூடிக்கொண்ட சிவனாரின் திருக்குமரா!

"அலையே கரை பொருத செந்தில் நகரில்
இனிதே மருவி வளர் பெருமாளே"

பல்வகையாம் எண்ணமெனும்
பெருஅலைகள் ஓடிவந்து
தன்னடியில் கலந்தங்கே
தாம் அமைதி எய்துமாறு
செந்திலம்பதியினிலே
உறைகின்ற பெரிய கடவுளே!

"தொந்தி சரிய, மயிரே வெளிற,நிரை தந்தம் அசைய,
முதுகே வளைய,இதழ் தொங்க, ஒரு கை தடி மேல் வர
மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவன் ஆர் என"

என் வயது ஏறிடும் காலத்தே
வயிறங்கே பெருத்து முன்னே
தொந்தியெனச் சரியவும்,

கருநிறமாய் நான் காத்த
முடியங்கு வெளுத்துப் போய்
நரைமுடியாய் ஆகிடவும்,

உறுதியாய் நான் தேய்த்து
நிதம் வளர்த்த பற்களும்
அங்கங்கே அசைந்திடவும்,

வீரமாய் நிமிர்ந்தங்கு காட்டிய முதுகும்
பல்லக்கு போலின்று வளைந்திடவும்,

பவழம் போல் விரிந்திருந்த
உதடதுவும் தொங்கிடவும்,

இருகரம் வீசி நடந்த நான் இன்று
ஒருகரத்தில் தடி ஒன்றை ஊன்றி
நடக்கவே நேர்ந்திடவும்,

அதைக்கண்டு இளவயது
மங்கையரெலாம் 'யார் இந்தத்
தொண்டு கிழவன் இங்கே' என நகைத்திடவும்,

"இருமல் கிண்கிணென
முன் உரையே குழற
விழி துஞ்சு குருடு படவே
செவிடுபடு செவியாகி
வந்த பிணியும்
அதிலே மிடையும் ஒரு பண்டிதனும்
மெய் உறு வேதனையும்"

இருமல் எனும் கொடும்பாவி
'கிண் கிண்' எனஓசையுடன் வெளிக்கிளம்பி,

இதுகாறும் திருத்தமாய்ப்
பேசிய பேச்சுகளும் குழறிப்போய்,

ஒளியுடன் விளங்கிய கண்பார்வை
இன்று தூங்குதல் போலே மங்கிடவும்,

துல்லியமாய் இதுவரையில்
கேட்டுவந்த காதுகளும்இன்று
பஞ்சடைத்து செவிடாகவும்,

மிடுக்கென வாழ்ந்த தேகம் இன்று
நொடிக்கொரு நோயென ஆட்பட்டு,

அதனாலதை அகற்றவே ஒரு வைத்தியனும்
நிதம் எந்தன் வீடு தேடி வந்திடலும்,

நோயின் துயரால் என் மேனி வாடுதலும்,

"இள மைந்தர் உடைமை கடன் ஏதென,
முடுகு -- துயர்மேவி, மங்கை அழுது விழவே,
யமபடர்கள் நின்று சருவ,
மலமே யொழுக,உயிர் மங்குபொழுது,
கடிதே மயிலின் மிசை வரவேணும்."

என்னுயிர் போதல் நிச்சயமெனத் தெளிந்து,
தன் தந்தை இன்னுமென்ன கடன் விட்டுச் செல்கிறான் என
என் இளவயது மக்களும் கணக்கிட்டு நின்றிடவும்,

வாய் பேச வழியின்றி, இதனை நான் கேட்டே
மனது துயர் பெருகி மயங்கிடவும்,

என் மனையாள் ஓவெனக் கதறி
என்மீது விழுந்து அழுதிடவும்,

எமதூதர் வந்தங்கு என்னுயிர் பற்றிடவே
எதிர்பார்ப்பாய் வந்திடவும்,

என் மலம் அங்கு நீர் போல் ஒழுகிடவும்,
என் உயிர் சற்றே எனை விட்டுப் போகின்ற

நேரமதில் முருகா நீ
அழகான மயில் மீதேறி
எனை வந்து காத்திட வேண்டுகிறேன்!
0000000000000000000000000000000000000000000000000000000000000000

அருஞ்சொற்பொருள்:

தந்தம்= பல்
துஞ்சு= தூங்குதல்
மிடையும்= நெருங்கும்
முடுகு= இதனால் ஆகிய
கடிதே= விரைவாக
அபிராம= அழகிற் சிறந்தவன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:58

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [2]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.
நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!
முதல் பகுதி படித்து இங்கு வந்தால் நலமாயிருக்கும்!
இது இரண்டாம் பாகம்.
[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!
*************************************************************

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்

வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

.****************************************************************

.................பொருள்.....................[இரண்டாம் பகுதி]

"அயனையும் புடைத்துச் சினந்து"
வெள்ளிமலையாம் கயிலயங்கிரியில்
விளையாடல் முடித்த குமரன்
இலக்கத்தொன்பான் படை புடைசூழ
ஒளிபொங்க வீற்றிக்குங்காலை ஓர்-நாள்

ஆயிரமாயிரம் தேவர் கூட்டம்
அடிபணிந்து பின்னே வர
படைப்புக் கடவுளாம் பிரமனும்
சிவனை வணங்குதற் பொருட்டு வந்தனர்

யான் எனும் செருக்கின்றி வந்த அனைவரும்
சிவனை வணங்கியபின் சுற்றிவரும் வேளையில்
ஆங்கே வருள்பொழியும் குமரனை வணங்கிச் செல்ல
"இவன் இளைஞனன்றோ"வென செருக்குற்ற பிரமன் மட்டும்

இறுமாந்து தாண்டிச் செல்ல, குமரனும் அவரது
அறியாமைச் செருக்கடக்கி, சிவனும் முருகனும் ஒன்றெனும்
உண்மையினை, அவர்க்குப் புகட்டவெண்ணி, தருக்குடன் செல்லும்
பிரமனைத் தன்பக்கல் வரச் சொல்லவும்,


இன்னும் செருக்கடங்கா பிரமரும் அலட்சியமாய் வந்து
பாவனையாய் வணங்கி நிற்க, கந்தனும் "யாவன்" என வினவ
"படைத்தலினால் யான் பிரமன்" என அச்சங்கொண்ட பிரமரும்
பதிலிறுக்க, "அங்ஙனமாயின் வேதம்வருமோ?" எனக் கேட்க,

"வேதம் பிறந்தது நம்மிடத்தில், எமக்கு வரும்" எனப்
பணிவுடன் தெரிவிக்கலும், "நன்று! அப்படியாயின் முதல் வேதமாம்
இருக்கு வேதம் பகருக" எனப் பணிக்கலும்,"ஓம்" என பிரமன் தொடங்க
இளம் பூரணனாம் எம்பிரான் நகைத்து, திருக்கரமமைத்து,

"பிரமனே! நிற்றி; நிற்றி! முதலிற் கூறிய ஓம் எனும்
பிரணவத்தின் பொருள் கூறி மேலே தொடங்கலாம்"
என்னலும், பிரம்மதேவரும் திகைத்து, கண்கள் சுழன்று
தான் எனும் ஆணவம் அடங்கி, குமரனைப் பணிந்து,

"ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளுணரேன் யான்!" என வணங்க,
"இம்முதலெழுத்தின் பொருள் அறியா நீவிர் எங்ஙனம்
படைப்புதொழிலினைச் செவ்வனே செய்திடல்ஆகும்?" எனப்பகர்ந்து
நான்குதலைகளும் குலுங்குமாறு ஓங்கி குட்டினார்!

அகம் அழியவென அங்கத்தில் தன் திருவடியால்
ஓர் உதையும் கொடுத்தனர்! பிரமனும் மூர்ச்சையாகி
நிலத்தில் வீழ்ந்து பட கருணைக் கடவுளும் தம்
பரிவாரம் அழைத்து அவரைச் சிறையினிலும் இட்டனர்!"

"உலகமும் படைத்துப் பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே."

படைப்புக் கடவுள் இல்லாமையால்
உலகினில் சிருட்டித்தல் நின்றுவிட,
அதனையும் தானே செய்திடத் திருவுளம்
கொண்டு பரிவுடன் பரங்குன்றில் அமர்ந்து
"காத்தும் படைத்தும் கரந்தும்" செயல் புரிந்த
குமரன் எனும் பெயர் கொண்ட பெருமையுடையோனே!



[இதன் தொடர் நாளை வரும்!!]" [2]


முருகனருள் முன்னிற்கும்!
வேலும் மயிலும் துணை!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!








எழுதியது
VSK


; எழுதிய நேரம்
9/22/2006 04:18:00 PM


, Links to this post


, 9
பின்னூட்டங்கள்





"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Icon18_email







குறிசொற்கள்:
Arunagirinaadhar,
thirupugazh,
திருப்புகழ்





Thursday, September 21, 2006








"அ.அ.திருப்புகழ்" -- "கருவடைந்து"







"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் " -- 10 "கருவடைந்து" [1]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.

இதன் விளக்கம் மிகவும் நீண்டதாக இருக்கும்.

நான்கு பதிவாக நான்கு நாட்களில் வரும்!!!

[ஒவ்வொரு பதிவிலும் பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]

அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்......................

[பின் - முன்!!]

"இரவி இந்திரன் வெற்றிக் குரங்கின்அரசர் என்றும்
ஒப்பற்ற உந்தி இறைவன் எண்கு இனக்கர்த்தன் என்றும்
நெடுநீலன் எரியது என்றும் ருத்ரர் சிறந்தஅனுமன் என்றும்
ஒப்பற்ற அண்டர் எவரும் இந்த வர்க்கத்தின் வந்து புனம் ஏவ"

இராவணாதி அசுரரின் கொடுமையால் வருந்தி
பிரமாதிதேவரும் அரவணைச் செல்வனாம்
அச்சுதன்பால் சென்று வணங்கிப் பணிந்து
ஆலிலைச்சயனா! அன்பர்கள் ஏறே!

இராவணாதி அசுரரின் துன்பமழித்து
எங்களைக் காத்தருள வேண்டுமென வேண்ட
அரங்கன்மாலும் அருள்கூர்ந்து அவர்பால் இரங்கி
நானுங்கள் துன்பம் தீர்ப்பேனென வரமளித்து

எவராலும் மரணம் நிகழலாகாதுவெனச் சொன்ன
இராவணன் அற்பமென நினைத்து மனிதரையும்
வானரத்தையும் கேட்க மறந்து போனான்
அதுவே நும்மைக் காக்கும் உபாயம் என்றறிவீர்!

நிருதரை நீறாக்குதற்கு சூரிய குலத்தில்
தயரதன் மகனாய் நாம் பிறப்போம்
எம் கையில் துலங்கிடும் சங்கும் திகிரியும்
யாம் படுத்துறங்கும் ஆதி சேஷனும்

எமக்கு இளையவராய்ப் பிறக்க அருள்கிறோம்
இவருடன் நால்வராய் யாம் பிறந்து
நும் துன்பம் நீக்கும் அருள் புரிந்தோம்
அஞ்சுதல் அகற்றி நும்பணி செய்திடுவீர்

எனவே மொழியவும், பிரமன் ஜாம்பவானையும்
இந்திரன் வாலியெனும் வலியதோர் வீரனையும்
பகலவன் அம்சமாய் சுக்ரீவனெனும் தம்பியையும்
அக்கினியும் தன் பங்கிற்கு அழகிய நீலனையும்

வாயுவும் சிவனைவேண்டி அவனது ஒரு துளியாம்
உருத்திரன் அம்சமும் கலந்து அனுமனையும்
இந்திரனின் தம்பி உபேந்திரன் அங்கதனாயும்
தேவசிற்பி விசுவகர்மா நளனெனும் வானரமாயும்

இவர்களால் உந்தப்பட்டு தேவரும் கந்தருவரும்
மலைபோலும் உடலுடனும், அளவிடா ஆற்றலோடும்
ஆயிரமாயிரம் வானரராய்ப் பிறந்து
மலைசூழும் கிஷ்கிந்தாவினில் அவதரிக்கவும்,

"அரிய தன் படைக்கர்த்தர் என்று
அசுரர்தம் கிளைக்கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே"

இவ்வண்ணம் அங்கிருந்த வானரக் கூட்டங்களை
தன்பணிக்கு உதவிடவே சேனையாக ஏற்று
இரவாணாதி அரக்கரை அழித்து வெற்றிகொண்ட
பாவம் நீக்கி, முக்தியைத் தந்தருளும்

இராமனாய் அவதரித்த இவ்வுலகைக் காப்போனும்
தான் அழித்த இராவணனுக்கு பத்துத் தலையே
ஆயின் என் மருகனோ, ஆயிரம் தலை கொண்ட சிங்கமுகனை அரைநொடியில் வேல்விடுத்து அழித்த தீரத்தினையும்

பாறைகளைப் புரட்டி, தான் கடலினை தாண்டிச் சென்றதுவும்
மருகனோ அக்கடலினையே வற்றச் செய்த மாண்பினையும்
தாம் அம்பெடுத்து அழித்த வீரர் கணக்கினையும்
தன் மருகன் வெறும் பார்வையிலும், சிரிப்பினாலும் மட்டுமே

எரித்தழித்த மேன்மையினை எண்ணி எண்ணி
என்றென்றும் அரிமுகுந்தன் அளப்பரிய
ஆனந்தம் அடைந்து தன் மருகனை
மெச்சுகின்ற பச்சைப் புயலின் மருகோனே!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:58

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"-- 10 -- "கருவடைந்து" [3]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
இது மூன்றாம் பகுதி! [முதல் இரு பகுதிகளும் படித்தாயிற்றா?!]
[பொருள் சொல்லும் வரிகள் வண்ண எழுத்தில்!]
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

"கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த

முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து

பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி

னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த

அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று

அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து

உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[மூன்றாம் பகுதி]

"கருவடைந்து பத்துற்ற திங்கள்வயிறிருந்து முற்றி"

[இந்த ஐந்து சொற்களுக்கு ஒரு அழகிய விளக்கம் கண்டேன்!
எந்தவொரு
விஞ்ஞான வசதிகளும் இல்லாத அக்காலத்தில், எவ்வளவு சரியாக இதைச்
சொல்லியிருக்கிறார்கள் என எண்ணியதால், அதை இங்கு எடுத்துரைக்க விழைகிறேன்.]


தாம் செய்த நல்வினையும் தீவினையும்
அதன் பயனும் நுகர்ந்த பின்னர்,
கலப்பான வினைப்பயனை நுகர்தல் பொருட்டு
விண்ணினின்று மழை வழியே, இறைவனாணையால்

பூவுலகம் வருகின்ற உயிர்களனைத்தும்
காய், கனி, மலர், நீர், தானியம்
இவற்றினுள்ளே கலந்து நின்று,
அதையுண்ட ஆணிடம் கலந்த வண்ணம்,

அறுபது நாள் அவன் கருவில் இருந்தபின் விந்தாகி
பெண்ணுடனே சேருகின்ற காலத்தில்
கருமுட்டையுடன் கலக்கின்ற விந்தையினை
அருணையாரும் சுருங்கக்கூறி விளக்குகின்றார்

கருப்பம் உண்டாகும் நற்காலம்
ருதுவென்று பெயர் விளங்கும்
மாதவிடாய் ஆன நாள்முதல்
பன்னிரன்டு நாட்கள்வரை ருதுவாகும்

விலக்கு முதல் நான்கு நாட்கள்
சங்கமித்தல் ஆகாது
ஐந்து முதல் பதினைந்து வரை
ஒற்றைப்படை நாட்களிலே சங்கமித்தால்
பெண் மகவு பெற்றிடலாம்

இரட்டையான நாட்களிலோ, அதாவது,
ஆறு முதல் பதினாறு வரை நாட்களில்
சங்கமமோ ஆண் குழந்தை
பிறக்குமென்று சொல்லி வைத்தார்.

கருப்பையின் வாய் அங்கு
குவிந்து போவதனால்
அதன் பின்னர் கருத்தரிக்கும்
வாய்ப்பெதுவும் இருப்பதில்லை.

ருது கழிந்த நான்காம் நாளினிலும்
பகற்பொழுதிலும் சேர்ந்தங்கே
கருவொன்று வருமாயின் ஆயுள், அறிவு,
செல்வம் இவை குறைந்த மகவு தோன்றும்.

ஐந்தம் நாள் கருத்தரிக்கின்
பெண் மகவு தோன்றி வரும்
ஆறாம் நாள் கருத்தரிக்கின்
மத்திமமாய்ப் பிள்ளை வரும்

ஏழாம் நாள் பெரும்பாலும்
கருவொன்றும் வருவதில்லை
எட்டாம் நாளோ குணமிக்க
பெண்மகவு உருவாகும்

ஒன்பதம் நாள் கருவுறின்
நலம் சேர்க்கும் பெண் வந்திடும்
பத்தாம் நாளில் பார் புகழும்
உயர்ந்த ஆண்மகன் வருவான்

பதினோராம் நாள் கருத்தரித்தால்
தரம் குறைந்த தருமமற்ற
பெண் மகவு வந்து உதிக்கும்
பனிரண்டாம் நாளன்று உத்தமனும் வந்திடுவான்

பதிமூணாம் நாள் வரும் பெண்ணோ
பலரை விரும்பும் குணமுடையாள்
பதினாலாம் நாளன்று ஜனிப்பவனும்
உலகாளும் நன்றியுள்ள மகனாவான்

பதினைந்தாம் நாளுதிக்கும் பெண்ணவளோ
பார்புகழும் பேரரசன் பத்தினியாய்
பல்வகைப் பெருமயெலாம் பெற்றிட்டு
உத்தம புத்திரரும் பெறுவாள்

பதினாறாம் நாள் திருக்குமரன்
கல்வி கலைகளிலே தேர்ச்சி பெற்று
நல்லொழுக்கம் மிக்கோனாய்ப் பலராலும்
விரும்புகின்ற பாக்கியவானாய் ஆவானாம்.

முழுநிலவோ, கருநிலவோ,
அட்டமியோ, சஷ்டியோ, துவாதசியோ
இந்நாளில் அமையுமாயின்
அந்நாளில் சேர்க்கை தவிர்த்திடவும்.

கருவொன்று உதித்த பின்னர்
அது வளரும் நிலையினையை
முன்னோர்கள் சொன்ன
வாக்கைஇப்போது காண்போம்!

விந்தும் முட்டையும் சேர்ந்த கரு
இரண்டும் கலந்ததாலே திரவமாகி நிற்கும்
ஏழாம் நாளினில் அது ஒரு மலர் போல விரியும்
பதினந்தாம் நாளினில் அது சற்றே இறுகிவரும்

ஒரு மாதம் போனபின்னர் இன்னும் கடினமாகி
இரண்டாம் மாதத்தில் தலையொன்று முளைத்துவரும்
மூன்றாம் திங்களிலே கால்கள் தோன்றவரும்
நாலாம் திங்களிலே விரல், வயிறு, இடுப்பென

தனித்தனியே பிரிந்து உருத் தோன்றும்
ஐந்தாம் மாதத்தில் முதுகெலும்பு ஊன்றிவரும்
ஆறாம் திங்களிலே கண், மூக்கு, செவி உதிக்கும்
ஏழாம் மாதம் ஜீவன் வந்துதிக்கும் [Viable]

எட்டாம் மதத்தில் அங்கமெல்லாம் வளர்ச்ச்சி பெறும்
ஒன்பதாம் திங்களிலே முன் ஜென்ம நினைவு வரும்
மீண்டும் இந்த பிறப்பு இறப்பென்னும்
துன்பமதில் விதித்தாயே என்னிறைவா என வருந்தும்

தன் துன்பம் மிக நினைத்து தானங்கே வாடுகின்ற
ஒன்பதாம் மாதத்தில் இறைவனிடம் முறையிட்டிடினும்
யோனித்துவாரம் வழி வருகையில் ஏற்படும் துன்பத்தால்
அவை அழிந்து, முன் நினைவு மறந்து போகுமாம்.

பத்தாம் திங்களிலே, தனஞ்சயன் எனும்
வாயுவால் தள்ளப்பட்டுத், தலைகீழாய்
சிசுவங்கே வெளிவரும் நேரத்தில்,
மலையினின்றுஉருட்டப்படும் துன்பத்தை அனுபவிக்கும்.

[மீதி வரிகளுக்கு அடுத்த பதிவில் பொருள் விளக்கமளித்து முடித்து விடலாம்!]

முருகனருள் முன்னிற்கும்!

வேலும் மயிலும் துணை!

அருணகிரிநாதர் தாள் வாழ்க!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 07:59

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 10 -- "கருவடைந்து" [4]

மீண்டும் அருணையார் கருணையால் ஒரு அற்புதமான திருப்புகழ்ப் பாடல் கண்ணில் பட்டது.
இதை சற்று விளக்கமாகச் சொல்ல விழைகிறேன்! [வழக்கத்தை விட!!].
நான்கு பதிவாக வரும்!!!
அருள் கூர்ந்து பொறுத்தருள்க!

..............பாடல்..............

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில்வந் துதித்துக் "குழந்தை வடிவாகி

கழுவியங் கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை
யிடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து வயதேறி

அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தமென்று பெறுவேனோ"

இரவியிந்திரன் வெற்றிக் குரங்கி
னரசரென்று மொப்பற்ற வுந்தி
யிறைவனெண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரர் சிறந்த
அனுமனென்று மொப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தின் வந்து புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கிட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள்பரங்கி ரிக்குட் சிறந்த பெருமாளே.

****************************************************************

.................பொருள்.....................[நான்காம் பகுதி]

"குழந்தை வடிவாகி கழுவி அங்கு எடுத்து,
சுரந்தமுலை அருந்துவிக்கக் கிடந்து,கதறி,
அங்கு கை கொட்டித் தவழ்ந்து, நடமாடி,
அரைவடங்கள் கட்டி, சதங்கை,இடுகுதம்பை, பொற்சுட்டி, தண்டைஅவையணிந்து,, முற்றிக் கிளர்ந்து "

குழந்தையென வந்துதித்த பின்னர்
அதனைக் கழுவிக் குளிப்பாட்டி,
தாயின் முலையினின்று சுரந்திட்ட
பாலருந்த பக்கவாட்டில் கிடந்து,

ஓர் கணம் கதறலும், உடனேயே
கைகொட்டிச் சிரித்தலும் மாறி மாறிச் செய்து
பின்னர் உடல் திருப்பி,மார்பினால் தவழ்ந்து,
இன்னும் உடலெழுப்பி நின்று நடை பழகி,

துணையென்று ஒலிகேட்கத் தாயவளும்

இதன் இடையில் அரைவடம், கால்களிலே சதங்கை
காதசையக் காதணிகள், கைவிரலில் மோதிரம்
இவையெல்லாம் அணிவித்து அழகு பார்த்து

பசியறிந்து, தன் ருசியறிந்து
உடல் வலு சேர்க்க பதம் அறிந்து
தாயவள் ஊட்டிய அன்புச் சோற்றினால்
உடல் நன்கு முற்றி வலுவடையும் அந்த,

"வயதேறி அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து"

பதினாறு வயதினிலே, தான் பிறந்த
பயனறியாது, காலத்தின் உயர்வறியாது,
உய்யக் கரை சேரும் வழி அறியாது
பருவக்கிளர்ச்சியால் மனம் சஞ்சலித்து

கண்ணில் படுகின்ற பெண்களின் கருத்தைக்
கவர எண்ணி அதுபற்றியே சிந்தித்து
அவருடன் இணக்கமாக வழியனைத்தும்
தேடுவதில் காலத்தைச் செலவிட்டு,

"பிணியுழன்று சுற்றித் திரிந்தது அமையும்"

பல்வேறு வகையாலும் பாவச் செயல்களைப் புரிந்து
அதனாலே பல்வேறு விதமாய நோய்நொடி அடைந்து
துன்புற்று, பாவ, புண்ணியங்களால் மீண்டும் மீண்டும்
இப்பூவுலகில் வந்து உழற்படா வண்ணம் அருளுகின்ற

"உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ ?"

நின்னுடைய கருணைத் திறனை
நான் பெறும் நாள்தான் எந்நாளோ?

[இத்துடன் இந்த சிறிய தொடர் நிறைவுற்றது!
இதில்
சொன்ன பல நிகழ்வுகள் உங்களுக்கு ஒரு வாரத்திற்கு சிந்திக்க உதவும் என்னும்
நம்பிக்கையுடன் தாற்காலிகமாக உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்!

பின்னூட்டங்கள் இடவும்!
அவை படித்து பிரசுரிக்கப் படும்!
திரும்பி வந்ததும் விரிவாக பதிலிட முயலுவேன்!]
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:00

"அருணகிரிநாதரின் திருப்புகழ்" -- 11 "சந்ததம்"

இந்த வாரம் ஒரு எளிமையான, இனிமையான, பொருள் பொதிந்த, சுருக்கமான திருப்புகழ்!

" பாடல்"

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலத் துஞ்சித் திரியாதே
கந்தனென் றென்றுற் றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே.

"பொருள்"

"சந்ததம் பந்தத் தொடராலே"

தன்மைக்குத் தக்கவாறு கயிறு பிணைக்கப்படும்
பசுவினைக் கட்டுவதோ ஒரு கயிற்றால்
யானையைப் பிணைப்பது இரு சங்கிலியால்
குதிரையைக் கட்டவோ கயிறு மூன்று வேண்டும்
ஊஞ்சலைக் கட்ட சங்கிலிகள் நான்கு வேண்டும்
ஆன்மாவைக் கட்டவோ ஐந்து கயிறு வேண்டும்!

கயிற்றின் எண்ணிக்கை கூடக்கூட
கட்டுவதின் முரட்டுத்தனம் விளங்கும்.
ஒருகயிற்றால் கட்டிய பசு
சுற்றளவைச் சுற்றிவரும்
இருகயிற்று யானையோ
அங்குமிங்கும் அசைந்து நிற்கும்
முக்கயிற்று குதிரையும்
முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும்.
நாற்கயிற்று ஊஞ்சலும்
மேலும் கீழும் ஆடிவரும்
ஐங்கயிற்று ஆன்மாவோ


சொர்க்கம் நரகம் பூதலம் என்னும்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:00

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 12 "ஓராதொன்றைப்"


"சூரனை அடர்ந்த வேலவரே! சிவபாலனே! செந்திலாதிபதியே! மாதர் வசப்படாது உமது புகழைப் பாட அருள் புரியும் !"

---------------------------பாடல்-----------------------------------
ஓரா தொன்றைப் பாரா தந்தத்

தோடே வந்திட் டுயிர் சோர
ஊடா நற்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் குலையாதே
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் தொளையாடீ
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் கினியோனே
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் பெருமாளே.

---------------------------பொருள்:-----------------------------

[வழக்கம் போல் பின் பார்த்து முன்]

"தோரா வென்றி போரா"

போரினைப் புரிபவன்
வெற்றியும் காண்பான்
தோல்வியும் காணுவன்
குமரனுக்கோ வெற்றியன்றித்
தோல்வியே இல்லை- அங்ஙனம்
தோல்வியறியாது
வெற்றிப் போர் செய்பவரே !

"மன்றல் தோளா"

மன்றத்தில் வீசிவரும்
தென்றல் காற்றைப் போன்று
நறுமணம் வீசிடும்
தோள்களை உடையோரே !

"குன்றை தொளையாடீ"

கிரௌஞ்சமெனும் குன்றத்தை
வீரமுடன் வேலெடுத்து
தொளையாகிப் போகும்வண்ணம்
தீரமுடன் செய்தவரே!

"சூதாய் எண் திக்கு ஏயா"

நேரடியாய்ப் போர் செய்திட
துணிவு இன்றிச் சூதாக
மாயங்கள் பல காட்டி
திக்கெட்டிலும் பரவி நின்று

"வஞ்சச் சூர்மா அஞ்சப் பொரும்வேலா"

வஞ்சனையாய்ப் போர் செய்த
சூரனெனும் வலிய அரக்கன்
அஞ்சி நடுங்கும் வண்ணம்
வெஞ்சமர் செய்த வேலாயுதா

"சீர் ஆர் கொன்றைத் தார்மார்பு ஒன்றச்
சே ஏறு எந்தைக்கு இனியோனே"

சீராய்ப் பூத்து
சிறப்பாய் மலர்ந்திட்ட
ஆத்தி மலரினையும்
கொன்றை மலரினையும்
ஒன்றாகச் சேர்த்தங்கு
கட்டியதோர் மாலையினை
மார்பினில் பொருந்திட
அழகுறத் திகழ்ந்திடவே
திமிர்ந்த திமில் உடைய
நிமிர்ந்த எருதின் மேல்
உயர்ந்து எழுந்துவரும்
என்னப்பனாம் ஈசனுக்கு
மிகுதியும் இனியவரே!

"தேனே!
அன்பர்க்கே ஆம் இன்சொல் சேயே!
செந்தில் பெருமாளே!"

அடியவரின் சித்தத்தில்
தேன் போன்று தித்திக்க
நினைத்திடும் போதெல்லாம்
இனித்திடும் தெய்வமே!

அருள் புரிவதும் உன் செயலே
அவ்வருளைப் புரிகையிலே
வன்சொற்கள் பேசாமல்
இன்சொல்லால் எமை மகிழ்த்தும்
செம்மைப் பண்பு காட்டும்
இன்சொல் விசாகனே!

சிறப்பான தெய்வம் நாடி
ஆரும் அலையா வண்ணம்
ஆரலைவாயில் அமர்ந்திருக்கும்
பேரறிவாளன் திருவே!

"ஓராது ஒன்றைப் பாராது"

ஒன்றெனும் ஒருமொழியாம்
ஓம் எனும் பிரணவம்
அம்மொழியை அறிந்திடவோ
குருவருளின் துணை வேண்டும்
அறிந்த பின்னர் அம்மொழியை
ஆராய்ந்து பார்த்திடல் வேண்டும்
அத்தோடு நின்றிடாமல் அதையென்றும்
மனத்தினில் உன்னுதல் வேண்டும்

அவையெல்லாம் செய்யமாட்டார்
உண்மைப் பொருளை அறிய மாட்டார்

"அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர,
ஊடா,
நன்று அற்றாற் போல் நின்று,
எட்டா மால் தந்திட்டு,
உழல் மாதர்"

அளவற்ற அழகுடனே வந்து நின்று
ஆடவரின் உயிர் சோர்ந்து போகுமாறு
கூடாமல் கூடுவார் போல் பிணங்கியும்

விருப்புடன் அணைவார் போல் இணங்கியும்
தனக்கென ஒன்றும் இல்லாதார் போன்று

தம் நடிப்பைக் காட்டியே அங்கு நின்று
அளவிலா மயக்கத்தைத் தருகின்ற

விழியுருட்டி எனை மயக்கி
இங்குமங்குமாய்த் திரிகின்ற

விலை மக்கட் பெண்டிரின்

[மேற்கூறிய குணமிங்கே
விலைமகளிர்க்கே பொருந்துவதால்
மாதர் என்று சொன்ன போதும்
அது விலைமாதரையே குறிக்கும் என அறிக
கற்புடைப் பெண்டிர் செய்வதன்று
காசுக்குச் சோரம் போவது]

"கூரா அன்பில் சோரா நின்று
அக்கு ஓயா நின்று
உள் குலையாதே"

உண்மையிலே அன்பின்றி
வெளியினிலே பகட்டு காட்டி
நடிப்பதனைச் செய்கின்ற
பொய்யான தோற்றத்தில்
உடைமைகளைப் பறிகொடுத்து,
அத்தோடு நில்லாமல்
எலும்புடன் கூடி நிற்கும்
தோல், தசை, மூளை
சுக்கிலம், இரத்தம், இரதம்
என்னும் எழுபொருளால் ஆன
இவ்வுடம்பும் ஓய்ந்து போக,

உடைமையும் போகவிட்டு
உடலையும் ஓயவிட்டு
உள்ளமும் மிக வாடி
நிற்கின்ற நிலை வராமல்,

"கோடார் செம்பொம் தோளா!"

மலை போலும் சிவந்திருக்கும்
பொன்மயமாய தோளுடைய முருகனே!

"நின் சொல் கோடாது என்கைக்கு அருள் தாராய்!"

உனைப் பாடும் சொல் ஒன்றே
புகழ் என்ற சொல்லாகும்
அதுவே திருப்புகழாகும்
மற்றெல்லாம் வீணே

வீணான செயல்கள் இங்கு
நான் செய்து மாளாமல்
தளராது உன் புகழை
நாள்தோறும் சொல்லிவர

தளராது என்னுடலும்
மறவாது உன் புகழை!
இவ்வருள் தந்திடவே
நீயெனக்கு அருள் தருவாய்!********************************************************************

அருஞ்சொற்பொருள்:

ஓராது = முழு முதற் பொருளான பிரணவ்த்தை உணராது

அந்தத்தோடே = அழகுடனே

எட்டா மால் = அளவில்லாத மயக்கம்

கூரா = பொய்யான, விருப்பமில்லாத

அக்கு = எலும்பு

கோடார் = கோடு ஆர் = மலை போன்று [உ-ம்: திருச்செங்கோடு] கூம்பி, உயர்ந்து நிற்கின்ற

கோடாது = தாழாது, வளையாது [உ-ம்: கோடாமை சான்றோர்க்கு அணி]

தோரா = தோல்வி என்பதே இல்லாது

வென்றி = வெற்றி

போரா = போர் புரிபவனே

மன்றல் = வாசனை வீசும்

பொன்ற = பொருந்தச் செய்ய

சே = எருது

சே ஏறு எந்தை = எருதின் மேல் ஏறி அமர்ந்து வரும் ஈசன், சிவன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:01

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 13 "அந்தகன் வருந்தினம்"

மஹா ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு, திருச்செந்தூர் பெருமை பாடும் ஒரு பாடல்.

"பாடல்"

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் குணமாள
அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் தணியாத
சிந்தையு மவிழ்ந் தவிழ்ந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் படுவேனோ

கொந்தவிழ் சரண் சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் திருவான
சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே.
-----------------------------------------------------------


"பொருள்"
[பின் பார்த்து முன் !]

"கொந்து அவிழ் சரண் சரண் சரண் எனக்
கும்பிடு புரந்தரன் பதி பெற"


சிவனாரை வணங்கித் தவமியற்றி
அவராலே பற்பல வரங்கள் பெற்று
எவராலும் வெல்லவொணா வீரங்கொண்டு
அவுணர் தலைவனாம் சூரபதுமன்
இந்திர லோகத்தைத் தாக்கவே

தந்திரமாய் இந்திரனும்
மனைவியுடன் தப்பியோடி
மேருமலைக் குகையொன்றிலெ
மறைந்து ஒளிந்திருக்க,

சூரனும் தன் மகனாம் பானுகோபனை
'சென்று சிறைபிடித்துக் கொண்டுவா' என ஏவ
மைந்தனும் தந்தை சொல் ஏற்று
இந்திரனைக் காணாது கோபமுற்று
இந்திரபுரியைத் தீக்கு உணவாக்கி
இந்திரன் மகனாம் சயந்தனையும்
மற்றுமுள்ள தேவரையும் சிறைப்பிடிக்க,

நகரிழந்த விண்னவர்கோனும் மனம்வருந்தி
நாயகனாம் கந்தவேளைத் தஞ்சமுற
அஞ்சேல் என அபயம் அளித்து கந்தவேளும்
வேல்விடுத்து சூரனை அழித்து தேவரைச்
சிறைமீட்டு பொன்னுலகு அளித்து அருளவும்,

"குஞ்சரி குயம் புயம் பெற"

தேவர்கோனின் யானையாம் ஐராவதம்
அன்புடன் வளர்த்த தேவயானையின்
மார்புத் தனங்கள் முருகனது
சீர்மிகு தோளில் இசைந்து பரவவும்,

"அரக்கரும் மாள, குன்று இடிய"

அரக்கர் குலம் மாளவும்
கிரௌஞ்சமலை பொடிபடவும்,

"அம் பொனின் திருவரைக் கிண்கிணி
கிணின்கிணின் கிணினென,
குண்டலம் அசைந்து இளம் குழைகளில் ப்ரபைவீச,
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட,
மணித் தண்டைகள் கலின்கலின் கலினென,"


அழகுறு பொன்னாலான கிண்கிணி என்னிடும்
எழில்மிகு இடுப்பினில் ஆடும் ஒலியும்,

இளமையாய செவிகளிலே குண்டலங்கள்
அசைவதினால் பேரொளி வீசிடவும்,

பாதச் சலங்கைகள் பல்வித ஓசையை
தந்தன தனந்தனந் தனவென எழுப்பவும்,

இரத்தினத்தால் செய்திட்ட மணித் தண்டைகள்
கலின்கலின் கலினென சுகமாய் ஒலிக்கவும்,

"திருவான சங்கரி மனம் குழைந்து
உருகமுத்தம் தர"

தனம் தரும் திருமகளும் சேர்ந்தமைந்த
இதம் தரும் உமையவளும் மனம் கனிந்து
அன்பு மிகக் கொண்டு முத்தம் தந்திடவும்,

"வரும் செழுந் தளர்நடைச் சந்ததி
சகம் தொழும் சரவணப் பெருமாளே."


மெல்ல அசைந்து தளர்நடை போட்டுவரும்
சிவனாரின் இளங்குமரனே!
இவுலகெலாம் உய்யும் பொருட்டும்
உன்னைத் தொழும் பொருட்டும்
சரவணப் பொய்கையினில் வெளிப்பட்ட
பெருமையிற் சிறந்த முருகோனே!

"அந்தகன் வரும் தினம் பிறகிட"

எனை நாடி, என் உயிர் பறிக்க
இயமன் வரும் நாளன்று எனைப் பார்த்து
குமரக்கடவுள் தெரிசனம் கண்டவன் இவன்
எனத் தெளிந்து, புறம் கொடுத்து ஓடவும்,

"சந்ததமும் வந்து கண்டு
அரிவையர்க்கு அன்பு உருகு சங்கதம் தவிர"


விலைமகளிர் இடம் நாடி நாளும் வந்து
அவர்தம் அழகினைக் கண்டு மயங்கி உருகி
அவரோடு இணங்கிடும் குணம் நீங்கவும்,

"முக் குணம் மாள, அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து,
இந்திரிய சஞ்சலங்களை அறுத்து"

சத்துவம், இராசசம், தாமசம் என்கின்ற
மூவகைக் குணங்களும் மாண்டு போகவும்,

அந்தியில் வருவது தூக்கம்
அப்போது நிகழ்வது மறப்பு
பகலில் வருவது விழிப்பு
உடன் நிகழ்வதோ நினைப்பு
அந்தி பகல் என்கின்ற,
மறப்பு நினைப்பு என்கின்ற,
கேவலம் சகலம் என்கின்ற,
இரு அவத்தைகளும் அழியவும்,

மெய்,வாய், கண், நாசி, செவி எனப்படும்
ஐம்புலனால் வருகின்ற துன்பமனைத்தையும்
அடியோடு அறுத்தெறிந்து ஒழிக்கவும்,

"அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி"

தாமரை மலரினையொத்த
திருவடிகளின் துதி பாடி,

"செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற"

செந்திலை உணர்தல் எங்ஙனம்?

அலைகள் வந்து ஓயும் இடமாதலின்
அலைவாய் எனப் பெயரும் செந்திலுக்குண்டு!

அந்தியும் பகலும் அனவரதமும்
மறப்பு நினைப்பெனும் அலைகள் நம்மை
வாட்டுவதெல்லாம் செந்தில் அலைவாயை
நினைத்திடவே ஒடுங்கிடுமாம்!

ஆலயத்தின் உட்சுற்று எப்போதும்
வட்டமாயோ சதுரமாயோ அமைந்திருக்கும்
செந்தில் கோவில் சுற்றோ ஓம் எனும்
பிரண்வத்தின் பால் விளங்கி நிற்கும்

தூண்டுகை விநாயகர் தொடங்கி
ஆனந்தவிலாசம் சென்று
வதனாரம்ப தீர்த்தம் அடைந்து
ஷன்முக விலாசம் வழியே நடந்து
செந்திலாண்டவனைத் தெரிசிக்க
சுற்றி வந்த சுற்று ஓம் எனும் வடிவமையும்!

செந்திலை நினைக்குங்கால்
ஈதெல்லாம் உணர்ந்து உணர்ந்து
உணர்வுறுதல் வேண்டும்!

"கந்தனை அறிந்து அறிந்து
அறிவினில் சென்று செருகும் தடம் தெளி தர"

சொந்தக் கடவுளாம் கந்தக் கடம்பனை
சிந்தையில் பற்றி அவன் பெருமை உணர்ந்து......

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
குறிஞ்சி என்றாலோ அழகென்னும் பொருள்படும்
குறிஞ்சிக்கடவுளாம் கந்தனும் அழகே
காந்தமென இழுப்பவன் கந்தன்
மனதிற்கு இனியவன் கந்தன்
இவ்வுலகில் நிலைத்து நிற்பவன் கந்தன்
இப்படி பலவாறும் கந்தனை மனதில்
அறிந்து அறிந்து அவ்வறிவின் மூலம்
அறவழிச் சென்று, தன் செயல் அழிந்து
அனைத்தும் அவனே அவனே என்பதை உணரும்

"என்றுநின் தெரிசனைப் படுவேனோ"

நின் தெரிசனம் என்று யான் பெறுவேன்?
---------------------------------------------------


"அருஞ்சொற்பொருள்"

அந்தகன் = இயமன், கூற்றுவன்
பிறகிட = புறமுதுகிட்டு ஓட
சந்ததமும் = எப்போதும்
அரிவையர் = பொது மாதர்
சங்கதம் = நட்பு
அம்புயம் = தாமரை [அம்புஜம்]
கொந்து அவிழ் சரண் = பூங்கொத்துகள் மலர்ந்திருக்கும் திருவடிகள்
புரந்தரன் = இந்திரன்
குஞ்சரி = ஐராவதம் எனும் தேவ யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானை
குயம் = மார்பகங்கல்
புயம் = தோள்கள்
அம் = அழகிய
குழை = செவி
திரு = இலக்குமி
சங்கரி = பார்வதி, சுகத்தைக் கொடுப்பவள்
சந்ததி = புதல்வன் [குலம் தழைக்கப் பிறந்தவன்]
சகம் = உலகம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:01

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 14 - "திருமகள் உலாவும்"

முருகப்பெருமானின் எட்டுவிதக் குணங்களைக் கூறும் அருமையான பாடல் இது.
என்னை மிகவும் கவர்ந்த இப்பாடலில் அக்கருத்தினை எவ்வளவு அழகுறச் சொல்கிறார் பாருங்கள்!
இசைத்துப் பாடிக் கேட்பதற்கும் மிக இனிமையான பாடல்.

அதுவும் சித்ராவின் தேன்குரலில் இப்பாட்டினைக் கேட்கணும்!

வலையேற்ற முயற்சிக்கிறேன், தெரிந்தவர் உதவி கொண்டு.

.................பாடல்.....................

தனதனதந்தன தனதனதந்தன
தனதனதந்தன தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் --பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் --பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில் விளையாடு
மரகத மயூரப் --பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் --பெருமாள்காண்

அருவரைகள் நீறு பட அசுரர் மாள
அமர் பொருத வீரப் --பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் --பெருமாள்காண்

இருவினையி லாத தருவினை விடாத
இமையவர்கு லேசப் --பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் --பெருமாளே.

............................................................

.................பொருள்................


இதற்கான பொருள் மிகவும் எளிது!

"திருமகள் உலாவும் இருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள் காண்"

காக்கும் கடவுளாம் பரந்தாமன்
காப்பதெல்லாம் யார்துணை கொண்டு?
வீரமிகு தோள்களில் வீற்றிருக்கும்
வீரலக்ஷ்மியின் வீரியத்தாலன்றோ!


முரனென்னும் அசுரனை அழித்து
முராரியெனப் பெயர்பெற்றதுவும்
இன்னுமிந்த உலகினைக் காப்பதுவும்
அவள் அளிக்கும் புயவலிமையாலன்றோ!

இவ்விருவர் மருகரென பேர்பெற்று விளங்கிடும்
எம்பெருமான் இவனெனவே அறிந்திடுவாய்!
அடியவர் மானம் காத்து அருளுவதால்
இவனே "மானமூர்த்தி" என உணர்ந்திடுவாய்!

"ஜெகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள் காண்"

மண்ணவரும் விண்ணவரும் மனமுருகிப் பாடுகின்ற
பண்ணிசைக்கும் பாடல்களின் இன்னிசையைக் கேட்டுணரும்
என்னருமைக் கந்தன்பிரான் இவனென்றே தெளிவாய் மனமே!
அண்ணலிவன் "கானமூர்த்தி" என உணர்வாய் மனமே!

"மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமாள் காண்"


சிறுபிள்ளைக் குமரனவன்
சிரித்தாட இடம் வேண்டும்!
இரவும் பகலும் அவனை எண்ணி
உருகும் அடியார்கள் மனமே ஆடுகளம்!
பச்சைமயில் வாகனனும்
பரவசமாய் அதை நாடி
ஆடாமல் ஆடுகிறான்
அடியவரின் மனத்தினிலே!
அதை அறிந்து அவனொன்றே
"தியானமூர்த்தி" எனத் தெளிவாய்!

"மணிதரளம் வீசி அணி அருவி சூழ
மருவு "கதிர் காமப்" பெருமாள் காண்"

அவுணர்கோமானாம் சூரனை அழித்திடவே
சிவனார் கண்ணினின்று பிறந்திட்ட பாலனவன்
சீரலைவாய் கடந்து தென்னிலங்கை சென்றடைந்து
போர்க்கோலம் தாங்கி நின்று கோபாவேசமாய்
நின்றிட்ட புண்ணியத்தலம் கதிர்காமம்


பொங்கிவரும் மாணிக்கநதி நீரில் திரண்டுவரும்
இரத்தினமும் முத்துகளும் திருமுருகன் காலடியில்
அருவியங்கே பொழிந்துவரும் அழகான காட்சியுண்டு.
உருவமங்கு கிடையாது; திரையொன்றே வணங்கப்படும்
விண்ணுக்கும் மண்ணுக்கும் வானளாவி நிற்பவனை
"வானமூர்த்தி" என நீயும் வணங்கிடுவாய் மனமே!

"அருவரைகள் நீறுபட அசுரர் மாள
அமர் பொருத வீரப்பெருமாள் காண்"

அங்கிருந்து வேல்விடுத்து அசுரர் குலமழித்து
தீங்குசெய்த சூரனையும் மலைகளையும் பொடியாக்கி
வீரமிகு போர்செய்து அடியவர் துன்பமகற்றிய
தீரனிவனை "வீரமூர்த்தி" என பணிந்திடுவாய் நெஞ்சே!

"அரவு, பிறை, வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள் காண்"

தவமொன்றே தனிப்பயன் அளித்திடும்
சிவனெமக்கு வேண்டாமென்று ஆணவத்தால்
அபிசாரவேள்வி செய்து அழிக்கவல்ல பாம்புகளை
ஏவிவிட்ட முனிவர்களை முறியடித்து அரவங்களை
ஆபரணமாய் அணிதிட்டான் ஆலவாயழகன்.

தக்கன் சாபத்தால் கலையழிந்து உருக்குலைந்த
சந்திரனைக் காக்கவெண்ணி அஞ்சேலென்று
தன் தலையில் சூடிக்கொண்ட சந்திரமௌளி.

உலகத்தை அழிக்கவென உக்கிரமாய்ப் புறப்பட்ட
கங்கையின் சீற்றமடக்கி தன்சடையில் அதைத்தாங்கி
உலகுய்யச் செய்திட்ட உத்தமனாம் கங்காதரன்.

இத்தனையும் தான் கொண்டும்
அத்தலை பணிந்து வணங்க
பிரணவத்தின் பொருள் கேட்ட
தகப்பனுக்கே உபதேசித்த
குருநாதன் என்னப்பன்
சாமிநாதன் "ஞானமூர்த்தி"
என்றே வணங்கிடு நன்னெஞ்சே!

"இருவினை இலாத தருவினை விடாத
இமையவர் குலேசப் பெருமாள் காண்"

நல்வினை தீவினை என்னுமிரண்டும்
தமக்கென்று இல்லாமல், மனிதருக்கு
அவரவர் வினைக்கேற்ப பலனளிக்கும்
தேவர்களின் குலமழியாமல் காத்து
வாழ்வளித்த வள்ளலாம் குமரக்கடவுள்
"தியாகமூர்த்தி" என அல்லும் நினைத்திடுவாய்.

"இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
இருதன விநோதப் பெருமாளே."

பரம், அபரம் எனும் இருவித ஞானமுண்டு.

இவ்வுலக சிந்தனையில் இன்பமுடன் ஈடுபட்டு
செய்கருமம் செப்புடனே செய்து பரம் உணரலாம்.
செய்வதெல்லாம் அவன் செயலேயென்றுணர்ந்து
இறைவனிடம் பக்திவைத்து அபரம் அறியலாம்.

இவ்விரண்டும் தன்னகத்தே வைத்திருந்து
உலகனைத்தும் இன்புறவேயென்று இன்முகம் காட்டி
இன்பசக்தியாம் வள்ளியம்மையுடன் இனித்திருக்கும்
"போகமூர்த்தி"யாய் விளங்கும் முருகனை பணிந்திடுவாய்.
.............................................................

இவ்வண்ணம் இப்பாடலில் எட்டுமூர்த்தியும் காட்டி
நல்வண்ணம் நம்வாழ்வில் நாம் உய்ய நமக்களித்து
பொன்வண்ணக் குமரனின் கோலமெல்லாம் காட்டிய
பண்வண்ணன் அருணையானின் பதம் பணிந்து போற்றுவோம்.
------------------------------------------------------------


அருஞ்சொற்பொருள்:

தரளம் == முத்து
அருவரைகள் == சிறந்த மலைகள்
அரவு == பாம்பு
பிறை == நிலவு
வாரி == நீர் [கங்கை]
விரவு சடை வேணி == [மேற்கூறிய மூன்றும்] கலந்து வாழ்கின்ற சடைமுடியை உடைய [சிவன்]
அமலர் == சிவன்
தருவினை == நமது வினையால் வரும் விளைவுகள்
இமையவர் == தேவர்
இலகு சிலை வேடர் == கையில் வில் தாங்கி நிற்கும் வேடர்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:02

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 15 " செகமாயை உற்று"

குழந்தை வரம் வேண்டும் என ஏங்குவோர் தவறாது படிக்க வேண்டிய ஒரு பாடல் இது!

சுவாமிமலை குருநாதன் மீது பல பாடல்கள் அருணையார் பாடியிருக்கிறார். இதுவே நான் பதியும் முதல் ஏரகப் பாடல்!

-------------------பாடல்-------------------------

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
********************************************************

------------------- பொருள் ----------------------

[வழக்கம் போல் பின்பாதி பார்த்து முன் பார்க்கலாம்.]

"முகமாயம் இட்ட குறமாதினுக்கு முலைமேல் அணைக்க வரும் நீதா"

அழகுறு முகவசீகரம் கொண்ட
குறவள்ளிதனை அணைத்து
இகசுகம் அருளிட எண்ணியே
தினைப்புனம் வந்த நீதியரசே!

"முது மாமறைக்குள் ஒரு மா பொருட்கு
உள் மொழியே உரைத்த குருநாதா"

வேதநாயகனை அன்றொருநாள்
வேதத்தின் பொருள் கேட்க
ஓமெனத் துவங்கிய பிரமனை நிறுத்தி
பிரணவத்தின் பொருள் கேட்க,
தயங்கிய பிரமனை உதைத்து,
தலையில் குட்டி, சிறையில் தள்ள,
தடுத்துக் கேட்ட தந்தை சிவனாரை
பொருளுரைக்க துணிந்து கேட்டு
அவரறியாப் பிரணவப் பொருளை
பணிந்து நின்ற சிவனாரின் காதில்
ஓம எனும் சொல்லுக்குப்

பொருளுரைத்த என் குருநாதா!

"தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே"

கடவுளர்க்கு அளித்திட்ட
சிரமங்கள் ஏதுமின்றி,
ஒருவிதத் தடையுமின்றி
அடியவனான எனக்கு
தங்கத் திருவடி தரிசனம்
காட்டி அருளிச் செய்த
ஏரகம் எனும் சுவாமிமலையில்
விருப்புடன் வீற்றிருக்கும்
திருமுருகப் பெருமானே!

"தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேல் எடுத்த பெருமாளே"

சூரனை மாய்த்திட அருள் கொண்டு
வீரனாம் மகனுக்கு சக்திவேலை
தாயவளும் வழங்கிடவே,
காவிரிக்கு வடபுலத்தில்
ஏரகமெனும் திருத்தலத்தில்
போர்புரிய ஆயத்தமாகி
வீரவேலைத் தாங்கிய
பெருமைக்கு உரியவரே!

"செகமாயை உற்று, என் அக வாழ்வில் வைத்த,
திருமாது கெர்ப்பம், உடல் ஊறித்,
தெசமாதம் முற்றி, வடிவாய் நிலத்தில்
திரம் ஆய் அளித்த, பொருளாகி,"


உலகெனும் மாயையில் சிக்குண்டு
இல்லறமெனும் கட்டில் அகப்பட்டு
அவளுடன் உறவாடி அவள் கருவுறவும்
பத்து மாதம் நிறைவாய்ச் சுமந்து
குறையா அழகுடன் புவியில் உதித்த
மகவு போல பெருமானே நீவிரும்
எம் குலத்தில் அருளிச் செய்து,

"மக அவாவின் உச்சி, விழி, ஆநநத்தில்,
மலைநேர் புயத்தில் உறவாடி,
மடிமீது அடுத்து விளையாடி"

தேவரீரே எனக்கு உதிக்க
அவா மிகுதியினால் நானும்
குழந்தைப் பாசம் மிகுந்திடவே
கண்களில் எடுத்து ஒத்தியும்,
முகத்தோடு முகம் சேர்த்தும்,
மலை போலும் புயங்களில்
உம்மைத் தவழவிட்டும்,
என் மடி மீது அமர்ந்து
விளையாடி மகிழ்ந்தும்,

"நித்தம் மணிவாயின் முத்தி தரவேணும்!"

ஒவ்வொரு நாளிலும்
உம் மணிவாயினால்
எனக்கு முத்தம் தந்து
அருளிடல் வேண்டும்!
---------------------------------------------------

---------அருஞ்சொற்பொருள்---------------


தெச மாதம் = பத்து மாதங்கள்
திரம் ஆய் = சிறந்த குழந்தை
ஆநநத்தில் = முகத்தோடு முகத்தில் [அநம் என்றால் முகம்][அநம்+அநம்=ஆநநம்]
முத்தி = முத்தம்
முக மாயம் = முக வசீகரம்
முது மா மறை = ஆதி வேதம்
ஒரு மா பொருட்குள் மொழி = ஓம் என்னும் பிரணவம்
தகையாது = தடையின்றி
ஏரகம் = சுவாமி மலை
பாரிசம் = பக்கம் [side]
சமர் = போர்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:03

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.

[பொருள்]

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!

"கருணைய தீதா நமோ நம"
உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!


"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!

"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!


"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:04

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" 16

சரவணஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம
சததள பாதா நமோ நம அபிராம

தருணக தீரா நமோ நம நிருபமர் வீரா நமோ நம
சமதள வூரா நமோநம ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய பெருமாளே.


[பொருள்]

{முன் பார்த்து பின் பார்க்கலாம்!}


"இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற"

புழுதி பறந்தது ஆதவனின் மண்டலம் தனிலும்,
விண்வெளியெங்கிலும், மண்ணுலகம்தனிலும்
மூவுலகும் மறைந்தது புழுதியின் மிகுதியால்


"வானவர் எவர்களும் ஈடேற ஏழ்கடல் முறையோ என்று
அடர் பட"


புழுதியின் துகள் எழக் கண்டு வானவரும்
பொழுதினி ந்ன்கினி நமக்கே விடிந்ததென
வானவரும் மகிழ்வுடனே கூத்தாடி களிகூற
ஏழுகடல்களும் குய்யோ முறையோவென
கூக்குரலிட்டுக் கதறிக் கதறி வருந்திட


"மாமேரு பூதரம் இடிபடவேதான் நிசாசரர்
இகல் கெட"

மலைகளிலே பெருமலையாம் மாமேரு மலையும்
தன்நிலை மறைந்து துகளாகி இடிபடவும்,
எவருக்கும் பயமின்றி இரவிலே உலவுகின்ற
இராக்கதரும் தம்நிலை மறந்து ஒழிந்திடவும்


"மா வேக நீடு அயில் விடுவோனே"

இத்துணை இயல்புகளும் இவ்வாறு நிகழ்ந்திடவே
செயுமாறு தன் வீரவேலை விட்டெறிந்த வேலாயுதரே!

"மரகத ஆகார ஆயனும், இரணிய ஆகார வேதனும்,
வசு எனும் ஆகார ஈசனும், அடிபேண"


பச்சை நிறம் கொண்ட ஆயர் குலத்துதித்த
'மச்சாவதார மால்எனும் திருமாலும்,
பொன்னிறம் கொண்ட மறைகளின் தலைவனாம்
பிரமனெனும் படைப்புக் கடவுளும்,
நெருப்பு நிறம் கொண்ட சிவந்த வண்னமுடை
உருத்திரன் என்னும் உக்கிர மூர்த்தியும்,
அனைத்துக்கும் முதலான, அனைத்தையும் ஆளுவிக்கும்
உனது திருவடியை விரும்பி வணங்கிடவும்,

"மயில் உறை வாழ்வே"

அழகிய மயிலினை வாகனமய்க்
கொண்டுவரும் என் இறைவனே!

"விநாயக மலை உறை வேலா"

திருப்பத்தூருக்குக் கிழக்கே
ஐந்து மைல் தள்ளி அழகுடனே
பிள்ளையார்பட்டியெனும் விநாயகர்மலையினில்
விருப்புடன் அமர்ந்திருக்கும் வேலாயுதரே!

"மகீதர வனசரர் ஆதாரம் ஆகிய பெருமாளே!"

மலையும் மலை சார்ந்த இடமாகும்
குறிஞ்சி யெனும் காட்டில் வாழ்கின்ற
வேடருக்கு ஆதாரமாகிய பெருமைக்கு
என்றென்றும் உரியவரான பெரியவரே!

"சரவணஜதா நமோ நம"

அமரரை வருத்தி அரசு புரிந்த
சூரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள்
உய்வினியுண்டோ வெனவே ஏங்கி
சிவனிடம் போயே முறையிடும் வேளையில்

தீயை அணைக்க தீயே தேவையென
தீயுடைத் தலைவனும் திடமாய் நினைத்திட
நெற்றியில் நின்று தீப்பொறி கிளம்ப
வாயுவும் அக்கினியும் அவற்றை ஏந்தியே

கங்கையில் இடவும் சரவணை சேர்ந்திட
கந்தனும் அவதரித்தான் தேவர்கள் மகிழ்ந்திட
கார்த்திகைப் பெண்டிரும் அறுமுகம் அணைத்திட
பார்வதியும் சேர்த்தாள் ஆறுமுகனையும்

சரம் எனில் நாணல் வனம் என்றால் காடு
நரம்புகளால் சூழ்ந்திருக்கும் இதயக் கமலத்துள்
நட்டநடுநாயகமாய் தகராலயத்தினுள்ளுள்
வீற்றிருக்கும் சரவணப் பெருமானுக்கு வணக்கம்!


"கருணைய தீதா நமோ நம"


உலகுய்யவும், உலகினில் உயிருய்யவும்,
அசுரர் அஞ்சவும், அமரர் விஞ்சவும்
மனவாசகம் கடந்து, மறையாலும் காணாத
கருணையின் வடிவே வணக்கம் வணக்கம்!

"சததள பாதா நமோ நம"

நூறுஇதழ்த் தாமரை போலும்
சீரிய பாதங்கள் உடையோனே!

"அபிராம"

பேரழகு பொருந்தியோனே!

"தருண அக தீரா நமோ நம"

இளமையும், அதற்கே உரிய
வீரத்தினையும் உடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"நிருபமர் வீரா நமோ நம"

அஞ்சிய அமரர்க்கு
அஞ்சேல் எனச் சொல்லி
அமரர்க்குத் தலைவனாய்
அமைந்திட்ட வீரனுக்கு வணக்கம்!


"சமதள ஊரா நமோ நம"

தாரகன் எனும் அசுரன்
பிரமனின் அருளால்
வரங்களைப் பெற்றான்
அமரரை அடக்கினான்

அனைவரும் அடங்க
பிரமனும் ஒடுங்கினான்
திருமாலும் மீனானான்
சிவனவனும் மனமிரங்கி

திருநுதலில் தீப்பொறியால்
அறுமுகனைப் படைத்திட
பன்னிருகையனும் போர்புரிந்த
திருவூரே திருப்போரூர்

சமர் புரிந்த ஊரே
சமதளவூர்
திருப்போரூர் தலைவனே
வணக்கம்!

"ஜகதீச பரம சொரூபா நமோ நம"

அண்டம், பிரண்டம் அனைத்துக்கும்
தலைவனாய் அமர்ந்திருப்பவரே!
சீரிய ஞான வடிவுடையவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!

"சுரர்பதி பூபா நமோ நம"

அமரர்க்கும் தலைவனாம்
இமையவர் கோமானாம்
இந்திரனுக்கும் தலைவரே!
உமக்கு வணக்கம்! வணக்கம்!


"பரிமள நீபா நமோ நம"

உயரிய வாசனையுடைய
கடப்பமலர் மாலையினை
விருப்புடன் அணிபவனே
வணக்கம்! வணக்கம்!

"உமைகாளி பகவதி பாலா நமோ நம"

சிவனின் மனைவியெனப்
பெயருடை உமையாளும்,
கருநிறக் காளியாளும்
ஆறு அருட்குணங்களுடை

பகவதியென்பவளும்
இன்னும் பல பெயருடை
அம்பிகையின் புதல்வருக்கு
வணக்கம்! வணக்கம்!

"இகபரமூலா நமோ நம"

இம்மை, மறுமை எனும்
இருசுகமும் அருளிடும்
மூலகாரணமாய்த் திகழ்வோனே
வணக்கம்! வணக்கம்!

"பவுருஷ சீலா நமோ நம அருள் தாராய்"

ஆண்மையெனின் அதிகாரம் மட்டுமல்ல
ஒழுக்கமும் கூடவே வேண்டும்
அத்தனையும் நிரம்பிய உத்தமனே!
உனக்கு எந்தன் வணக்கம்!
எனக்கு உந்தன் திருவருளைத்
தந்தருள வேண்டுகிறேன்!


அருஞ்சொற்பொருள்:
ஜாதா -- தோன்றியவரே
அதீதா -- கடந்து நின்ற பொருளே
சததளபாதா -- நூறு இதழ்த் தாமரை போலும் பாதங்கள் உடையவரே
அபிராம -- பேரழகு
தருண -- இளமை
நிருப அமர் -- தலைமை தங்கிய
பூபா -- தலைவரே
பகவதி -- ஐஸ்வர்யம், வீர்யம், புகழ், திர்ரு, ஞானம், வைராக்யம் எனும் ஆறு குணமுடையவர்
விரவிய -- மறையுமாறு
பூதரம் -- மிகப் பெரிய
நிசாசரர் -- இரவில் உலவும் இராக்கதர்
அயில் -- வேலாயுதம்ம்
ஆகார -- நிறமுடைய
இரணிய -- பொன்னிறம்
மகீதர -- மலைகளுடன்கூடிய
வனசரர்- வனத்தில் உறையும் வேடர்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:04

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -17 "சீரான கோலகால நவமணி"

சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.



எப்போதும் போல, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடும் இறையவர்"


ஆயகலைகள் அறுபத்து நான்கு கலைகளிலும்
நன்குணர்ந்த மதுரையம்பதியின் மன்னனாம்
இராஜசேகர பாண்டியன் அரசவைக்கு வந்தவொரு
புலவனன்று, சோழமன்னன் கரிகால் வளவனின்
திறமைதனைப் புகழ்ந்தங்கு சொல்லிடவே
தானும் மீதமுள்ள ஓர் கலையாம் பரதம் பயின்றிட,

தனக்கு வந்த கால்வலியால் வாடிநொந்து
"சற்றுநேரம் பயின்றிடவே இவ்வலியென்றால்
அனவரதமும் ஓயாது ஆடிநிற்கும் ஆடல்வல்லானுக்கு
எத்துணை வலி இருந்திருக்கும்? அவர் ஆட்டம்
நின்றுபோனாலோ உலகியக்கம் நின்றுபோம்.
எனவே கால் மாறி ஆடச் சொல்லி வேண்டிடுவோம்"

என நினைந்து வெள்ளியம்பலம் விரைந்து சென்று
விரிசடைக் கூத்தனைக் கண்டு வணங்கி
கால் மாறி ஆட வேண்டித் தவம் செய்ய,
அரசன் உயிர்விடும் நிலைகண்டு,
"வான்மாறினும் மொழி மாறாத மனம் களிக்க"
கால்மாறி ஆடத் துவங்கினான் ஆடல்வல்லானும்!

அத்தகைய கருணை நிறை தெய்வம் வாழும்
அழகுநிறை மாடகூடம் நிறை எழிலான
கூடலம்பதியின் வெள்ளியம்பலத்தில் ஏறி
கால்மாறி ஆடிநிற்கும் கண்நுதற்கடவுள்,

"ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில்
ஊடாடி ஆலவாயில் விதிசெய்த
லீலாவிசார தீர வரதர குருநாதா"

பின்னொருகாலம் மதுரையை ஆண்ட
வம்சசூடாமணி எனும் பாண்டிய மன்னன்
சண்பகமலர் கொண்டு சோமசுந்தரக்கடவுளை
அர்ச்சித்து வந்தமையால் சண்பக பாண்டியன்
எனும் பெயர் பெற்று முறையரசு செய்யும்வேளை,
காலத்தின் கூற்றால் பஞ்சம் தலை விரித்தாடியது.

பஞ்சத்தால் வாடிய பலநூறு புலவர்களை
சண்பக மன்னனும் பரிவுடன் ஆதரித்து
'நம்மிடையே தங்கி நன்நூல் படைத்து
நம்மையும் மகிழ்விக்க' என வேண்ட,
புலவோரும், 'பொருள்நூலின்றி பா இயற்றல்
இயலாதே' எனச் சொல்ல, அரசனும்

ஆலயம் ஏகி இறைவனை வணங்கி
தமிழுக்கு வந்த குறையகற்றி பொருள்நூல்
தந்தருள வேண்டிடவே, சொக்கலிங்கப் பெருமானும்
'இறையனார் அகப்பொருள்'என்னும் நூலியற்றி
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம்
தன் பீடத்தின் கீழ் வைத்து அருளினார்.

'பொருளுக்குப்' பொருள் சொல்ல புலவரை வேண்ட
ஆளொருவராய் அதற்குப் பொருளுரைத்து
தத்தம் விளக்கமே சிறந்ததென வாதாட
மீண்டும் இறைவனையே தஞ்சமடைந்து
கலகத்தை நீக்கி நல்வழி காட்ட வேண்ட,
இறைவனும் அசரீரியாக வந்து,

"உப்பரிகுடிகிழாரின் மகனாம் உருத்திரசன்மனை
அழைத்து வந்து பொருளுக்கு உரை கேட்கச் செய்"
என நல்லுரை சொல்லவே, அவ்வண்ணமே
உருத்திரசன்மனை, செட்டிப் பாலகனை,
பாலறியா மணத்தினனை, வாய் பேசா ஊமையினை
அழைத்துவந்து புலவோரின் உரை கேட்க வேண்ட,

முகக்குறிப்பாலேயே பலர் உரையினையும் கேட்டு
சிலரதை உவந்து, சிலரதை வெறுத்து,
சிலரதை புகழ்ந்து, சிலரதை இகழ்ந்து,
கபிலர், பரணர் உரைகேட்டு ஆங்காங்கு மகிழ்ந்து
நக்கீரர் உரை கேட்டு ஒவ்வொரு சொல்லுக்கும்
மகிழ்ந்து, கண்ணீர் சொரிந்து இதுவே உண்மையுரை

எனப்பாராட்டி குமரனே உருத்திரசன்மனய்
வந்து விளக்கமளித்ததைக் குறிப்பால் காட்டி
தமிழுக்குப் புகழ் சேர்த்த திருவிளையாடல்
தரணிக்குக் காட்டிய லீலா விநோதரே!
தீரம் மிகுந்தவரே! வரங்களை அருள்பவரே!
எனக்கும் இவ்வுலகுக்கும் குருநாதரே!


"கூராழியால் முன் வீய நினைபவன்
ஈடேறு மறு பானு மறைவுசெய்
கோபாலராயன் நேயமுள திருமருகோனே"

தன்மகனைக் கொன்ற ஜயத்ரதனை பகல் பொழுதுக்குள்
கொன்றழிப்பேன் என சபதமிட்ட அருச்சனனுக்காக
பாரதப் போரில் பதினான்காம் நாளதனில்
ஆழிவிட்டு ஆதித்தனை மறைத்து
உள்ளிருந்த ஜயத்ரதனை வெளிக்கொணர்ந்து
ஆழியை திரும்ப வாங்கி பார்த்தனுக்கு உதவிட்ட

கோபாலராயன் என உலகம் போற்றும்
கண்ணபிரான் மனம் மகிழும் திருமருகனே!


[மேல் விளக்கம் வேண்டுவோர் இங்கு பார்க்கவும்!]

"கோடாமல் ஆரவார அலையெறி
காவேரியாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலையுறை பெருமாளே."


எக்காலமும் குறைவின்றி ஆரவார அலை வீசி
பெருக்கெடுத்து ஓடுகின்ற காவிரி நதி பாய்ந்து
வளம் கொழிக்கும் "வயலூர் எனும் திருத்தலத்திலும்,
கோனாடு எனப்புகழ் பெறும் "விராலிமலை"என்னும்
திருத்தலத்திலும் எந்நாளும் வீற்றிருந்து
அருள் சுரக்கும் இன்னமுதே! எம் தலைவனே!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:05

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 17[தொடர்ச்சி]
"சீரான கோலகால நவமணி"


சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக மலராறும்

சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட முறைவாழ்வும்

ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு ளதிகாரம்

ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதர குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மறு பானு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு மருகோனே

கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை பெருமாளே.


[முதல் பகுதியை இங்கு பார்க்கவும்]
"சீரான கோல கால நவமணி
மாலா அபிஷேக பார"


அறுமுகனுக்கு முடிகள் ஆறு.
சீறான சிறப்பு மிக்கதும்
கோலாகலமானதும் ஆன
நவமணிகளால் வரிசையாக
இழைக்கப்பட்ட திருமுடிகளைத்
தாங்கி நிற்கும் முகங்களை உடையதும்,
[கோலாகலம் எனும் சொல் சந்தத்திற்காக கோலகால என மாறியது.]


"வெகுவித தேவாதி தேவர் சேவை செயு முகமலர் ஆறும்"

முப்பத்து முக்கோடி அமரர்களும்
அவர்களின் தலைவர்களும் சேர்ந்து வங்து
அடிபணிந்து சேவித்து வணங்கி நிற்கும்
தாமரை மலர் போலும் முகங்கள் ஆறும்

"சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும்"

பெருமைமிகு வீரஇலக்குமி தேவி
எப்போதும் நீங்க நிற்கும் வீரமுடை
"ஆறிரு தடந்தோள் வாழ்க" என
முதல் வரியால் கச்சியப்பர்
கந்தபுராணத்தில் போற்றிப் புகழும்
சீர்மிகு பன்னிரு தோள்களும்


"நீளும் வரியளி சீராக மோது நீப பரிமள இருதாளும்"

நீள்வரிகளால் கோடிழைத்து
ரீங்காரம் செய்கின்ற வண்டினங்கள்
ஸ்ரீராகம் என்னும் பண்னைப்பாடி
மொய்த்திருக்கும் கடப்ப மலர்களால்
அலங்கரிக்கப்பெற்ற மணமிகுந்த
சிவந்த இரு பொற்பாதங்களும்


"ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இட முறைவாழ்வும்"

தணியாக் காதல் கொண்டு தான் தேடி மணந்த
வேடக்குறமகளாம் வள்ளிநாச்சியாரும்,
மேகத்தை வாகனமாகக் கொண்டு
அதன் மீது ஏறி உலா வருபவனும்,
வலன் எனும் நிருதன் எனும் அரக்கனை
வதம் செய்தவனுமான இந்திரனின்


மற்றவர் கூறுகின்ற நல்ல குணங்களைக்
கொண்டதும் பட்டென்று பற்றிக்கொள்ளும்
'கொளுத்தியது விடாமை' என்கின்ற 'மடம்' என்னும்
குணம் நிறைந்த தெய்வயானை அம்மையும்
உலகங்கட்கு ஆதார சக்தியாக வலமும் இடமுமாக
உறைகின்ற உத்தம வாழ்வினையும்
[மட சாம்பிராணி எனும் சொல் இப்போது நன்கு புரியுணுமே!]


"ஆராயு நீதி வேலு மயிலும் மெய்ஞ்
ஞான அபிராம தாப வடிவமும்"


நல்லது செய்யவே செலுத்தப்படும்
நீதி புரியவே நாட்டப்படும் ஞானவேலும்
அதற்கெனவே காத்திருக்கும் மயில் வாகனத்தையும்,
மெய்யென்னும் 'சத்', ஞானமென்னும் 'சித்'
அழகின் மிகுதியால் விளையும் 'ஆனந்தம்'
இது மூன்றும் நிறைந்திருக்கும் நின் திருவுருவையும்


"ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்"

நற்குணங்கள் ஏதுமில்லா கொடியோனாய யான்
நாள்தோறும் நினைந்து, நினைந்து உருகும்
தன்மையினைப் பெற்று எவருக்கும் கிட்டா
பேறு பெற்று உய்ய வேண்டும் என வேண்டுகிறேன்.

அருஞ்சொற்பொருள்:

அபிஷேகபார= அலங்கரிக்கப்பட்ட முடிகளை உடைய
மருவிய= தழுவி வாழ்கின்ற
நீளும்= நீண்ட
சீராகம்= ஸ்ரீராகம்
நீப பரிமள= கடப்ப மலர்களால் மணமிகுந்த

ஜீமுதம்= மேகம்
அபிராம தாபம்= அழகின் மிகுதி
ஆபாதனேன்= கொடியவனாகிய நான்
ஏர் ஆரும்= அழகு நிறைந்த
ஏழ் ஏழ் பேர்கள்= நாற்பத்தொன்பது புலவர்கள்
ஊமர்= ஊமை
ஆலவாய்= மதுரை
விசார= ஆராய்ச்சி உடையவர்
வீய= சபதம் செய்தல்
ஆழி= சக்கரப்படை
பாநு= ஆதவன், சூரியன்
கோடாமல்= குறைவின்றி
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:05

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  4466 [ஜி.ரா. கேட்ட]"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" --18 "அல்லில்"

அல்லில் நேருமி னதுதானும்
அல்ல தாகிய உடல்மாயை

கல்லினேர அ வழிதோறுங்
கையு நானுமு லையலாமோ

சொல்லி நேர்படு முதுசூரர்
தொய்ய வூர்கெட விடும்வேலா

வல்லி மாரிரு புறமாக
வள்ளி யூருறை பெருமாளே.

வழக்கம் போல், பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

"சொல்லி நேர்படு முதுசூரர் தொய்ய"

எம்போல யாருண்டு எமை வெல்ல எவருண்டு
தேவரும் எம்முன்னே திகைத்து நிற்பர் எனத்
தம் வீரம் தம் திறனைச் சொல்லிக்கொண்டு
எதிர்த்து நின்ற சூரர்படை அயர்வுறவும்,

"ஊர்கெட விடும் வேலா"

அப்படிச் சொல்லிய அந்த அவுணர்கள்
வாழ்ந்து வந்த ஊரே அழியும்படி
தன்னுடைய வீரவேலை அவர்பால்
செலுத்தி அவர்களை அழித்தவரே!


"வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர் உறை பெருமாளே."


கஜவல்லி எனும் தெய்வானையும்
வனவல்லியெனும் வள்ளியம்மையும்
தன்னிருபக்கமும் தகைவாய்த் திகழ
வள்ளியூரென்னும் தலத்தில் திகழ்பவரே!


"அல்லில் நேரும் மின் அதுதானும்
அல்லது ஆகிய உடல்"


இரவில் தோன்றி மறையும்
மின்னல் அதுவாகினும்
ஓரிரு நொடிகள் மின்னி நிற்கும்

அத்துணை நேரமும் கூட
நிலையாது இந்தவுடல்
கணத்தில் மறையும் இது!

"கல்லினேர அ வழி தோறும்
கையும் நானும் உலையலாமோ?"


கல்லும் முள்ளும் நிறைந்த பாதை
அதுவே நமை இழுக்கும் மாயையின் பாதை
அவ்வழி செல்லுதல் எனக்குக் கூடாது
என் ஒழுக்கநிலையும் தவறலாமோ?

[என்னைக் காத்தருள்வது
நின்னருட் கடனே!]




அருஞ்சொற்பொருள்


அல்= இரவு

அ= அந்த

கை=ஒழுக்கம்
தொய்ய= அயர்வுற
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:05

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 19 "பரவு நெடுங்கதிர்"
[ஜி.ரா. கேட்டது!]

தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ..... தனந்தான

......பாடல்.......

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ..... யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது .... நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ..... மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ..... மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட .... மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ..... மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ..... மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ... பெருமாளே.

.....பொருள்......

[வழக்கம் போல் பின் பார்த்து முன் பார்க்கலாம்.]


"அரஹர சுந்தர அறுமுக என்று உனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே"

அரனின் மகனே! அழகனே! ஆறுமுகப் பெருமானே
என்றுன்னை அனுதினமும் மனத்தில் கொண்டு
அயராமல் தியானிக்கும் அடியவர் திறம் கண்டு
அகமெலாம் குளிர மகிழ்ச்சி கொள்வோனே!


"அசல நெடுங்கொடி அமையும் உமைதன் சுத
குறமகள் இங்கித மணவாளா"

மலையரசன் மகளாகப் பிறந்திவ்வுலகினில்
அரனையே மணவாளனாக மனம் நிறைத்து
அவனையே நினைத்து தவம் செய்து
தன்னுடல் இளைத்துக் கொடிபோலாகி
அண்டவரும் விண்டவரும் 'இளைத்ததால்
இவள் பெருமை மிகு கொடியே' எனும்
அபர்ணாவெனும் பெயர் பெற்ற உமையவளின்
கருணையினால் வந்துதித்த பேராளனே
தினைப்புனமாம் தோட்டத்தில் கவண் வீசிக்
கல்லெறிந்து கவனமாய்க் காத்திட்ட
வள்ளியின் மனமறிந்து அவளை ஆட்கொள்ள
பலவேடம் தாங்கிப் பதமாக வந்தங்கு
அவள்மனம் கவர்ந்திட்ட மணவாளனே!

"கருதரு திண்புய சரவண"

எண்ணுதற்கும் அரிதான
திரண்ட புயங்களைக் கொண்ட
சரவணன் எனும் பெயர் பெற்ற
அறுமுகக்கடவுளே!

"குங்கும களபம் அணிந்திடும் மணிமார்பா"

அணிமணி குங்குமமும்
அழகிய சந்தனமும்
அளவோடு சேர்த்து
அரும்பெரும் மார்பினில்
அணிந்திருக்கும் அழகனே!


"கனகம் மிகும்பதி மதுரை வளம்பதி
அதனில் வளர்ந்து அருள் பெருமாளே."


பொன்னாலான மாடங்கள் சூழ்ந்திருக்கும்
மதுரை என்கின்ற வளம்பெரு நகரினிலே
அருள்கொண்டு அமர்ந்திருக்கும்
பெருமையுடை தலைவனே!



"பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய
பவனி வரும்படி அதனாலே

பகர வளங்களும் நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே

வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி"

கதிரவன், நிலவு, மலை
இவை மூன்றிற்கும் ஓர்
சொந்தமுண்டு!

கதிரவன் எழுவதுவும் மலையினிலே!
மதியவள் உதிப்பதுவும் மலையினிலே!

காலை எழுவதும் கதிரவனாலே!
அவன் செங்கதிர் வீசி
தரையெலாம் பரவி
திசையினில் செல்வதும்
உலகோர் விரும்பிடவே!
அந்த உலாவரும் காட்சி
அதனாலே உலகோரின் மாட்சி!
இதுவோ அது!

மாலை மலருவதும் மதியாலே!
பணி முடிந்து வீடு வந்து
மனையாளுடன் மனம் மகிழ்ந்து
மொட்டை மாடி மீதமர்ந்து
மனம் களிக்கும் வேளையிலே
இருளகற்றி ஒளி விளக்கி
உதிப்பதுவும் மதியொளியே!
இதுவோ அது!

மலை மலையாய்த் துனபம் வரும்
மலை மலையாய் இன்பம் வரும்
மலையெல்லாம் தன் மலையாய்
கொண்டு நிற்கும் மன்னனவன்

இவ்வண்ணம் கதிரவனாய்
மாலைமதியாய் மலைகளாய்
எங்கணும் பரவி வரிசையாகி
நிற்கின்ற நின் திருவடிகளை
நான் அனுதினமும் பாடி

"வளமொடு செந்தமிழ் உரைசெய
அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே"


சொல்லிய சொல்லில் நயம் வேண்டும்
சொல்லும் சொல்லில் வளம் வேண்டும்
சொல்லுதலில் பொருளும் வேண்டும்
இம்மூன்றும் சேர்ந்தால் செந்தமிழ் ஆகும்

இத்தகு செந்தமிழ்ப் பாக்களை
நான் சூடி உனைப் போற்ற
அதுகேட்டு அடியவர் மனமகிழ
அருள் வரம் தந்து அருள வேண்டும்!

அருஞ்சொற்பொருள்:

பகர = சொல்லத்தக்க
வரை = மலை
அசல = மலை
நெடு = பெருமை வாய்ந்த
கருதரு = நினைப்பதற்கு அருமையான
களபம் = சந்தனம்
கனகம் = பொன், தங்கம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:06

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் --20 "காமியத் தழுந்தி"

காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப்படிந்து மடியாதே


ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்திலந்த மருள்வாயே


தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா


ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.

*************************************************************

இன்று சுவாமிமலை முருகனைப் போற்றி ஒரு எளிய, சிறிய பாடல்.

இதையும், வழக்கம் போல், பின் பார்த்து முன் பார்க்கலாம்.

"தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா"

மண்ணுலகில் உயிர்கள் இன்பமுற
மணம் கமழும் புகை சூழ்ந்த
விண்ணுலகினின்று இறங்குவது
விண்ணவரின் நல்லியல்பு

என்றோ எப்போதோ எவருக்கோ வந்திடாமல்
மன்றாடி அழைத்திடும் அடியார்க்கிரங்கி
மயிலேறி பறந்து நாடோறும் வருகுதலால்
நறுமணப்புகைமணம் எப்போதும் கமகமக்கும்

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான்
குழந்தையின் வடிவிலே குறைதீர்ப்பான்
நண்பனாய் வந்தே நல்லுறவு காட்டுவான்
சுகமான லீலைசெய்து சுகம் சேர்ப்பான்


"சூரனைக் கடிந்த கதிர்வேலா"

நல்லறம் மறந்து அல்லறம் புரிந்து
பொல்லாதன பலவால் பிறர் வாட
வல்லசுரர் துணைகொண்டு தீது செய்த
பொல்லாச் சூரனை இரு கூறாக
வேலாயுதத்தால் பிளந்திட்ட வேலவனே!


"ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா"

பொன்னிறமானது மேருமலை
பொன்னிறமானது மாமயிலும்

மலைகளில் உயர்ந்தது மேருமலை
முருகனின் மயிலும் அதனை ஒக்கும்.

தங்கமாமலைமயில் மீதமர்ந்து
பொங்கிவரும் அழகோடு
வீரம் நிறைந்து நிற்கும்
மயில் வாகனனே!

"ஏரகத்து அமர்ந்த பெருமாளே"

அப்பனுக்கே பாடம் சொன்ன
சுப்பனாக வீடு கொண்டு
சுவாமிமலையில் வீற்றிருக்கும்
பெருமையின் மிக்கவரே!

"காமியத்து அழுந்தி இளையாதே"

அன்பின் வழியவன் இறைவன்
அனைத்தும் தருபவன் அவனே

கேட்டதைக் கொடுப்பவன் அவன்
கேட்கும் வகையினை யாரறிவார்?

பொன் வேண்டும் பொருள் வேண்டும்
மண் வேண்டும் மனை வேண்டுமென

நிலையில்லா பலவும் கேட்டு
நிலையான அவனருள் மறக்கின்றோம்

மாமரத்து விதையிடுதல்
மாம்பழம் வேண்டியன்றோ?

மாவிலைக்கும் மரக்குச்சிக்கும்
மரம் வளர்த்தல் முறையாமோ?

பழம் வேண்டிப் பயிரிட்டால்
பிறயாவும் தானே வருமன்றோ?

இறையருள்நாடி அவன் புகழ்பாடு
பிறநலன் யாவும் பொருந்திவரும்.

பயன்வேண்டிச் செய்திடும்
கிரியைகளில் என் மனம்

ஆழ்ந்திங்கு இளைக்காமல்,

"காலர் கைப்படிந்து மடியாதே"

தன்னலமில்லா தொண்டு செய்யின்
தென்னவனும் தொடமாட்டான்
எமதூதர் தொல்லையில்லை

என்கின்ற உண்மைதனை உணராமல்
என் நலன் மட்டுமே நாடி நின்று
வீணே யான் இறக்காமல்,

"ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம் அருள்வாயே"

ஆறெழுத்தும் அடங்கி நிற்கும்
ஓமென்னும் ஓரெழுத்தில்


"ஓரெழுத்தில் ஆறெழுத்தை
ஓதுவித்த" பெருமான்

உறைந்திருக்கும் படைவீடு
ஏரகத்தில் எம்பெருமான்

ஓரெழுத்தின் பொருளுரைக்க
விடையேறு நம்பெருமான்

பணிந்து நின்று கேட்டனன்
அன்பு கொண்டு தியானித்து

மனம் முழுதும் அதில் திளைத்து
ஓவியம்போல் அசைவற்று

முடிவென்னும் அந்தத்தில்
மோனத்தில் நான் மூழ்க

மனமிரங்கி அருளவேண்டும்.
*******************************************

அருஞ்சொற்பொருள்:

காமியம் = பயன் கருதிச் செய்யும் பூஜை, யாகம் பக்தி முதலியன.
காலர் = எமதூதர்
அந்தம் = முடிவு, இறுதி நிலை
தூமம் = நறும்புகை
கடிந்த = தண்டித்த
ஏமம் = பொன், ஹேமம்
வெற்பு = மலை
ஏரகம் = சுவாமிமலையின் மற்றொரு பெயர்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:06

------------- பாடல் ------------------

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.

*************************************************

................பொருள்...................

[பின் பார்த்து முன்]

"ஆதி அயன் ஒடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகையுறு சிறைமீளா"



கொடுஞ்சூரன் கெடுமதியால்

மதிகெட்டு மனமயங்கி

அடுசெயலால் ஆதியாம்

பிரமன்முதல் அமரர்யாவரையும்

கொடுஞ்சிறை அடைத்து

சுடுமொழி பேசி இழித்து

கடுஞ்சொற்களால் பலவாறிகழ்ந்து

மிகவும் வாட்டி உடல் வருத்தி

நடுங்கச் செய்து அவர் பணி மாற்றி

வருந்திடும் துயர் மாற்ற

திருவுளம் கொண்டு வேற்படையேந்தி

தேவர்தம் சிறை மீட்க


"ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே"

பொன்மலையாம் மேருவிற்கு

நிகரான ஆடுகின்ற

பொன்மயிலின் மீதமர்ந்து

சூரனுடன் போர் புரிந்து

விண்ணவரைச் சிறைமீட்டு

அமரர் புடை சூழ

மண்ணதிர விண்ணதிர

என்னவரும் மனமகிழ

தும்பிக்கையான் தம்பியும்

மயில்மீதில் அமர்ந்துவர



"சூத மிகவளர் சோலை மருவு
சுவாமி மலைதனில் உறைவோனே"


மாமரங்கள் அடர்ந்திருக்கும்

சோலைவனம் சூழ்ந்திருக்கும்

சுவாமிமலை தனில் வாழும்

என் குருநாதனே!


"சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வல பெருமாளே."

மாயப்போர் புரிந்து

நீலக்கடலுள் ஒளிந்துகொண்ட

சூரனை வெளிக்கொணர

வேலெடுத்து வீசிக்காட்டி

கடல் வற்றச் செய்து

சூரன் உடல் இருகூறுபட

அசுரனைப் பிளந்து

அருளுடன் ஆட்கொண்ட

பெருமைமிகு வேலவனே!



"பாதி மதிநதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா"


தான் பெற்ற மகளிரை

மணம் கொண்ட சந்திரன்

ரோஹிணியை மட்டும்

தன்னோடு சேர்த்து

மற்றவரைத் தள்ளியதால்

மனம் கொதித்த தந்தையாம்

தக்கன் அளித்த சாபத்தால்

ஒளிகுன்றி, மதி குன்றி

நிலவனும் தான் தேய

வேறெங்கும் அலைந்தும்

வழிகாணா மனத்தினனாய்

கருணைக்கடலாம் சிவனைநாட

குற்றம் தள்ளி குணம் நாடும்

காருண்ய மூர்த்தியும்

குறைமதியைப் பிறைநுதலாய்

தன்தலையில் சூடிக் காத்த,

தேவலோகம் விட்டுச்செல்லும்

தாபத்தால் கோபம்கொண்டு

உலகினை அழிக்க உக்கிரமாய்ச்

சீறிப் புறப்பட்ட கங்கையவள்

செருக்கடக்க, உலகுய்ய

கருணைத்திருவுளம் கொண்டு

தன்சடையில் தான் தாங்கி

தணிவோடு தண்ணீர்தந்த,


அன்புருவாம் சிவனாரின்

திருநுதற்கண்ணினின்று

உலகோரின் துயர்துடைக்க

தேவர்களைக் காத்திடவே

ஈசனே தன்னைத் தானளித்த

சங்கரன்குமாரனே! குமரேசனே!



"பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா"

குறமகள் வள்ளியைக்

கடிமணம் புரியத்


திருவுளம் கொண்டு


அவருடன் விளையாட,


வேங்கை மரமாய்

வேடனாய், விருத்தனாய்

வம்புகள் பலசெய்து

வள்ளியின் கோபம் தூண்டி

அவர்தம் கனிமொழிகேட்க

கைகால்களைப் பிடித்து

கெஞ்சிக் கொஞ்சிய

அழகிய மணவாளனே!



"காதும் ஒருவிழி காகம் உற அருள்
மாயன் அரிதிரு மருகோனே"

கானகம் சென்றிட்ட இராமன்

ஓர்நாள் கண்ணசந்து மைதிலியின்

மடிமீது தலைவைத்து துயிலுகையில்

சீதையைக் கண்டு மோகித்து

இந்திரன் மகனாம் சயந்தனென்பான்

காகம் வடிவெடுத்து காரிகையின்

தனங்களைக் குத்த, ரத்தம் தெறிக்க

இராமனின் முகத்தில் அது பட்டு,

கண்விழித்த அண்ணலும் காரணம் கேட்க

காகத்தைக் காட்டி காரிகையும் சொல்லிவிட

கோபம்கொண்டு ஒரு புல்லெடுத்து

"காதும்" கொல்லுக இதனையென

காகுத்தன் ஏவிவிட, பயங்கொண்ட

காகமதும் கடிவேகம் கொண்டு

மூவுலகும் சுற்றிவர, எவரும் உதவாமல்

சிவனைத் தஞ்சமடையச், சிவனாரும்,

'குற்றம் செய்தவிடம் தேடி கும்பிட்டுக் கேள்!

குணமுடையோன் குறைகளைவான்' எனவுரைக்க

சீதாபதியின் தாள்பணிந்து காகம் வேண்ட,

'தஞ்சமென வந்தவரை தட்டுவது பண்பல்ல

பிறன்மனை நோக்கிய குற்றத்தால்

ஒரு கண்ணை பாணம் துளைக்கும்

உயிர் குடிக்காமல் உனைப் பிழைக்கும்'

எனவருளிய மாயனின் மருகோனே!


"காலன் எனை அணுகாமல் உனது
இருகாலில் வழிபட அருள்வாயே"

தக்கன் சாபம் துரத்திய

சந்திரனைப் போலவும்


பிரம்மாஸ்திரம் துரத்திய

காகம் போலவும்

காலன் எனைத் துரத்தும்

கோலம் கண்டிங்கு

கருணை என்மீது கொண்டு

கங்கையைத் தலைமேல்

கொண்டது போலவே

பிறைதனை நுதல்மேல்

அணிந்தது போலவே

காகத்துக்கும் கருணை

காட்டியது போலவே

என்னையும் உன்னிருகாலில்

சேர்த்திங்கு அருள்வாயே!
************************************************


....அருஞ்சொற்பொருள்.......

காதும் -- கொல்லும்
சூதம் -- மாமரம்
வாரி -- கடல்
சுவறிட -- வற்றிட
வல -- வலிமையுடைய

***********************************************
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:07

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்"--22 "வங்கார மார்பிலணி"

"பச்சைப்புயல் மெச்சத்தகுபொருள்" திருமாலின் ஒரு பெயர் கொண்ட அன்பர், முருகனடியார் திரு ஜி.ராகவன் கேட்ட இப்பாடல் சந்தம் மிகுந்தது.

சொல்லினிமை, பொருளினிமை கொண்டது.

பாடுதற்கு இனியது.

முருகனை, கந்தக்கடம்பனை 'நமோநம' எனத் துதித்து அருச்சிப்பது.

திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகனைப் போற்றும் இப்பாடலை இங்கு இடுவதில் மகிழ்கிறேன்.

பாடல் பெரிது!

பொருளும்
சற்று விரிவாகத்தான் இட்டிருக்கிறேன்.


அனைவரும் பொறுத்தருள்க!

ஜி.ரா.வுக்கு என் நன்றி!!

முருகனருள் எல்லார்க்கும்
முன்னிற்கட்டும்!

**********************************************************

ராகம் -- ஸிந்துபைரவி
தாளம் -- சதுஸ்ரத்ருவம்.. கண்டநடை

"தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன .... தனதான

............பாடல்................

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல

மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய .........விடுமாதர்

சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ....... னுழலாமற்

சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசிவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ........ புரிவாயே

சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ......... விருதோதை

சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே

இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ....... மணிமார்பா

எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்கோடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் .....பெருமாளே.


...........பொருள்.............

[பின் பார்த்து முன் பார்க்கலாம்.]

இப்பாடலின் சிறப்பு கந்தனைத் தோத்தரிப்பதில் இருந்து துவங்குகிறது.

சிங்கார ரூபமயில் வாகன நமோ நம என

அழகென்னும் பெயருக்கு அரும்பொருளே
நீதான் என அகில உலகமும் போற்றிடவே
அழகின் அழகாய் உருவெடுத்து,

அகிலமெலாம் காப்பதற்கு
அழகிய மயிலின் மீதேறி வந்து
நிற்கும் அழகே போற்றி, போற்றி! எனவும்

கந்தா குமார சிவதேசிக நமோ நம என

எதிர்த்துவரும் பகையாற்றலை
வற்றச் செய்பவன் கந்தன்
ஆறுதிருமேனியும் ஒன்றாய்ப்
பொருந்தி நிற்பவன் கந்தன்
சுழன்றலையும் ஆன்மாவிற்குப்
பற்றுகோடாய் இருப்பவன் கந்தன்

அம்மைக்கும் குமரனிவன்
அப்பனுக்கும் குமரனிவன்
அம்மையப்பருக்கும் குமரனிவன்
இம்மைக்கும் மறுமைக்கும் குமரனிவன்

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
அவ்வைக்கும் அருளுரைத்த பாலன்
அருணைக்கும் பம்பனுக்கும் ஆசான்
அவனே நமக்கெல்லாம் குருநாதன்

கந்தனாய்,குமரனாய்,சிவகுரு
தேசிகனாய் எமக்கெல்லாம்
அருள்பவனே போற்றி, போற்றி!எனவும்


சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என

குங்குமம் போலும் சிவந்த மேனியள்
குங்குமம் நிறை நெற்றியை உடையவள்
சிந்தூரத்தின் சொந்தக்காரன்
திருமாலின் அன்புத்தங்கை
பார்வதியெனும் பெயர் கொண்டவள்
பாரினை ஆளும் பரம்பொருள் சக்தி
பாரின் துயர் துடைக்க
சூரன் உடல் கிழிக்க
பார்புகழும் மகவெடுத்து
மாரினில் வைத்துக் கொஞ்சிய
பார்வதியாள் புத்திரனே
போற்றீ, போற்றி! எனவும்,



விருது ஓதை சிந்தான சோதி கதிர்வேலவ நமோ நம என

கொன்றவர் ஆயிரமாயிரம் - ஒளிந்து
நின்றவர் ஆயிரமாயிரம் - அவர் பின்னே
சென்றது கந்தனின் கதிர்வேல் - அசுரர்களைக்
கொன்றது கடம்பனின் வீரவேல் -பகைமுடித்து
வென்றவர் ஆயிரமாயிரம் - அவரெல்லாம்
வெற்றிவேல்! வீரவேல் என - செய்திட்ட
சங்கெடுத்து ஆர்ப்பரித்த வீரமுழக்கம் - கடலோசை
தோற்றிடச் செய்திட அவ்வேளை - அவர்நடுவே
சுட்டெரிக்கும் சோதிவடிவாய் - வேலெடுத்து
நின்றிட்ட வேலவனே போற்றி, போற்றி - எனவும்



கங்காள வேணி குருவானவ நமோ நம என

நடுநிசியில் சுடலைதனில்
நெடுமுடியும், எலும்புமாலைகளும்
கிடுகிடென்ன அசைந்துவர
நடனமிடும் சிவனாரின்
குருநாதன் ஆனவனே
பிரணவப் பொருளோனே
போற்றி, போற்றி எனவும்


பலவாறு உனைத் துதித்து முழங்கிடவும்,

திண்சூரர் ஆழிமலை தூள்பட வை வேலை விடு முருகோனே

கொடுமைபல செய்திட்ட சூரனையும்
அடி முதல் நுனிவரை அவன்தம் அசுரரையும்
மற்றுமாங்கு நெடுங்கடலையும்,
கிரவுஞ்ச மலைதனையும்
பொடிப்பொடியாய்ச் செய்திடவே
கூரிய வேல் செலுத்தி, தேவர்
குலம் காத்த முருகப் பெருமானே!


இங்கீத வேதபிரமாவை விழ மோதி

ஓதுதற்கும், பாடுதற்கும்,
படிப்பதற்கும் இனிமையான
வேதங்களைப் பயின்ற
பிரமனுக்கு அறிவுறுத்த
பிரணவப்பொருள் கேட்டு
அதுவறியா நான்முகனின்
தலையினில்குட்டி, எட்டியுதைத்து
மோதிக் கீழே விழுமாறுசெய்தும்,



ஒரு பெண் காதலோடு வனம் ஏவி வளி நாயகியை
இன்பான தேனிரச மார்முலை விடாத கர மணிமார்பா


இச்சாசக்தியாம் வள்ளியின் மேலே
தாளாத மையல் கொண்டு
காதலாகிக் காடு புகுந்து
அவரை ஆட்கொண்டு தேன்போலும்
இன்பம்நிறை முலைகளைப்பற்றி
அதனை விட்டகலா கரமும்
அணைக்கத்தக்க அழகிய
மார்பினையும் கொண்டவனே!


எண் தோளர் காதல்கொடு காதல்கறியே பருகு

சிறுத்தொண்டரெனும் சிவபக்தர்
என்றும் மாறா அவர் அன்பினைச்
உலகுக்குக் காட்டச் சோதிக்க வேண்டி,
எட்டுத்தோள் உடைய சிவனாரும்
சிவனடியார் வேடம் பூண்டு அவர்தம்
வீடடைந்து, அமுது கேட்க,
சிறுத்தொண்டரும் அகமகிழ்ந்து
அடியார் வேண்டுவதெதுவென வினவ
"பிள்ளைக்கறி பருக உத்தேசம்" என
அடியரும் பகர, "அப்படியே ஆகுக" என
தொண்டரும் தன் மகனாம் சீராளனை
அழைத்து,'புண்ணியம் பெற்றோம் நாமெல்லாம்!
என் தலைமகனே! அடியார்க்கு உன்னை
அமுது படைக்கப் போகிறேன்' எனச் சொல்ல,
மகிழ்வுடன் மகனும் இசைய,
அவ்வண்ணமே மகனை வெட்டிக் கறி சமைத்து
அடியார்க்கு அமுதுபடைக்க, அடியாரும்
தன் வேடம் களைந்து தரிசனம் அளித்து
சிறுத்தொண்டரின் சீரான பக்தியை
உலகுக்குக் காட்டி, அனைவரையும் வாழ்த்திய


செங்கோடு மேவி பிரகாசமயில் மேல் அழகொடு

பெருமை பெற்ற திருத்தலமாம்
திருச்செங்காட்டுக்குடி அடைந்து
ஒளிவீசும் அழகிய மயில் மீதமர்ந்து


என் காதல் மாலை முடி ஆறுமுக வா அமரர் பெருமாளே.

நின்மீது யான் கொண்ட அன்பினால்
ஆசையுடன் புனைந்திட்டத் தமிழ் மாலையினை
கருணைமிகக்கொண்டு சூடிடும்
ஆறுமுகக் கடவுளே! தேவர் தலைவனே!


வங்கார மார்பில் அணி தாரொடு உயர் கோடு அசைய

அழகிய மார்பினில் அணிந்திருக்கும்
பொன்மாலையுடன் பாரத்துடன்
உயர்ந்து நிற்கும் மார்பகங்களும்
சேர்ந்து அழகுடன் அசைந்திட


கொந்தார மாலை குழல் ஆரமொடு தோள்புரள

இத்தனையும் போதாதென வளமாக
நீண்டு வளர்ந்த கூந்தலும், அதில் சூடிய
மலர்க்கொத்துகள் நிறைந்த மாலையும்
மணிமாலையும் தோள்களில் புரள


வண்காதில் ஓலை கதிர் போல ஒளி வீச

வளைந்த அழகுடன் விளங்கும்
காதுகளில் பூட்டியிருக்கும்
காதணிகள் கதிரவன் போல் ஒளிவீச



இதழ் மலர் போல

அன்பு ததும்பிடும் மலர் உதடுகள்
மொட்டவிழ்ந்த மலர் போல் விரிய


மஞ்சு ஆடு சாபநுதல்

மேகக்கூட்டத்தின் நடுவில் வளைவாகத்
தோன்றிநிற்கும் வானவில் போல
அழகிய புருவங்களுக்கும் கூந்தலுக்கும்
இடையினில் வளைவாகத் தோன்றிடும்
சீரான அழகிய நெற்றியும்


வாள் அனைய வேல்விழிகள்

கூரான வாளையும் வேலையும்
பழித்திடும் வேல் விழிகளும்


கொஞ்சார மோககிளியாக நகை பேசி

கொஞ்சிடும் கிளி போலும்
ஆசைமொழிகள் பல பேசி


உற வந்தாரை வாரும் இரு[ம்]நீர் உறவென

அருகினில் வருவோர் அனைவரையும்
வருகவென வரவேற்று இருக்க வைத்து
'நீர் எமக்கு உறவினர் அல்லவோ' என்றெல்லாம்


ஆசைமயல் இடு மாதர்

பசப்பு வார்த்தைகள் பலவும் பேசி
நெஞ்சில் மயக்கம் உண்டுபண்ணும்
பொல்லாத விலைமாதர்கள்


சங்காளர் சூது கொலைகாரர் குடிகேடர்

காரியம் ஆகவேண்டிக் கூட இருந்து
களித்து நிற்கும் பொய்யர்கள்
சூதாடலே தொழிலாய்க் கொண்டவர்
கொலைபாதகம் செய்யும் கொடியவர்
அடுத்துக் கெடுக்கும் குடிகேடர்கள்



சுழல் சிங்காரதோளர் பணஆசையுளர் சாதியிலர் சண்டாளர்

வேலையின்றி வீணே சுற்றித் திரிபவர்கள்
சிங்காரமாய் தோளில் துண்டணிந்து
ஆடம்பரமாய்த் திரிபவர்கள்
பணத்தாசை கொண்டு பாவம் செய்பவர்
அது ஒன்றுமட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு
எல்ல சாதியினருடனும் கூடுபவர்
இவைஅத்தனையும் செய்யும் இழிந்த குலத்தவர்



சீசியவர் மாயவலையோடு அடியென் உழலாமல்

இவர்கள் அனைவரையும் சிறுமையென ஒதுக்கி
சீ, சீ, என விலக்கி அவர் வலையில் சிக்காமல்
என் வாழ்வு இவர்களால் குலையாவண்ணம்

சங்கோதை நாதமொடு கூடி

மோகத்தில் மூழ்காமல்
யோகத்தில் எனை ஆழ்த்தி
அவ்வழியில் யோகியர் உணர்ந்திடும்
கிண்கிணி, சிலம்பு, மணி,
சங்கம், யாழ், தாளம்,
வேய்ங்குழல்,பேரி,மத்தளம்,
முகில்
என்னும் பத்துவகை
ஓசைகளும் நான் கேட்டு
அனுபவித்து, அதில் கலந்து,


வெகு மாயை இருள் வெந்து ஓட

மாயையென்னும் கொடிய இருள்
எனைத் தீண்டாமல் வெந்து
அழிந்து வெருண்டோட


மூலஅழல் வீசி உபதேசமது தண்காதில் ஓதி

நாத ஒலியால் நிறைந்து நின்று
மாயையெல்லாம் கழிந்த எனக்கு
யோகத்தால் மூலாதாரத்தினின்று
ஒரு பிழம்பு எழுந்து என்னுள் ஏற
அவ்வேளை, என் காது குளிரும்படி,
உன்னருள் உபதேச மந்திரத்தை
உணரும்படி சொல்லி


இரு பாதமலர் சேர அருள் புரிவாயே

அது கேட்டு, விம்மி விதிர்த்து
உள்ளமெல்லாம் உருகி
உன்னிரு தாளில் யான் சேரும்
உன் திருவருளைத் தரவேண்டும்
அருளைத் தந்தருள்க!
********************************************


அருஞ்சொற்பொருள் [இதுவும் நிறையவே!!]

வங்காரம் = பொன்மாலை [பங்காரம் என்பதறிக!]
தார் = மாலை
கோடு = மார்பகம்
கொந்தாரம் = கொத்து மலர்களாலான மாலை
ஆரம் = மாலை
ஓலை = காதணி
மஞ்சு = மேகம்
சாபம் = [வான]வில்
நுதல் = நெற்றி
கொஞ்சார = கொஞ்சுதல் மிக்க
சங்காளர் = கூடிக் களிப்பவர்கள்
சங்கோதை = யோகவழியில் உணரும் ஒலிகள்
நாதம் = பத்து [வித ஒலிகள்][பொருள் விளக்கத்தில் காண்க!]
அழல் = நெருப்பு
தண் = குளிர்ந்த
சிந்தூரம் = குங்குமம், சிவந்த
சுதாகர = பிள்ளை
விருது ஓதை = வெற்றிச் சின்னங்களின் ஓசை
ஓதை = ஒலி, ஓசை
சிந்து = கடல்
கங்காளன் = எலும்பு மாலை அணிந்தவன், சிவன்
வேணி = ஜடாமுடி அணிந்தவர், சிவன்
திண் = வலிமை
ஆழி = கடல்
இங்கீத = இனிமையான இசை
வளி = வள்ளி [சந்தத்திற்காக வளி என ஆனது!]
எண்தோளர் = எட்டுத்தோள்களை உடைய சிவன்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by மாலதி June 13th 2012, 08:08

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" -- 23 "விறல்மாறன் ஐந்து"

திருப்புகழ்
விளக்கப் பதிவு இட்டு வெகு நாட்களாச்சு, எஸ்.கே! சீக்கிரமா ஒண்ணு போடுங்க
என ஒரு அன்புக்கட்டளை இட்டு கூடவே இந்தப் பாடல் தலைப்பையும் கொடுத்த "கேயாரெஸ்ஸுக்கு" எனது மனமார்ந்த நன்றி!

இப்போது பாடலைப் பார்ப்போம்!
******************************************


விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே!
**************************************************************

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு!


************************************************************



பொருள்:
[வழக்கம் போல் பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து
பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த
தாருகவனத்தின் முனிவர்கூட்டச்
செருக்கினை அடக்க சிவபெருமானும்
அழகியவுருவில் அவர்முன் நடக்க

மையலில் மயங்கி முனிவர் பெண்டிர்
அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க
ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை

அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த
பிரமனை அழைத்து மூலப்பொருளாம்
பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன்
தலையினில் குட்டி சிறையினில் தள்ளி

சிருட்டித்தொழிலைத் தானே செய்து
கந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில்,
கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து
பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திரும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து

கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி

ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற
ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி

மூலப்பொருளின் பொருளுரை கேட்டார்
ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்
சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல்
எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,

"மதிபாளா"

ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன்
சூரன் என்பான் சிவனை வணங்கிப்
பலவரம் பெற்று தம்பியர் துணையுடன்
தேவர் மானிடர் முனிவரை வருத்தி
ஆட்சி செய்யும் வேளைதன்னில்,

முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க
ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி
ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க
அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து
தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை
அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில்
மாமரமாகி சூரன் நின்றனன்

மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க
அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து
வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து,
ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து
தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த
மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்க

"அதிதீரா"

வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும்
பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும்
இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து
மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி
எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன்
முனிவருமிவனது கணை பிழையாரே
தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார்
பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்!
அவனே அழகிய மன்மதன் என்பான்!

அவனது கையில் வில்லொன்றுண்டு
அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!

சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்

இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி
மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும்
வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட
மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால்
வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட
நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற"

வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர்
மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி
வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின்
ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே
உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ!
பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா!
ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய
மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல
ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில்
நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து
என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

******************************************************


அருஞ்சொற்பொருள்:

விறல்மாரன்= மன்மதன்
வாளி= அம்பு, கணை
இந்து= நிலவு
தந்தம்= பற்கள் [ இங்கு பற்களில் இருந்து பிறக்கும் சொல எனப் பொருள் வரும்]
மறிமான்= சிறிய மான்
மதிபாளா= ஞானம் மிகுந்தவர்
வேலை= கடல்
அலைவாய்= திருச்செந்தூர்
***********************************************
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்  Empty Re: "அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" அழகிய தமிழ் விளக்கத்துடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum